Thottal Thodarum

Dec 27, 2022

சாப்பாட்டுக்கடை - மவுண்ட்பேட்டன் ஐயர் கேட்டரிங்

 மார்கழி மாசம் வந்துவிட்டாலே எல்லா சபாக்களிலும் கச்சேரி களைகட்ட ஆரம்பித்துவிடும். கூடவே கச்சேரி நடக்கும் இடத்தில் கேட்டரிங் ஆட்களின் கேண்டீனும் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு கச்சேரி முடிந்ததும் அங்கே இருக்கும் கேட்டீனில் மதிய சாப்பாடு, மாலை டிபன், இரவு உணவு என களை கட்டிவிடும். கச்சேரிக்கு போகிறவர்களை விட கேண்டீனில் நிறைய கூட்டம் என்பதை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். இதில் மவுண்ட்பேட்டன், அறுசுவை என பல பேர் பிரபல்யம். ஒவ்வொரு மார்கழி மாத சீசனுக்கும் ஏதாவது புதிய ஐயிட்டத்த இறக்கி கேண்டீன் வியாபாரத்தை களை கட்ட வைத்துவிடுவார்கள் இவர்கள்.  வருடா வருடம் நானும் பல கேண்டீன்களுக்கு படையெடுத்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் எழுத நினைத்ததில்லை. இன்றைய புட் ப்ளாகர்களுக்கு வேற லெவல் விமர்சகர்களைத் தாண்டி வெறும் வெஜிட்டேரியனில் இத்தனை வகைகளா? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவர்களது அயிட்டங்கள வரிசைக்கட்டி இருக்கும். 

மியூசிக் அக்காடமியில் கேண்டீனுக்கு போய்ப் பார்க்கலாம் என்று போன போது அங்கே உள்ளே நுழையும் போதே கேண்டீனுக்கு மட்டுமென்றால் பார்க்கிங் இல்லை என்று போர்டே வைத்திருந்தார்கள். சரி என வண்டியை வெளியே எடுத்து வந்து நாரதகான சபாவிற்குள் நுழைந்தோம். அங்கேயும் பார்க்கிங் புல் தான். இருந்தாலும் கேண்டீன் போக வேண்டும் என்று சொன்னவுடன் நுழைய அனுமதித்தார்க்கள். நாரதகான சபாவின் பின்புறத்தில் கேண்டீன் ஏற்பாடாகியிருந்தது. ஶ்ரீ சாஸ்தலயா கேட்டரிங் சர்வீஸ் கடை போட்டிருந்தார்கள். ஏகப்பட்ட கூட்டம். உட்கார இடமில்லை. கொஞ்சம் நேரம் காத்திருந்துதான் அமர வேண்டியிருந்தது. போண்டா, ரவா தோசை, கூடவே ஆப்பம் கடலைக்கறி என்று ஆர்டர் செய்தோம். ஆப்பம் கிரிஸ்பினெஸ் இல்லாமல் மாவின் கலர் சற்றே கலர் குறைவாகவே இருந்தது. கூட கொடுத்த கடலைக்கறியில் ஏகப்பட்ட கிராம்பு மசாலா. மசாலாவின் மணம் உச்சி மண்டை வரை ஏறியது. அடுத்து வந்த ரவா தோசை கிரிஸ்பாக கேட்டிருந்தோம். அதுவும் தடியான மாவோடு கிரிஸ்பினெஸ் இல்லாமல் செட் தோசைப் போல வந்தது. கூடக் கொடுத்த சட்னி மட்டுமே சிலாக்கியம். போண்டாவைப் பற்றி சிலாக்கியமாய் சொல்ல ஏதுவுமில்லை. மிகவும் ஏமாற்றத்துடன் கிளம்ப்பினோம். குடிப்பதற்கு தண்ணீர் வைக்காமல் தண்ணீர் பாட்டில் வைத்தார்கள். பில் கொடுக்க போன போது தண்ணீருக்கும் காசு போட்டார்கள். நான் கேட்கவேயில்லை. அவர்களாகவே கொடுத்தார்கள் எனவே குடிக்க தண்ணீர் இல்லாமல் எப்படி சர்வ் செய்கிறீர்கள்? என்று கேட்டவுடன் பில்லில் கழித்தார்கள்.  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை. முதல் காண்டீனே இப்படி சொதப்புகிறதே என்று இதைப் பற்றி சித்ரா லஷ்மனணிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, மவுண்ட் பேட்டன் ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் வெறும் கேண்டீன் மட்டும் நடத்துறாரு. ஒரு நடை போய்ட்டு வந்திருங்க. என்றார். 

மவுண்ட்பேட்டன் மணி அய்யர் கேட்டரிங் பிரசித்தமான கேட்டரிங். கல்யாண மண்டபம் சற்றே காலியாகவே இருந்தது. போன மாத்திரத்தில் செட்டி நாடு அயிட்டங்களைப் பார்த்ததும், பலாப்பழ பணியாரம், தக்காளி பணியாரம் இரண்டையும் ஆர்டர் செய்தோம். பலாப்பழ பணியாரம் செம்ம. கொஞ்சம் எண்ணையில் பொறித்ததால் எண்ணெய் வாடை லேசா அடித்ததை தவிர, அதிக ஆயில் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அதிகம் தித்திப்பும் இல்லை. இல்லாமலும் இல்லை. அடுத்து வந்த தக்காளி பணீயாரம் அட்டகாசமாய் இருந்தது. கூட கொடுத்த தேங்காய் சட்டினிக்கு தக்காளியின் லேசான புளிப்பு, மற்றும் அதனுடன் சேர்க்கப்பட்டிருந்த காரமும் வித்யாசமான சுவையை கொடுத்தது. அடை அவியல் ஒரு செட்டும், palak பூரி வித் கடாய் வெஜிட்டபிள் ஆர்டர் செய்திருந்தோம். அடை பதமான அடை. டிபிக்கல் அய்யர் வீட்டு அடை. அதிக காரமில்லாமல் தொட்டுக் கொள்ள கொடுத்த அவியலில் தாராளமாய் தேங்காயும், காய்கறிகளையும் போடப்பட்டு அடைக்கு தொட்டுக்க அவியலா? இல்லை அவியலை தொட்டுக்க அடையா? என்று சண்டை போட வேண்டியிருந்தது. கடைசியாய் வந்த மேத்தி பூரி. மூன்று கொடுத்தார்கள். கூடவே திக்கான அரைக்கப்பட்ட ம்சாலா கிரேவியில் அநேகமாய் முந்திரி இருப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருந்தது. காரணம் முத்திரியை அரைத்தால் கிடைக்கும் லேசான தித்திப்பும். திக்கான கிரேவியும் அட்டகாசம். மூன்று பூரிக்கு ரெண்டு கப் கிரேவி என்பது அதன் சுவைக்கான அங்கீகாரம் என்றே சொல்லலாம். கட்டங்கடைசியாய் ஒரு பில்டர் காப்பியோடு முடித்தோம். குறை சொல்ல முடியாத காப்பி.

மதிய சாப்பாடு விலை 580 சொச்சம் எனும் போது கெதக் என்று இருந்தது. மெனுவை பார்த்த போது நல்ல கல்யாண வீட்டு சமையல் மெனுதான். என்னதான் மவுண்ட்பேட்டன் என்றாலும் அதிகம் என்றே தோன்றியது. கேட்டரிங்காரர்களால் ஓட்டல்காரர்கள் ஆக முடியாது என்பது என் திண்ணமான எண்ணம். காரணம் அவர்கள் வைக்கும் விலை. எத்தனையோ கேட்டரிங்காரர்கள் ஓட்டல் ஆரம்பித்து மூடியிருக்கிறார்கள் சுவையெல்லாவற்றையும் தாண்டி இவர்களது விலைதான் வாடிக்கையாளர்க்களை அவர்களிடமிருந்து விலகி செல்ல வைக்கிறது. என்ன செய்வது அவர்களுக்கு ஒட்டல் நடத்த கை வராது. பட் இந்த மார்கழி கேண்டீன் பயணத்தில் நல்லதொரு காண்டீனில் சாப்பிட்டது திருப்திதான். மைலாப்பூரில் அறுசுவை போட்டிருக்கிறாராம். ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரவேண்டும்.

Dec 9, 2022

சாப்பாட்டுக்கடை - மாதம்பட்டி சமையல்

விக்ரம் பட வெற்றி விழாவிலிருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரிடமும் ஏகோபித்த பாராட்டு பெற்ற விஷயம் ஒன்று எதுவென்றால் மாதம்பட்டி சமையல் தான். மெகந்தி சர்க்கஸ் படத்தின் நாயகன். தயாரிப்பாளர் தான் இந்த கேட்டரிங் கம்பெனியின் ஓனர். அதன் பிறகு திரைப்பட விழாக்களில் மாதம்பட்டியின் கேட்டரிங் வைப்பது நிகழ்ச்சிக்கு காம்பய்ரிங் வைப்பதைப் போல கட்டாயம் ஆகிவிட்டாலும் ஏனோ என்னால் இவர்களது உணவை ருசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. நேற்று மாலை நண்பர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் சித்தார்த்தின் ‘the fall" வெப் சீரீஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அங்கே போனால் மாதம்பட்டியின் டின்னர். சரி நாம டின்னருக்கு வருவோம்


ஸ்வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். ப்ரெட் மால்பூவாவும், பரங்கி குல்கந்து அல்வாவும் வைத்திருந்தார்கள். பரங்கி குல்கந்து அல்வா சும்மா தளதளவென நெய்யோடு பார்பதற்கே கவர்சியாய் இருந்தது. அட்டகாசமான சுவை. சாப்பிட்டு முடிக்கும் போது அடி நாக்கில் தெரிந்த குல்கந்தின் வாசம் கலந்த சுவை செம்ம.

ப்ரெட் மால்பூவா கொஞ்சம் ட்ரை ஆகிவிட்டதால் அதன் மெதுத்தன்மை இல்லாமல் போயிருந்தது. ஆனால் வித்யாசமான சுவை.

ஸ்டார்ட்டஸாக சிக்கன் லாலிபாப், கோலா உருண்டை, சிக்கன் பிச்சிப்போட்டது, ஸ்டப்டு முட்டை, பன்னீர் பொரியல், வெஜ் மீன் என வரிசைக்கட்டியிருந்தார்கள்.

சிக்கன் லாலிபாப் நல்ல சிக்கன் பீஸ்களோடு, ஜூஸியாய் ப்ரை செய்யப்பட்டிருந்தது. கோலா உருண்டை மாவும், அரைத்த மட்டனும் சரியான பதத்தில் இருந்தது. செம்ம. சிக்கன் பிச்சிப் போட்டது கொஞ்சம் காரம் குறைந்த மசாலாவில் குட்டிக்குட்டியாய் பிச்சிப்போட்ட சிக்கன் வருத்து கொடுத்திருந்தார்கள் அட்டகாசமாய் இருந்தது. ஸ்டப்டு முட்டை அஹா ஓஹோ என்றில்லாமல் மற்ற அயிட்டங்களை பார்க்கும் போது ஆவரேஜ் தான். பன்னீர் பொரியல். கிட்டத்தட்ட முட்டை புர்ஜி அளவுக்கு நன்கு உதிர்க்கப்பட்ட தூள்களாய், சரியான விகிதத்தில் பச்சை மிளகாய் எல்லாம் போட்டு தந்திருந்தார்கள். பன்னீரின் சுவையும், முட்டையின் சுவையுமாய் கலந்து கட்டி இருந்தாலும் ஒன் மோர் டைம் சாப்பிடலாமே என்று தோன்றியது. அடுத்தடுத்த அயிட்டங்கள் இருப்பதால் அடுத்த ஐயிட்டமான வெஜ் மீனை சாப்பிட ஆரம்பித்தேன். மீன்ல என்னடா வெஜ் என்று கேட்டீர்களானால் சோயா தான். மீன் சைசில் கட் செய்து அதில் மசாலா தடவி மீன் வருவல் போல் தந்திருந்தார்கள். இது ஒரு லெட் டவுன் தான். அத்தனை சிலாக்கியமாய் இல்லை. காரணம் சோயா மீன் போல சாப்டாக இல்லாமல் பிஸ்கெட் போல கடித்து சாப்பிடும் பதத்தில் இருந்ததால். 

மெயின் கோர்ஸாக மட்டன் பிரியாணி, வெஜ் மட்டன் பிரியாணி, தோசை வகைகளில் ஆனியன், பொடி, நெய், ரவா தோசைகள், டிப்பன் சாம்பார், ரசம், சாதம், மட்டன் செமி கிரேவி, வெஜ் மீன் குழம்பு, தக்காளி கடைசல், ப்ரையம்,  என வரிசைக்கட்டியிருந்தார்கள். மட்டன் பிரியாணி இருக்க வெஜ் மட்டன் எதற்கு என முதல் ரவுண்ட் மட்டன் பிரியாணியை அடைந்தேன். சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட மட்டன் பிரியாணி. அதிக காரமில்லாமல், நன்கு வெந்த மட்டன் பீஸ்களோடு அருமையாய் இருந்தது. கூடவே கொடுத்த செமி மட்டன் கிரேவி அட்டகாசம்.  சரி வெஜ் மட்டன் பிரியாணியையும் ஒரு கை சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று ட்ரை செய்த போது  மட்டனின் மணம் மட்டுமே இல்லை.. மற்றபடி சுவையில் மட்டன் பிரியாணிக்கு சரியான போட்டியாகவே இருந்தது. வெஜ் மட்டன் பிரியாணிக்கு மட்டன் செமி க்ரேவி செம்ம காம்பினேஷனாய் சாப்பிட்டேன். அடி பொளி.

கொஞ்சமே கொஞ்சம் சாதம் போட்டு மட்டன் கிரேவியையும், வெஜ்மீன் கிரேவியை சாப்பிட்டேன். மட்டன் ஏற்கனவே சொன்னபடி நன்றாக இருந்தது. வெஜ் மீன் காரக்குழம்பாகவும் இல்லாமல், மீன் குழம்பாகவும் இல்லாமல், அதில் போடப்பட்டிருந்த ஃபேக் மீன் துண்டான சோயா மீன் வறுவல் எப்படி கெட்டியாய் இருந்ததோ அதையே இதற்கும் பயன்படுத்தியிருப்பார்கள் போல கொஞ்சம் குழம்பில் ஊறியிருந்ததே தவிர சேம் பிஸ்கட் சுவை லெட் டவுன் தான்.

தோசைகள் ஆஸ்யூசுவல் குறையொன்றுமில்லை. ஆனால் அந்த தக்காளி கடைசல். அட அட அட.. அட்டகாசம். குறிப்பாய் நெய் தோசைக்கும், ரவா தோசைக்கும் செம்ம. நன்கு கடைந்த தக்காளி, வெங்காயம், பூண்டு என டிவைன் என்று சொன்னால் மிகையில்லை. இதற்காகவே கொஞ்சம் சாதம் போட்டு தயிர் சாப்பாட்டுடன் ரெண்டு ஸ்பூன் தக்காளி கடைசலோடு சாப்பிட்டேன் தேவாமிருதம்.  எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு கொங்கு ஸ்டைல் ரசத்தை விட்டு விட்டாள் அது நியாயமாய் இருக்காதே என்று ஒரு டம்பளர் ரசத்தை வாங்கி குடித்தேன். வழக்கம் போல கொங்கின் பெருங்காயம் தூக்கலான ரசம் தான் குறையொன்றுமில்லை. வெளியே டெசர்டுக்கு மூலீகை ஜீரண கசாயமும், ஐஸ்க்ரீமும் வைத்திருந்தார்கள். நான் மூலிகை கசாயத்தை தெரிந்தெடுத்து ஒரு சின்னடம்பளர் குடித்தேன். தித்திப்பு சுவையுடன் இருந்தது. சாப்பிட்ட எதுக்களிப்பு ஏதுமில்லாமல் இருக்க இது உதவியது என்றே சொல்ல வேண்டும். இந்த சோயா மீனை இனி அவாய்ட் செய்யலாமென்று தோன்றுகிறது. அல்லது இன்னும் பதத்துடனான சோயாவை பயன்படுத்தி சமைக்கலாமென்பது என் எண்ணம். மற்றபடி நல்ல திருப்தியான சாப்பாடு.

கேபிள் சங்கர்

Nov 3, 2022

சாப்பாட்டுக்கடை - ஆற்காடு மெஸ்- தோற்ற கதை.

பல சாப்பாட்டுக்கடைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். 40-50 வருட பாரம்பரியம் உள்ள கடைகள் முதற் கொண்டு, புதியதாய் ஆரம்பித்திருக்கும் கடைகள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் மூடிய கடையைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. மூடியதை பற்றி எழுதி என்ன பிரயோஜனம்?. பல வருட பாரம்பரியம் உள்ள கடைகள் கால மாற்றத்தில் தக்க வைக்க முடியாமல் மூடியதில்லையா?. இதில்  எழுத என்ன இருக்கிறது என்று கேட்கலாம். மொக்கையான சின்னக்கடைகளை எல்லாம் வேற லெவல் கடை என்று வீடியோ போட்டு ப்ரோமோட் செய்யும் காலத்தில் எந்த விதமான ப்ரோமோஷனும் இல்லாமல் முப்பது வருடங்களுக்கு மேலாய் பூந்தமல்லி ரோட்டில், அமைந்தக்கரை முரளிகிருஷ்ணா தியேட்டருக்கு திரும்பும் இடத்தில், ஒரு பழைய பில்டிங்கில் இருந்த கடை தான் இந்த ஆற்காடு மெஸ்.

மதிய சாப்பாடு இங்கே மிகப் பிரபலம். குறிப்பாய் எறா தொக்கு, சிக்கன், மட்டன் குழம்புகள் அட்டகாசமாய் இருக்கும். இன்றைக்கு எல்லா நான்வெஜ் கடைகளிலும் கருவாட்டுக்குழம்போ, தொக்கோ இல்லாமல் இருப்பது இல்லை. ஆனால் அப்போது எல்லாம் கருவாட்டுக் குழம்பு எல்லா கடைகளிலும் கிடைக்காது. இவர்கள் கடையில் ஞாயிறு ஸ்பெஷல். அதை சாப்பிடுவதற்காக ஒரு பெரிய கூட்டமே உண்டு. அது மட்டுமில்லாமல் இரவு உணவாய் தோசை, பரோட்டா, போன்ற அயிட்டங்கள் இருந்தாலும், இவர்களது சுடான இட்லி, குழம்பு, எறா தொக்குக்கு ஈடு இணை கிடையாது. அதுவும் ராத்திரி பதினோரு மணிக்கு போனாலும், சூடான இட்லி கிடைக்கும். புத்தக கண்காட்சி பூந்தமல்லி ஹைரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் சில வருடங்கள் நடந்த காலத்தில், பாதி நாள் அங்கே தான் இரவு உணவு. நிறைய நண்பர்களை கூட்டிக் கொண்டு போய் உணவருந்தியிருக்கிறேன். தொடர்ந்து போவதால் அந்தக்கடையின் உரிமையாளர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராய் மாறினார். அவரது சமையல் ரகசியத்தை ஒருநாள் கேட்டேன். அப்படினு தனியா ஏதுமில்லங்க. என்றார். நான் முதலில் நம்பவில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆற்காடு மெஸ்ஸின் பிரபல அயிட்டமான எறாதொக்கை செய்யச் சொல்லி வீடியோ எடுத்தோம். எந்தவிதமான ரகசிய மசாலாவோ, அயிட்டங்களோ இல்லாமல் அவரின் கை பக்குவத்தில் செய்து காட்டினார். அதே சுவை. 

இப்படி அவரது கை பக்குவத்தின் காரணமாய், ஒரு தலைமுறையே தன் சமையல் ருசிக்கு அடிமையாக்கியிருந்தவருக்கு ஒரு ஆசை. ஒரு பெரிய கடை போடணும் தம்பி என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். நானும் அவருக்காக சில இடங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் ஆரம்பித்த நேரத்தில் எதிரே புதுப்புது கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்திருந்தார்கள். அதில் இப்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருக்கும் இடத்தை அவருக்கு காட்டினேன். வாடகை மற்றும் சில விஷயங்களால் முடிக்க முடியவில்லை. பிறகு சில இடங்கள் பார்த்தும் செட்டாகாமல் போக, அவரே சில இடங்களைப் பார்க்க ஆரம்பித்தார். 

ஒவ்வொரு இடம் பார்க்கும் போதும் அவரிடம் நான் சொல்வது. "அண்ணே எந்தக் காரணம் கொண்டும், உங்க பேவரேட் இட்லி, மீன்குழம்பு, எறா தொக்கு, கருவாட்டுக் குழம்பு மீல்ஸ் இதை விட்டுறாதீங்க. அதான் உங்களுடய ட்ரேட் மார்க்கே என்பேன். ஆமா தம்பி அதை வச்சித்தானே என் குடும்பத்த ஒரு நிலைக்கு கொண்டு வந்து இன்னைக்கு பெரிய கடை பாக்குற அளவுக்கு வளர்ந்திருக்கேன் விடுவேனா என்பார்.

சில காலம் கழித்து என்னை அவருடய புதிய கடைக்கு திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடய பழைய கடை இருந்த பில்டிங் எதிரே ஒரு மலையாளி ஓட்டல் இடம் வாடைக்கு வரை அதையே பிடிச்சிட்டேன் என்றார். சூப்பர்ணே உங்க கஸ்டமர் எங்கேயும் போக மாட்டாங்க. புதுக் கஸ்டமருக்கும் பழைய கடை வச்சி தேடி வந்திருவாங்க. பழைய கடைய மாத்தாதீங்க என்று போனில் சொன்னேன். 

கடை திறப்பு விழாவுக்கு போன போது மெனு லிஸ்டில் மீல்ஸோ, இட்லியோ, இல்லை. ப்ரைட் ரைஸ் அயிட்டங்களும் தாலி சாப்பாட்டு மட்டுமே இருக்க, "என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்க? உங்க ப்ராண்ட் அயிட்டம் இல்லாம என்ன ஆற்காடு மெஸ்?." என்று சற்று கோபமாகவே கேட்டேன். 

"பசங்க பழைய சாப்பாடு எல்லாம் வேலைக்காகாது இதான் ஓடும் அப்படிங்குறாங்க. அவங்க தலையெடுத்து பார்த்துக்குறாங்க. ஒத்துக்கிட்டுத்தானே ஆவணும்" என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு உணவகம் அதனுடய சிக்னேச்சர் அயிட்டங்கள் இல்லாமல் ஜெயித்து பார்த்ததில்லை.

"அண்ணே.. வாழ்த்துகள். ஆனா எதிர்கடைய விட்டுறாதீங்க. அங்கேயும் சின்னதா நடத்துங்க. வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். கண்ணெதிரே ஒரு 40 வருட சாம்ராஜ்ஜியம் கவிழப் போகிறதை உணர்ந்தேன்.

சில மாதங்கள் கழித்து பூந்தமல்லி ஹைரோட்டில் போகும் போது ஆற்காடு மெஸ் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது. எதிரே ஆரம்பித்திருந்த புதிய ஆற்காடு மெஸ்ஸும் மூடியிருக்க, ஆற்றாமை தாங்காமல் அவருக்கு போன் செய்தேன். 

"சரியா போகலை தம்பி. மூணு மாசத்துக்கு மேல நடத்த முடியலை. பழைய கடையையும் வச்சிக்க வேணாம்னு அப்பவே விட்டுட்டேன். பையன் வேலைக்கு போயிட்டான். எனக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க சொன்னது கரெக்ட் தான். பழைய கடையாச்சும் நான் வச்சிருந்திருக்கணும்" என்று என் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தார். அதன் பின்பு அவரிடம் பேச எனக்கு எதுவுமில்லை. சில காலம் கழித்து கால் செய்த போது, அவரது போன் சுவிட்ச் ஆப்பிலேயே இருந்தது. அவர் இருக்கிறாரோ இல்லையோ. அவரது எறா தொக்கும், சூடான இட்டிலியையும், அவரையும் என்னால் மறக்க முடியவில்லை. இதை எழுதும் போது கூட அவரது தொலைபேசி எண்ணை ஒரு முறை டயல் செய்து பார்த்துவிட்டு அது சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததை கேட்டுவிட்டுத்தான் எழுதுகிறேன். ஆற்காடு மெஸ். வரலாறாய் போயிற்று. 

கேபிள் சங்கர்

Sep 13, 2022

சாப்பட்டுக்கடை - மன்னா மெஸ்

சாப்பாட்டுக்கடை - மன்னா மெஸ்


இந்தக்கடையைப் பற்றி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். இக்கடையின் ஓனர் ஜெயராஜ் அவ்வப் போது பேஸ்புக்கில் விருந்தினர்களுடன் படமெடுத்து போட்டிருப்பார். பெரும்பாலும் பயணங்களில் அசைவத்தை பலரும் தவிர்க்கவே நினைப்பார்கள். முக்கியமாய் காரம், மசாலா காரணங்களால் வயிறு பிரச்சனை கொடுக்க வாய்ப்புண்டு என்பதாலேயே தவிர்த்து விடுவார்கள். சென்னையிலிருந்து 99 கிலோமீட்டரில் 99கிலோ மீட்டர் எனும் உணவகத்தை நடத்து மனோவின் உணவகம் ஆரம்பித்ததிலிருந்து வெளியூர் போகும் போதெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். அற்புதமான, தரமான சைவ உணவு வேண்டுமென்றால் நிச்சயம் இவர்களைத்தான் ரெகமெண்ட் செய்வேன். இந்த மன்னா மெஸ் மட்டும் நம் லிஸ்டில் எஸ்கேப் ஆகிக் கொண்டேயிருந்தது. காரணம் பெரும்பாலும் காலை உணவு நேரத்திலேயே அந்த ஏரியாவை க்ராஸ் செய்வதாலும், அத்தனைக் காலையில் அசைவம் சாப்பிட வேண்டாமே என்கிற யோசனையாலும் தவிர்த்துக் கொண்டிருந்தேன்


இம்முறை சரியாய் மதியம் தான் பாண்டிச்சேரிக்கு கிளம்பினோம். கிளம்பும் போதே .சி.ஆர் போகாமல் திருச்சி ரூட். மதிய சாப்பாடு மன்னாவில் என்று சொல்லித்தான் கிளம்பினேன். சரியாய் மதியம் ஒன்னரை மணிக்கு மன்னாவை அடைந்தோம். கல்யாண வீடு போல நூற்றுக்கணக்கான பேர் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். என்னடா இது இத்தனைக் கூட்டமா? என்று யோசித்தபடி, உள்ளே செல்ல, ஆட்கள் எழ, எழ, ஆட்கள் உட்கார்ந்து கொண்டேயிருந்தார்கள். இத்தனை பேருக்கும் சளைக்காமல் எப்படி சர்வ் செய்யப் போகிறார்கள் என்கிற யோசனையோடு, சீட் பிடித்து அமர்ந்தோம்.


உட்கார்ந்த மாத்திரத்தில் ஆர்டர் எடுக்க ஆள் வந்தார்கள். நான்கு நான் வெஜ் சாப்பாடு, ஒரு மட்டன் சுக்கா, பிச்சிப் போட்ட சிக்கன் என ஆர்டர் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் இலை வைக்கப்பட்டு, இலையில் சுரைக்காய் கூட்டும், பீட் ரூட் பொரியலும் வைத்தார்கள். “இந்த நான்வெஜ் ஓட்டல்ல இதை விட்டா காயே கிடைக்காது போல. எங்க போ இந்த பீட் ரூட், இல்லை கோசுஎன்றேன்


இல்ல சார்ஒவ்வொரு நாளைக்கு ஒரு பொரியல். நேத்து வாழக்கா..” என்றபடி பரிமாறினார் ஒரு பெண்


சலித்தபடியே பீட் ரூட் பிடிக்காத நான் ஒரு பிடி எடுத்து வாயில் வைத்தேன். அட, அட அட, அட்டகாசமான பீட் ரூட் பொரியலை இன்றைக்குத்தான் ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன். பெரும்பாலான ஓட்டல்களில் கறுக் முறுக்கெனவே இருக்கும் பீட் ரூட். இங்கே நன்கு வெந்த சிறு சிறு துண்டுகளை, தேங்காய் போட்டு தந்திருக்க, சுரைக்காய் கூட்டையும், பொரியலையும் சாப்பாடு வருவதற்குள் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டு விட்டேன்


சாப்பாடு போடப்பட்டவுடன் கருவாட்டுத் தொக்கு நல்ல கிரேவியாய், கூடவே நான்கு சின்ன வெங்காயம் தொடுகறியாய் வைக்கப்பட, வாடை இல்லாத தொக்கு சிறப்பாய் இருக்க, அடுத்தது சிக்கன் குழம்பு, வைத்தார்கள். வெந்நீர் தண்ணீர் போல இல்லாமல், நல்ல கெட்டியாய், காரம் அதிகமில்லாமல் நாட்டுக் கோழி குழம்பு பரிமாறப்பட, அடுத்ததாய் மட்டன் குழம்பு, இதுவும் திக்காய் பெப்பர் அதிகமாய் இருந்தாலும் செம்ம சுவை. காடை கிரேவி இருக்கு, மீன் குழம்பு இருக்கு என்று அடுத்த லிஸ்ட் போட, காடை கிரேவியும் பெப்பரை அடிப்படையாய் வைத்து வைக்கப்பட்டிருக்க, செம்ம சுவை. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டது மீன் குழம்பு. ஒன்றுக்கு இரண்டு முறை எல்லோரும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். எதுக்கும் இவர்களின் சைவ அயிட்டங்களில் காரக் குழம்பு எப்படி இருக்கிறது என்று சாப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து எடுத்து வரச் சொன்னேன். காரணம் பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் தரும் காரக்குழம்பு கிட்டத்தட்ட மீன் குழம்பு டேஸ்டிலேயே இருக்கும். இவர்களின் சுவை செம்ம. காரக்குழம்பில் உள்ள புளியின் சுவை, மீன் குழம்பை விட சற்றே குறைவாகவும், அதே நேரத்தில் தாளித்த எண்ணெய் வாசனையோடு இருந்தது


சைட் டிஸ்களில் பிச்சிப் போட்ட கோழியின் சுவைக்கு ஏதும் குறைவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்த பிச்சிப் போட்ட கோழியில்லை. கொங்கு ஸ்டைலில் எதிர்பார்த்த கோழி. சாதாரண கோழி பிரட்டல் போல இருந்தது. சுவையில் ஏதும் குறையில்லை. ஆனால் அதே நேரத்தில் மட்டன் சுக்கா செம்ம. நன்கு வெந்த துண்டுகள், பெப்பர்  மற்றும் மசாலா காரம் அதிகமில்லாமல் நல்ல சுவையுடன் இருந்தது. ரசமும் தரம்.


சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லைப் பார்த்த போது நான்கு பேருக்கு 1200 சில்லரை தான் வந்திருந்தது. 180 ரூபாய்க்கு இத்தனை க்ரேவியுடன் தரமான, எதுக்கலிக்காத, நெஞ்செரிச்சல் இல்லாத, வயிற்றையும் பர்சையும் பதம் பார்க்காத இந்த மன்னா மெஸ் சிறப்பு. நிச்சயம் மதிய சாப்பாட்டுக்கு ஹைவேயில் அசைவம் சாப்பிட விரும்பிகிறவர்களுக்கு டிவைனான சாப்பாடு தான்


அடுத்த நாள் மதியம் மறந்து போய் ஈஸிஆரில் வந்து மன்னா மெஸ்ஸை நினைத்துக் கொண்டே ஓட்டல்களைத் தேடி நான்கு மணிக்கு அடையார் ஆனந்த பவனின் பரோட்டா சாப்பிட்டோம். மன்னா மெஸ்ஸை மிஸ் செய்தபடியே


கேபிள் சங்கர்

May 26, 2022

ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர்

ஞான் ஸ்க்ரீன்ப்ளே ரைட்டர்


சார்.. நம்ம ஆபீஸுக்கு டீ கொடுக்க ஒரு பையன் வருவான். அவன் உங்களை மீட் பண்ணணுமாம்?” என்றார் அலுவலக ஊழியர்.

என்னவாம்?”

ரெண்டு நாள் முன்னாடி வந்து இங்க சினிமா சம்பந்தமா ஏதாச்சும் பண்ணுறீங்களானு? கேட்டாரு. ஆமான்னே. அவரு ஒரு ஸ்க்ரீன் ப்ளே ரைட்டராம் அவராண்ட ரெண்டு மூணு கதை இருக்காம் அது பத்தி உங்களோட பேசணும்னு சொன்னாரு.. நேத்து டீ கொடுத்துட்டு கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணாரு. நீஙக் மீட்டிங்குல இருந்தீஙக்.. அதான் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு வைக்கச் சொன்னாரு.. நாளைக்கு காலையில வரச் சொல்லட்டுமா?”

திறமை எங்கே வேண்டுமானாலும் இருக்கும் அதை கண்டுபிடிப்பதுதான் நல்ல கலைஞனின் கடமை என்று யாரோ சொன்னது நியாபகம் வந்தது.“சரி நாளைக்கு காலையில வரச் சொல்லுங்கஎன்றிருந்தேன்.

அடுத்த நாள் மதியமாய் வந்தான்

உங்க பேர்?”

சொன்னான்.

சொல்லுங்க தம்பிஎன்றேன்.

சார் நான் ஸ்க்ரீன் ப்ளே எல்லாம் எழுதுவேன். ரெண்டு கதை எழுதி வச்சிருக்கேன். த்ரில் கதை. உங்களுக்கு ஏதாச்சும் வேணுமா?” என்றான். அவன் படும் அவசரத்தைப் பார்த்தால் நாளைக்கே அதை படமாக்குவீங்களா? என்று கேட்பான் போல.

அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். சரி.. உங்களைப் பத்தி சொல்லுங்க? என்ன படிச்சிருக்கீங்க? யார் கிட்ட வேலைப் பார்த்தீங்க? உங்க வயசு மிஞ்சிப் போனா இருபது இருக்குமா

“8வது தான் படிச்சிருக்கேன். படிப்புக்கும் ஸ்க்ரீன் ப்ளேவுக்கும் என்ன சம்பந்தம்?”

அது சரி..” 

முத்து பாண்டினு ஒரு டைரக்டர். பெரிய படம் தான் பண்ணணும்னு முயற்சி பண்ணாரு. ஆனா ஷார்ட் பிலிம் தான் பண்ணாரு. நீயே வருவாய்னு. அதுல நான் தான் அஸிஸ்டெண்ட்

சரி.. “

முழு ஷார்ட் பிலிம் வேலை பார்த்தேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஓரளவுக்கு எல்லாமே தெரிஞ்சிருச்சு. நாம தனியா வேலைப் பார்க்க வேண்டியதுதானு முடிவெடுத்துட்டேன்

ஒரு ஷார்ட்பிலிமுல?”

புரிஞ்சுக்குறதுக்கு ஷார்ட் பிலிமா இருந்தா என்னா? படமா இருந்தா என்ன?”

அதுவும் சரிதான்.”

அதான் நானே ஸ்க்ரீன் ப்ளே எழுத ஆரம்பிச்சிட்டேன். ஸ்க்ரீன் ப்ளே புக்கெல்லாம் படிச்சிருக்கேன்

அப்படியா? என்னா புக்கு?”

திரைக்கதை எழுதுவது எப்படி?. சுஜாதானு ஒருத்தர் எழுதுன புக்கு

அஹான். அதுல என்னா கத்துக்கிட்டே?”

திரைக்கதை எழுதுறது எப்படினு

.. திரைக்கதைன்னா என்னா? தம்பி?”

ம்ம்.. திரைக்கதைன்னா கதை. இப்படி இப்படி நடக்கப் போவுதுனு எழுதுறது

அப்படி எப்படி எழுதுவ?”

சார்.. முதல்ல சீன் நம்பர் போட்டுக்கணும். அப்புறம் பகலா இரவானு எழுதணும். அப்புறம் லொக்கேஷன்

தம்பி அது டீடெயிலு.. ஸ்க்ரீன் ப்ளேன்னா என்னா?”

அதான் சார்.. சொன்னேனே?”

சரி.. அந்த சுஜாதா புத்தகத்துல சொன்ன படத்தையெல்லாம் பார்த்திருக்கியா?”

அதான் படிச்சிட்டேன் இல்ல எதுக்கு பார்க்கணும்.டைம் வேஸ்டு இல்லை. அதான் நானே எழுதிட்டேன். கதை எடுத்துட்டு வரவா?”

நீண்ட பெருமூச்சை விட்டேன்.

ழ்தம்பி.. உன் கதையெல்லாம் படிக்க வேண்டாம். நான் ஒரு சிட்ஷுவேஷன் சொல்லுறேன். அதை திரைக்கதையா எழுதிட்டு வரியா?”

மையமாய் தலையாட்டினான்.

நீ இந்த இடத்துக்கு வந்தது. இந்த ஆபீஸைப் பத்தி விசாரிச்சது. இப்ப என்னாண்ட வந்து பேசுறது. வாய்ப்பு கேட்குறது. இதான் சீன்

சரி..” என்று பெரிதாய் தலையாட்டினான்.

இதை மூணு வர்ஷன் அதாவது மூணு விதமா திரைக்கதை எழுதிட்டு வந்தியானா..உன் கதையை படிக்க எடுத்துக்குறேன். இல்லாட்டி. அஸிஸ்டெண்ட்டா சேர்ந்து வேலை கத்துக்கஎன்றேன்

கோபி தம்பிக்கு நாலைஞ்சு பேப்பர் பேனா எல்லாம் கொடுஎன்றேன்

சார்.. இப்பவே எழுதணுமா?. வீட்டுல போய் எழுதிட்டு வர்றேனே?” என்றான்.

சின்ன சீன் தானேதம்பி இங்கயே எழுத முடியாதா?.. சரி.. எழுதிட்டு வா” 

என்று அனுப்பி வைத்தேன். இது நடந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. பையன் தினமும் டீ கொண்டு வருகிறான் என் அறைக்கு மட்டும் வருவதேயில்லை