Thottal Thodarum

Aug 31, 2021

Asst புராணம் -2

 அஸிஸ்டெண்ட் புராணம் -2

”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது.  படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான்.

“என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?”

“ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்மா இருக்காங்க.  ஒரு காலேஜுல வேலை செய்யுறேன். மாசம் 10 ஆயிரம் சம்பளம். எனக்கு சினிமால டைரக்டர ஆகணும். என்னால வேலை செய்ய முடியலை. என் நினைப்பு பூராவும் சினிமாவுலேயே இருக்கு. வேலைய ரிசைன் பண்ணிட்டு சினிமாவுல இறங்கலாமானு குழப்பமாவே இருக்கு. என்னை உங்க கிட்ட அஸிஸ்டெண்டா சேர்த்துக்கிறீங்களா? “ என்ற அவன் குரலில் ஆர்வமும், மரியாதையும் பொங்கி வழிந்தது. வழக்கமாய் இப்படி பேசுகிறவர்களிடம் ஒரு போலித்தனமான மாடுலேஷன் இருக்கும். அது அவனிடத்தில் இல்லை.

“வீட்டுல சம்பாரிக்கிற ஆள் நீ ஒருத்தன் தான்னு சொல்லுறே? வேலைய விட்டுட்டா அக்கா கல்யாணக்கடனையெல்லாம் எப்படி அடைக்குறது?. சினிமாவுல நீ மாசம் சம்பாரிக்கிற பணத்துக்கு எப்பவும்  கேரண்டி கிடையாது. அதுவும் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி”

“மாசம் ஒரு நாலாயிரம் தர மாட்டாங்களா சார்?”

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மாதம் பத்தாயிரம் சம்பாரிப்பவன் நாலாயிரம் வந்தால் கூட போதும் சினிமாவில் சேர வேண்டுமென்ற ஆர்வப்படுவது ஒன்றும் புதிதில்லை. சினிமா ஒரு விடாது கருப்பு. ஒரு முறை கால் வைத்துவிட்டால் எங்கேயாவது தொட்டுக் கொண்டே இருந்துவிட மாட்டோமா என்கிற போதையை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

“என்ன சொல்றதுனு தெரியலை. நான் வேலை ஆரம்பிக்கும் போது வேணும்னா கூப்பிடுறேன். நான் சம்பளம் இல்லாம கூப்பிட மாட்டேன். தொடர்புல இரு” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன்.

அதன் பிறகு என் தொடர்பில் இல்லாமல் இருந்தவன் என்னுடய படம் ஆரம்பித்து பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வந்தான். முன்பு பார்த்ததை விட ஆள் மிகவும் இளைத்திருந்தான். விசாரித்ததில் என்னைப் பார்த்த பிறகு சிறிது நாட்களில் வேலையை ரிசைன் செய்துவிட்டு ஒரு வளரும் இயக்குனரிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறான். அந்தப் படம் ஒரு மூன்றாம் நிலை காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து ஆரம்பிக்கப்பட்டு, எல்லா சினிமா வழக்கப்படி பாதி படத்தில் நின்றதோடு மட்டுமில்லாமல், ஷூட்டிங் சமயங்களில் ஒழுங்கான சாப்பாடு, பேட்டா, இப்படி ஏதுமில்லாமல் மொத்தப் பட்டினியோடு வேலை செய்திருக்கிறார்கள். இதில் எங்கே சம்பளம் பற்றி பேச?. மொத்தமாய் படம் நின்று போனதும் எல்லாரையும் அனுப்பிவிட, பையன் பாவம் நொந்து நூலாய்ப் போய் வந்திருந்தான்.

“சரி என்ன பண்ணப் போறே?”

“உங்க படத்துல ஏதாச்சும் வேலை?”

“இப்ப என் படத்துல ஆட்கள் இருக்காங்கப்பா.. அடுத்த படம் தான். அதுக்கு இது ஹிட்டாகணும்” என்று சிரித்தேன். அவன் சிரிக்கும் நிலையில் இல்லை.

“நான் ஒண்ணு சொல்லுறேன். உன்னை டிமோட்டிவேட் பண்ணச் சொல்லலை. நீ எம்.பி.ஏ படிச்சிருக்க. கொஞ்சம் அழுத்தி வேலை தேடினா கிடைச்சிரும். போய் எங்கயாச்சும் ஜாயின் பண்ணு”

“அப்ப என் சினிமா. “ என்று கேட்ட போது கிட்டத்தட்ட கண்களில் கண்ணீர் மல்கி நின்றிருந்தது.

“அது எங்கேயும் போகாதுடா தம்பி. போய் பைனான்ஸியலா கொஞ்சம் ஸ்டெபிலைஸ் ஆகு. தங்கச்சி கல்யாணம் எல்லாம் செட்டில் பண்ணு. என்ன சினிமா எடுக்கணும் அவ்வளவுதானே? எல்லா நாளும் சாயங்காலம் ஃபீரியாத்தானே இருக்கே?. கதை எழுது, படி, நல்லா படம் பாரு. உன் சினிமா அறிவை வளர்த்துக்க. சனி ஞாயிறுல ஷார்ட் பிலிம் பண்ணு. யூட்யூப் இருக்கு. உனக்கான டைம் வரும் போது நிச்சயம் அதுல அடையாளம் கிடைச்சி மேல வரலாம். நான் சொல்லுறது கஷ்டமாத்தான் இருக்கும். எத்தனையோ பேர் பெரிய ஆள் ஆகியிருக்காங்கனு லிஸ்ட் சொல்லலாம். ஆனா பெர்முடேஷன் காம்பினேஷன்ல பார்த்தா நீ தாங்க மாட்டேனு தோணுது. வறுமை உன்னை காலி பண்ணிரும். உன் டேலண்ட் வெளிய வரணும்னா உன்கிட்ட வறுமை இருக்கக்கூடாது” என்றேன்.

பதில் ஏதும் சொல்லாமல் போனவன். சில மாதங்களில் மீண்டும் வந்து சந்தித்த போது சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாய் சேர்ந்திருதான். மாதம் பதினெட்டு ஆயிரம் சம்பளம். என்றான். அக்கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு குறும்படம் எடுத்து வெளியீட்டுக்கு என்னை தலமை ஏற்று நடத்தித் தர சொன்னான். அந்தப்படம் முந்தைய படத்தைவிட பெட்டராய் இருந்தது. பின்பு அவ்வப்போது தொடர்பிலேயே இருந்தான். அடுத்தடுத்து நான்கைந்து குறும்படங்கள். ஒரு மியூசிக் விடியோ என்று வேலை பார்த்துக் கொண்டே எடுத்தான். விளம்பரப் படம் எடுக்க வாய்ப்பு வந்தது. திருமணம் ஆனது. மனைவி ஒரு போலீஸ்காரர். அவருக்கு ஏற்படும் இன்னல்களை அடிப்படையாய்க் கொண்டு எடுத்த ஒரு குறும்படம் மிகப்பெரிய ஹிட். இரண்டு குழந்தைகள்.

கொரோனா எல்லாரையும் புரட்டிப் போட்டதைப் போல இவனையும் புரட்டிப் போட்டது. நல்லவிதமாய். கொரோனா காலத்தில் திருச்சி ஏரியாவைச் சுற்றி பலகாரக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்த வடநாட்டவர்களை கொரோனா வெளியேற்றியதால் அதற்கு தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்து பட்சணங்கள் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்து சிறு தொழிலதிபர் ஆகியிருக்கிறான்.

சென்ற வாரம் என்னை வந்து சந்திக்க அனுமதி கேட்டான். எப்போதும் அப்படித்தான். கேட்காமல் வர மாட்டான். என்ன விஷயம் தம்பி? என்று கேட்ட போது, ‘நேர்ல சொல்லுறேன் சார்” என்று சொன்ன நேரத்திற்கு வந்து நின்றான். கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸும் கொய்யாக்களோடு. என்ன என்பது போல பார்த்தேன்.

“சார். நான் பிஹெச்டி வாங்கியிருக்கேன். டாக்டர் ஆயிட்டேன். அதுக்கு காரணம் நீங்கதான்” என்றான்.

“நான் சொன்னத கேட்டகணும்னு முடிவு பண்ணது நீதான். ஸோ..  நீதான் காரணம். எனக்கு க்ரெடிட் கொடுக்காத. மனசுக்குள்ள ஒரு பெரிய டைரக்டரை காலிப் பண்ணிவிட்டுட்டேனு கூட திட்டுவ இல்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“இல்ல சார். இப்ப இன்னும் நாலைஞ்சு வருஷத்துல யார் தடுத்தாலும் என்னால சினிமா பண்ணிர முடியும்னு நம்பிக்கை இருக்கு. கூட நீங்க இருக்கீங்க. அப்புறம் எனக்கென்ன கவலை” என்று கிளம்பினான் புஷ்பநாதன் ஆறுமுகம் என்கிற பெயருடய என்னிடம் வேலையே செய்யாத என் உதவி இயக்குனர். சமூகத்தின் மீதான கவலை அவனிடம் எப்போது இருந்து கொண்டே இருக்கும். அது   குறும்படங்களான கூர்வாள், காவல் தெய்வம் குறும்படங்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். சென்னை பசங்க என்கிற பெயரில் உள்ள மியூசிக் ஆல்பமும்  எனது Moviewood OTT தளத்தில் கிடைக்கிறது. பார்த்துவிட்டு வாழ்த்துங்கள்.

Asst புராணம்-1

Aug 29, 2021

Asst புராணம்.-1

அஸிஸ்டெண்ட் புராணம் -1

ஒரு இயக்குனருக்கு உதவியாளர்கள் அமைவது என்பது வரம். பல சமயம் நாம் அவருக்கு உதவியா இருக்கிறோமா? இல்லை அவர் நமக்கா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உதவியாளர்கள் அமைவது உண்டு. ஒவ்வொரு உதவியாளரும் ஒவ்வொரு யுனிக் கேரக்டர்கள். அவர்களின் ஆட்டிட்டியூட், சினிமா, அது பற்றிய புரிதல் என எல்லாமே தனித்துவமாய்த்தான் இருக்கும். பெண்களை புரிந்து கொள்வதில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் இவர்களுக்கும் உண்டு. முதல் படத்திற்கு நான்காவது படத்திற்கிடையே இவர்களது தனித்துவமான விஷயங்கள் எல்லாம் உதிர்ந்து போய், வெறும் கூடாய் நிற்பவர்கள் அதிகம்.  சரி விஷயத்துக்கு வருவோம்.

வாரத்துக்கு நான்கு பேராவதுசார்.. உங்க கிட்ட வேலை செய்யணும். வாய்பிருந்தா சொல்லுங்கஎன்று இன்பாக்ஸிலோ, மெசேஜிலோ கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள். ஒரு கதையையோ, திரைக்கதையையோ, எழுதி முடிக்கும் வரை எனக்கு எப்போதும் உதவியாளர்கள் தேவையில்லை. முன்கள வேலை ஆரம்பிக்கும் போதுதான் உதவியாளர்களை அமைத்துக் கொள்வேன். தினம், டீ வாங்கி வருவதற்கோ, அல்லது வண்டியோட்டுவதற்கோ உதவியாளர்களை வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமே இருந்ததில்லை. அது மட்டுமில்லாமல் சம்பளமில்லாமல் யாரையும் நான் பணிக்கு அமர்த்திக் கொள்ள விரும்ப மாட்டேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், எத்தனையோ கனவுகளை ஏந்திக் கொண்டு அலைகிறவகளின் கற்பனையை தக்க வைத்துக் கொள்ளவாவது பணமும், உணவும் வேண்டுமல்லவா?.

 கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களாய் ஒரு தம்பிசார் உங்க கிட்ட வேலை செய்யணும்என்று வழக்கம் போல கேட்டுக் கொண்டேயிருந்தார். நானும் அவரை இன்னும் ஏதும் வேலை ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் வெயிட் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். இப்படியான தொடர் பாலோ அப்பில் பல பேர் காணாமல் போய் விடுவார்கள். அல்லது வேறு வேலை ஏதாவது கிடைத்துவிடும். அதன் பிறகு கால் செய்வது நின்று விடும். ஆனால் இந்த தம்பி அப்படியெல்லாம் இல்லாமல் நடுவில் வேறு படத்தில் வேலை கிடைத்து அந்தப் படத்தில் வேலைப் பார்க்கும் போது கூட தொடர்ந்து இந்த படம் முடிச்சிட்டு வந்திடறேன் சார். என்று மாதத்திற்கு ஒரு நாளாவது கால் செய்வார். அம்மாதிரியானவர்களை குறித்து வைத்துக் கொண்டு வேலைக்கு அழைப்பேன்.

சரியாய் இவ்வருட ஆரம்பத்தில் ஒரு ப்ராஜெக்ட் எல்லாம் உறுதி செய்யப்பட்டு மார்ச்சுக்கு மேல் படப்பிடிப்புக்கு போகலாம் என்று முடிவு செய்த நேரத்தில் தம்பியும் சரியாய் போன் செய்ய, வாடா தம்பி என்று அழைத்தேன். தம்பியும் வந்தார். கதைப் பற்றி பேசி இன்னும் சில வாரங்களில் வேலை தெடங்கும், என்று சொல்லி அனுப்பிவைத்தேன். “உங்க கிட்ட வேலை செய்யணும்னு ஆசைப்பட்டதே இதுக்குத்தான் சார். பாருங்க. என்னோட கதை டிஸ்கஸ் பண்றீங்க. என் கருத்துகளை சொல்ல சுதந்திரம் கொடுக்குறீங்க. அது எல்லா இடத்துலேயும் கிடைக்காது. கத்துக்க முடியாது. உங்க கிட்ட கத்துக்க நான் இத்தனை நாள் பாலோ பண்ணது வீண் போகல” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் தொடர்ந்து இம்மாதிரியான நேரடி பாராட்டுதல்களுக்கு பின்னான ரியாக்‌ஷன் பற்றி தெரிந்தவனாகையால் வடிவேலுவின் மீம் போல முகத்தை வைத்துக் கொண்டேன்.  

சில நாட்களில் கொரானா ரெண்டாம் அலை, லாக்டவுன் என்று எல்லா வேலைகளும் தள்ளிப் போனது. இதன் நடுவில் தம்பிக்கு காதல் திருமணம் ஏற்பாடானது. தம்பதி சமேதராய் வந்திருந்து நடத்திக் கொடுக்க அழைத்தார்கள். கொரோனாவினால் போக முடியவில்லை.

கொரானாவின் தாக்கம் வழக்கம் போல எல்லாவற்றையும் தள்ளிப் போட்டு விட, மீண்டும் வேலை தொடங்கலாம் என்கிற போது தம்பியை அழைக்க நினைத்த அதே நாளில் தம்பி போன் செய்தான். அட செம்ம சிங்குல இருக்காபுல.. என்று நினைத்துக் கொண்டேன்.

இம்முறை வேறு கதை. வேறு ப்ராஜெக்ட் என்பதால் அவரிடம் நாவலைக் கொடுத்து  படித்துவிட்டு ரெண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னேன். வந்தார்.

“படிச்சீங்களா?”

“இல்லை சார்.. எனக்கு தமிழ்ல அத்தனை சீக்கிரம் படிக்க வராது. என் வைஃப் படிப்பாங்க. அவங்க படிச்சி சொல்லச் சொல்லியிருக்கேன்” என்றார்.

“சரி படிச்சிட்டு வாங்க. அப்பத்தான் நாம பண்ணப் போற கதை அதன் பின்புலம் பற்றி பேச முடியும்’ என்று சொல்லி கிளம்பச் சொன்னேன்.

“சார்.. ஷூட்டிங் எப்ப இருக்கும்?” என்று ஆர்வமாய் கேட்டார்.

நான் ஒரு மாதத்தை குறிப்பிட்டு “அப்ப ஸ்டார்ட் ஆக ப்ளான். சினிமா உங்களுக்கு தெரியாதா? திடீர்னு உடனே கூட ஆரம்பிக்கலாம்.  நீங்க வர்ற மாசம் வேலையில ஜாயின் பண்ணிருங்க.” என்று சொல்லிவிட்டு, குறைந்த பட்சம் பத்தாயிரம் என்னால் உறுதியாய் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி கொடுக்க முடியும். என்றேன்.

தம்பி சிறிது நேரம் யோசித்தார். “சார்.. டெய்லி பேட்டா?”

“அது ஷூட்டிங் போதுதான் தம்பி”

“ஒரு ரெண்டாயிரம் எக்ஸ்ட்ரா வாங்கித் தர முடியுமா?”

“நீங்க வந்து ஜாயின் பண்ணுங்க. பேசி வாங்கித் தரப் பாக்குறேன்” என்றேன். முதல் படத்தில் கடைசி பல மாதங்கள் சம்பளமில்லாமல் தான் வேலைப் பார்த்திருந்ததாய் சொல்லியிருந்தார்.

“சரி சார்.. நான் ரெண்டு நாள்ல படிச்சிட்டு வந்திர்றேன்” என்று கிளம்பினார்

“தம்பி வேலைக்கு வர மாட்டாப்ல” என்றேன் என் அசோஸியேட்டிடம்.

“அப்படியா சொல்றீங்க?. தம்பி உங்க கிட்ட கத்துக்கணும்னு ஆர்வமா இருக்காப்புல. ஒரு ரெண்டாயிரம் சம்பளத்துல என்ன வந்திரப் போவுது?” என்று சந்தேகமாய் கேட்க, “இல்லைங்க அவரு வர மாட்டாரு” என்று உறுதியாக கூறினேன். இன்றுடன் இரண்டு மாதங்களாகிவிட்டது. அன்று போனவர் இன்று வரை நான் வேலைக்கு வரவில்லை என்று கூட போன் செய்யவில்லை.  நான் சொன்னேனில்லையா? அஸிஸ்டெண்டுகள் தனித்துவமானவர்கள். அவர்களை அத்தனை சீக்கிரம் கணிக்கவே முடியாதென்று. 

Asst புராணம் -2