Thottal Thodarum

Sep 5, 2023

சாப்பாட்டுக்கடை - கைமணம்

 கொரோனா காலத்தில் ஏகப்பட்ட க்ளவுட் கிச்சன்கள் முளைக்க ஆரம்பித்திருந்தது. அவைகளில் 80 சதவிகிதத்திற்கு மேலாய் இப்போது இல்லை. ஒரு சில க்ளவுட் கிச்சன்கள் சின்ன ரெஸ்டாரண்டாகவும் மாறியிருக்கிறது. சிலது இன்னமும் க்ளவுட் கிச்சனாகவே இருக்கிறது. அப்படியான ஒரு கொரோனா காலத்தில் நான் கண்டெடுத்ததுதான் இந்த கை மணம் உணவகம். ஒரு நாள் மதியம் கோபாலபுரம் பக்கம் போய்க் கொண்டிருந்த போது கொலைப் பசி. கைமணம் என்று பெயரைப் பார்த்ததும் அது ஒரு சின்ன சந்தாய் இருந்தது. அங்கே ஒரு ப்ளாட்டின் மாடியில் இருப்பதாய் தெரிய மேலேறிப் போய் பார்த்த போது அங்கே ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைப் போட்டு சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணியும் ஒரு சில சமையல்காரர்களும் இருக்க, சாப்பிட இடம் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த போது "சார் இது க்ளவுட் கிச்சன் தான் நோ டைனிங்" என்றார் பெண்மணி. சோகமாய் இறங்க ஆயத்தமான போது "பிரியாணி இப்பத்தான் இறக்கினோம். வேணும்னா அங்க டேபிள்ல உக்காந்து சாப்பிடுறீங்களா? என்று பிரியாணி அண்டாவை திறக்க, அட்டகாசமான மசாலா வாசம் என்னை சூழ்ந்தது. சூடான, மிகச் சூடான் மட்டன் பிரியாணி. அட்டகாசமான கத்திரிக்கா பச்சடியோடு சாப்பிட்டு முடித்தேன். மசாலா அதிகமில்லாத பிரியாணி. சுவைக்கு ஏதும் குறையில்லை.  அதன் பிறகு அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் பிரியாணி மண்டைக்குள் கிண்டினாலும் க்ளவுட் கிச்சன் என்று உறைத்ததால் போகாமல் வழக்கப்படி விஸ்வநாதன் மெஸ்ஸுக்கு போய்விடுவேன். 

சமீபத்தில் ஒரு சில மாதங்களுக்கு முன்னால் போன போது கைமணம் ரெஸ்ட்டாரண்ட் ஆகியிருந்தது. ஒரு இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கான ஏசி இடம். சரி உள்ளே போய் அமர்ந்தோம். ஸ்டார்டர்ஸ் என்று லிஸ்ட் பார்த்தால் பொரிச்ச கோழி, சிக்கன மஹாராணி, மட்டன் மஹாராணி என்று லிஸ்ட் போடப்பட்டிருக்க, பொரித்த கோழியை ஆர்டர் செய்தோம். அட்டகாசமான மசாலாவோடு பொரிக்கப்பட்ட நான்கு சிக்கன் துண்டுகள். போட்டிருந்த மசாலாவும், கோழியும் செம்ம ஜூஸியாய் இருந்தது.  சிக்கன் மஹாராணி நல்ல நீட்டு துண்டுகளாய் போடப்பட்ட சிக்கன், மேலே டிரை மசாலாவோடு பொரிக்கப்பட்டிருந்தது. லேசான எலுமிச்சையை மசாலாவோடோ அல்லது தயிரோ சேர்திருப்பார்கள் போல.. லேசான புளிப்புடன் அந்த சிக்கன் டேஸ்ட் இருக்கும். அதையே தான் மட்டன் மஹாராணிக்கும்.நன்கு பொரிக்கப்பட்ட சன்னமான மட்டன் பீஸுகளுடன். நிறைய முந்திரிப்பருப்புகளுடன் கார்னிஷிங் செய்யப்பட்டு தருகிறார்கள். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த ஸ்டார்டர்ஸ். இவர்களின் மலாய் சிக்கன் கிட்டத்தட்ட சமிபத்திய பேமஸான இண்டியூஸ்ட் சிக்கனுக்கு ஈடாய் இருக்கிறது. 

கைமணத்தின் நல்ல சிக்கன் இடியாப்பம், மட்டன் இடியாப்பம், மற்றும் பன்னீர் இடியாப்பம் தருகிறார்கள். நல்ல தரமான மிக்ஸ். குறிப்பாய் பன்னீரும் சிக்கனும் அருமையோ அருமை. கூடவே தரப்படும் கிரேவியின் சுவையோடு சிறப்பாக இருக்கிறது. இவர்களின் மெனுவில் சுவாரஸ்யமான ஒன்று ரசம் சாதம். நல்ல சூடான ரசம் சாதம் சாப்பிட அதுவும் இரவில் கிடைப்பது அரிது. நல்ல ரசம். இவர்கள் க்ளவுட் கிச்சனாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கீழே உணவகம். ஆன் லைனில் கூட ஆர்டர் செய்து கொள்ளலாம்.  சூரியன் எப்.எம் ஆர்.ஜே பெண் ஒருவர் தான் இந்த கடையின் முதலாளி 

கைமணம்

15, Gopalapuram 1st St, Pudupet, Gopalapuram, Chennai, Tamil Nadu 600086

Jul 19, 2023

சாப்பாட்டுக்கடை - ரமேஸ்வரம் கஃபே - பெங்களூரு

 சமீபகாலமாய் எந்த ரீல்ஸ், ஷார்ட்சை திறந்தாலும் இந்த ராமேஸ்வரம் கஃபேயை பற்றிய வீடியோ தவறாமல் இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பில் போடும் கடை. பெரிய க்யூ நிற்கும் கடை என்றெல்லாம் வீடியோ அவர்கள் வீடியோவில் காட்டும் செந்நிற தோசை. மசாலா, இட்லி சாம்பார் எல்லாவற்றையும் பார்க்கும் போது வழக்கமான வேற லெவல் ஓட்டலை ஏத்திவிட்டு பிஸியாக்கிட்டாங்களோ என்கிற சந்தேகம் எனக்கு வராமல் இல்லை.  இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் போய் தான் பார்த்துவிடுவோமே என்று தேடிய போது பெங்களூருவில் மூன்று இடங்களில் இருந்தது. நாங்கள் ஜே.பி.நகர் பிராஞ்சுக்கு ஆட்டோ பண்ணிட்டு போனோம். ஆட்டோவெல்லாம் வச்சி சாப்பிடணுமா ஜி என்று உடன் வந்த நண்பர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டே வந்தார். எடுத்த குறிக்கோளில் கொஞ்சமும் வழுவாமல் போய் சேர்ந்த போது அத்தனை க்யூவெல்லாம் இல்லை. ஆனால் செம்ம கூட்டம். ஆனால் அது அங்கே தெரியாத வண்ணம் இடத்தை செட் செய்திருந்தார்கள். 

இத்தனைக்கும் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடம் தான். தனியாய் வேலட் பார்க்கிங். ஓப்பன் கிச்சன். ஆங்காங்கே சாப்பிட வைக்கப்பட்டிருந்த டேபிள்கள். கோயில் தாழ்வாரம் போல உட்கார்ந்து கொள்ளக்கூடிய அளவில் சில இடங்களில் கல்லில் அமைத்திருந்தார்கள். நாங்கள் என்ன சாப்பிடுவது என்று மெனுவை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூன்று பேர் பில் போட்டுவிட, நான் வடை ஒரு ப்ளேட். இரண்டு ஓப்பன் வெண்ணெய் மசாலா தோசை, இரண்டு காப்பி ஆர்டர் செய்தேன். 

தோசைக்கு தனி பில். கூடவே ஒரு வைப்பரேட்டர் சாதனம் ஒன்றை கொடுத்து தோசை ரெடி ஆனதும் அது பச்சை ஒளிர்ந்தபடி வைப்பரேட் ஆகும் என்றார்கள். அடுத்த கவுண்டரில் இட்லியும் வடையும் சொல்லிவிட்டு, அடுத்த சில நொடிகளில் சூடான வடையும், இரண்டு வகை கெட்டி சட்னி, டிபிக்கல் உடுப்பி சாம்பாரோடு கொடுத்தார்கள். வடை மினியேச்சர் சைசில் இருந்தாலும் நல்ல கிரிஸ்பியாய் வாயில் போட்டால் கரையும் அளவுக்கு இருந்தது. கூடவே கார சட்னி, மற்றும் தேங்காய் சட்னி வேறு. தேங்காய் சட்னியோடு சாம்பாரையும் தொட்டு ஒரு சிறு துண்டை சாப்பிட்டால் வாவ் அவ்வளவு நன்றாக இருந்தது. என்ன ஆளுக்கு ஒரு வடை என்று சாப்பிட நினைத்து ஒரு செட் ஆர்டர் செய்தது நொடிகளில் காலியாகும் என்று நினைக்கவேயில்லை. இன்னொரு ப்ளேட் ஆர்டர் பண்ணிரலாமா ஜி? என்று ராமசந்திரனிடம் கேட்டேன். இருங்க தோசை எப்படி இருக்குனு பார்த்துட்டு ஆரடர் செய்வோம் என்ற போதே அவர் கையில் இருந்த டோக்கன் வைப்ரேட் ஆக ஆரம்பிக்க. ஓப்பன் மசாலா வெண்ணெய் தோசையை எடுத்து வைத்தார்கள். 

அட அட அட. ஊத்தப்பம் சைஸ் தோசை. அதன் மேல் நம்மூரில் போடுவது போல நைஸாய் அரைத்த பொடியாய் இல்லாமல் கொஞ்சம் நரநரவென பருப்பு தட்டுப்படும் அளவி/ர்கான பொடி. அதிக காரமில்லை. அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலா. அதை சுற்றி லேசான மல்லி கார்னிஷிங். அதன் மேல் ஒரு தேக்கரண்டு வெண்ணெய். தோசை வேறு ஆவி பறக்க இருப்பதால் அதன் சூட்டில் மேலே உள்ளே வெண்ணைய் அப்படியே மசாலாவோடு தோசையில் உறிஞ்சப்பட்டு, மெல்ல வெண்ணெயின் பளபளப்பு தோசையை ஒரு விள்ளல் பிட்டவுடன் கையில் ஒட்டிக் கொண்ட வெண்ணெயே சாட்சி. கூடவே தக்காளி குருமா வேறு கொடுத்திருந்தார்கள். ஒரு விள்ளல் கார சட்னியோடு, இனனொரு விள்ளல் சாம்பார் சட்னியோடு, அடுத்தது குருமாவோடு, அடுத்தது மசாலாவோடு என சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அட்டகாசமான சுவை. குறிப்பாய் மேலே போடப்பட்டிருந்த பொடியோடு சாப்பிடும் போது அதில் ஏற்கனவே சொன்னது போல நரநரத்த பொடி மேலும் சுவையைக் கூட்டியது. ஆனால் இதை சாப்பிட்டு முடித்த போது வயிறு போதும் என்று சொல்லிவிட்டது. நல்ல வேளை வேறு எதுவும் ஆர்டர் செய்யவில்லை. முழு தோசையை வெண்ணெய் உருக பார்த்த போது ஒரு செக்சியான பெண்ணைப் பார்த்தது போல இருந்தது.

காபி கவுண்டர் தனி. நாட்டுசக்கரை, சக்கரை போட்டு தருகிறார்கள். சக்கரையில்லா காப்பி கேட்டாலும் தருகிறார்கள். ஹைதை போல எல்லாவற்றிலும் ஏற்கனவே சர்க்கரை போட்டு எல்லாம் தருவதில்லை. ராமேச்வரம் கஃபேயின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் நான் கருதுவது. முதலில் சுவை. சாப்பிட்ட பின் வயிற்றுக்கு எந்த உபாதையும் செய்யவில்லை. இரண்டாவது ப்ராம்ப்ட் சர்வீஸ். என்ன தான் செல்ஃப் சர்வீஸ் என்று வைத்துவிட்டாலும் உணவு வகைகளை தயாரித்து கொடுப்பதாகட்டும் இடத்தை உடனடியாய் க்ளீன் செய்வ்வதாகட்டும் எனக்கு நம்மூர் சரவணபவனை தான் நியாபகப்படுத்தியது. எப்படி இருந்த சரவணபவன். ம்ஹும். இவர்கள் இன்றைய தேதிக்கு 5 லட்சம் ஒரு ப்ராஞ்சு செய்வது எல்லாம் ஆச்சர்யமே இல்லை. விலையும் அத்தனை அதிகம் இல்லை என்றே சொல்வேன். இரண்டு ஓப்பன் தோசை, வடை ஒரு ப்ளேட், மூன்று கப் சாம்பார், இரண்டு காப்பிக்கு மூன்னூற்று சொச்சம் தான் பில்.  நல்ல தரமான வெஜ் டிபன் வகையாராக்களை பெங்களூருவில் சாப்பிட விரும்பினால் ஐ ரெகமெண்ட் ராமேஸ்வரம் கஃபே.


Jul 16, 2023

சாப்பாட்டுக்கடை - வளையம்பட்டியார் மெஸ்

இந்தக் கட்டுரை வீடியோ போடுவதற்காகப் போய் ஷூட் செய்துவிட்டு, வேற லெவல், சூப்பர் என்று எழுதப்பட்டது அல்ல. 

மெஸ்கள் புகழ் பெற ஆரம்பித்தவுடன் யார் உணவகம் ஆரம்பித்தாலும் கூடவே மெஸ் என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் உருவாக ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மெஸ் என்பது சுவையில் தனித்தன்மையுடன், பெரிய லக்‌ஷரியாய் இல்லாமல், மிக நியாயமான விலையில் இருப்பது. அனால் மெஸ் என்று வைத்துக் கொண்டு 5 ஸ்டார் ஓட்டல் ரேட்டை வைத்துக் கொண்டு கல்லா கட்டிக் கொண்ட்டிருக்கும் காலத்தில் புதியதாய் வளையம்பட்டியான் மெஸ். அதுவும் மெஸ்களின் தலைமயிடமான திருவல்லிக்கேணியில் நண்பர் ஆசிப் ஆரம்பிக்கப் போவதாய் சொன்னவுடன் ஆச்சர்யமாய்த்தான் இருந்தது. 

முதல் நாள் போன போது ஏகப்பட்ட கூட்டம் விருந்தினர்கள் பல பேர் வந்திருந்தார்கள். நிறைய அயிட்டங்களை வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் அத்தனை கூட்டத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது தலைக்கறியும், அதன் குழம்பும், கூடவே குடல் குழம்பை அத்தனை சுவையாய் கொடுத்திருந்தார்கள். செஃப் ஹரி நாமக்கல்காரர்.  ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

மதிய சாப்பாட்டு தினமும், மட்டன், சிக்கன், மீன் குழம்பு, தலைக்கறி குழம்பு, ரசம், தயிர் மற்றும் பொரியல் வகைகளுடன் ஆரம்பித்தது. நல்ல அரிசி, மட்டன் குழம்பு அதிக மசாலா இல்லாமல், நன்கு வெந்த மட்டனின் வாசத்துடன் கெட்டியாய் கொடுத்தார்கள். சிக்கன் குழம்பும் அதே போலத்தான். இதில் அதிர வைத்தது தலைக்கறி குழம்பு. இதுவரை சாப்பிடாதவர்கள் மிஸ் செய்யாதீர்கள். அட்டகாசமான சுவை.. காரம், மணம், சுவை எல்லாமே சரியான அளவில் டிவைன். மீன் குழம்பும் அதே போலத்தான் அதிகமான கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்புடன், காரத்துடனும் இருந்தது. கடைசியாய் கெட்டித்தயிர் ஒரு சின்ன சட்டியில் தருகிறார்கள். மொத்த அளவில்லா சாப்பாடு வெறும் 120 ரூபாய்தான். 

அடுத்து இவர்களின் ஸ்பெஷாலிட்டி சைட் டிஷ்கள். குறிப்பாய், மட்டன் சுக்கா. சின்ன பீஸ்களாய் நன்கு வெந்த மட்டன். பெப்பர் தூக்கலாய் அட்டகாசமாய் இருந்தது அடுத்து சிக்கன் பிச்சிப் போட்டது என்று ஒரு தருகிறார்கள். ஆனால் இவர்களில் வைத்திருக்கும் பெயர் சிக்கன் ஸ்ப்ரே.. ஒரு முழு பீஸ் கோழியை நன்கு மேரினேட் செய்து வைத்துவிட்டு, அதை கேட்கும் போது பிய்த்துப் போட்டு, நல்ல கிரிஸ்பாய் அதில் லேசாய் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை கலந்து நல்ல மனத்துடன் தருகிறார்கள். அட்டகாசமான சைட்டிஷ். 

சிக்கன் சிந்தாமணி. அண்ட் பள்ளிப்பாளையம் ஆஸ் யூஷுவல் குறை நிறையென ஏதுமில்லை. சிந்தாமணி சின்னச் சின்னத் துண்டுகள் நன்கு மேரினேட் செய்யப்பட்டதினால் அதன் மசாலா நன்கு உள்ளே போய் கூடுதல் சுவையை கொடுத்தது. 

போட்டி. பெரும்பாலும் பல ஹோட்டல்களில் போட்டியை அவாய்ட் செய்துவிடுவேன். ஏனென்றால் அதை ஒழுங்காய் க்ளீன் செய்து சமைக்க மாட்டார்கள் என்கிற எண்ணம். ஆனால் இவர்களின் போட்டி செம்ம. அதுவும் லேசாய் க்ரீமியாய் தருகிறார்கள். போட்டி ரசிகர்கள் அதை ஒரு சின்ன கவளம் சோற்றில் போட்டு சாப்பிட்டுப்பாருங்கள்.

மட்டன் சுக்கா, நுரையீரல், சுவரொட்ட்டி எல்லாம் இவர்களின் ஸ்பெஷல் அயிட்டஙக்ள். சுவரொட்ட்டிக்க்கு முன்பே சொல்லி வைத்தால் தான் கிடைக்கும். மீன் வகைகளில் வச்சிரம், கனவாய் எல்லாம் வைத்திருக்கிறார்கள். பாண்டிச்சேரி ஒயின்ஸ் ஷாப்பில் கொடுக்கும் கனவாய்க்கு ஈடாய் வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. இங்கு அதே டேஸ்டில். எறா தொக்கும் ப்ரையும் மிகச் சிறப்பு. குறிப்பாய் குண்டு குண்டாய் எறாவை போடாமல் இருந்தது மிகவும் நன்றாய் இருந்தது. 

இரவு நேரத்தில் மட்டன், சிக்கன் மற்றும் எறா தோசை வெறும் முட்டையையும், மசாலாவையும் போட்டு ஆங்காங்கே சிதறவிடப்பட்ட பீஸ்களூடன் இல்லாமல் நன்கு வெந்த பீஸ்களூடன், நல்ல தடிமனான பீஸா போல வெங்காயம் மசாலா, மற்றும் முட்டையோடு அருமையான சுவை. கூடவே கெட்டிக் குழம்பு, மட்டன் தலைக்கறி க்ரேவி, மற்றும் சிக்கன் க்ரேவியோடு, மற்றும் சட்னியும் இருக்கிறது. 

நண்டு ஆம்லெட், எறா ஆம்லெட், என விதவிதமான கடல்வாழ் உயிரினங்களை ஆம்லெட் போட்டுத் தருகிறார்கள். கிட்டத்தட்ட தோசையைப் போல இருக்கிறது. கொஞ்சம் ஆம்லெட் தனமாய் இல்லாமல் கல் தோசைப் போல இருப்பதால் அத்தனை  பாராட்டை தர முடியவில்லை. அதே போல இவர்களது ஞாயிறு ஸ்பெஷலான நாட்டுக்கோழி சீரக சம்பா பிரியாணி. சீரக சம்பா பிரியாணியின் வாசம் அருமையாய் இருந்தாலும், மசாலா அத்தனை சிறப்பாய் இல்லாததால் ரொம்பவே ப்ளண்டாக இருந்தது. குறைகளை அவர்களிடமும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். நண்பர்கள் சில இங்கேயிருந்து ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு நேரிடையாய் அங்கேயே போய் சாப்பிடும் அளவுக்கு ரசிகர்களாகிவிட்டார்கள். 

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மெயின் டிஷ்ஷிலிருந்து சைட் டிஷ் வரை எல்லாமே 120-200 ரூபாக்குள் தான். நிஜமான மெஸ் தரம் மற்றும் விலையுடன். நீங்களும் டிரை பண்ணிப்பாருங்க.

வளையம்பட்டியார் மெஸ்

அக்பர் தெரு

திருவல்லிக்கேணி  

Jul 1, 2023

சாப்பாட்டுக்கடை - குக்கிராமம்

 குக்கிராமம். பெயரே வித்யாசமாய் இருக்க அண்ணாநகரில் இருக்கிறது என்றார்கள். முழுவதும் ஆர்கானிக் உணவு மட்டுமே என்றிருக்க முதல் பயமே விலை வச்சி செய்யப் போறாங்க என்பதுதான்.  இடம் ஒரு சின்ன பார்க் போல இருந்தது. ஒரு பழைய பில்டிங்கில் உள்ளே ஆர்கானிக் பொருட்களின் ஸ்டோராகவும், வெளியே உணவகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே நுழையும் முன்னே வாசலில் ஒரு கோயில் மணி தொங்க விட்டிருந்தார்கள். வழக்கமாய் பிட்ஸா கடைகளில் தான் இம்மாதிரி பாத்திருக்கிறேன். போகும்போது உணவும், உங்க பரிமாறலும் நன்றாக இருந்தது என்று மெட்டபராய் சொல்ல வைத்திருப்பார்கள். அது போல இங்கேயும் தொங்குகிறதே? என்று ஆச்சர்யமாய் உள்ளே போனேன். 

மெனு லிஸ்ட் எதிர்பார்த்ததை விட பெருசாகவே இருந்தது. முதலில் ஏதாவது ஸ்டார்டரிலிருந்து ஆரம்பிப்போம் என வெங்காயப்பூ ப்ரையில் ஆரம்பித்தோம். நல்ல ஆர்கானிக் வெங்க்கயத்தை போட்டு கிரிஸ்பியான ரிங்க் பக்கோடா வெங்காயம் வாயில் வைத்தவுடன் கரைந்ததால் அடுத்ததாய் புடலங்காய் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஆர்டர் செய்தோம். புடலங்காயை எப்படி அத்தனை சுவையாய் செய்ய முடியும் என்று தெரியவில்லை. நீர் சத்து உள்ள காய் அதை வெங்காயப்பூ போல போட்டுக் கொடுத்ததும் அருமையாய் இருந்தது.

அடுத்ததாய் இட்லி தக்காளி நல்லெண்ணெய் குழம்பு ஆர்டர் செய்திருந்தோம். நல்ல ஆர்கானிக் தக்காளியோடு, அது நாட்டுத்தக்காளியாய் இருக்கும் போல நல்ல புளிப்பும் அதே நேரத்தில் கொஞ்சம் காரமும் சேர்ந்திருக்க, மொத்த குழம்பையும் ஆர்கானிக் நல்லெண்ணெய்யில் சமைத்திருந்தார்கள். குழம்பு இட்லியில் ஊறியிருக்க, மெல்ல தக்காளி மற்றும் நல்லெண்ணெய் மணமும் நாசியில் ஏற அட்டகாசமான ஒரு அனுபவத்தை கொடுத்தது. நல்லெண்ணெய்ய்யின் சுவை அடடா

பூரி என மில்லட் பூரி வகைகள் வைத்திருந்தார்கள். வழக்கமான பூரிக்கு கொடுக்கும் கிழங்குதான். மில்லட் பூரி என்பதைத் தாண்டி ஒன்றும் பெரிதாய் பீல் செய்ய முடியவில்லை. மில்லட் அடை அட்டகாசமாய் இருந்தது.  சைசில் சின்னதாய் இருந்தாலும் சுவையில் பெரிதாய் இருந்ததும் நான்கைந்து சட்னி வைகள் மற்றும் அவியலோடு தந்தார்கள். நல்ல சுவை. அண்ட் க்ரிஸ்பி ஆல்சோ

விதவிதமான மில்லட் தோசைகள் நிறைய மசாலா மிக்ஸ்க்களோடு தருகிறார்கள். ஏனோ எனக்கு தோசை வகைகளை சுவைத்துப் பார்க்க விருப்பம் வர வில்லை. அதற்கு காரணம் விலை என்பதாய் கூட இருக்கலாம். 120 லிருந்து 170 வரை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாய் நல்ல தரமான உணவை தருகிறார்கள். எல்லா அயிட்டங்களிலும் பெஸ்ட் தக்காளி ந்ல்லெண்ணெய் குழம்பு தான். டிவைன். கிளம்பி வரும் போது வாசலில் தொங்கிய மணி அடிக்க கை தானாகவே  நீண்டு கயிற்றைப் பிடித்து அடித்தது. 



Jun 29, 2023

சாப்பாட்டுக்கடை - உபவிஹார் - அண்ணாநகர்

 பென்ன தோசை சாப்பிடுவதற்காக கோவா செல்லும் வழியில் ஓர் ஊரில் இரவு தங்கி, விடியற்காலையில் அந்த ஊர் பென்ன தோசைக்கு பேமஸ் என்பதால் முதல் தோசையை சாப்பிட்டு கிளம்பிவர்கள் நாங்கள். அப்படியான பென்னை தோசை சென்னையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்ட போது கண்களில் அந்த செந்நிறமாய் மடிக்கப்பட்ட தோசை கண் முன் நிழலாடியது. கர்நாடக பென்னை தோசைக்கு உள்ளே வைத்துத் தரும் மசால் இன்னொரு சுவாரஸ்யம் என்றாலும் தோசையின் மேல் வெண்ணையை வைத்து அது உருகிய பின் பிய்த்து சாப்பிடும் சுவை இருக்கிறதே அட அட அட..  அப்படியான ஒரு தோசை சென்னையில் கிடைக்கும் இடம் எது என்று தேடியதில் பெங்களூர் டிபன் செண்டர் என்று ஒன்றைப் பார்த்தோம் படு திராபையான உணவு. கூடவே தண்ணி பாட்டில் வாங்க சொல்லி திட்டு வாங்கிக் கொண்டார்கள். தொடர் தேடல் புதிதாய் ஒரு கடை அண்ணாநகரில் திறந்திருக்கிறார்கள் என்றதும் வண்டியை விட்டோம்

அண்ணாநகர் டவர் பார்க் மெட்ரோ பார்க்கிங்கில் தான் கடை ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னக் கடை தான். ஏகப்பட்ட கூட்டம். டிபிக்கல் கர்நாடக அயிட்டங்களை வகைப்படுத்தியிருந்தார்கள். தட்டே இட்லி, கார பாத், பிஸிபேளா பாத், பூரி, பென்னே தோசை, மசாலா பென்னே தோசை என இருபதுக்கும் மேற்பட்ட அயிட்டங்கள். பில் போட பெரிய க்யூ நின்றது. அதே நேரத்தில் பரபரவென அயிட்டங்கள் டெலிவரியும் ஆகிக் கொண்டிருக்க, நாங்களும் க்யூவில் நின்றோம். ஒரு பென்னை தோசை, கார பாத் ஆர்டர் செய்தோம். தோசைக்கு டோக்கை கொடுத்துவிட்டு, காரபாத்தை உடனே கொடுத்தார்கள். டிபிக்கல் தித்திப்பு சாம்பார். கார சட்னியும் தேங்காய் சட்னியும் கொடுத்தார்கள். கார பாத் ஆஸ் யூஸுவல் பெங்களூரில் சாப்பிட்டது போல இருந்தது. சிறிது நேரம் கழித்து டோக்கன் நம்பர் சொல்லி கூப்பிட்டு பென்ன தோசை கொடுத்தார்கள். பார்ப்பதற்கே கவர்ச்சிக் கன்னி போல இருந்தது தோசை. நல்ல ரோஸ்டாகி, பென்னை மேலே பளபளவென தெரிய, க்ரிஸ்பான பென்னெ தோசை. அபாரமான சுவையோடு இருந்தது.

மற்றொரு நாள் அதே பென்னை தோசையோடு, பிஸிபேளாபாத் ஆர்டர் செய்திருந்தோம். பிஸிபேளாபாத் என்றால் நம்மூரில் சாம்பார் சாதத்தை தருவார்கள். அதையே சாம்பார் சாதம் என்றும், பிஸிபேளா பாத் என்று அழைப்பார்கள். இரண்டிற்கு ஆறு வித்யாசமில்லை. ஒரு வித்யாசம் கூட இருக்காது. கொஞ்சமே கொஞ்சம் சமைக்க தெரிந்தவன் பிஸிபேளாவில் கொஞ்சம் தனியா அள்ளிப் போட்டிருப்பான் அவ்வளவுதான். ஆனால் இவர்களது பிஸி பேளா கெட்டியாகவும் இல்லாமல், தண்ணீராகவும் இல்லாமல் அட்டகாசமான மிக்ஸரில் இருக்க, சுவை ஆஸ்யூஷ்வல் தித்திப்பு சுவையோடு, கர்நாடக பிஸி.  இன்னமும் ரவா தோசை சாப்பிடவில்லை. செளசெள பாத் சாப்பிடவில்லை. விரைவில் அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம். என்ன க்யூவில் நிற்க தயாராக வேண்டும். அதே போல சாப்பிட இரண்டே இரண்டு டேபிள்கள் தான் அதுவும் நின்ரு கொண்டு சாப்பிடும் முறையில் இன்னும் நான்கைந்து டேபிள்கள் போடலாம். நல்ல தரமான சுவையான டிவைனான கர்நாடக திண்டிக்கு "உபவிஹார் அண்ணாநகர்

Jun 27, 2023

சாப்பாட்டுக்கடை - தோசை மாமா கடை -வீழ்ந்த கதை

 தோசை மாமா கடையைப் பற்றி "வேற லெவல்" கடை என்று வீடியோ போடாத ஃபுட் ரிவ்வியூவர்களே கிடையாது என்று  சொல்லலாம். அதோடு அங்கே சாப்பிடச் சென்றால் பெரிய க்யூவில் நிற்க வேண்டும். க்யூவைத் தாண்டி அவர் அப்படி சமைப்பார். இப்படி சமைப்பார். செம்ம சுவை என்றெல்லாம் வீடியோவில் சொல்லாத ஆள் இல்லை. அவரின் கடையில் க்யூவே இல்லாத காலத்திலேயே நான் சாப்பிட்டிருக்கிறேன். அத்தனை கூட்டமெல்லாம் இருக்காது.

கூட்டத்திற்கு காரணம் அவரின் தோசை தயாரிப்பு முறைதான். அவரே தோசை மாவு கரைப்பார். அவரே தோசை ஊற்றுவார். அவரே பொடி எல்லாம் போடுவார். அவரே எண்ணைய் ஊற்றுவார். அவரே பார்சலுக்கு பணம் வாங்குவார். அவரே தோசை சுட்டு அதை ப்ளேட்டில் வைத்து சாம்பார் சட்டினி எல்லாம் ஊற்றி கொடுப்பார். அவரே சாப்பிட்ட தட்டுக்களை கழுவி வைப்பார். அது மட்டுமில்லாமல் பத்துக்கும் மேற்பட்ட வகை தோசைகள் வைத்திருப்பார். அதனால் இன்னும் அதற்கான பிரிபரேஷன்கள் ஒவ்வொரு தோசைக்கும் மாறுபடும் பட்சத்தில் நேரம் எடுக்கத்தான் செய்யும். இத்தனைக்கும் க்யூவில் வரவில்லையென்றால் கொடுக்க மாட்டார். கொஞ்சம் முகம் காட்டுவார். இத்தனையும் அவரே செய்வதால் நேரம் ஆகத்தான் செய்யும். கூடவே யூட்யூபர்களின் வருகை அவருடய கடைக்கு ஆட்களை அதிகம் பேர் கொண்டு வர, க்யூ பெரிதானது. காத்திருப்பு நேரம் அதிகமானது. அவருடய உழைப்பும் அதிகமானது. வருமானம் அதிகம் ஆகியும் அவர் ஆட்களை போட்டுக் கொள்ளாமலேயே கடை நடத்தினார். இன்னும் கூட்டம் அதிகமானது. ஒன்பதரை பத்துக்கு பிறகு இத்தனை பேருக்கு மேல் தோசை கிடையாது என்று சொல்லி திரும்பி அனுப்பும் அளவிற்கு பிஸினெஸ் வளர்ச்சி ஆனது. சில யூட்யூப்களில் பேட்டி எல்லாம் கொடுத்தார் மாமா. ravichandran என்கிற அவரின் பெயரே தோசை மாமா ஆனது. இந்த வளர்ச்சி தான் அவரை  கீழே விழச் செய்ததும் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவரின் தோசையின் டேஸ்ட் என்று சொல்லப் போனால் அத்தனை சிலாக்கியமான தோசையெல்லாம் இல்லை. வேறே லெவல்.. வேற லெவல் என்று சொல்லிய தோசையை அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டதும் அதை நல்லா இல்லை என்று சொன்னால் நம்மை ஃபுட்டி லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற ஆதங்கத்தீல் அவர்கள் பாராட்டித் தொலைப்பார்கள்.  ஆனால் மாமாவின் தோசை சாதாரண கையேந்தி பவன் தோசைக்கு எந்தவிதமான குறைவுமில்லாத தோசை தான். அதிலும் பொடி எல்லாம் போட்டு சல்லீசான விலையில் வீட்டு தோசைக்கு நிகராய் இருக்கும்.

இவரிடம் போய் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த வண்டி கடையிலேயே இருப்பீங்க? என்று யாரோ சொல்லி விட்டிருப்பார்கள் போல. தள்ளுவண்டிக்கடையை ஏறக்கட்டிவிட்டு, சாலிகிராமத்தில் தோசை மாமா கொஞ்சம் பெரிய உணவகமாய் திறந்தார். நல்ல விஷயம் தானே.. எத்தனை நாள் தள்ளுவண்டிக் கடையாகவே இருப்பது. நல்லதுதான் ஆனால் சில கடைகள் சின்னதாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே வேலைக்காகும். பெரிதாய் ஆக, ஆக அதன் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து நத்திங் ஸ்பெஷல் இல்லை என்பது தெரிந்துவிடும். அப்படியானது இவர்களது தோசை மாமா தோசை கடை இன் சாலிகிராமம். சாலிக்கிராமத்தில் ஆரம்பித்த சில நாட்களிலேயே மேற்கு மாம்பலத்தில் இன்னொரு சின்ன கிசோக்ஸ் கடை ஒன்று திறந்தார்கள். என்னாடா அதுக்குள்ள ரெண்டு கடையா? என்று ஆச்சர்யப்பட்டேன். கடை ஆரம்பித்த நாட்களில் ப்ராண்ட் அம்பாசிட்டர் போல கடையில் நிற்க வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கம் போல நார்த் ஈஸ்ட் ஆட்கள் தோசை போட ஆரம்பித்தார்கள். 30ரூபா தோசை 60 ஆனது. பின்பு சாலிகிராமத்தில் அவரை காண்பது அரிதானது. சரி ஒரு வேளை மேற்கு மாம்பலம் கடையில் இருப்பாரோ என்று கேட்ட போது அவர் இப்போது வருவதில்லை ஆனால் அவரது ரெஸிப்பி தான் ஃபாலோ செய்கிறோம் என்றார்கள். சிரித்தேன். அவரது ரெசிப்பியே சிங்கிள் மேன் ஷோதான். அதுதான் ஸ்பெஷல். என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். தோசை மாமாவின் தோசையை விட வெகு சுமாராய் இருந்தது. யாரோ இவரை ப்ராண்டாய் வைத்து காசு பார்க்க ஆசைப்பட்டு இவரை போட்டு பார்த்துவிட்டார்கள் என்றே தோன்றியது. வெகு சீக்கிரத்திலேயே சாலிக்கிராமம் மற்றும் மேற்கு மாம்பலம் கடைகள் மூடப்பட்டது. 

மீண்டும் தோசை மாமா அதே தள்ளுவண்டிக்கடையில் ஆரம்பித்துவிட்டார் அவரது அயராத உழைப்பை. முன்பு அளவிற்கு கூட்டமெல்லாம் இல்லை. சகாய விலை. அயராத உழைப்பு. நத்திங் ஸ்பெஷல் இல்லையென்றாலும் அவரது உழைப்புத்தான் ஸ்பெஷல் என்பதால் மக்களின் அன்பு அவரை தோசை மாமா ஆக்கியது. தோசை உள்ளவரை தோசை மாமாவின் பெயர் நிலைக்கும். 

Jun 10, 2023

சாப்பாட்டுக்கடை - முத்து வடை கடை

விருகம்பாக்கத்தில் அலுவலகம் ஆரம்பித்த அன்று அக்கம் பக்கம் என்னென்ன கடைகள் இருக்கிறது என்று ஒரு ரவுண்ட் அடித்தேன். நல்லதாய் ஒரு டீக்கடை இல்லாத ஏரியா எது என்றால் அது விருகம்பாகக்ம் ஏரியாதான். கொஞ்சம் சின்மயா நகர் பக்கம் போனால் கருப்பட்டிக் காப்பி கார்பரேட் காப்பி ஹவுஸ் லெவலுக்கு கடை போட்டிருக்கிறார்கள்  அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இந்த முத்து வடைக்கடையை பார்த்ததும் கடையில் போய் கேட்ட போது மாலை தான் திறப்பார்கள் என்றார்கள்.  ஆபீஸ் பசங்களிடம் நான்கு மணிக்கு போய் ஒரு நடை பார்த்துவிட்டு வரச் சொல்லியிருந்த போது இப்போ தான் அடுப்பு எல்லாம் செட் செய்றாங்க.  கூட்டமா வேற இருக்கு என்றார். என்னாது வடை கடைக்கு கூட்டமா? என்று நானே கிளம்பிப் போனேன். நிஜமாகவே நல்ல கூட்டம் அவர் வடை வறுக்கும் சட்டியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மசால் வடை போட்டிருந்தார். அடுப்பிலிருந்து எடுத்த மாத்திரத்தில் எல்லா வடையும் பார்சல் போய்விட, கட்டங்கடைசியாய் ஒரே ஒரு வடை இருக்க அதை நான் ஆவலாய் எடுத்து ஒரு கடி கடித்தேன். மசால் வடையில் பெரும்பாலும் வெங்காயத்தை கொஞ்சம் தீய வைக்கும் அளவிற்கு வடை முறுகலாய் வர வேண்டும் என்பதற்காக வேக வைப்பார்கள். இவரின் வடையில் அப்படி வெங்காயம் தீயாமல் பொன்நிறத்தில் வரும் போது எடுத்து விடுகிறார். சமீபத்தில் அத்தனை க்ரிஸ்பியாய் ஒரு வடையை  சாப்பிட்ட நியாபகமே இல்லை. சரியான பதத்தில் அரைக்கப்பட்ட மாவு. கொஞ்சம் ஆறியவுடன். அதை சாதத்தோடு பிய்த்து போட்டு சாப்பிட்டால் சாப்பாட்டின் நடுவே கருக்முறுக்கென பருப்பு வாயில் அரைபடும். அட்டகாசமான சுவையை தரும். 

மாசல் வடையே இப்படி என்றால் கூடவே இனிப்பு சூய்யம். அளவான தித்திப்போடு வெல்லம் போட்ட சூய்யம். மெதுவடை. எண்ணைய் வடித்து  பின் அரைச்சூட்டில் சாப்பிட்டுப் பாருங்கள் வாயில் கரையும். பட்டாணி சுண்டல் மசால் வடை காம்பினேஷன் இன்னும் அட்டகாசமாய் இருக்கும். 

மதியத்தில் சாம்பார், லெமன், தக்காளி, தயிர், வெஜிட்டபிள் சாதங்கள் வெறும் 30 ரூபாய்க்கு கூடவே தொட்டுக் கொள்ள மசால் வடை.. அத்தனை தரமாய் இருக்கும். என்ன நெய் போடுறேன். வெண்ணெய் போடுறேன்னு எல்லாம் இருக்காது. நல்ல வீட்டு சாப்பாடு போல இருக்கும். என் அலுவலகத்திற்கு வரும் பல செலிப்ரெட்டிகளுக்கு நான் மணி அண்ணன் கடையிலிருந்து சாம்பார் சாதம் தயிர் சாதம் வாங்கிக் கொடுத்திருக்கேன். சாப்பிட்ட மாத்திரத்தில் அவர்கள் கேட்ட முதல் கேள்வி எங்க இருக்கு இந்த ஓட்டல் என்பதுதான். கூடவே வடை வேறு கேட்கவா வேண்டும். 

இந்த வடைக்கடை இருந்த இடத்தில் கொரோனாவுக்கு முன் அண்ணன் முத்து பஞ்சர் கடை வைத்திருந்திருக்கிறார்.  கொரோனாவுக்கு பின் தான் இந்த வடை கடை. மெல்ல மாலைக்கடை மதியக்கடையாகியிருக்கிறது. மிகவும் அன்பான, வெள்ளந்தியான மனிதர் அண்ணன் முத்து. அவரு மனசு போலவே அவரு கொடுக்குற சாப்பாடும். ஒரு காலத்தில் மதுரவாயில் பகுதியில் அற்புதமான மீன் குழம்பு சாப்பாடு போட்டு கடை சூப்பராய் பிக்கப் ஆகும் நேரத்தில் ரோடு அகலப்படுத்தியதில் அவரது கடைபோய் ஆரம்பித்த இடத்திற்கே வந்தவர் இப்போது மீண்டும் அவரது கை மணத்தில்  

ஆவிச்சி ஸ்கூலுக்கு பக்கத்தில் கோயம்பேடு போக பஸ் எல்லாம் நிற்கும் அந்த இடத்தில் ஒரு சிறு கடை தான் இந்த மணி வடை கடை. டோண்ட் மிஸ்.  அத வடை நிஜமாவே டிவைன் தான்.

கேபிள் சங்கர்.

முத்து வடை கடை

காமராஜர் சாலை

விருகம்பாக்கம்.

Dec 27, 2022

சாப்பாட்டுக்கடை - மவுண்ட்பேட்டன் ஐயர் கேட்டரிங்

 மார்கழி மாசம் வந்துவிட்டாலே எல்லா சபாக்களிலும் கச்சேரி களைகட்ட ஆரம்பித்துவிடும். கூடவே கச்சேரி நடக்கும் இடத்தில் கேட்டரிங் ஆட்களின் கேண்டீனும் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு கச்சேரி முடிந்ததும் அங்கே இருக்கும் கேட்டீனில் மதிய சாப்பாடு, மாலை டிபன், இரவு உணவு என களை கட்டிவிடும். கச்சேரிக்கு போகிறவர்களை விட கேண்டீனில் நிறைய கூட்டம் என்பதை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இதில் மவுண்ட்பேட்டன், அறுசுவை என பல பேர் பிரபல்யம். ஒவ்வொரு மார்கழி மாத சீசனுக்கும் ஏதாவது புதிய ஐயிட்டத்த இறக்கி கேண்டீன் வியாபாரத்தை களை கட்ட வைத்துவிடுவார்கள் இவர்கள்.  வருடா வருடம் நானும் பல கேண்டீன்களுக்கு படையெடுத்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் எழுத நினைத்ததில்லை. இன்றைய புட் ப்ளாகர்களுக்கு வேற லெவல் விமர்சகர்களைத் தாண்டி வெறும் வெஜிட்டேரியனில் இத்தனை வகைகளா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவர்களது அயிட்டங்கள வரிசைக்கட்டி இருக்கும். 

மியூசிக் அக்காடமியில் கேண்டீனுக்கு போய்ப் பார்க்கலாம் என்று போன போது அங்கே உள்ளே நுழையும் போதே கேண்டீனுக்கு மட்டுமென்றால் பார்க்கிங் இல்லை என்று போர்டே வைத்திருந்தார்கள். சரி என வண்டியை வெளியே எடுத்து வந்து நாரதகான சபாவிற்குள் நுழைந்தோம். அங்கேயும் பார்க்கிங் புல் தான். இருந்தாலும் கேண்டீன் போக வேண்டும் என்று சொன்னவுடன் நுழைய அனுமதித்தார்க்கள். நாரதகான சபாவின் பின்புறத்தில் கேண்டீன் ஏற்பாடாகியிருந்தது. ஶ்ரீ சாஸ்தலயா கேட்டரிங் சர்வீஸ் கடை போட்டிருந்தார்கள். ஏகப்பட்ட கூட்டம். உட்கார இடமில்லை. கொஞ்சம் நேரம் காத்திருந்துதான் அமர வேண்டியிருந்தது. போண்டா, ரவா தோசை, கூடவே ஆப்பம் கடலைக்கறி என்று ஆர்டர் செய்தோம். ஆப்பம் கிரிஸ்பினெஸ் இல்லாமல் மாவின் கலர் சற்றே கலர் குறைவாகவே இருந்தது. கூட கொடுத்த கடலைக்கறியில் ஏகப்பட்ட கிராம்பு மசாலா. மசாலாவின் மணம் உச்சி மண்டை வரை ஏறியது. அடுத்து வந்த ரவா தோசை கிரிஸ்பாக கேட்டிருந்தோம். அதுவும் தடியான மாவோடு கிரிஸ்பினெஸ் இல்லாமல் செட் தோசைப் போல வந்தது. கூடக் கொடுத்த சட்னி மட்டுமே சிலாக்கியம். போண்டாவைப் பற்றி சிலாக்கியமாய் சொல்ல ஏதுவுமில்லை. மிகவும் ஏமாற்றத்துடன் கிளம்ப்பினோம். குடிப்பதற்கு தண்ணீர் வைக்காமல் தண்ணீர் பாட்டில் வைத்தார்கள். பில் கொடுக்க போன போது தண்ணீருக்கும் காசு போட்டார்கள். நான் கேட்கவேயில்லை. அவர்களாகவே கொடுத்தார்கள் எனவே குடிக்க தண்ணீர் இல்லாமல் எப்படி சர்வ் செய்கிறீர்கள்? என்று கேட்டவுடன் பில்லில் கழித்தார்கள்.  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை. முதல் காண்டீனே இப்படி சொதப்புகிறதே என்று இதைப் பற்றி சித்ரா லஷ்மனணிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, மவுண்ட் பேட்டன் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் வெறும் கேண்டீன் மட்டும் நடத்துறாரு. ஒரு நடை போய்ட்டு வந்திருங்க. என்றார். 

மவுண்ட்பேட்டன் மணி அய்யர் கேட்டரிங் பிரசித்தமான கேட்டரிங். கல்யாண மண்டபம் சற்றே காலியாகவே இருந்தது. போன மாத்திரத்தில் செட்டி நாடு அயிட்டங்களைப் பார்த்ததும், பலாப்பழ பணியாரம், தக்காளி பணியாரம் இரண்டையும் ஆர்டர் செய்தோம். பலாப்பழ பணியாரம் செம்ம. கொஞ்சம் எண்ணையில் பொறித்ததால் எண்ணெய் வாடை லேசா அடித்ததை தவிர, அதிக ஆயில் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அதிகம் தித்திப்பும் இல்லை. இல்லாமலும் இல்லை. அடுத்து வந்த தக்காளி பணீயாரம் அட்டகாசமாய் இருந்தது. கூட கொடுத்த தேங்காய் சட்டினிக்கு தக்காளியின் லேசான புளிப்பு, மற்றும் அதனுடன் சேர்க்கப்பட்டிருந்த காரமும் வித்யாசமான சுவையை கொடுத்தது. அடை அவியல் ஒரு செட்டும், palak பூரி வித் கடாய் வெஜிட்டபிள் ஆர்டர் செய்திருந்தோம். அடை பதமான அடை. டிபிக்கல் அய்யர் வீட்டு அடை. அதிக காரமில்லாமல் தொட்டுக் கொள்ள கொடுத்த அவியலில் தாராளமாய் தேங்காயும், காய்கறிகளையும் போடப்பட்டு அடைக்கு தொட்டுக்க அவியலா? இல்லை அவியலை தொட்டுக்க அடையா? என்று சண்டை போட வேண்டியிருந்தது. கடைசியாய் வந்த மேத்தி பூரி. மூன்று கொடுத்தார்கள். கூடவே திக்கான அரைக்கப்பட்ட ம்சாலா கிரேவியில் அநேகமாய் முந்திரி இருப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருந்தது. காரணம் முத்திரியை அரைத்தால் கிடைக்கும் லேசான தித்திப்பும். திக்கான கிரேவியும் அட்டகாசம். மூன்று பூரிக்கு ரெண்டு கப் கிரேவி என்பது அதன் சுவைக்கான அங்கீகாரம் என்றே சொல்லலாம். கட்டங்கடைசியாய் ஒரு பில்டர் காப்பியோடு முடித்தோம். குறை சொல்ல முடியாத காப்பி.

மதிய சாப்பாடு விலை 580 சொச்சம் எனும் போது கெதக் என்று இருந்தது. மெனுவை பார்த்த போது நல்ல கல்யாண வீட்டு சமையல் மெனுதான். என்னதான் மவுண்ட்பேட்டன் என்றாலும் அதிகம் என்றே தோன்றியது. கேட்டரிங்காரர்களால் ஓட்டல்காரர்கள் ஆக முடியாது என்பது என் திண்ணமான எண்ணம். காரணம் அவர்கள் வைக்கும் விலை. எத்தனையோ கேட்டரிங்காரர்கள் ஓட்டல் ஆரம்பித்து மூடியிருக்கிறார்கள் சுவையெல்லாவற்றையும் தாண்டி இவர்களது விலைதான் வாடிக்கையாளர்க்களை அவர்களிடமிருந்து விலகி செல்ல வைக்கிறது. என்ன செய்வது அவர்களுக்கு ஒட்டல் நடத்த கை வராது. பட் இந்த மார்கழி கேண்டீன் பயணத்தில் நல்லதொரு காண்டீனில் சாப்பிட்டது திருப்திதான். மைலாப்பூரில் அறுசுவை போட்டிருக்கிறாராம். ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும்.

Dec 9, 2022

சாப்பாட்டுக்கடை - மாதம்பட்டி சமையல்

விக்ரம் பட வெற்றி விழாவிலிருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரிடமும் ஏகோபித்த பாராட்டு பெற்ற விஷயம் ஒன்று எதுவென்றால் மாதம்பட்டி சமையல் தான். மெகந்தி சர்க்கஸ் படத்தின் நாயகன். தயாரிப்பாளர் தான் இந்த கேட்டரிங் கம்பெனியின் ஓனர். அதன் பிறகு திரைப்பட விழாக்களில் மாதம்பட்டியின் கேட்டரிங் வைப்பது நிகழ்ச்சிக்கு காம்பய்ரிங் வைப்பதைப் போல கட்டாயம் ஆகிவிட்டாலும் ஏனோ என்னால் இவர்களது உணவை ருசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று மாலை நண்பர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் சித்தார்த்தின் ‘the fall" வெப் சீரீஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அங்கே போனால் மாதம்பட்டியின் டின்னர். சரி நாம டின்னருக்கு வருவோம்


ஸ்வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். ப்ரெட் மால்பூவாவும், பரங்கி குல்கந்து அல்வாவும் வைத்திருந்தார்கள். பரங்கி குல்கந்து அல்வா சும்மா தளதளவென நெய்யோடு பார்பதற்கே கவர்சியாய் இருந்தது. அட்டகாசமான சுவை. சாப்பிட்டு முடிக்கும் போது அடி நாக்கில் தெரிந்த குல்கந்தின் வாசம் கலந்த சுவை செம்ம.

ப்ரெட் மால்பூவா கொஞ்சம் ட்ரை ஆகிவிட்டதால் அதன் மெதுத்தன்மை இல்லாமல் போயிருந்தது. ஆனால் வித்யாசமான சுவை.

ஸ்டார்ட்டஸாக சிக்கன் லாலிபாப், கோலா உருண்டை, சிக்கன் பிச்சிப்போட்டது, ஸ்டப்டு முட்டை, பன்னீர் பொரியல், வெஜ் மீன் என வரிசைக்கட்டியிருந்தார்கள்.

சிக்கன் லாலிபாப் நல்ல சிக்கன் பீஸ்களோடு, ஜூஸியாய் ப்ரை செய்யப்பட்டிருந்தது. கோலா உருண்டை மாவும், அரைத்த மட்டனும் சரியான பதத்தில் இருந்தது. செம்ம. சிக்கன் பிச்சிப் போட்டது கொஞ்சம் காரம் குறைந்த மசாலாவில் குட்டிக்குட்டியாய் பிச்சிப்போட்ட சிக்கன் வருத்து கொடுத்திருந்தார்கள் அட்டகாசமாய் இருந்தது. ஸ்டப்டு முட்டை அஹா ஓஹோ என்றில்லாமல் மற்ற அயிட்டங்களை பார்க்கும் போது ஆவரேஜ் தான். பன்னீர் பொரியல். கிட்டத்தட்ட முட்டை புர்ஜி அளவுக்கு நன்கு உதிர்க்கப்பட்ட தூள்களாய், சரியான விகிதத்தில் பச்சை மிளகாய் எல்லாம் போட்டு தந்திருந்தார்கள். பன்னீரின் சுவையும், முட்டையின் சுவையுமாய் கலந்து கட்டி இருந்தாலும் ஒன் மோர் டைம் சாப்பிடலாமே என்று தோன்றியது. அடுத்தடுத்த அயிட்டங்கள் இருப்பதால் அடுத்த ஐயிட்டமான வெஜ் மீனை சாப்பிட ஆரம்பித்தேன். மீன்ல என்னடா வெஜ் என்று கேட்டீர்களானால் சோயா தான். மீன் சைசில் கட் செய்து அதில் மசாலா தடவி மீன் வருவல் போல் தந்திருந்தார்கள். இது ஒரு லெட் டவுன் தான். அத்தனை சிலாக்கியமாய் இல்லை. காரணம் சோயா மீன் போல சாப்டாக இல்லாமல் பிஸ்கெட் போல கடித்து சாப்பிடும் பதத்தில் இருந்ததால். 

மெயின் கோர்ஸாக மட்டன் பிரியாணி, வெஜ் மட்டன் பிரியாணி, தோசை வகைகளில் ஆனியன், பொடி, நெய், ரவா தோசைகள், டிப்பன் சாம்பார், ரசம், சாதம், மட்டன் செமி கிரேவி, வெஜ் மீன் குழம்பு, தக்காளி கடைசல், ப்ரையம்,  என வரிசைக்கட்டியிருந்தார்கள். மட்டன் பிரியாணி இருக்க வெஜ் மட்டன் எதற்கு என முதல் ரவுண்ட் மட்டன் பிரியாணியை அடைந்தேன். சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட மட்டன் பிரியாணி. அதிக காரமில்லாமல், நன்கு வெந்த மட்டன் பீஸ்களோடு அருமையாய் இருந்தது. கூடவே கொடுத்த செமி மட்டன் கிரேவி அட்டகாசம்.  சரி வெஜ் மட்டன் பிரியாணியையும் ஒரு கை சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று ட்ரை செய்த போது  மட்டனின் மணம் மட்டுமே இல்லை.. மற்றபடி சுவையில் மட்டன் பிரியாணிக்கு சரியான போட்டியாகவே இருந்தது. வெஜ் மட்டன் பிரியாணிக்கு மட்டன் செமி க்ரேவி செம்ம காம்பினேஷனாய் சாப்பிட்டேன். அடி பொளி.

கொஞ்சமே கொஞ்சம் சாதம் போட்டு மட்டன் கிரேவியையும், வெஜ்மீன் கிரேவியை சாப்பிட்டேன். மட்டன் ஏற்கனவே சொன்னபடி நன்றாக இருந்தது. வெஜ் மீன் காரக்குழம்பாகவும் இல்லாமல், மீன் குழம்பாகவும் இல்லாமல், அதில் போடப்பட்டிருந்த ஃபேக் மீன் துண்டான சோயா மீன் வறுவல் எப்படி கெட்டியாய் இருந்ததோ அதையே இதற்கும் பயன்படுத்தியிருப்பார்கள் போல கொஞ்சம் குழம்பில் ஊறியிருந்ததே தவிர சேம் பிஸ்கட் சுவை லெட் டவுன் தான்.

தோசைகள் ஆஸ்யூசுவல் குறையொன்றுமில்லை. ஆனால் அந்த தக்காளி கடைசல். அட அட அட.. அட்டகாசம். குறிப்பாய் நெய் தோசைக்கும், ரவா தோசைக்கும் செம்ம. நன்கு கடைந்த தக்காளி, வெங்காயம், பூண்டு என டிவைன் என்று சொன்னால் மிகையில்லை. இதற்காகவே கொஞ்சம் சாதம் போட்டு தயிர் சாப்பாட்டுடன் ரெண்டு ஸ்பூன் தக்காளி கடைசலோடு சாப்பிட்டேன் தேவாமிருதம்.  எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு கொங்கு ஸ்டைல் ரசத்தை விட்டு விட்டாள் அது நியாயமாய் இருக்காதே என்று ஒரு டம்பளர் ரசத்தை வாங்கி குடித்தேன். வழக்கம் போல கொங்கின் பெருங்காயம் தூக்கலான ரசம் தான் குறையொன்றுமில்லை. வெளியே டெசர்டுக்கு மூலீகை ஜீரண கசாயமும், ஐஸ்க்ரீமும் வைத்திருந்தார்கள். நான் மூலிகை கசாயத்தை தெரிந்தெடுத்து ஒரு சின்னடம்பளர் குடித்தேன். தித்திப்பு சுவையுடன் இருந்தது. சாப்பிட்ட எதுக்களிப்பு ஏதுமில்லாமல் இருக்க இது உதவியது என்றே சொல்ல வேண்டும். இந்த சோயா மீனை இனி அவாய்ட் செய்யலாமென்று தோன்றுகிறது. அல்லது இன்னும் பதத்துடனான சோயாவை பயன்படுத்தி சமைக்கலாமென்பது என் எண்ணம். மற்றபடி நல்ல திருப்தியான சாப்பாடு.

கேபிள் சங்கர்

Nov 3, 2022

சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை.

பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் மூடிய கடையைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. மூடியதை பற்றி எழுதி என்ன பிரயோஜனம்?. பல வருட பாரம்பரியம் உள்ள கடைகள் கால மாற்றத்தில் தக்க வைக்க முடியாமல் மூடியதில்லையா?. இதில்  எழுத என்ன இருக்கிறது என்று கேட்கலாம். மொக்கையான சின்னக்கடைகளை எல்லாம் வேற லெவல் கடை என்று வீடியோ போட்டு ப்ரோமோட் செய்யும் காலத்தில் எந்த விதமான ப்ரோமோஷனும் இல்லாமல் முப்பது வருடங்களுக்கு மேலாய் பூந்தமல்லி ரோட்டில், அமைந்தக்கரை முரளிகிருஷ்ணா தியேட்டருக்கு திரும்பும் இடத்தில், ஒரு பழைய பில்டிங்கில் இருந்த கடை தான் இந்த ஆற்காடு மெஸ்.

மதிய சாப்பாடு இங்கே மிகப் பிரபலம். குறிப்பாய் எறா தொக்கு, சிக்கன், மட்டன் குழம்புகள் அட்டகாசமாய் இருக்கும். இன்றைக்கு எல்லா நான்வெஜ் கடைகளிலும் கருவாட்டுக்குழம்போ, தொக்கோ இல்லாமல் இருப்பது இல்லை. ஆனால் அப்போது எல்லாம் கருவாட்டுக் குழம்பு எல்லா கடைகளிலும் கிடைக்காது. இவர்கள் கடையில் ஞாயிறு ஸ்பெஷல். அதை சாப்பிடுவதற்காக ஒரு பெரிய கூட்டமே உண்டு. அது மட்டுமில்லாமல் இரவு உணவாய் தோசை, பரோட்டா, போன்ற அயிட்டங்கள் இருந்தாலும், இவர்களது சுடான இட்லி, குழம்பு, எறா தொக்குக்கு ஈடு இணை கிடையாது. அதுவும் ராத்திரி பதினோரு மணிக்கு போனாலும், சூடான இட்லி கிடைக்கும். புத்தக கண்காட்சி பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் சில வருடங்கள் நடந்த காலத்தில், பாதி நாள் அங்கே தான் இரவு உணவு. நிறைய நண்பர்களை கூட்டிக் கொண்டு போய் உணவருந்தியிருக்கிறேன். தொடர்ந்து போவதால் அந்தக்கடையின் உரிமையாளர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராய் மாறினார். அவரது சமையல் ரகசியத்தை ஒருநாள் கேட்டேன். அப்படினு தனியா ஏதுமில்லங்க. என்றார். நான் முதலில் நம்பவில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆற்காடு மெஸ்ஸின் பிரபல அயிட்டமான எறாதொக்கை செய்யச் சொல்லி வீடியோ எடுத்தோம். எந்தவிதமான ரகசிய மசாலாவோ, அயிட்டங்களோ இல்லாமல் அவரின் கை பக்குவத்தில் செய்து காட்டினார். அதே சுவை. 

இப்படி அவரது கை பக்குவத்தின் காரணமாய், ஒரு தலைமுறையே தன் சமையல் ருசிக்கு அடிமையாக்கியிருந்தவருக்கு ஒரு ஆசை. ஒரு பெரிய கடை போடணும் தம்பி என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். நானும் அவருக்காக சில இடங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் ஆரம்பித்த நேரத்தில் எதிரே புதுப்புது கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். அதில் இப்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்கும் இடத்தை அவருக்கு காட்டினேன். வாடகை மற்றும் சில விஷயங்களால் முடிக்க முடியவில்லை. பிறகு சில இடங்கள் பார்த்தும் செட்டாகாமல் போக, அவரே சில இடங்களைப் பார்க்க ஆரம்பித்தார். 

ஒவ்வொரு இடம் பார்க்கும் போதும் அவரிடம் நான் சொல்வது. "அண்ணே எந்தக் காரணம் கொண்டும், உங்க பேவரேட் இட்லி, மீன்குழம்பு, எறா தொக்கு, கருவாட்டுக் குழம்பு மீல்ஸ் இதை விட்டுறாதீங்க. அதான் உங்களுடய ட்ரேட் மார்க்கே என்பேன். ஆமா தம்பி அதை வச்சித்தானே என் குடும்பத்த ஒரு நிலைக்கு கொண்டு வந்து இன்னைக்கு பெரிய கடை பாக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன் விடுவேனா என்பார்.

சில காலம் கழித்து என்னை அவருடய புதிய கடைக்கு திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடய பழைய கடை இருந்த பில்டிங் எதிரே ஒரு மலையாளி ஓட்டல் இடம் வாடைக்கு வரை அதையே பிடிச்சிட்டேன் என்றார். சூப்பர்ணே உங்க கஸ்டமர் எங்கேயும் போக மாட்டாங்க. புதுக் கஸ்டமருக்கும் பழைய கடை வச்சி தேடி வந்திருவாங்க. பழைய கடைய மாத்தாதீங்க என்று போனில் சொன்னேன். 

கடை திறப்பு விழாவுக்கு போன போது மெனு லிஸ்டில் மீல்ஸோ, இட்லியோ, இல்லை. ப்ரைட் ரைஸ் அயிட்டங்களும் தாலி சாப்பாட்டு மட்டுமே இருக்க, "என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க? உங்க ப்ராண்ட் அயிட்டம் இல்லாம என்ன ஆற்காடு மெஸ்?." என்று சற்று கோபமாகவே கேட்டேன். 

"பசங்க பழைய சாப்பாடு எல்லாம் வேலைக்காகாது இதான் ஓடும் அப்படிங்குறாங்க. அவங்க தலையெடுத்து பார்த்துக்குறாங்க. ஒத்துக்கிட்டுத்தானே ஆவணும்" என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு உணவகம் அதனுடய சிக்னேச்சர் அயிட்டங்கள் இல்லாமல் ஜெயித்து பார்த்ததில்லை.

"அண்ணே.. வாழ்த்துகள். ஆனா எதிர்கடைய விட்டுறாதீங்க. அங்கேயும் சின்னதா நடத்துங்க. வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். கண்ணெதிரே ஒரு 40 வருட சாம்ராஜ்ஜியம் கவிழப் போகிறதை உணர்ந்தேன்.

சில மாதங்கள் கழித்து பூந்தமல்லி ஹைரோட்டில் போகும் போது ஆற்காடு மெஸ் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது. எதிரே ஆரம்பித்திருந்த புதிய ஆற்காடு மெஸ்ஸும் மூடியிருக்க, ஆற்றாமை தாங்காமல் அவருக்கு போன் செய்தேன். 

"சரியா போகலை தம்பி. மூணு மாசத்துக்கு மேல நடத்த முடியலை. பழைய கடையையும் வச்சிக்க வேணாம்னு அப்பவே விட்டுட்டேன். பையன் வேலைக்கு போயிட்டான். எனக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க சொன்னது கரெக்ட் தான். பழைய கடையாச்சும் நான் வச்சிருந்திருக்கணும்" என்று என் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தார். அதன் பின்பு அவரிடம் பேச எனக்கு எதுவுமில்லை. சில காலம் கழித்து கால் செய்த போது, அவரது போன் சுவிட்ச் ஆப்பிலேயே இருந்தது. அவர் இருக்கிறாரோ இல்லையோ. அவரது எறா தொக்கும், சூடான இட்டிலியையும், அவரையும் என்னால் மறக்க முடியவில்லை. இதை எழுதும் போது கூட அவரது தொலைபேசி எண்ணை ஒரு முறை டயல் செய்து பார்த்துவிட்டு அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததை கேட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். ஆற்காடு மெஸ். வரலாறாய் போயிற்று. 

கேபிள் சங்கர்