தா
மீண்டும் ஒரு சிறிய பட்ஜெட் படம். மூச்சு முட்டக்கூடிய அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடுக்குகளில் கிடைக்கும் புதிய வெளிச்சமும், காற்றைப் போல இறுக்கத்தை குறைக்க சில படங்கள் வரத்தான் செய்கிறது. கல்யாணக் கோலத்தில் இருக்கும் சின்னக் கண்ணா என்கிற சூர்யா தன் திருமணத்தை பற்றி பேசுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. சின்னக்கண்ணன் என்கிற சூர்யா.. தன் உருவத்தை பற்றியோ, அழகை பற்றியோ… கவலையில்லாமல், ஒரு இரும்பு கம்பெனியில் வேலை செய்துவிட்டு, நற்பணி மன்றம், நண்பர்கள், தண்ணி, பீடி என்றலையும் சாதாரணன். பெண்கள் விஷயத்தில் துளியும் ஆர்வமில்லாதவன். நிமிர்ந்தே பார்க்காதவன். முரடன். நண்பனின் தங்கை காதலிக்கும் ஆளை நண்பன் சொன்னதால் அடித்துவிட, வெகுண்டெழுந்த தங்கை, முரடனான உனக்கு பெண்களின் மனசை பற்றி என்ன தெரியும் என்று சொல்லி திட்ட, அது முதல் பெண்களை பற்றிய பார்வை மாறி, தானும் காதலிக்க ஆரம்பிக்க முயற்சி செய்யும் வேலையை ஆரம்பிக்கிறான். இவனின் ஆர்வம் தெரிந்து அவனுக்கு வீட்டில் ஒரு காலேஜ் படிக்கும் பெண்ணை பார்த்து முடிவு செய்ய, அவளின் அழகை பார்த்து பிரம்மித்து போகிறான் சூர்யா...