Thottal Thodarum

Nov 27, 2021

சாப்பாட்டுக்கடை - பிகானீர்வாலா

 சென்ற வாரம் நுங்கம்பாக்கம் பக்கம் போன போது  பிகானீர்வாலா கடையின் வாசலில் ஏகப்பட்ட வட இந்தியர்கள் கூட்டம் காத்திருந்தது. கார்கள் அணிவரிசை கட்டியிருந்தார்கள். வெஜிட்டேரியன் உணவகங்களில் வட இந்தியர்கள் க்யூ கட்டி நிற்கிறார்கள் என்றால் நிச்சயம் தரமானதான் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. சாதாரணமாய் க்யு கட்ட மாட்டார்கள்.

அடுத்த ஒரு வார நாளில் சென்று பார்த்த போது அட்டகாசமான க்ரவுண்ட் ப்ளோர் டிஸ்ப்ளேவே கண்ணைக் கட்டியது. அத்தனை விதமான ஸ்வீட், கார வகைகள். கிலோ கணக்கில் ஏகப்பட்ட ஆபர்களோடு. ஒரு ப்ளோர் முழுக்க இந்த அயிட்டங்களுக்கு என்று ஒதுக்கியிருக்க, மாடியில் விஸ்தாரமான உணவகம்.

ரொம்பவும் விஸ்தாரமான மெனு இல்லை என்றாலும் இருக்கும் மெனுவில் சோளாபூரியை ஆர்டர் செய்தேன். அட்டகாசமான ரெண்டு பூரிக்களோடு சென்னா, பன்னீர் மற்றும் உருளைப் போட்டு கொடுத்தார்கள். அட்டகாசமான சுவை. கூடவே தொட்டுக் கொள்ள பிகானீர் ஊறுகாய். 

ப்ளேட்டர் மீல்ஸ் தருகிறார்கள். அதில் ஒரு ஸ்வீட், ஒரு ரைஸ், மூன்று சப்ஜிக்கள், ஒரு ரைத்தா, ஒரு அப்பளம், மூன்று ரொட்டிக்கள், எல்லாம் சேர்த்து 370 ரூபாய். கொஞ்சம் அதிகம் தான்.

பாவ் பாஜியும் நல்ல தரத்துடன் வெண்ணையில் புரட்டித் தந்தார்கள். என்னைப் பொறுத்த வரை பாவ் பாஜி என்றால் நார்த் மெட்ராஸ் ஏரியாவில் இருக்கும் நாவல்டியில் கிடைக்கும் பாவ் பாஜிக்கு இணை இன்னும் நான் டேஸ்ட் செய்யவில்லை. பட்.. இவர்களீன் பாவ் பாஜி நன்றாகவே இருந்தது. நல்ல வெஜிட்டேரியன் உணவு மற்றும் ஸ்வீட் கார வகைகள் வேண்டுவோர் நிச்சயம் ஒரு முறை இங்கே வைக்கப்பட்டிருக்கும் டிஸ்ப்ளேவுக்காகவே போய் வரலாம். சனி ஞாயிறுகளில் கூட்டம் அதிகம். 

Nov 7, 2021

சாப்பாட்டுக்கடை - மஞ்சள்


இதே பெயரில் சில வருடங்களுக்கு முன்னால் கோடம்பாக்கம் ஐந்து விளக்கு அருகில் ஒரு பழைய வீட்டில் உணவகமொன்றை ஆரம்பித்திருந்தார்கள். பின்பு சில மாதங்களில் அது காலியாகிப் போக போன மாதம் ரஷ்யன் கல்சுரல் அருகில் போக வேண்டியிருக்க, அப்போதுதான் பார்த்தேன். ஏகப்பட்ட கார்களும், வாசலில் நிறைய பேர் காத்திருந்தார்கள். சரி வேறொரு நாள் போய்க் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன். திபாவளிக்கு அடுத்தநாள் அந்த ஏரியாவில் ஒரு மீட்டிங். மதிய உணவுக்கு அங்கே போகலாம் என்று நண்பரிடம் சொன்னேன். “நீங்க அங்க சாப்ட்டு இருக்கீங்களா?” என்று கேட்டார். இல்லை இன்னைக்குத்தான் ட்ரை பண்ணப் போறேன் என்று சொல்ல, அப்ப நீங்க சாப்டு சொல்லுங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன் என்று கிளம்பிவிட்டார். போன போது வழக்கம் போல வாசலில் கூட்டம் நின்றிருந்தது.  உள்ளே போய் பெயரைக் கொடுத்துவிட்டு வரலாம் என்று போன போது ஒரு சீட்தானே இருக்கு என்று உடனடியாய் இடம் ஏற்பாடு செய்ய.. சிறிது நேரம் கழித்து ஆர்டர் எடுக்க ஆளை கூப்பிட்டு வரச் சொல்ல வேண்டியதாய் போனது. 


முணியாண்டி விலாஸ் பாணியில் பெரிய நான்வெஜ் அயிட்டங்களின் தட்டை நம் முன் வைத்து இதில் எது தேவை என்று லிஸ்ட் போட்டார்கள். சிக்கன் ப்ரை, மட்டன் சுக்கா, எறா தொக்கு ஆகியவை உணவுடனே வந்து விடும் என்றதால் ஒரு ப்ளேட் கோலா உருண்டை மட்டும் ஆர்டர் செய்தேன். பரபரவென அடுத்தடுத்தாய் உணவை வைத்துவிட்டு, குழம்பு என்ன வேண்டுமென கேட்க, மட்டன் குழம்பு என்றேன். நன்கு கெட்டியாய், நல்ல மிளகின் காரத்தோடு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டேன். மிகவும் நன்றாய் இருந்தது., அடுத்ததாய் சிக்கன் குழம்பு. மட்டனின் சிறப்பிற்கிடையே அஹா என்று சொல்ல முடியாவிட்டாலும் குட். அடுத்ததாய் மீன் குழம்பு. மீன் குழம்பில் புளிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வது வழக்கு என்றாலும் அதீத புளிப்பினால் கொஞ்சம் ஏமாற்றமே அளித்தது. கோலா உருண்டை நன்கு பெரிதாய் தான் இருந்தது. மட்டனின் எலும்புத் துண்டுகளில் இருக்கும் சிறு சிறு துளிகள் அதில் கலந்திருந்ததால் அவ்வப்போது பல்லில் இடறியதால் கொஞ்சம் எரிச்சல் வந்தது என்றாலும் நன்றாகவே இருந்தது.  ரசம் மிகச் சுமார் தான். மற்றபடி கொடுத்த சைட்டிஷ்களில் மட்டன் சுக்காவும் சிக்கன் ப்ரையும், மிக நன்று. எறா தொக்கு கொஞ்சம் வழக்கத்தை விட இனிப்பாய் இருந்தது. மற்றபடி தயிரின் புளிப்பு கொஞ்சம் ஓவரே.. கட்டங்கடைசியாய் ஒரு கேரட் அல்வா கொடுத்தார்கள். நன்று.  மதிய லஞ்சின் விலை மூன்று நான்வெஜ் கிரேவி, மற்றும் சைட் டிஷ்சோடு 475 ரூபாய். ஒரு மட்டன் கோலா 150, அதிகமென்று சொல்ல முடியாவிட்டாலும் திருப்தியான விலையென்று சொல்ல முடியவில்லை. நிச்சயம் ஒரு முறை ட்ரை செய்யலாம். டிவைன் வகைகளினுள் ஏதுவும் இல்லை என்பது வருத்ததுக்குரியதே.. 

Manjal 

17/4, Kasthuri Estate,

Gopalapuram 1st St, Poes Garden,

Chennai, Tamil Nadu 600018

opp to ente keralam

Oct 20, 2021

சாப்பாட்டுக்கடை - அப்புகுட்டி வெரைட்டி ரைஸ் - சாலிகிராமம்

கொரோனா எத்தனை விதமான அழிவை கொடுத்ததோ அதே அளவிற்கு புதிய நம்பிக்கைகளையும் கொடுத்துவிட்டுத்தான் போயிருக்கிறது. அதில் முக்கியமான சர்வைவல் நம்பிக்கை புதிய, சிறிய உணவகங்கள். கொரோனா காலங்களில் ஏகப்பட்ட சிறு, குறும் உணவங்கள், முக்கியமாய் பார்சல் மட்டுமே இருந்த காலத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்ட ஏழை, நடுத்தர குடும்பங்கள் உணவு தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். நிறைய சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் உணவு பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றி நடை போடுவதை கண் கூடாக பார்க்கிறேன். நொந்து நூலாகிப் போனவர்களையும் பார்க்கிறேன். இந்தக்கடை கொரானா காலத்தில் மிகப் பிரபலமாய் பேசப்பட்டது. குறிப்பாய் உதவி இயக்குனர்களுக்கு வருமானமில்லாத காலத்தில் அம்மா உணவகமும், கைவிட்ட நிலையில் சகாய விலையில் நல்ல தரமான உணவு கிடைத்தால் அதை விட வேறு என்ன வேண்டும்?.

சாலிகிராமம். அருணாசலம் ரோடு. ப்ரசாத் ஸ்டூடியோ வாசலில் ஒரு குட்டி யானை வண்டியில் இவர்களது விற்பனை ஆரம்பமானது. கொரோனா காலம் இவர்களை பிரபலப்படுத்தியது. முப்பது ரூபாய்க்கு நல்ல எலுமிச்சை புளிப்போடு சிக்கன் தொக்கு, முட்டை தொக்கு தருகிறார்கள் என்று கேள்விப்பட்டு பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டோம். அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் சிக்கன் தொக்கு. அதிக காரமில்லாமல், நன்கு வெந்த சிக்கன். மசாலா என சிறப்பாய் இருந்தது. சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம்,தக்காளி சாதம் என எல்லா சாதங்களும் வெறும் முப்பது ரூபாய்தான். ஒருவர் நிம்மதியாய் சாப்பிடும் அளவிற்கு தரமான சேர்மானங்களுடன். கூட தொட்டுக் கொள்ள இவர்களது வித்யாசமான காம்பினேஷன் சிக்கன் தொக்கு. முட்டை தொக்கு. நாற்பது ரூபாய்க்கு ஒரு வெஜ் ரைஸும் உண்டு. வெஜ் ரைஸும், சிக்கன் தொக்கு காம்பினேஷன் அட்டகாசம். அதே போல தயிர் சாதத்துடனான முட்டை தொக்கு. 
இவர்கள் காலை பதினோரு மணி முதல் மதியம் மூன்று மணி வரை மட்டுமே விற்பனை செய்கிறார்கள். சமயங்களில் அதற்கு முன்பே காலியாகிவிடும். பார்சல் மட்டுமே. விலை குறைவாக இருக்கிறதே என்று இவர்களின் தரம் குறித்து யோசனை செய்ய வேண்டாம். நிச்சயம் நான் கேரண்டி.

அப்புகுட்டி வெரைட்டி ரைஸ்
அருணாசலம் சாலை
ப்ரசாத் ஸ்டூடியோ அருகில்
சாலிகிராமம்
ph: 9840697808

Oct 12, 2021

சாப்பாட்டுக்கடை - கார்த்திக் டிபன் செண்டர்

அண்ணாநகர் ஏரியாவில் மிகப் பிரபலமான கையேந்திபவன் உணவகம். என்னது அண்ணாநகரில் கையேந்தி பவனா? என்று ஆச்சர்யப்படுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால் சென்னையில் உணவகங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டு வகை. உயர்தர ஸ்டைலிஷ் உணவகங்கள். மற்றொன்று நடுத்தர மக்களின் உணவகங்கள். முதல் லிஸ்டில் உள்ள உணவங்கள் அவர்களது ரெஸ்டாரண்டுகளை ஆரம்பிக்க விழையும் இடம் நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோடு. இரண்டாவது வகையினர் ஆரம்பிக்க விழையும் இடம் அண்ணாநகர், அதிலும் சாந்தி காலனி என்றால் அது மிகையில்லை. புதிது புதிதாய் உணவங்கள் தோன்றுவதும், மறைவதும் இந்த இரண்டு ஏரியாக்களில் மிக சகஜம். அப்படியான ஒரு ஏரியாவில் வருடங்களாய் மிகவும் பிரபலமான சைவ உணவகம். அதுவும் சைவ கையேந்திபவன் என்றால் அது இந்த கார்த்திக் டிபன் செண்டர் தான்.

கையேந்திபவன் என்று சொல்வதால் அதன் தரம் குறைவாக இருக்குமென்று நினைக்க வேண்டாம். பொடி, நெய் பொடி, பட்டர் பொடி, பட்டர் பொடி க்ரீன் பீஸ் மசாலா, பட்டர் தோசை, பட்டர் பொடி வடகறி, பட்டர் வடகறி, சுடச் சுட பொங்கல், கிச்சடி என காலை முதல் இரவு பதினோரு மணி வரை படு பிஸியான கடை தான் இந்த கார்த்திக் டிபன் செண்டர். 

தாராளமான நெய், மற்றும், பட்டர் போடப்பட்ட தோசைகள், அதற்கு காரம், தேங்காய், சாம்பார் வகைகள் என சுடச்  சுட கொடுக்கிறார்கள். அதிலும், பட்டாணி தோசை அட்டகாசம். பட்டருக்கும், நெய் தோசைக்குமிடையே போட்டி வைத்தால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல.. சகாய விலையில் நல்ல தரமான சைவ உணவு வேண்டுகிறவர்கள். கார் கொண்டு போனால் வாங்கி வந்து காரில் உட்கார்ந்து சாப்பிட முடியும். செல்ப் சர்வீஸ் தான். அல்லது நின்று கொண்டு சாப்பிட வேண்டும். இது மட்டும் தான் கொஞ்சம் வசதி குறைவான விஷயம். பட் ஒர்த். டோண்ட் மிஸ்.

Aug 31, 2021

Asst புராணம் -2

 அஸிஸ்டெண்ட் புராணம் -2

”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது.  படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான்.

“என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?”

“ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்மா இருக்காங்க.  ஒரு காலேஜுல வேலை செய்யுறேன். மாசம் 10 ஆயிரம் சம்பளம். எனக்கு சினிமால டைரக்டர ஆகணும். என்னால வேலை செய்ய முடியலை. என் நினைப்பு பூராவும் சினிமாவுலேயே இருக்கு. வேலைய ரிசைன் பண்ணிட்டு சினிமாவுல இறங்கலாமானு குழப்பமாவே இருக்கு. என்னை உங்க கிட்ட அஸிஸ்டெண்டா சேர்த்துக்கிறீங்களா? “ என்ற அவன் குரலில் ஆர்வமும், மரியாதையும் பொங்கி வழிந்தது. வழக்கமாய் இப்படி பேசுகிறவர்களிடம் ஒரு போலித்தனமான மாடுலேஷன் இருக்கும். அது அவனிடத்தில் இல்லை.

“வீட்டுல சம்பாரிக்கிற ஆள் நீ ஒருத்தன் தான்னு சொல்லுறே? வேலைய விட்டுட்டா அக்கா கல்யாணக்கடனையெல்லாம் எப்படி அடைக்குறது?. சினிமாவுல நீ மாசம் சம்பாரிக்கிற பணத்துக்கு எப்பவும்  கேரண்டி கிடையாது. அதுவும் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி”

“மாசம் ஒரு நாலாயிரம் தர மாட்டாங்களா சார்?”

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மாதம் பத்தாயிரம் சம்பாரிப்பவன் நாலாயிரம் வந்தால் கூட போதும் சினிமாவில் சேர வேண்டுமென்ற ஆர்வப்படுவது ஒன்றும் புதிதில்லை. சினிமா ஒரு விடாது கருப்பு. ஒரு முறை கால் வைத்துவிட்டால் எங்கேயாவது தொட்டுக் கொண்டே இருந்துவிட மாட்டோமா என்கிற போதையை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

“என்ன சொல்றதுனு தெரியலை. நான் வேலை ஆரம்பிக்கும் போது வேணும்னா கூப்பிடுறேன். நான் சம்பளம் இல்லாம கூப்பிட மாட்டேன். தொடர்புல இரு” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன்.

அதன் பிறகு என் தொடர்பில் இல்லாமல் இருந்தவன் என்னுடய படம் ஆரம்பித்து பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வந்தான். முன்பு பார்த்ததை விட ஆள் மிகவும் இளைத்திருந்தான். விசாரித்ததில் என்னைப் பார்த்த பிறகு சிறிது நாட்களில் வேலையை ரிசைன் செய்துவிட்டு ஒரு வளரும் இயக்குனரிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறான். அந்தப் படம் ஒரு மூன்றாம் நிலை காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து ஆரம்பிக்கப்பட்டு, எல்லா சினிமா வழக்கப்படி பாதி படத்தில் நின்றதோடு மட்டுமில்லாமல், ஷூட்டிங் சமயங்களில் ஒழுங்கான சாப்பாடு, பேட்டா, இப்படி ஏதுமில்லாமல் மொத்தப் பட்டினியோடு வேலை செய்திருக்கிறார்கள். இதில் எங்கே சம்பளம் பற்றி பேச?. மொத்தமாய் படம் நின்று போனதும் எல்லாரையும் அனுப்பிவிட, பையன் பாவம் நொந்து நூலாய்ப் போய் வந்திருந்தான்.

“சரி என்ன பண்ணப் போறே?”

“உங்க படத்துல ஏதாச்சும் வேலை?”

“இப்ப என் படத்துல ஆட்கள் இருக்காங்கப்பா.. அடுத்த படம் தான். அதுக்கு இது ஹிட்டாகணும்” என்று சிரித்தேன். அவன் சிரிக்கும் நிலையில் இல்லை.

“நான் ஒண்ணு சொல்லுறேன். உன்னை டிமோட்டிவேட் பண்ணச் சொல்லலை. நீ எம்.பி.ஏ படிச்சிருக்க. கொஞ்சம் அழுத்தி வேலை தேடினா கிடைச்சிரும். போய் எங்கயாச்சும் ஜாயின் பண்ணு”

“அப்ப என் சினிமா. “ என்று கேட்ட போது கிட்டத்தட்ட கண்களில் கண்ணீர் மல்கி நின்றிருந்தது.

“அது எங்கேயும் போகாதுடா தம்பி. போய் பைனான்ஸியலா கொஞ்சம் ஸ்டெபிலைஸ் ஆகு. தங்கச்சி கல்யாணம் எல்லாம் செட்டில் பண்ணு. என்ன சினிமா எடுக்கணும் அவ்வளவுதானே? எல்லா நாளும் சாயங்காலம் ஃபீரியாத்தானே இருக்கே?. கதை எழுது, படி, நல்லா படம் பாரு. உன் சினிமா அறிவை வளர்த்துக்க. சனி ஞாயிறுல ஷார்ட் பிலிம் பண்ணு. யூட்யூப் இருக்கு. உனக்கான டைம் வரும் போது நிச்சயம் அதுல அடையாளம் கிடைச்சி மேல வரலாம். நான் சொல்லுறது கஷ்டமாத்தான் இருக்கும். எத்தனையோ பேர் பெரிய ஆள் ஆகியிருக்காங்கனு லிஸ்ட் சொல்லலாம். ஆனா பெர்முடேஷன் காம்பினேஷன்ல பார்த்தா நீ தாங்க மாட்டேனு தோணுது. வறுமை உன்னை காலி பண்ணிரும். உன் டேலண்ட் வெளிய வரணும்னா உன்கிட்ட வறுமை இருக்கக்கூடாது” என்றேன்.

பதில் ஏதும் சொல்லாமல் போனவன். சில மாதங்களில் மீண்டும் வந்து சந்தித்த போது சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாய் சேர்ந்திருதான். மாதம் பதினெட்டு ஆயிரம் சம்பளம். என்றான். அக்கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு குறும்படம் எடுத்து வெளியீட்டுக்கு என்னை தலமை ஏற்று நடத்தித் தர சொன்னான். அந்தப்படம் முந்தைய படத்தைவிட பெட்டராய் இருந்தது. பின்பு அவ்வப்போது தொடர்பிலேயே இருந்தான். அடுத்தடுத்து நான்கைந்து குறும்படங்கள். ஒரு மியூசிக் விடியோ என்று வேலை பார்த்துக் கொண்டே எடுத்தான். விளம்பரப் படம் எடுக்க வாய்ப்பு வந்தது. திருமணம் ஆனது. மனைவி ஒரு போலீஸ்காரர். அவருக்கு ஏற்படும் இன்னல்களை அடிப்படையாய்க் கொண்டு எடுத்த ஒரு குறும்படம் மிகப்பெரிய ஹிட். இரண்டு குழந்தைகள்.

கொரோனா எல்லாரையும் புரட்டிப் போட்டதைப் போல இவனையும் புரட்டிப் போட்டது. நல்லவிதமாய். கொரோனா காலத்தில் திருச்சி ஏரியாவைச் சுற்றி பலகாரக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்த வடநாட்டவர்களை கொரோனா வெளியேற்றியதால் அதற்கு தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்து பட்சணங்கள் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்து சிறு தொழிலதிபர் ஆகியிருக்கிறான்.

சென்ற வாரம் என்னை வந்து சந்திக்க அனுமதி கேட்டான். எப்போதும் அப்படித்தான். கேட்காமல் வர மாட்டான். என்ன விஷயம் தம்பி? என்று கேட்ட போது, ‘நேர்ல சொல்லுறேன் சார்” என்று சொன்ன நேரத்திற்கு வந்து நின்றான். கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸும் கொய்யாக்களோடு. என்ன என்பது போல பார்த்தேன்.

“சார். நான் பிஹெச்டி வாங்கியிருக்கேன். டாக்டர் ஆயிட்டேன். அதுக்கு காரணம் நீங்கதான்” என்றான்.

“நான் சொன்னத கேட்டகணும்னு முடிவு பண்ணது நீதான். ஸோ..  நீதான் காரணம். எனக்கு க்ரெடிட் கொடுக்காத. மனசுக்குள்ள ஒரு பெரிய டைரக்டரை காலிப் பண்ணிவிட்டுட்டேனு கூட திட்டுவ இல்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“இல்ல சார். இப்ப இன்னும் நாலைஞ்சு வருஷத்துல யார் தடுத்தாலும் என்னால சினிமா பண்ணிர முடியும்னு நம்பிக்கை இருக்கு. கூட நீங்க இருக்கீங்க. அப்புறம் எனக்கென்ன கவலை” என்று கிளம்பினான் புஷ்பநாதன் ஆறுமுகம் என்கிற பெயருடய என்னிடம் வேலையே செய்யாத என் உதவி இயக்குனர். சமூகத்தின் மீதான கவலை அவனிடம் எப்போது இருந்து கொண்டே இருக்கும். அது   குறும்படங்களான கூர்வாள், காவல் தெய்வம் குறும்படங்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். சென்னை பசங்க என்கிற பெயரில் உள்ள மியூசிக் ஆல்பமும்  எனது Moviewood OTT தளத்தில் கிடைக்கிறது. பார்த்துவிட்டு வாழ்த்துங்கள்.

Asst புராணம்-1

Aug 29, 2021

Asst புராணம்.-1

அஸிஸ்டெண்ட் புராணம் -1

ஒரு இயக்குனருக்கு உதவியாளர்கள் அமைவது என்பது வரம். பல சமயம் நாம் அவருக்கு உதவியா இருக்கிறோமா? இல்லை அவர் நமக்கா? என்கிற சந்தேகம் வரும் அளவுக்கு உதவியாளர்கள் அமைவது உண்டு. ஒவ்வொரு உதவியாளரும் ஒவ்வொரு யுனிக் கேரக்டர்கள். அவர்களின் ஆட்டிட்டியூட், சினிமா, அது பற்றிய புரிதல் என எல்லாமே தனித்துவமாய்த்தான் இருக்கும். பெண்களை புரிந்து கொள்வதில் உள்ள அத்தனை பிரச்சனைகளும் இவர்களுக்கும் உண்டு. முதல் படத்திற்கு நான்காவது படத்திற்கிடையே இவர்களது தனித்துவமான விஷயங்கள் எல்லாம் உதிர்ந்து போய், வெறும் கூடாய் நிற்பவர்கள் அதிகம்.  சரி விஷயத்துக்கு வருவோம்.

வாரத்துக்கு நான்கு பேராவதுசார்.. உங்க கிட்ட வேலை செய்யணும். வாய்பிருந்தா சொல்லுங்கஎன்று இன்பாக்ஸிலோ, மெசேஜிலோ கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள். ஒரு கதையையோ, திரைக்கதையையோ, எழுதி முடிக்கும் வரை எனக்கு எப்போதும் உதவியாளர்கள் தேவையில்லை. முன்கள வேலை ஆரம்பிக்கும் போதுதான் உதவியாளர்களை அமைத்துக் கொள்வேன். தினம், டீ வாங்கி வருவதற்கோ, அல்லது வண்டியோட்டுவதற்கோ உதவியாளர்களை வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமே இருந்ததில்லை. அது மட்டுமில்லாமல் சம்பளமில்லாமல் யாரையும் நான் பணிக்கு அமர்த்திக் கொள்ள விரும்ப மாட்டேன். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், எத்தனையோ கனவுகளை ஏந்திக் கொண்டு அலைகிறவகளின் கற்பனையை தக்க வைத்துக் கொள்ளவாவது பணமும், உணவும் வேண்டுமல்லவா?.

 கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்களாய் ஒரு தம்பிசார் உங்க கிட்ட வேலை செய்யணும்என்று வழக்கம் போல கேட்டுக் கொண்டேயிருந்தார். நானும் அவரை இன்னும் ஏதும் வேலை ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் வெயிட் பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். இப்படியான தொடர் பாலோ அப்பில் பல பேர் காணாமல் போய் விடுவார்கள். அல்லது வேறு வேலை ஏதாவது கிடைத்துவிடும். அதன் பிறகு கால் செய்வது நின்று விடும். ஆனால் இந்த தம்பி அப்படியெல்லாம் இல்லாமல் நடுவில் வேறு படத்தில் வேலை கிடைத்து அந்தப் படத்தில் வேலைப் பார்க்கும் போது கூட தொடர்ந்து இந்த படம் முடிச்சிட்டு வந்திடறேன் சார். என்று மாதத்திற்கு ஒரு நாளாவது கால் செய்வார். அம்மாதிரியானவர்களை குறித்து வைத்துக் கொண்டு வேலைக்கு அழைப்பேன்.

சரியாய் இவ்வருட ஆரம்பத்தில் ஒரு ப்ராஜெக்ட் எல்லாம் உறுதி செய்யப்பட்டு மார்ச்சுக்கு மேல் படப்பிடிப்புக்கு போகலாம் என்று முடிவு செய்த நேரத்தில் தம்பியும் சரியாய் போன் செய்ய, வாடா தம்பி என்று அழைத்தேன். தம்பியும் வந்தார். கதைப் பற்றி பேசி இன்னும் சில வாரங்களில் வேலை தெடங்கும், என்று சொல்லி அனுப்பிவைத்தேன். “உங்க கிட்ட வேலை செய்யணும்னு ஆசைப்பட்டதே இதுக்குத்தான் சார். பாருங்க. என்னோட கதை டிஸ்கஸ் பண்றீங்க. என் கருத்துகளை சொல்ல சுதந்திரம் கொடுக்குறீங்க. அது எல்லா இடத்துலேயும் கிடைக்காது. கத்துக்க முடியாது. உங்க கிட்ட கத்துக்க நான் இத்தனை நாள் பாலோ பண்ணது வீண் போகல” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் தொடர்ந்து இம்மாதிரியான நேரடி பாராட்டுதல்களுக்கு பின்னான ரியாக்‌ஷன் பற்றி தெரிந்தவனாகையால் வடிவேலுவின் மீம் போல முகத்தை வைத்துக் கொண்டேன்.  

சில நாட்களில் கொரானா ரெண்டாம் அலை, லாக்டவுன் என்று எல்லா வேலைகளும் தள்ளிப் போனது. இதன் நடுவில் தம்பிக்கு காதல் திருமணம் ஏற்பாடானது. தம்பதி சமேதராய் வந்திருந்து நடத்திக் கொடுக்க அழைத்தார்கள். கொரோனாவினால் போக முடியவில்லை.

கொரானாவின் தாக்கம் வழக்கம் போல எல்லாவற்றையும் தள்ளிப் போட்டு விட, மீண்டும் வேலை தொடங்கலாம் என்கிற போது தம்பியை அழைக்க நினைத்த அதே நாளில் தம்பி போன் செய்தான். அட செம்ம சிங்குல இருக்காபுல.. என்று நினைத்துக் கொண்டேன்.

இம்முறை வேறு கதை. வேறு ப்ராஜெக்ட் என்பதால் அவரிடம் நாவலைக் கொடுத்து  படித்துவிட்டு ரெண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னேன். வந்தார்.

“படிச்சீங்களா?”

“இல்லை சார்.. எனக்கு தமிழ்ல அத்தனை சீக்கிரம் படிக்க வராது. என் வைஃப் படிப்பாங்க. அவங்க படிச்சி சொல்லச் சொல்லியிருக்கேன்” என்றார்.

“சரி படிச்சிட்டு வாங்க. அப்பத்தான் நாம பண்ணப் போற கதை அதன் பின்புலம் பற்றி பேச முடியும்’ என்று சொல்லி கிளம்பச் சொன்னேன்.

“சார்.. ஷூட்டிங் எப்ப இருக்கும்?” என்று ஆர்வமாய் கேட்டார்.

நான் ஒரு மாதத்தை குறிப்பிட்டு “அப்ப ஸ்டார்ட் ஆக ப்ளான். சினிமா உங்களுக்கு தெரியாதா? திடீர்னு உடனே கூட ஆரம்பிக்கலாம்.  நீங்க வர்ற மாசம் வேலையில ஜாயின் பண்ணிருங்க.” என்று சொல்லிவிட்டு, குறைந்த பட்சம் பத்தாயிரம் என்னால் உறுதியாய் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி கொடுக்க முடியும். என்றேன்.

தம்பி சிறிது நேரம் யோசித்தார். “சார்.. டெய்லி பேட்டா?”

“அது ஷூட்டிங் போதுதான் தம்பி”

“ஒரு ரெண்டாயிரம் எக்ஸ்ட்ரா வாங்கித் தர முடியுமா?”

“நீங்க வந்து ஜாயின் பண்ணுங்க. பேசி வாங்கித் தரப் பாக்குறேன்” என்றேன். முதல் படத்தில் கடைசி பல மாதங்கள் சம்பளமில்லாமல் தான் வேலைப் பார்த்திருந்ததாய் சொல்லியிருந்தார்.

“சரி சார்.. நான் ரெண்டு நாள்ல படிச்சிட்டு வந்திர்றேன்” என்று கிளம்பினார்

“தம்பி வேலைக்கு வர மாட்டாப்ல” என்றேன் என் அசோஸியேட்டிடம்.

“அப்படியா சொல்றீங்க?. தம்பி உங்க கிட்ட கத்துக்கணும்னு ஆர்வமா இருக்காப்புல. ஒரு ரெண்டாயிரம் சம்பளத்துல என்ன வந்திரப் போவுது?” என்று சந்தேகமாய் கேட்க, “இல்லைங்க அவரு வர மாட்டாரு” என்று உறுதியாக கூறினேன். இன்றுடன் இரண்டு மாதங்களாகிவிட்டது. அன்று போனவர் இன்று வரை நான் வேலைக்கு வரவில்லை என்று கூட போன் செய்யவில்லை.  நான் சொன்னேனில்லையா? அஸிஸ்டெண்டுகள் தனித்துவமானவர்கள். அவர்களை அத்தனை சீக்கிரம் கணிக்கவே முடியாதென்று. 

Asst புராணம் -2

Apr 24, 2021

பெர்முடா - விமர்சனம் -5



 #பெர்முடா விமர்சனம்#5

ரமணா படத்துக்கு ஏன் விஜய்காந்தை தேர்ந்தெடுத்திங்கங்கன்னு முருகதாசை கேட்டப்ப "கிளைமாக்ஸ்ல எல்லா ஸ்டூடன்ட்ஸயும் பாத்து மெசேஜ் சொல்ற மாதிரி ஒரு சீன், அதை சொல்ல சில நடிகர்களுக்கு மட்டும்தான் மாஸ் இருக்கு, கேப்டன் அதுல முக்கியமானவர். அந்த சீனுக்காகத்தான் அவரை முடிவு பன்னேன்" னு சொல்லிருப்பார்.
ஒரு வசனத்தை யார் சொன்னா நல்லாருக்கும்ங்கற மாதிரிதான், சில கதைகளையும் சிலர் சொன்னாதான் நல்லாருக்கும். சிலரால மட்டும்தான் அந்த கதைகளை சொல்லவே முடியும்.
பெர்முடா முக்கோணத்தை பத்தி கேள்விப்பட்டுருப்போம். பக்கத்துல போன எவனுமே தப்பிக்க முடியாது, உள்ள இழுத்துரும். காரணமே புரியாம காணாம போனவங்க அதிகம். அதே மாதிரி ஆம்பளைங்க தொலைஞ்சு போற இன்னொரு முக்கோணம் இருக்கு. அதுக்கும் பெர்முடாவுக்கும் கூட சம்பந்தமிருக்கு.
சரி கதைக்கு வருவோம். களம்னு பார்த்தா பொருந்தா காமம்.
அறுபது வயசு வரைக்கும் பொண்டாட்டி தமயந்தி பேச்சை தட்டாம காதலையோ காமத்தையோ வகையா அனுபவிக்காத சாம்பசிவராவ் வாழ்க்கைல எதிர்பாராத விதமாக அவர் இத்தனை நாள் தவறவிட்டதெல்லாம் கிடைக்க ஆரம்பிக்குது
பொண்டாட்டிக்கு உடம்பு சரியல்லாம இருக்கற சூழ்நிலைல தன்னோட நீட் கோச்சிங் செண்டர்ல படிக்க வர திவ்யா கூட அம்பது வயசு ராமசுப்புக்கு தொடர்பு ஏற்படுது
தமிழ் சினிமால உச்சத்துல இருக்க இயக்குனர் சுரேஷ்வர்க்கு அறிவும் திறமையும் இருக்க நித்யாங்கற இளமையான பொண்ணோட நட்பு கிடைக்குது.
இந்த மூணு கதைகள்லயும் பொதுவான விசயம்னா ஆணுக்கு வயசு அதிகம். பெண்ணுக்கு பாதிக்கும் கீழ. அவங்க மூணு பேர் வாழ்க்கைலயும் பெண்கள் வராங்கங்கற மாதிரி தோணும். ஆனா பெண்களாத்தான் விரும்பி அதை செயல்படுத்துவாங்க.
ஆம்பளைங்கறவன் வெறும் அட்டைக்கத்தித்தான். அவன் என்ன செய்யனும்னு முடிவு பன்றது ஏதோ ஒரே விதத்தில் ஒரு பெண்ணாதான் இருக்க முடியும். அதிகமாக அதுல காமம் பெரும்பங்கு வகிக்கும்.
நிஜமா Cable Sankarக்கு எங்கே இருந்து இந்த மாதிரி கதைகள் கிடைக்குது? உண்மையிலேயே பார்ல உக்காந்து இத்தனையும் சொல்லுவாங்களா? இந்த மாதிரி மெடிக்கல் சீட்டுக்காக இல்லை இன்ஜினியரிங் சீட்டுக்காக தன்னை கொடுத்த பெண்ணை பாத்துருக்கேங்கறதால எனக்கு இது யதார்த்தமாதான் பட்டுச்சு.
வழக்கம்போல சுரேஷ்வர்-நித்யா போர்ஷன் செம. அது மாதிரி ராயலா கொஞ்ச நாளாவது அனுபவிச்சுடனும்.
என்ன சொல்ல? சங்கரோட கதைகளை படிக்க கொஞ்சமாவது நடப்புலகத்துல இருக்கனும், இல்லைன்னா இப்படில்லாம் எங்காவது நடக்குமான்னுதான் கேள்வியெழும்.
பொண்டாட்டி நாவலை எப்படி எல்லா பெண்களும் படிக்கனும்னு சொல்றனோ அது மாதிரி பெர்முடா நாவலை எல்லா ஆண்களும் கட்டாயம் படிக்கனும்
நன்றி Kathir Rath

Bermuda  Kindle link https://amzn.to/3mQCgxA

Bermuda Book Link: https://amzn.to/3lRilx0

Apr 23, 2021

24 சலனங்களின் எண்.விமர்சனம்-10



 பு(து)த்தகம் -

24 - சலனங்களின் எண்
ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும்
இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர்.

ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது. நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில். ஒரு திரைப்படம் உருவாக எத்தனையோ பேர் உழைப்பு காரணமாகிறது.கஷ்டபட்டு உருவாக்கிய திரைப்படம் திரைக்கு வராமலே முடங்குவதால் எத்தனையோ பேரின் உழைப்பும் திறமையும் வீணாகி போய்விடுகிறது.அதை விரிவாய் நாவலில் விறுவிறுப்புடன் படிக்க சுவாரஸ்யத்துடன் எழுதி இருக்கிறார். இந்த நாவலில் வரும் இயக்குநர் ராம்ராஜ் அத்தியாயங்கள் ஒரு விக்ரமன் படம் பார்த்தது போல் இருக்கிறது. அவ்வளவு அருமை.சோக காட்சிகள் வந்தால் எப்படி தொண்டையை துக்கம் கவ்வுமே, அது மாதிரி அவரது அத்தியாயங்கள்.கடைசி கிளைமாக்ஸில் ஒரு திரைப்படம் பார்த்த விளைவு.

படிக்க படிக்க செம இண்ட்ரஸ்டிங்கான நாவல்.திரையுலகில் திரைக்கு பின்னால்
நடக்கும் சம்பவங்களை ஒளிவுமறைவின்றி சொல்லி இருக்கிறார் நாவலின் இயக்குநர்.இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான்.நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் வாக்கிய எழுத்துப் பிழைதான்.தமிழை தப்பாகவே எழுதி இருந்தாலும் படித்துவிடக்கூடிய நிலையில் இருந்தாலும், எழுத்துப்பிழை இருப்பதால் கவனம் சிதறுகிறது. அதையும் தாண்டி இந்த நாவல் படிக்க படிக்க நன்றாகவே இருக்கிறது.
இந்நாவலை படித்து முடிக்கையில் வெள்ளித்திரை படம் கண்ணுக்கு முன்னால் வந்து செல்கிறது. வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்.
நன்றி கோவை நேரம்.

Apr 12, 2021

பெர்முடா - விமர்சனம்-4

 


Reviewed in India on 10 November 2019
Cable Shankar is a gripping writer with so much passion that reflects in his writing. A very easy language employed to make The readers experience the writing with more images of their own. He is a "go-to" and a very important writer of the present generation.

Bermuda  Kindle link https://amzn.to/3mQCgxA

Bermuda Book Link: https://amzn.to/3lRilx0