Thottal Thodarum

Mar 31, 2009

தமிலிஷில் பதிவுகளை இணைக்கலாமா..?

Untitled-1

போன வாரம் நானும் டாக்டர் புருனோவும் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னார். அது என்னவென்றால் நாம் நம்முடய பதிவுகளை தமிழ்லிஷில் வெளியிடுகிறோம் இல்லையா..? அதை யார் வேண்டுமானாலும் கமர்ஷியலாகவோ, நான் – கமர்ஷியலாகவோ, பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறோம் என்பது தான்.


இதை அறிந்ததும் உடனடியாக நான் அவரிடம் சார் இது ஒரு புக் மார்க் சைட்தானே அது எப்படி நாம் எவர் வேண்டுமானாலும் எடுத்தாள உரிமை கொடுப்பதாய் அமையும் என்று கேட்ட போது அவர்களது வலைதளத்துக்கே போய் கீழே உள்ள creative common public domains என்கிற லிங்கை கிளிக் செய்து காட்டிய போது, அதில் நாம் இணைக்கும் நமது பதிவுகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் வியாபாரத்துக்காகவோ, தன் சுய பயன்பாட்டுக்காகவோ பயன்படுத்தி கொள்ளலாம் என்று உரிமை உள்ளதாய் அதில் போட்டிருந்தது.

publicdomain

இதை பற்றி பதிவு எழுதலாம் என்று ஆரம்பித்த ரெண்டு நாட்களுக்குள், தமிழ்லிஷில் அந்த லிங்க் எடுக்கப்பட்டுவீட்டது. மருத்துவர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் அவர்கள் விளக்கம் அளித்து, அதை எடுத்துவிட்டதாய் சொல்கிறார்கள். இதே போல் தான் மற்ற புக்மார்க தளங்களும்.

அந்த லிங்கில் என்னதான் அமெரிக்க சட்டப்படி என்று போட்டிருந்தாலும், நம் ஊரில் காப்பிரைட் என்பதே காமெடியான விஷயமாய் இருக்கும் பட்சத்தில் இதை பற்றி வேறு யாராவது, ஏன் தமிலிஷிலோ, Ntamil, தளத்திற்க்கு உரிமையாளர்கள் இதற்கான தெளிவான விளக்கத்தை அளிப்பார்களா..? இல்லையென்றால் நாம் அனைவரும் தமிலிஷிலோ, மற்ற புக் மார்க் தளங்களில் இணைப்பதற்க்கு யோசிக்கத்தான் வேண்டும்.


டிஸ்கி:

இதையேன் தமிலிஷிலும், Ntamilலிலும் இணைத்தேன் என்று கேட்பவர்க்ளுக்கு, அவர்களுக்கு தெரிந்தால் தானே நமக்கு விளக்கம் கொடுபார்கள் அதற்காகத்தான். அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் பல பதிவர்களில் ஒருவன்.
Blogger Tips -பட்டாளம் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 30, 2009

என்னடி மீனாட்சி..

subramaniyapuram_6_328200881036123

ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும்.

நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..

அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம ரீரிக்கார்டிங் மியூசிக்கோட வாச்சிக்கிட்டே கதை  சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..

அவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.

க்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்.. அதை ,அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல. ஒரே சந்தோசமா இருந்திச்சு
<அடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..

“இங்க வாங்கடா”  மேடம் கூப்ப்டாங்க..

எதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி கண்ணையெல்லாம் பெரிசா விரிச்சு வச்சிகிட்டு, பெருசு, பெருசா மூச்சை விட்டுகிட்டு ஒரு மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு நீட்டு குச்சிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..

“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள.. அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..

எங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்களுக்கு ரொம்ப வருத்தமாயி.. என் கேர்ள் ப்ரண்ட்.. ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்.. அவ எனக்கு ப்ரெண்டே இல்ல.. குண்டா புசுக், புசுக்க்னு இருப்பா, ஆண்டாளுக்கு அவளை பிடிக்காது அதனால எனக்கும் அவளை பிடிக்காது. நான்  மீனாட்சி  பாக்கும் போது  என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா..

என்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. அப்ப பாத்தா மாதிரி குண்டு பூசணிக்கா கணக்காதான் இருந்தா, கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அன்னைக்கு எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..?”
actress-swathi-stills-71
மீனாட்சி ஆச்சர்யத்துடன் விழுந்து விழுந்து சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..?” கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு அடி வாங்குனவன் நானில்லேன்னு மனசுகுள்ளே நினைச்சுகிட்டே.. அசட்டு சிரிப்பு சிரித்தபடியே  அவளை பார்க்க..

“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தான் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க...ன்னு சொல்லிட்டு வெட்கப்பட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..

”என்ன கொடுமை சார் இது? நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. சொன்னது என்னாச்சுன்னு”  எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. ? ஆனந்தராஜூ எங்கடா இருக்கே..?


Blogger Tips -பட்டாளம் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 27, 2009

பட்டாளம் - திரைவிமர்சனம்

jdxnqpgfecj

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பு, நதியா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது பட்டாளம். சென்ற மாதமே வரவேண்டிய படம்.

ஒரு பள்ளியில் +2 படிக்கும் மாணவர்கள். அந்த பள்ளியின் ஹெட்மிஸ்டர்ஸ் நதியா.. வழக்கம் போல் பள்ளியில் இரண்டு குரூப்கள் ஜென்ம விரோதிகளை போல மோதிக் கொண்டிருக்கிறார்கள். நதியா அவர்களை அன்பு கலந்த கண்டிப்புடன் வழிக்கு கொண்டு வருகிறார்.  நதியா ஹெட்மிஸ்டர்சாக மட்டுமில்லாமல்.. டாக்டராகவும், மனநிலை பாதிக்கபட்டவர்களுக்கு தனியாய் ஒரு ஹோம் வைத்து நடத்தி அங்கே தங்கியும் இருக்கிறார். அங்கே அவருடன் தங்கி படிக்க வரும் ஒரு பெண்ணுக்கும் அங்கேயே தங்கி படிக்கும் ஒரு பையனுக்கு காதல், எதிர் குரூப்பில் உள்ள பையனுடன் பழகுவதை வைத்து அவள் மேல் சந்தேகம், பொறாமை, அண்ணன் தங்கை பாசம், கொலை முயற்சி, நண்பன் சாவு, என்று எபிசோட் எபிசோடாக இருக்கிறது.
jdxnqphhaia

தொடர்ச்சியாய் இடைவேளை வரைக்கும் துண்டு துண்டான காட்சிகள் ஓட, தீடீரென ஒரு தற்கொலை முயற்சி என்று இடைவேளை விடுகிறார்கள். அப்பாடா கதை சொல்ல போறாங்க என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்,  மீண்டும் சொத்தென்று விழுந்து, ரன்னிங் ரேஸ், நண்பர்க்ள் ஒன்று சேருதல், அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட், சந்தேகம்,  என்று ஒரே உட்டாலக்கடி, ஏதோ கடைசி பத்து  நிமிடங்கள் மட்டுமே சேர்ந்தார்போல தேறுகிறது. க்ளைமாக்ஸ் சேது மேட்டருக்காக படம் முழுவதும் மனநிலை குன்றியவர்கள் காப்பகம்?..

டெய்ஸியாய் வரும் ந்தியா தூரங்களில் அழகாய் இருக்கிறார்.. க்ளோஸப்பில் ஸோ..ஸோ.. அவர் ஒரு டாக்டரா? ஸ்கூல் ஹெட்மிஸ்டர்ஸா என்று ஏகப்பட்ட குழப்பம், எல்லா பைத்தியங்களையும் ஸ்டெத் வைத்து செக் செய்கிறார்? ஓரே காமெடி.. அவர் பசங்களை திருத்துவதற்காக என்ன செய்கிறார்? அடுத்த காட்சியில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல் காட்சியிலேயே குறிப்பறிந்துவிடுகிறார். இந்த எட்டு பசங்களை தவிர வேற யாரையும் கவனிக்க மாட்டாரா நதியா.? அவரின் பின்புலம் என்ன..? என்பது போன்ற பல கேள்விகள்? வீக் கேரக்டரைசேஷன்.
Pattalam2

இறந்து போன சவுந்தர்யாவை ஞாபக படுத்தும் அழகோடும், ஒரு குட்டி பெண்ணை கொண்டு வந்திருக்கிறார்க்ள். படு அழகு..

தற்கொலை செய்ய முய்ற்சிக்கும் பையன் ஒருவனும், க்ளைமாக்ஸில் இறந்து போகும் பையனும் தான் மனதில் நிற்கிறார்கள். பெரும்பாலான பையன்கள் பெயர்கள் கூட ஞாபக நிரடலில் வரவில்லை. இற்ந்து போகும் பையனின் பாடிலேங்க்குவெஜும் , டயலாக் டெலிவெரியும் நன்றாக இருந்தது. ஸ்கூல் மணி விழுந்து இறக்கும் தருவயில் கூட நான் அப்பவே சொன்னேனில்ல மேடம் எடுத்து வித்துறலாம்னு சொல்கிற இடம் அருமை.

கிச்சா என்கிற  கிருஷ்ணமூர்த்தியின் ஓளிப்பதிவு அருமை. ஜாஸி கிப்ட்டின் இசை ஸோ.. ஸோ..

படம் நெடுகிலும், ஆங்காங்கே புன்முறுவல் பூக்க செய்யும் வசனங்கள் இருக்கிறது. ஆனால் தொடர்பில்லாத எபிஸோட் பாணி திரைக்கதையால் எந்த விதமான எமோஷனும் ஏறமாட்டேன் என்கிறது. துள்ளலான +2 பசங்க, ஒரு அன்பான மேடம், மாணவர்களுக்குள் இருக்கும் ஈகோ, சண்டை, காதல் சந்தேகம்  என்று உணர்வுகளால் கலந்து கட்டி அடித்து ஆடியிருக்க வேண்டிய படம்.

பட்டாளம் -   வெறும் கும்பல்

டிஸ்கி:

படத்தின் இயக்குனர் விஜய் டிவி புகழ் “கனா காணும் காலங்கள்” முதல் சீரிஸ் இயக்குனராம்.

Mar 25, 2009

பெ’ண்’களூர்

கடந்த ரெண்டு நாட்களாய் பெங்களூரில் அவசர வேலை.. ஒரு பைனாசியரை பார்பதற்க்காக உடனடியாக வர சொல்லி அழைப்பு வர, நானும் என்னுடய புரொடியூசரும் ரயில் டிக்கெட் கிடைக்காமல்  காரிலேயே கிளம்பினோம். திங்கட்கிழமை ஆதலால் பெங்களூர் ஹைவேயே எங்களுக்காக அலம்பி விட்டது போலிருக்க, சுமார் 51/2 மணிநேரத்தில் பெங்களூருக்குள் போய் சேர்ந்துவிட்டோம்.. ஒரே வெயில்

************************************************************************************************]

ரிசெஷன்காரணமாய் ஸ்டார் ஓட்டல் எல்லாம் புக்கிங் இல்லாமல் காய்கிறது. நாங்கள் பிரிகேட் ரோடில் உள்ள Iris என்கிற ஓட்டலில் தங்கினோம் ஆறாயிரம் ரூபாய் ரூம் மூவாயிரம் ரூபாய்க்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஃபபே இலவசம். அருமையான கவனிப்பு, அற்புதமாய் உள்ளமைக்கபட்ட ரூம்கள்.. குளு, குளு ஏசி, என்று அருமையாய் இருந்தது. வெளியே கொளுத்தியது.
ஏசியை நினைக்கும் போது சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் கதையில் ஒரு வசனம் வரும் ”ஏசி ரூம் இருக்குமா?” “பெங்களூர் முழுக்கவே ஏசி தனியா ஏசி வேறயா“ என்பது போல் வசனம்  வரும். குளோபல் வார்மிங். எங்கள் ரூமிலிருந்து பிரிகேட் ரோட் முழுவதையும் பார்க்கலாம். அவ்வளவு அழகு. முக்கியமாய் எங்களை வரவேற்ற ரிஷப்ஷன் பெண்.. ம்ஹூம்ம்ம்ம்

************************************************************************************************
325969_f520

பெண்கள் எல்லோரும் செய்து வைத்ததை போல் கடைகளில் வைத்திருக்கும், பொம்மை போல இருக்கிறார்கள் அதே அளவுகளில்.  இவர்களை எல்லாம் எங்கிருந்து செய்து அனுப்புகிறார்க்ள்? அதிலும் அந்த பிரிகேட் ரோட், எம்.ஜி.ரோடில் நடப்பவர்கள் முக்கால்வாசி பேர் ஏறக்குறைய தேவதைகள். சரிவான அந்த ரோட்டில் அவர்கள் ’மிதந்த;படி நடப்பதை பார்த்து கொண்டிருந்தாலே போதும் போலிருக்கிறது. கருப்பாய், மாநிறமாய், சிகப்பாய், ஈரானிய சிகப்பாய், நீட்டு மூக்காய், கொஞ்சம் விரிந்த மூக்காய், பெரியதாய், சின்னதாய், மீடியமாய், அழகான கண்கள், மருண்ட கண்கள், அரை போதையில் மயக்கும் கண்கள், ரகசியம் பேசும் கண்கள், நீண்ட முடி, ஷார்ட் கட், பாய்கட், உயரம், குள்ளம்,மீடியம், சற்றே அகண்ட இடை, மெல்லிடை, அட இதுதான் இடை பெருத்தவள்,  நளினமாய் பாய்ப்ரெண்டுடன் ஸ்காட்சையோ, பீரையோ, பகார்டி ஃபிரிஸரையா சப்பிக் கொண்டு, லேசான போதையுடனும், ஸ்மோக் பாரில் நளினமாய் சிகரெட் பிடிக்கும் மெல்லிய, தடித்த, அதரங்களின் அழகும், என்று “கடவுளே உனக்கு  ஏன் இத்தனை காண்டு”

பெங்களூர் அல்ல பெ’ண்’களூர்

 

டிஸ்கி : தலைப்பு கொடுத்த மறைந்த எழுத்தாளர் இரவிசந்திரன் அவர்களுக்கு நன்றி


Blogger Tips -விஞ்ஞான கதை-1- பரிசல்காரன் கதை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 21, 2009

அருந்ததீ -திரைவிமர்சனம்

 arunthathee

   
லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ”

ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்மை கட்டி போட்டு விடுகிறார்கள், அந்த அளவுக்கும் இறுக்கமான திரைக்கதை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என்று போட்டி போட்டு பின்னி எடுக்கிறார்கள். 

arunthathi-09

அருந்ததியாய் அனுஷ்கா இரட்டை வேடங்களில், மழையிலும், வெளிநாட்டு கடலோரங்களீலும், ஹீரோக்களுடன் உருண்டு புரண்டவரா..? சும்மா அசத்தியிருக்கிறார். அதிலும் அவரது உயரமே பழைய அருந்ததிக்கு “ஜெக்கம்மா” என்று மக்களால் கடவுளை போல வழிபடும் அந்த கேரக்டருக்கு ஒரு கெத்தை கொடுத்திருக்கிறது. சோனு சூட்.. மாமன் பசுபதியாய்.. அவருடய நடிப்பு படத்திக்கு மிகப்பெரிய பலம்.. சரியான வில்லன். அதே போல் முஸ்லிம் மந்திரவாதியாய் வரும் ஷாயாஜி ஷிண்டே.. சரியான தேர்வு.. அவரும் அவருடய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இம்மாதிரியான படங்களில் எல்லாம் என்னத்தை நடிக்க இருக்கிறது என்பதை, மோசமான நடிப்பு, மற்றும் திரைக்கதை, டெக்னிகல் அம்சங்கள் உள்ள படஙக்ளை பார்த்தால் புரியும். முதல் பாதியில் திரைக்கதை பேய் வேகம்.. பழைய அருந்ததியின் கதையை ஒரேயடியாய் சொல்லாமல், பிரித்து, பிரித்து, படம் முழுவதும் வருவது போல் சொல்லி, படத்தின் வேகத்தை கூட்டியிருப்பது நல்ல உத்தி. என்ன க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் பிரமாதபடுத்தியிருக்கலாம்.  கோட்டியின் இசையில் ஆங்காங்கே பழைய இளையராஜாவின் பாடல்கள் தெரிகிறது. அதிலும் ஒரு பாடலில் பெண் குரலில் “ராஜதீபமே” பாடல். அனுஷ்கா ஆடும் ஒரு டிரம் டான்ஸ் எங்கயோ ஒரு ஜாப்பானோ, சைனீஸ் படத்திலோ பார்த்த மாதிரியிருக்கிறது.. இருந்தாலும் ரொம்ப புவர்.

arunthathi-06

ஒளிப்பதிவு செந்தில்குமார்.. இம்மாதிரியான படங்களுக்கு ஏற்ற ஒளிப்பதிவு. அதே போல் எடிட்டிங்கும் அருமையாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு, அம்மன் படத்தை தந்த கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற படம். ஆந்திராவில் சுக்கை போடு போட்ட படம். சுமார் 200 கோடி  வசூலாம். சமீப காலத்தில் நேரடி தமிழ் படத்துக்கு கூட இவ்வளவு செலவு செய்து விளம்பர படுத்தியிருக்க மாட்டார்கள். படம் கிரிகெட் மேட்சையும் மீறி நல்ல ஓபனிங்காம்.

டிஸ்கி: இது டப்பிங் விமர்சனம்.
 

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 20, 2009

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம். என்கிற தாரக மந்திரத்தை சொல்லி மீண்டும் ஓட்டு கேட்கிறது திமுக. இவர்கள் என்னத்தை சொன்னார்கள், என்னத்தை செய்தார்கள் என்று கேட்பவர்கள் நிறைய பேர்.

சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, இலவச டிவி, கேஸ்ஸ்டவ், இலவச மனை, என்று ஆரம்பம் எல்லாமே நல்லாத்தான் நடந்திச்சு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா எல்லாவிதமான விநியோகங்களிலும் குளறுபடி, இந்த கலர் டிவி விஷயத்துல பல பிரச்சனை வந்து கடைசியா ரேஷன் கார்டு வச்சிருக்கிற எல்லாருக்கும் டிவினு சொல்லியிருக்காங்க.. ஆனா எத்தனை பேருக்கு இது வரைக்கும் கொடுத்திருக்காங்கன்னு சரியா சொல்ல முடியல.. ஏன்னா எனக்கு தெரிந்து பல பேருக்கு கலர்டிவி கொடுக்கவேயில்லை ரேஷன் கார்டு இருந்தும். கேட்டா அதுக்கு சரியான பதிலில்லை.

அடுத்து கேஸ் ஸ்டவ் பல பேருக்கு கொடுக்கபடவேயில்லை. சரி இதெல்லாம் நம்ம சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள். இவர்களுடய ஆட்சி இன்னும் சில ஆண்டுகாலம் இருப்பதால் அதற்குள் கொடுக்கப்பட்டுவிடும் என்று நம்புவோமாக.

ஆனால் கலைஞர் அரசு தனது சுயநலத்துக்காக போடப்பட்ட சட்டங்கள் எத்தனை.. அவர் ஒரு சட்டம் கொண்டு வந்தார் அதாவது தனி தியேட்டர்களில் அதிகபட்ச விலை ரு.50,  ம் மல்டிப்ளக்ஸ் எனப்படும் உணவகங்களுடனான  அடுக்கு திரையரஙகங்களூக்கு அதிகபட்ச விலை ரு.120 என்று. ஆனால் அதெல்லாம் காற்றோடு போய்விட்டது. பல சென்னை தியேட்டர்களில் அதிகபட்ச விலை ரு.70க்கும் 80ரூபாய்க்கும்  விற்க்படுகிற்து. விலையை ரகசியமாய் கூட விற்பதில்லை போர்டு போட்டே விற்கிறார்கள். ஆனால இதை யாரும் கேட்பதில்லை.  ஆனால் வேற்று மொழி போடும் தியேட்டரில் இந்த சட்டம் சரியாய் அமுலாகிறது. உதாரணம் கேசினோ இங்க அதிகபட்சவிலையும் 50தான் குறைந்த பட்ச விலையும் 50தான்.

மாறன் ப்ரதர்ஸை எதிர்பதற்கு கலைஞர்டிவி ஆரம்பித்ததால் அதற்கு படஙக்ள் தேவையிருந்ததால் இந்த சட்டமெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை. தளர்ந்து போய்விட்டது. இதனால் பாதிக்கபட்டது பொதுமக்களே அன்றி அவரகள் இல்லை. அதே போல் மக்களின் வரி பணத்தில் ஆரம்பிக்க பட்ட அரசு கேபிள் நிறுவனம். இது வரை எத்தனையோ கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கபட்டது. இப்போது இவர்கள் சேர்ந்துவிட்டதால். அந்த திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. அப்போது அதற்கு செலவு செய்த பணம் இவர்கள் சொந்த பணம் இல்லையே.? இருந்திருந்தால் விட்டிருப்பார்களா?

இதற்கு பிற்கு சட்டகல்லூரி மாணவர்கள் பிரசசனை, ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது வக்கீல் போலீஸ் மோதல், இலங்கை தமிழர் என்று பல பிரச்சனைகளை இரும்பு கரம் கொண்டு அடக்காமல் தினமும், கடிதம் மட்டுமே எழுதி கொண்டிருப்பது பரம்பரை திமுக காரனுக்கு கூட அதிருப்தியாய்தான் இருக்கிறது.

இதோ நாட்டின் பணவீக்கம் 0.44 சதவிகிதம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அத்யாவசிய பொருட்களின் விலையிலோ, ஹோட்டல் சாப்பாட்டின் விலையிலோ, மற்ற பொருட்களின் விலைவாசியிலோ, எந்த விதமான மாறுதல்களையும் கொண்டுவர இதுவரை தமிழக் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பணவீக்கம் ஏறிய போது அதனால் தான் விலைவாசி உயர்வு என்று சொல்லிய அரசு, இப்போது இறங்கிய பிறகு விலைவாசியை குறைக்க முற்படாதது ஏன்?

இப்படி பல ஏன்? எதற்கு? போன்ற கேள்விகளுடன் தேர்தலை சந்திக்கப்போகும் திமுக காரன்.




Blogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 19, 2009

Sasirekhaa Parinayam- Telugu Film Review

sasirekha parinayam_Techsatishtelugujpgjpg வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார்.  அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன்.
shasirekhaparinayam-0015

கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று பிரச்சனை செய்ய திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார், வழியில் ஆனந்தை சந்திக்கிறார்.  அவர்கள் இருவருக்கும் நடக்கும் சம்பவஙக்ள தான் கதை.. இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள்.
14794571_6

படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார். அவருடன் நாம் அதே உணர்வுகலை உணர்கிறோம்.  சசிரேகாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெனிலியா.

ஆனந்தாக தருண், படம் முழுவதும் வியாபித்திருக்கும் ஜெனிலியாவுடன் ஈக்குவலாய் போட்டி போடுகிறார். விஜயவாடா பற்றி கேவலமாய் ஜெனிலியா பேசுமிடத்தில், அதன் பெருமைகளை சொல்லும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் காட்சியிலும் கலக்குகிறார்.
sasirekha-parinayam

எப்போதும் சிரித்தபடியே கழுத்தறுக்கும் ஆனந்தின் அப்பா,  சசிரேகாவை தேடி அலையும் ரகுபாபு, ஜெனிலியாவின் மருண்ட விழி அம்மா, என்று பல கேரக்டர்கள் இண்ட்ரஸ்டாக இருக்கிறது. திரைக்கதையில் தான் ஆங்காங்கே தொங்கி விட்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணவம்சி.

இம்மாதிரியான படங்களுக்கு முக்கியமான தேவை இயல்பான காட்சிகளும், அருமையான இசையும், அந்த ஜோடிகளுக்குள் இருக்கும் ரொமான்ஸும் தான்.  இதில் முதல் விஷயத்திலும், கடைசி விஷயத்திலும், கொஞ்சம் மிஸ் செய்துவிட்டார்கள்..
shasirekhaparinayam-audio-0002

க்ளைமாக்ஸ் காட்சியில் தலையில் அடிபட்டு, ஜெனிலியாவை ஆட்டோவில் கூட்டி போகையில் அவர் பேசும் காட்சி அருமை, அதை படமாக்கியவிதமும் சூப்பர். கிருஷ்ணவம்சி.

மணிசர்மாவின் இசையில் இரண்டு பாடல்கள் இதம், பிண்ணனி இசையும் அருமை. பாஸ்கர் சமலாவின் ஒளிப்பதிவு நச். கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு ஜப் வி மெட் கிடைத்திருக்கும்.

Sasirekhaa Parinayam -  A Feel good OK Movie




Blogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 18, 2009

என்னன்னு சொல்றது..?

GoogleyEyes

நான் வலைப்பூ 2006 அக்டோபர்ல.. மொத்தமா அந்த வருஷத்துல ஒரு 16 பதிவுதான் போட்டிருந்தேன். அதே போல 2007லேயும் மொத்தமே எட்டு பதிவுகள் தான்.  இப்படி சொங்கி போன லெவல்ல போயிட்டிருந்த என்னுடய வலைப்பயணம்,

திடீர்னு ஒரு நாள்  2008 ஆகஸ்ட் மாசம் மீண்டும் பதிவெழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஞாயமா சொல்லப் போனா  இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்னா (அதுவும் மொக்கையா)  அது மிகையாகாது. அந்த ஆகஸ்ட் மாசத்துக்கு அப்புறம் நோ லுக்கிங் பேக்.. சும்மா விறுவிறுன்னு ஜூரம் கணக்கா நம்ம பதிவுகளும் ஏறிச்சி, நம்ம பதிவ வந்து படிக்கிறவஙகளும் அதிகமாயிட்டேயிருந்தாங்க. நாளைக்கு நூறு ஹிட்ஸே வர்றாதுக்கு மூக்கால தண்ணி குடிக்கவேண்டியிருந்த காலத்தில, சும்மா 100, 200. 300ன்னு ஏறி மாசத்துக்கு 10, 000 ஹிட்ஸ், ஜஸ்ட் லைக் தட் ஒரு லட்சம் ஹிட்ஸ்செல்லாம் தாண்டியிருச்சு.

என்னடா இவன் இப்படி தற்பெருமை பேசுறானேன்னு நினைக்கிறீங்களா..? தற்பெருமை இல்லைங்க.. சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் யாரு.. நீங்க தான். வாசகர்கள், பதிவர்களாகிய நீஙக்தான்.

முதல்ல பின்னூட்டம் வாங்கிறதே குதிரை கொம்பா இருந்த காலத்துலேர்ந்து என்னை ஊக்குவிச்சவர், ஜூர்கேன் க்ருகேர், என்பவரும், ராஜ் என்கிற வாசகரும்தான். அதே சமயத்துல பின்னூட்டமிட்டவஙக கோவிச்சிக்க வேணாம்.  லிஸ்ட் போடணும்னா ஒரு பதிவு பத்தாது.

எல்லார் பதிவிலேயும் தொடர்பவர்கள்னு ஒண்ணு இருக்கும் நம்மதுல யாருமே இல்லைன்னு ஏங்கிட்டிருந்தப்போ.. முதல் தொடர்பவர் ஜூர்கேன் க்ருக்கர் என்பவர்தான். அதுக்கு அப்புறம் கடந்த எட்டு மாசத்துல 101 தொடர்பவர்களை பெற்றிருக்கிறேன்.  எனக்கிருக்கும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. நாம எழுதறாதையும் 101 பேர் தொடர்ந்து படிக்கிறாங்க என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

இந்த பதிவுலகத்துக்கு வந்ததில இன்னொரு சந்தோஷமான விஷயம். நட்புகள். அருமையான நட்பு வட்டாரம் ஒன்று உருவாகிவிட்டது. காலேஜ் காலங்களில் எந்தவிதமான பெரிய எதிர்பார்புகளும் இல்லாம ஒரு இறுகிய நட்பு இருக்கும் பாருங்க அந்த மாதிரியான ஒரு நட்பு.

பதிவுலகில் என் முதல் நண்பராகிய லக்கிலுக், முரளிகண்ணன், உண்மைதமிழன், நர்சிம், கார்க்கி, ரமேஷ்வைத்யா, பரிசல், அக்னிபார்வை, அதிஷா, ஹாலிவுட் பாலா, ராஜ், நவநீதன், புருனோ, டோண்டு, தாமிரா, ஷண்முகப்பிரியன், குகன்,அத்திரி, ஸ்ரீ,அப்துல்லா, என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்,

இப்படி பட்ட நட்புகளையும், சந்தோஷங்களையும் கொடுத்து என்னை திக்கு முக்காட செய்யிற இந்த வலைப்பூ உலகத்துக்கும்,  உங்க எல்லாத்துக்கும் என்ன  சொல்றதுன்னே தெரியல.. நன்றி அது இதுன்னு சொன்னா நெருக்கம் கெட்டுருமோன்னு தோணுது.  With Moist Eyes – கேபிள் சஙக்ர்





Blogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 16, 2009

உலக சினிமா - காஞ்சீவரம்

kachivaram-tamil-movie எவ்வளவு நாட்களுக்குதான் நாம் வேற்று மொழி படங்களையே பார்த்து உலக் சினிமா என்று பெருமைபட்டு கொண்டிருப்பது. இதோ இப்போது நம் மொழியில், நம் தமிழ் மொழியில். ஊருக்கெல்லாம் பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளியின் வாழ்கை போராட்டத்தை உள்ளம் உருக, நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள்.

வேங்கடம் ஜெயிலிலிருந்து பரோலில் வருவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். பெரும் மழையினூடே ஓடும் அந்த கால பஸ்ஸில் தன் வாழ்கையை நினைத்து பார்க்கிறான் வேங்கடம்.
kanchivaram-02

தனக்கு பெண் குழந்தை பிறந்த நாளில்  அவளின் திருமணத்துக்கு பட்டு புடவை தருவதாய் சொன்னதை ஊரே பேராசை என்று சொல்லும்போதே அந்நாளைய நெசவாளர்களின் வாழ்கை நிலையை கண் முன்னே விஸ்தாரமாய் விரிகிறது.
Kanchivaram-new-stills_03

குறைந்த கூலி, அந்நாளின் வேலை செய்யும் முறை. முதலாளிகளீன் அடக்குமுறை. ஏழை நெசவாளிகளின் வாழ்க்கை. என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் விரிக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும். 

தன் பெண்ணின் பட்டுபுடவைக்காக வைத்திருக்கும் பணம் தன் தங்கையின் வாழ்க்கை பிரச்சனைக்கு செலவாகி போக, வேறு வழியில்லாமல்  தறியிலிருந்து வாயினுள் பட்டு நூலை அடக்கி வருடங்களாய் கொஞ்சம், கொஞ்சமாய் சேர்த்த பட்டு நூலை கொண்டு அவன் தன் மக்ளுக்காக நெய்ய ஆரம்பிக்கிறான். kanchivaram-stills04

இதன் நடுவே கம்யூனிஸ்ட் கட்சிகளின்பால் ஈடுபாடு ஏற்பட்டு, அதனால் ஏற்படும் நெசவாளர்களின் உரிமை பிரச்சனை, தெரு நாடகம், போன்றவற்றில் ஈடுபாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் லோக்கல் தலைவராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டம் நடக்கையில், தன் பெண்ணின் திருமணம் நிச்சயம் செய்யப்பட,  மகளுக்கான சேலையை நெய்வதற்க்கு பட்டு நூல் வேண்டும் என்பதற்காக, மூன்று மாதமாய் நடந்த போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புவதும், வெளியே வரும் போது தன் நண்பனாலேயே பேச முடியாமல் திருட்டில் மாட்டி கொள்வதும்,  அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் நிதர்சனம்.
Kanchivaram-new-stills_03

தான் நெய்த சேலை தன் மகளின் பிணத்துக்கு கூட முழுசாய் மூட முடியாத அளவிற்க்கு இருப்பதை தன்நிலை மறந்த நிலையில் மறுபடி, மறுபடி  மூட எத்தனிக்க,  டயம் ஆச்சு கிளம்பலாம் என்று குரலை கேட்டு மனம்பிறழ்ந்த ஒரு சிரிப்போடு படம் நிறைவடைகிறது.

வேங்கடமாய் வாழ்ந்திருக்கிறார் ப்ராகாஷ்ராஜ்,  இதைவிட அவரை பாராட்ட வார்த்தையிருக்குமா என்று தெரியவில்லை. ஸ்ரேயா ரெட்டி குறையொன்றுமில்லை. அளவான நடிப்பு, முதலாளியா வரும் அந்த குண்டு மனிதர், துபாஷாக வருபவர், வேங்கடத்தின் நண்பன், அந்த கம்யூனிஸ்ட் தோழர், என்று எல்லோரும் த்ங்கள் பங்குக்கு நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

திருவின் அருமையான ஒளிப்பதிவு, படம் முழுவதும் விரவியிருக்கும் செமி செபியா டோன் நம்மை அந்த நாட்களுக்கே இட்டு செல்கிறது.

சாபு சிரிலின் ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ஒரு சலாம், அந்த கால மனிதர்களின் உடை, சைக்கிள், கார், வீட்டு சாமான்கள், தறி, உடைகளின் வண்ணங்கள் என்று மனுச்ன பின்னியிருக்கிறார்.

எம்.ஜி.ஸ்ரீகுமரின் இசையில் ஒரு பாடல், அருமை, பிண்ணனி இசை யை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு மற்ற இடங்களில் எபக்டுகளிலேயே நகர்த்தியிருப்பது அருமை.
 kanchivaram-stills02

இயக்குனர் ப்ரியதர்ஷன் படம் முழுவதும் நிற்கிறார். முக்கியமாய் கொள்கையின் பால் ஈடுபாட்டுடன் தொழிலாளர் ஒற்றுமை குறித்தது பேசும் காட்சியிலாகட்டும், அதே மனிதன் ஒரு கம்யூனிஸ்ட் தகப்பனாய் யோசிக்கும் போது, தன் கொள்கையை இழக்கும் காட்சியில், அவர் பேசும் வசனங்களாகட்டும், தன் மகளுக்கு கல்யாண பரிசாய் பட்டு புடவைக்காக சேர்த்து வைத்திருந்த காசை தன் தங்கையின் வாழ்கை பிரச்சனைக்காக கொடுத்தவுடன், அதை சமாளிக்க அவர் பொய் சொல்வதும், கணவன் மனைவி இருவரும் அந்த சமயத்தில் பேசிக் கொள்ளும் காட்சிகளின் வசனம், அந்த இயல்பு, அதே போல் தன் மகள் பிறந்தவுடன் தன் கையாலே பால் சோறு கொடுக்கும் தகப்பன் கையாலேயே, எலிபாஷாண சோறு கொடுகும் காட்சியில் பால் சோறு கொடுக்கும் போது போடப்பட்ட பாடலை மறுபடி உபயோகப்படுத்தி நம் மனதை நெகிழ வைக்கிறார். . நிஜமாகவே உலக தரத்தில் ஒரு நெசவாள தமிழனின் வாழ்கையை காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். ஹாட்ஸ் ஆப் ப்ரியதர்ஷன்

உலகம் முழுவதும் இது வரை முன்று இண்டர்நேஷனல் படவிழாக்களில் பங்கு பெற்றிருகிறது.

காஞ்சிவரம்  -  உலக சினிமா இந்தியாவிலிருந்து.

பார்த்ததில் பிடித்தது.


என்ன வாய்ஸ்பா.. சூப்பர்ப்….  கேட்டு பார்த்து என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.  உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாய் பின்னூட்டமிட்டு, பாராட்டுங்கள். இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பாவம், கேட்டால் உருகாதவர்கள் இருக்கமாட்டார்கள்.. அதிலும் இரண்டாது சரணத்தில்  என்ன அழகான மாடுலேஷன், பின்னீட்டே அனாகா.. வாழ்த்துக்கள்





Blogger Tips -நிதர்சன கதைகள் -6- ஆண்டாள் படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 11, 2009

உலக சினிமா – Perfume(2006)

406px-Perfume_poster

பத்து வருடங்களுக்கு முன்னால் பாட்ரிக் சுசண்ட் ஆல் எழுதபட்ட நாவல். பிரபல இயக்குனர்கள் ஸ்டன்லி க்யூப்ரிக், மார்டின் சாசரஸ், ரிட்லி ஸ்காட் போன்றவர்கள் இயக்க ஆசைப்பட்ட நாவல். கடைசியாய் ரன் லோலா ரன் இயக்குனர் டாம் டிவியுக்கர் வெற்றி பெற்றார். 

ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலிக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்க படும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஊரே திரண்டு வந்திருந்து அவனை எப்படியெல்லாம் கொல்ல வேண்டுமென்ற வெறியுடன் கூச்சலிட்டு கொண்டிருக்க, மெதுவாய் கேமரா அவனுடய மூக்குக்குள் போக.. ப்ளாஷ் பேக்.Perfume_redflowers

மீன் மார்கெட்டில் நாற்றத்தின் நடுவே பிறந்து  தன் முதல் சுவாசத்தை ஆரம்பிக்கிறான் ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலி.  கெரொனொலியின் தாய் இல்லீகல் கர்பத்தால், குழந்தையை விட்டு போக முயற்சித்ததால், காவலர்களால் தூக்கிலடப்படுகிறாள். ஒரு அனாதை ஆசிரமத்தில் வளரும் அவனுக்கு ஒரு ஸ்பெஷல் திறமை நுகர்வது.. எவ்வளவு தூரத்திலுள்ள விஷயமாய் இருந்தாலும் துல்லியமாய் நுகரும் தனித்திறமையுடவனாக வளர்கிறான். ஒரு முறை முதல் முறையாய் மார்கெட்டுக்கு போகும் ஒரு பெண்ணின் வாசனையை பிடித்து போய் அவளை தொடர்கிறான். அவள் அவனை பார்த்து பயந்து போய் கத்த முயற்சிக்க, அவனின் முதல் கொலை ஆரம்பமாகிறது.


பின்பு ஒரு சிறந்த வாசனை திரவியஙகள் தயாரிப்பாளர் ஒருவரிடம் தனக்கு வாசனை திரவியம் தயாரிக்க கற்று கொடுக்க சொல்ல, அவரிடமிருந்து கற்றுக் கொண்டு, ஒவ்வொரு பெண்ணையும் கொன்று அவர்களின் உடலை பதப்படுத்தி அதிலிருந்து சில சொட்டு வாசனை திரவியத்தை உருவாக்குகிறான்.  அரசு அவனை கைது செய்து, மரன தண்டனை கொடுக்கிறது.
51hJnR1JqBL._SS400_

கதையை கேட்டால் ஏதோ ஒரு சீரியல் கில்லர் படம் போல தோன்றும், பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் பெரிய வெற்றியே படம பார்க்கும் நமக்கு அவன் நுகரும் விஷயங்களை உணர வைப்பதே.  அவனுக்கு வாசனை திரவியததை தயாரிக்கும் நுட்பத்தை சொல்லி கொடுப்பவராக, டஸ்டின் ஹாப்மேன். 

Perfume_film_screenshot

அருமையான ஒளிப்பதிவு, அழகு , அழகான பெண்கள், அவர்க்ளை கொன்று அவன் பதப்படுத்தும் அழகு இருக்கிறதே…. இதுவரை எக்ஸ்டஸி என்கிறா நுண் உணர்வை திரையில் கொண்டுவர முயற்சி செய்தவர் தமிழில் எனக்கு தெரிந்து கமல்ஹாசன் தன்னுடய ஆளவந்தான் திரைபடத்தில் போதையின் உச்சத்தில் உள்ள ஒருவனின் உணர்வை காட்சியாக்கியிருப்பார். 

ஆனால் இப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் கொலை வாள் தன் கழுத்துக்கு தயாராய் இருக்க, ஒரே ஒரு முறை தான் இவ்வளவு பேரை கொன்று, தயாரித்த வாசனை திரவியத்தை, ஒரு தடவை கர்சீப்பில் நினைத்து வெட்ட வெளீயில் வீச.. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடமே மொத்த எக்ஸ்டஸியின் உச்சத்தில் கிறிஸ்துவ போதகர் உட்பட,யார் யாருடன் என்று பாராமல் அந்த வாசனையின் தூண்டுதலால் செக்ஸில் ஈடுபடும், காட்சியை துளி கூட வக்கிரமில்லாமல்  எடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதே போல் கடைசி காட்சி தான் கண்டுபிடித்த திரவத்தை வைத்து தான் பிறந்த  மீன் மார்கெட்டில் தன் அழித்து கொள்ளும் காட்சி நம்மை  ஸ்டன் ஆக்கிவிடும்..

சுமார் பண்ணிரெண்டு விருதுகளை அள்ளிய படம். காட்சிகளாய் பார்த்தை என்னால் முயன்ற வரை விமர்சனம் என்கிற எழுத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.  நான் எழுதியதை விட எழுதாத காட்சிகள் படத்தில் அதிகம், படம் பாருங்கள் இதை விட அதிகம் உணர்வீர்கள்.

Perfume – வாசனை பிரியர்களுக்கு ( வாசனையை பிடிக்காதவர்கள் உண்டோ.?)





Blogger Tips -சினிமா டுடே பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 9, 2009

சினிமா டுடே – ஒரு பார்வை.

Image0116

சென்ற வருடம் சினிமா டுடே கண்காட்சிக்கு போனபோது எப்படி இருந்ததோ அதே போல் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல்  இந்த வருடமும் இருந்தது. வழக்கம் போல்  சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, சாப்ட்வேர்,  ஸ்டால்களும், பாப்கார்ன், காபி, போன்றவை உள்ளே, வெளியே என்று நிறைய இடத்தில் வைத்திருதார்கள்..

redone_8                                                                  REDONE



ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்க்கு உபயோகித்த SL.-2K டிஜிட்டல் கேமரா டொமோவுக்காக வைக்க பட்டிருந்தது. இந்த கண்காட்சியின் ஹீரோ அந்த கேமராதான். நிறைய கேமராமேன்கள் அதை சுற்றியிருந்தார்கள். ARRIயின் டிஜிட்டல் சினிமா கேமராவான D21  வந்திருந்தது. RED ONE ஐ விட என்ன சிறப்பம்சம் என்று கேட்டபோது, இது இந்திய சீதோஷ்ணநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்க பட்டுள்ளது என்றார். ஹார்ட்டிஸ்கில் ரிக்கார்ட் ஆவ்தற்கு பதிலாய் HD டேப்பில் பதிவாகும் என்றார். ARRIயில் 3டியில் ஒளிப்பதிவு செய்யும் டிஜிட்டல் கேமராகூட இருந்தது..  வியூபைண்டரில் பார்க்கும் போது சூப்பர்.. ஆனால் அதை பற்றி விளக்கத்தான் ஆளில்லை.arriflex_d_21_01_det                                                               ARRI D21
ARRIயின் ஸ்டாலிலும் நல்ல கும்பல். REDONEக்கு ஆப்ஷன் வந்துவிட்டது. RED ONE சீதோஷ்ணநிலை பிரச்சனையை  கிட்டத்தட்ட சரி செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ.. ரெட் ஒன் பெஸ்ட் என்று தோன்றுகிற்து. ஏனென்றால் அது 4K Resolution.  ARRI-D21 –2K. 

Image0115

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்.  பல பழைய போட்டோகள் டிஸ்ப்ளேயில் வைக்கபட்டிருந்தது.. அந்த ஸ்டால் முழுவதும் பார்த்த போது ஆனந்தன் அவர்களின் வாழ்கை தெரிந்தது. இன்னும் கொஞசம் அழகாய் பிரசண்ட் செய்திருக்கலாம். கார்ட்போர்டு பேப்பர்களிலும், வெறும் பேப்பர்களிலும் ஓட்டி வைத்திருந்தது. கொஞ்சம் அழகாய் இல்லை. யாராவது நல்ல ஸ்பான்ஸர்கள் உதவலாமே..?  

                                                      ஸ்டாலின் உள்ளே.Image0114

கவிதாலயா ஸ்டாலில் பாலசந்தர் அவர்களின் படஙக்ளை பற்றிய விஷயங்களை லிஸ்ட் பண்ணியிருந்தார்கள். ஸ்டால் நன்றாக இருந்தது.. கீதா கைலாசமும், கைலாசம் சாரும் இருந்தார்கள். அவர்களின் அடுத்த படங்களை பற்றிய விபரங்களும், விளம்பரங்களும் இருந்தது.

ஒரு இடத்தில் சரியான் கும்பல் இருந்தது என்னடா இது என்று பார்த்தால் ஒரு ஸ்டேஜ் லைடிங் செய்யும் கம்பெனி இரண்டு ஜில்பான்ஸுகளை மானாட, மயிலாட ஸ்டைலில் ”ஆட” விட்டிருந்தார்கள்.. கூட்டம் அங்கு இங்கு நகராமல் பாட்டு முடியும் வரை நின்றிருந்தது.

Image0118சினிமா நண்பர்களை மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க முடிந்தது. புதிய நம்பர்களை பரிமாறி கொண்டோம். ஜிம்மிஜிப், அகேலா போன்ற கிரேன்கள் டிஸ்ப்ளேக்கு வைக்க பட்டிருந்தது, வினைல் பிரிண்டிங்காரர்கள் தரையெல்லாம் பிரிண்ட் செய்து போட்டிருந்தார்கள். சவுண்ட் மற்றும் லைட்டிங்கில் நிறைய புதிய அயிட்டங்கள். பலூன் லைட்ஸும் பார்த்தேன். ம்ஹூம்..

இந்த ஆண்டு முதல் குறும்பட தியேட்டரும் விழா நடத்தியிருந்தார்கள். என் படங்களை பார்த்திருந்த சில நண்பர்கள் அங்கே என்னை பார்த்ததும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டு வெறுப்பேற்றினார்கள்.  முன்கூட்டியே தெரியாததால் கலந்து கொள்ள முடியவில்லை என்றேன். அடுத்த ஆண்டாவது படஙகளை அனுப்ப வேண்டும்.

வெளியே அவுட் கேட் அருகே ஒரு ஆடியோ சம்பந்தபட்ட ஸ்டாலில் ஒரு குஜிலி நன்றாக இருந்ததால் தேவையேயில்லாமல் போய் கார்டு வாங்கி வந்து, கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு வந்தேன். ம்ஹூம்.. நமக்கில்லை.



வெளியே மூன்று எக்டீரியர் சவுண்ட் ப்ரொஜக்‌ஷன்காரர்கள் போட்டி போட்டு கொண்டு மாத்தி, மாத்தி அதிரிபுதிரி செய்து கொண்டிருந்தார்கள்.

சொல்ல மறந்துவிட்டேன். எண்டரன்சில் ஒரு ஏர் கட்டரிலிருந்து டிரை ஐஸ் புகையை திரையாக்கி அதன் பிண்ணனியிலிருந்து ப்ரொஜெக்டர் மூலம் ஹாலோகிராம் போல காற்றில் திரை அமைத்திருந்த உத்தி நன்றாக இருந்தது.  சுஜாதாவின் கொலையுதிர்காலம் ஞாபகம் வந்தது.

என் கூட வந்திருந்த நண்பர்கள் பலருக்கு ஏதோ சினிமா கண்காட்சி என்றவுடன், பரபரப்பாக வந்தவர்கள், உள்ளே வந்து அரை மணி நேரத்தில் சொங்கி விட்டார்கள். ஆனால் நான் கிளம்பும்போதே சொன்னேன் இது துறை சார்ந்த கண்காட்சி.. அதனால் உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்புண்டு என்று..

பதிவுலக நண்பர்கள் யாராவது வருவார்கள என்று நினைத்திருந்தேன்.  யாரையும் காணவில்லை. ஆனால் தாமிரா அவர்கள் நேற்று காலை கண்காட்சியிலிருந்து தொலைபேசினார். நானும் அங்கு இருக்கிறேனா என்று.. இல்லை தலைவா நான் நேற்றே போய் வந்து விட்டேன் என்றேன்.  அவருடயை அன்புக்கு நன்றி..

அடுத்த ஆண்டாவது இன்னும் மெருகேறலாம் என்ற  நம்பிக்கையுடன் சினிமா டுடே… 




Blogger Tips -கமான்..கமான்.. சிறுகதையை படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 8, 2009

1977 - திரைவிமர்சனம்

1977-movie-stills-12

ஒரு கிராமமே கொண்டாடும் பெரியவர் ஒருவர், அந்த கிராம மக்களுக்கு தெரிந்து ஊரை விட்டு வெளியே போகாதவர், ஒரு நாள் திடீரென ஒரு தினசரியில் வந்த படங்களை பார்த்துவிட்டு ஊரை விட்டு போக நினைக்கிறார். ஆனால் இறந்து போகிறார். அவர் எங்கே போக நினைத்தார்?, எதனால..? என்பதை தேடி அலைய ஆரம்பிக்கிறான் மகன். போக, போக தெரிகிறது தன் தந்தை 108 பேரை கொன்ற ஒரு கொலை குற்றாவாளியென்றும், தூக்கு தண்டைனையிலிருந்து தப்பித்துவிட்டவர் என்றும். தன் தந்தையின் கடந்த காலத்தை கண்டுபிடித்து, அவர் மீது உள்ள பழியை தீர்பதே கதை.
1977-movie-stills-16
இதை படிக்கும் போது அட பரவாயில்லையே ஒரு மசாலா படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களும் உள்ள  கதைதானே என்று நினைப்பவர்களுக்கு.. கதையாய்  சொல்லும் போது நல்லாத்தானிருக்கு.. படம்.. ம்ம்ம்..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பாவம் சரத்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், ரொம்ப நாளாக, சொந்த படமே எடுக்க கூடாது என்று நினைத்து கொண்டிருந்த போது, இயக்குனர் தினேஷ் குமார் சொன்ன கதை என்னை படமெடுக்க வைத்துவிட்டது என்று. என்ன பண்றது..? விதி அப்படிதான் சொந்த செலவில சூனியம் வச்சிக்க சொல்லும்..

1977-stills-043

இந்த கதைக்கு எதுக்கு மலேசியா போகணும்?. எதுக்கு டபுள் ஆக்‌ஷன்? எதுக்கு மூணு கெட்டப்,?.எதுக்கு இவ்வளவு செலவு? எதுக்கு டாவின்ஸி கோட் சிலுவை மாதிரி கையில ஒரு கத்தி மாதிரி சிலுவையை வச்சிகிட்டு அலையணும்?
1977-movie-stills-15
விவேக்குக்கு வர, வர, செல்ப் எடுக்க மாட்டேங்குது..  பத்மஸ்ரீ வாங்குன ராசியோ.?

பாவம் சரத, ஏதோ இவ்வளவு பணம் செலவு செஞ்சு ஒரு பாட்டு பூரா தன் கட்சி கொடிய காத்தில பறக்கவுட்டு எடுத்திருக்காரு. இந்த செலவுக்கு, பேசாம ஒரு கட்சி மாநாடு நடந்தியிருந்தாலாவது பிரயோஜ்னமா இருந்திருக்கும்.

வித்யாசகரின் இசை பெரிதாய் எடுபடவில்லை. திரைகதை பெரிய லெட்டவுன்.

படத்தில் நல்ல விஷயமே இல்லையா என்று கேட்பவர்களுக்கு.. படத்தை விட கடைசியில் டைரக்டர் பங்கு பெறும் மேகிங் காட்சிகள் நன்றாக இருக்கிறது. அப்புறம் மிக..மிக. அருமையாய், அற்புதமாய், சூப்பராய்.. அதிரி புதிரியாய்.. டக்கராய் .. இதுக்கு மேல எங்க தஙக்தலைவி, அழகு டயனோசர், நமிதா நன்றாக குளித்துள்ளார் என்பதை சொல்லவும் வேண்டுமோ..?

1977 நடந்து என்ன? – அதான் கேட்கிறேன் என்ன. நடந்திச்சு?




Blogger Tips -கமான்..கமான்.. சிறுகதையை படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 7, 2009

யாவரும் நலம் – திரைவிமர்சனம்

Yavarum-Nalam-Stills-5

ரொம்ப நாளாச்சு தமிழ்ல ஹாரர் படம் பார்த்து..   அதிலும் நம்ம பி.சி, மாதவன், பிக் பிக்சர்ஸ் என்று பெரிய தலைகள் எல்லாம் ஒன்ணு சேர்ந்திருக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுது.. அந்த எதிர்பார்பை ஓரளவுக்கு பூர்த்தி பண்ணியிருக்காங்னுதான் சொல்லணும்.

புதுசா தன் மனைவி, அண்ணன், அண்ணி, அவர்களின் இரண்டு குழந்தைகள், தங்கை, அம்மா என்று எட்டு பேர் கொண்ட கூட்டு குடும்பம் பதிமூன்றாம் மாடியில் உள்ள 13பி என்கிற ப்ளாட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள்.

Yavarum-Nalam-Stills-10

ஆனால் மாதவன் மனதில் மட்டும் ஒரு சின்ன கிலேசம் ஏற்படுகிறது.. அதிலும் அந்த லிப்ட் மேட்டரிலிருந்து, அதன் பிறகு செல்போனில் அவரை எடுக்கும் போட்டோ.. என்று ஆரம்பித்து,, அவர்கள் வீட்டில் மட்டுமே வரும் ‘யாவரும் நலம்’ என்கிற சீரியலில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே அவருடைய வாழ்கையிலும் நடக்கிறது. முதலில் நம்ப மறுக்கும் அவர், பின்னால் நடக்கும் சம்பவங்கள் மூலம் விஷயம் உறுதியாக. தன் போலீஸ் நண்பன் மூலம் சால்வ் செய்ய முயல்கிறார். நிஜமாகவே பேய் இருக்கிறதா..? எதனால் இவருடய வீட்டை மட்டும் தாக்குகிறது,? பேய்களிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறாரா..? என்பது தான் க்ளைமாக்ஸ்.


13b படம் ஆரம்பித்ததிலிருந்து நம்மை ஒருமாதிரி தயார் படுத்திவிடுகிறார்கள். அந்த லிப்ட் காட்சி, குருடருடன் வரும் நாய் வீட்டினுள் நுழைய மறுக்கும், காட்சி, என்று கொஞ்சம், கொஞ்சமாய் நம்மை உருவேத்தி, படம் முடியும் போது நம்மை சீட்டு நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

மாதவன் உணர்ந்து செய்திருக்கிறார்.. மொத்த படத்தையும், தன் தோள் மேல் ஏற்றிக் கொண்டு, அவருக்கு எப்படி பதை, பதைப்பு கூடுகிறதோ.. அது போலவே கூடவே நம்மையும் சேர்ந்து டென்ஷனாக்கி விடுகிறார். நீது சந்திரா, சரண்யா, என்று பாத்திரமறிந்து சரியாய் செய்திருக்கிறார்கள்.

படத்தின் உயிர்நாடி பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஹாரார் படங்களுக்கான வித்யாசமான கோணங்கள், லைட்டிங்,  படம் முழுவதும் விரவி வரும் மஞ்சள் டிண்ட் என்று மொத்த படத்தையும் பிரகாசிக்க செய்கிறார்.image005

குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொருவர். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.. இவரும் தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார்.

சங்கர் இஷான் லாயின் இசை சுத்த வேஸ்ட்.. இம்மாதிரியான படங்களுக்கு பாடலகள் ஒரு மிகப் பெரிய தடை.. நல்ல வேளை சில பாடல்களை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.  பிண்ணனி இசை பரவாயில்லை..

விக்ரம் கே.குமாரின் திரைக்கதை பெரிய அளவில் நம்மை கட்டி போடுகிறது.. படத்தின் கதையமைப்பு, தெலுங்கில் வந்த A Film By Aravind என்கிற படத்தை ஞாபக படுத்தினாலும் சிறப்பாகவே  செய்திருக்கிறார். சில  இடங்களில் வசனங்கள் வித்யாசமாகவும், இயல்பான நகைச்சுவையுடன், இருக்கிறது.  குழந்தை கலைந்து சிசிச்சை பெறும் மனைவி மாதவனிடம்

“ ஐயம் சாரி.. மனோ..”

“எதுக்கு சாரி.. இதுக்கு தண்டனையா நூறு குழந்தை பெத்துக்க போறே” 

சமீபத்தில் பார்த்த வில்லு, ஏகன்  போன்ற டெரர்   படங்களை பார்த்து ஹாரர் ஆகியிருக்கும் நேரத்தில் நிஜ ஹாரர் படம.

யாவரும் நலம் –  எல்லோருக்கும் நலமே..




Blogger Tips -கமான்..கமான்.. சிறுகதையை படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Mar 6, 2009

யாராவது நியாயம் கேளுங்களேன்..


வர.. வர இந்த பாங்ககாரங்க பண்ற அழிச்சாட்டியம் தாஙக முடியல.. அதிலேயும் கிரெடிட் கார்ட் கேட்கவே வேணாம். சமீபத்தில் என்னுடய பார்கலேஸ் பேங்கின் கிரெடிட் கார்ட் வந்தது.. வழக்கமாய் நான் கார்டை பயன்படுத்தினால் டியூ டேடில் முழு பணத்தையும் கட்டிவிடுவேன். அப்படியே கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு வந்த பில் பணத்தை முழுசாய் கட்டிவிட்டேன்.

அதற்கு அடுத்த ஒரு முறை பத்தாவது மாதத்தில் ஆன்லைனில் பயன்படுத்த முயன்ற போது Transaction declined என்று வந்துவிட்டது. அந்த மாதம் எனக்கு பில் வரவில்லை. அடுத்த மாதமும் பில் வரவில்லை.. இப்படியாக நான்கு மாதங்களுக்கு பில் வரவில்லை.. நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு ஏதும் பாக்கி இல்லாததால் தான் பில் வரவில்லை என்று.. ஆனால் நான்கு மாதம் கழித்து ஒரு பில் வருக்கிறது. நான் ஆன்லைனில் கார்டை யூஸ் செய்ததாகவும், அதற்கான பில்லை அனுப்பியிருப்பதாகவும், பணத்தை நான் கடந்த நான்கு மாதமாய் கட்டாததால், மாதத்திற்கு லேட் பீஸாக 600 ரூபாய் வீதம் இரண்டாயிரத்தி நானூறும். பயன்படுத்த பட்ட தொகை என எட்டுநூறு ரூபாயும் அதற்கு உரிய டேக்ஸ் வட்டி எல்லாவற்றையும் சேர்த்து, கிட்டத்தட்ட, 4000 ரூபாய் கட்ட சொல்லியிருக்கிறார்கள்.

நான் கால்செண்டருக்கு போன் செய்து நான் பயன் படுத்தவில்லை. என்று ஆன்லைனில் நடந்த விஷய்த்தை சொல்ல, அதற்கு அவர்கள் இல்லை பயன் படுத்தியிருக்கிறீர்கள் என்றும் பில் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.. இதுவரை எல்லா மாதமும் கிடைத்த பில், எப்படி சரியாக நாலு மாதம் மட்டும் வரவில்லை என்றால் அதற்கு பதிலில்லை, அனுப்பியதற்கு புருப் கேட்டாலும் அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. நான்கு மாதமாய் பணம் கட்டாது இருந்த போதிலும், ஒரு போன் கால் இல்லை, இண்டிமேஷன் இல்லை.

இப்படியிருக்க, என்னுடய கிரெடிட் ரேட்டிங் எனப்படும் சிபில் என்னும் லிஸ்டிங்கில் நம்மை டிபால்டர் என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் என்ன பிரச்சனை என்றால் எதிர்காலத்தில் ஏதாவது லோன், என்று போனால் அதற்கு இந்த ரேட்டிங் காரணமாய் நம்முடய பேப்பர் ரிஜக்ட் ஆக வாய்ப்புள்ளது. இவர்கள் செய்த தவறுக்கு பழியை கஸ்டமர்களிடம் போட்டு பணம் பறிப்பதையே கடமையாய் கொண்டிருக்கிறார்கள் இந்த பாங்க்காரர்கள்.

அப்படியே பேசி ஒரு வழியாய் பணத்தை செட்டில் செய்தாலும் நம்மை டிபாலடர் லிஸ்டிலிருந்து எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் நாம் செட்டில்மெண்ட்தான் பண்ணியிருக்கிறோம். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை அதனால் ரேட்டிங் லிஸ்டில் நாம் இருப்போம்.

இந்த சிபில் ரேட்டிங் என்ன வென்றால் நாம் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகள், பாங்க லோன்கள், கார் லோன்கள் எல்லாவற்றையும் நம்முடய பெயர், பிறந்த தேதி போன்றவைகளை வைத்து எல்லா பாங்கியிலிருந்து தகவல்களை சேகரித்து எல்லா பாங்கிகளுக்கும், அந்த கஸ்டமர்கள் வேறு ஏதாவது லோன் அப்ளை செய்தால் அவரை பற்றிய விவரங்களை தங்களுடய டேட்டா பேஸிலிருந்து கொடுப்பார்கள். அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு சார்ஜும் ஒவ்வொரு பேங்கிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஒருவர் டிபால்டர் ஆகிவிட்டால் அடுத்த குறைந்த பட்சம்.. மூன்று வருடங்களிலிருந்து ஏழு வருடங்கள் வரை இந்த ப்ழி பாவம் அந்த கஸ்டமரை தொடரும்.. இதனால் லட்சக்கணக்கில் ஒழுங்காக வியாபாரம் செய்யும் எவ்வளவோ பேர்.. இம்மாதிரியான பாங்கிகளின் பிரச்சனையால் 100 ரூபாய் மேட்டருக்காகவெல்லாம் கிரெடிட் ரேட்டிங்கில் டிபால்டர் என்று அறிவிக்கபட்ட அவலமும் நடந்த் கொண்டுதானிருக்கிறது.

எனக்கு ஏற்கனவே இம்மாதிரியான அனுபவங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ / ஹெ.டி.எப்.சி /சிட்டி பேங்க் போன்ற வங்கிகளில் நடந்து, போராட்டங்களை சந்தித்து.. வெற்றி பெற்றிருக்கிறேன். அவர்களிடமிருந்தே பணத்தை வாங்கியிருக்கிறேன். இதையெல்லாம் பாதிக்கபட்டவங்க எல்லோரும் எதிர்த்து கேட்டாதான் நியாயம் கிடைக்கும். நான் இன்னொரு போராட்டத்துக்கு தயாராகிட்டேன்பா.. ரெடி ஜூட்...


Blogger Tips -கமான்..கமான்.. சிறுகதையை படிக்க


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..