Thottal Thodarum

Jun 30, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -12

சினிமா அவ்வளவுதான் இனி அது மெல்லச் சாகும் என்று சொல்லும் போதெல்லாம் ஓர் புதிய டீம் வந்து எல்லாவற்றையும் தலைகீழாய் போட்டு புரட்டி புத்துயிர் கொடுத்துவிடும். ஒரு தலை ராகம், புது வசந்தம், சேது, காதல், பீட்சா, என பெரிய லிஸ்டே இருக்கிறது. அது போலத்தான் சினிமாவை நம்பி வரும் புதியவர்களும். புதியவர்கள் என்றவுடன் இளைஞர்கள் என்று தோன்றினால் அது தவறு. சினிமாவில் எந்த அளவிற்கு இளைஞர்கள் வருகிறார்களோ அதே அளவிற்கு 50ஐ கடந்தவர்களின் வரவும் அதிகம்.

அந்த காலத்துல எம்.ஜி.ஆரே 40க்கு மேலத்தான் வந்து ஜெயிச்சாரு. எனக்கு என்ன 45 ஆறது. அட்லீஸ்ட் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆயிட மாட்டேனா? என்ற நம்பிக்கையோடு தினம் ஒவ்வொரு ஆபீஸாய் ஏறி, தன் போட்டோவை கொடுத்துவிட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டரை கைக்குள் போட்டுக் கொள்ள மாதத்தில் ஒருவர் என முறை வைத்து சரக்கடித்து, நட்பு கொண்டாடி, சரக்கின் நன்றிக்காக, அவர் கோ டைரக்டரிடம் அறிமுகப்படுத்திவிட, சிகப்பாய் இருந்தால்  கோயில், கல்யாணம், ஆபீசர், கொஞ்சம் வசனம் பேச வரும் என்றால் டாக்டர் போன்ற கேரக்டர்கள் கிடைக்கும். இப்படி பல லாபி செய்து கிடைக்கும் வாய்ப்பை டயலாக் ஒழுங்காய் பேசாத காரணத்தால், பணால் ஆகிப் போன சம்பவங்கள் இவர்களுக்கு ஏராளம்.அப்படி ஒரு முறை வாய்ப்பு போனால் மீண்டும் டயலாக் வாய்ப்பு வருவது என்பது மிகவும் கஷ்டம் தான் அந்த டைரக்‌ஷன் டீமைப் பொருத்தவரை.

தமிழ்நாட்டில் இருக்கும் ஆண் பெண்களிடம் உங்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தால் ஓகேவா? என்று கேட்டால் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் பேர் தலையாட்டுவார்கள். எப்படிங்க அவ்வளவு தைரியமா சொல்லுறீங்க? என்று கேட்டோமானால், சமீபத்தில் மிகச் சாதாரணமாய் வந்து மிக பெரிய இடத்தை அடைந்த ஹீரோக்களின் பெயரைச் சொல்லி, நான் அவனை விட ஸ்மார்ட்டா இல்லை ரெண்டு படம் நடிச்சா நமக்கும் நடிப்பு வந்திரப் போவுது என்பார்கள்.

மிடில் ஏஜ் கேரக்டர்களில் நடிக்க எப்பவுமே சினிமாவில் ஆட்கள் தேவைதான். போலீஸ், ஏட்டு, குருக்கள், அய்யர், ஆபீஸர்ஸ், கலெக்டர், ஜட்ஜ், டாக்டர் என டிமாண்ட் அதிகம். அப்படிப்பட்ட கேரக்டர்களில் புதியதாய் வந்து வாய்ப்புகள் கிடைத்து நல்ல நடிகர்களாய் ஜெயித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதை விட அதிக அளவில் தோல்வியடைந்தவர்களும் உண்டு.  பெரும்பாலும், செய்யும் தொழில் நஷ்டமடைந்தவர்கள், கம்பெனி லாஸ் ஆகி வேறு வேலைக்கு போக முடியாதவர்கள். என ஒரு புறம் வாழ்க்கையில் தோற்றவர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம்  கொஞ்சம் வசதியாய் காரோ, பைக்கோ வைத்துக் கொண்டு, சுய தொழில் ஒன்றை செய்து கொண்டே நடிப்பையும் ஒரு கை பார்க்க முயல்கிறவர்கள். இரண்டு வகையான ஆட்களில் இரண்டாம் வகை ஆட்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே வாய்ப்புகள் கிடைக்கும். ஏனென்றால் பொருளாதார சுதந்திரம். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் உடனடி உதவி இயக்குனர்களின் தொடர்பும், நட்பின் காரணமாய் சின்னச் சின்னக் கேரக்டர்களில் வாய்ப்பு கிடைத்து சட்டென ரெண்டொரு சீன்களில் நடிக்க வாய்ப்பை பெற்று விடுவார்கள்.

ஆனால் முதல் வகை ஆட்களுக்கு அப்படியான வாய்ப்பு வருவது அப்படி சுலபமல்ல. தொடர்ந்து அலைய வேண்டும். ஏஜெண்டுகள் மூலமாய் கூட்டம் கூட்டமாய் வரும் காட்சிகளில் போய் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாய் வலம் வந்து அங்கே அவர்களின் கட்டிங் போக கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்கிற நிலையின் காரணமாய் இரண்டாம் நிலை ஆட்கள் போல நேரடியாய் உதவி இயக்குனர்கள் தொடர்பின் மூலமாய் வாய்ப்பை பெற செலவு செய்ய முடியததால் கேரக்டர்கள் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்படி கிடைக்கும் வாய்ப்பு ஒர் மெடிக்கல் மிராக்கிள் தான்.

நண்பர் ஒருவர் ஜூனியர் ஆர்டிஸ்டாய் வலம் வந்து கொண்டிருந்தவர். தீடீரென காலையில் ஒரு கால். “சார்.. உடனே வாங்க லொக்கேஷனுக்கு ஒரு த்ரூஅவுட் ரோல் வாய்ப்பு.” என்று உதவி இயக்குனர் சொன்னதும் “பெருமாளே.. கண்ணைத் தொறந்திட்டே..” என்று பதட்டத்துடன் போய் சேர்ந்தார். ஏற்கனவே ஷூட்டிங் ஆரம்பித்திருந்தது. டைரக்டரின் நண்பர் ஒருவரைத்தான் அந்த கேரக்டருக்கு பிக்ஸ் செய்திருக்க, அவர் ஏனோ வரவில்லை/ அவருக்கு பதிலாய்த்தான் இவருக்கு அழைப்பு. அவசர அவசரமாய் கமிஷனர் உடை போடப்பட்டு, வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்தாயிற்று. நண்பருக்கு பதட்டமாய் இருந்தாலும், பெரிய நடிகர்கள் காம்பினேஷன். நிச்சயம் படத்தின் நீளத்திற்காக குறைக்கபட முடியாத காட்சி என்று காட்சியின் வசனத்தை படிக்கும் போதே அவருக்கு தெரிந்தது. சட்டென மனதில் வாங்கிக் கொண்டு, தயாரானார்.

“சார். சொதப்பிறாதீங்க” என்று உதவி இயக்குனன் காதை கடித்துவிட்டுப் போனான். இவருக்கு பதட்டமாய் இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் தயாரானார். ஷாட்டுக்கு முன்னால் ஒரு மானிட்டர் பார்க்க தயாரானார்கள். முக்கிய நடிகர்கள் காம்பினேஷனில் காட்சி விவரிக்கப்பட்டு, மானிட்டர் ஆரம்பிக்க, நண்பரின் முறை வந்ததும் சொல்லிக் கொடுத்தது போல நான்கு வரி டயலாக்கை நல்ல மாடுலேஷனோடு சொல்லி முடித்தார். இயக்குனர். சந்தோஷமாய் கை தட்டி குட் என்று சொல்லிவிட்டு டேக் போகலாமா என்ற போது. பரப்ரப்பாய் ஒருவர் உள்ளே நுழைந்தார்.  இயக்குனரிடம் கொஞ்சம் நெருக்கமாய் நின்று தயக்கமாய் ஏதோ காதோரமாய் சொல்ல, இயக்குனர் நண்பரையே பார்த்தபடி அவருடன் பேசி முடித்தபின் உதவி இயக்குனரைப் பார்த்து “பிரபா.. சாருக்கு கமிஷனர் ட்ரஸைப் போட்டுட்டு, இவரை இன்ஸ்பெக்டராக்கிருங்க” என்று கேமராமேனிடம் ஷாட் விளக்க போய்விட்டார். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. உதவி இயக்குனர் அருகே வந்து “அன்லக்கிசார்.. நீங்க. .இவனுக்கு பதிலாத்தான் உங்களை இங்க போட்டேன். அவனே திரும்ப வந்திட்டான் டைரக்டருக்கு ரொம்ப க்ளோஸு அவன்” என்று அவர் ட்ரெஸ்ஸில் உள்ள கமிஷனருக்கான ஸ்டார்களை கழட்ட காஸ்ட்யூமரிடம் சொல்லிவிட்டு, கிளம்பினார். அன்றைய ஷூட்டிங் தான் நண்பர் நடித்த கடைசி படம்.

Jun 22, 2018

கொத்து பரோட்டா 2.0-59


சென்சார் எனும் கொடுங்கோலன்.
ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதனால் தான் அதற்கு பேர் டெலிவரின்னு வச்சிருக்காங்க என்று நடிகர் சத்யனின் அப்பா அடிக்கடி சொல்லுவார். இன்றைய தேதிக்கு நிலைமை மிக மோசம். தயாரிப்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு நிலையை தாண்டி வருவது என்பது அசாத்யமான விஷயமாகிக் கொண்டிருக்கிறது. இதில் முக்கியமான நிலை சென்சார். ஏற்கனவே சென்சாருக்கும் நம் திரையினருக்குமிடையே பல விதமான வேறுபாடுகள். பிரச்சனைகள். ஹிந்தி படத்தில் காதலர்கள் கிஸ்ஸடித்தால் “யூ”. அதே நம்மூரில் அடித்தால் “ஏ” என பலவிதமான கலாச்சார வழிகாட்டிகளோடு சிறப்பாக செயல்படுகிறவர்கள் நம்மூர் சென்சார் போர்ட் ஆட்கள். இதில் பெரிய படத்தில் கெட்ட வார்த்தை, டபுள் மீனிங், ரத்தகளறியாய் காட்சி வைத்தாலும் முன்பிருந்த வரிவிலக்கிற்காக “யூ” கொடுப்பார்கள். எவனாவது சின்ன தயாரிப்பாளர் கொஞ்சமே கொஞ்சம் ரத்தம் தூரத்தில் தெளித்தார்ப் போல காட்டினால் கட்டுடன் ‘ஏ” கொடுப்பார்கள். இப்படியான ஓரவஞ்சனைகளை பற்றியும், இவர்கள் தின்றே தீர்க்கும் டிபன் வகையராக்கள் பற்றியும் எழுத நிறைய இருந்தாலும் இன்றைய தயாரிப்பாளர்கள் தலையாய பிரச்சனையாய் உருவாகியிருக்கும் சென்சாருக்கு அப்ளை செய்யும் விஷயத்தைப் பற்றிப்  பேசியே ஆக வேண்டும்.

முன்பெல்லாம் நமக்கு சென்சார் ஸ்கிரிப்ட் எழுதும் ஆட்களிடம் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்தால், அவர்களே சென்சார் போர்ட் ஆட்களை தொடர்பு கொண்டு, அதற்கான தொகையை கட்டி, ஸ்க்ரீனிங் ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள். படம் பார்த்த பிறகு நமக்கும், சென்சார்போர்ட் மெம்பர்களுக்குமிடையே நடக்கும் கந்தாயங்கள் தனிக்கதை.  இதை கம்ப்யூட்டர்மயமாக்குகிறோம் என்று மத்திய அரசு முடிவு செய்து ஈ.சினிரமா எனும் இணைய தளம் மூலமாய் மட்டுமே சென்சாருக்கு அப்ளை செய்ய முடியும் என்று சொன்னார்கள். இனி வரும் நாட்களில் எல்லாமே வெளிப்படையாய் இருக்கும். யார் யார் எப்போது அப்ளை செய்கிறார்களோ அந்த வரிசைப்படிதான் சென்சார் ஆகும். தயாரிப்பாளர்களுக்கு தங்களது நிலை என்ன என்பதை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிய படுத்தி நேரடி தொடர்பை ஏற்படுத்துவதால், மிடில் மேன்களின் உதவி இல்லாமலேயே வேலை சுலபமாய் முடிந்துவிடும் என்றார்கள். அட நல்ல விஷயமாய் இருக்கிறதே என்று பல சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சந்தொஷப்பட, பொங்கலுக்கு ரிலீஸ் என்று முடிவு செய்துவிட்டு, கொட்டுவாய் வரை ப்ரீ ப்ரொடக்‌ஷனில் வைத்துக் கொண்டு, கடைசி நேரத்தில் இன்ப்ளூயன்ஸ் மூலமாய் உடனடி சென்சார் செய்து பழக்கப்பட்ட மிகச் சிறு பெரிய தயாரிப்பாளர்களுக்கு துக்கமாகவும் இருந்தது.

ஆனால் பிரச்சனை பெரியவர்கள் சிறியவர்கள் என்றில்லை. அனைவருக்குமான பொது விஷயமாய் சைட் ப்ரச்சனை மூலம் ஆர்மபித்தது. இந்தியா முழுவது தயாரிப்பாளர்கள் சென்சாருக்காக ஒரே நேரத்தில் மொத்தமாய் ஆயிரம் பேருக்கும் மேல் லாகின் செய்ய வாய்ப்பில்லாத ஒரு சைட், பாதி நேரம் ஐ.ஆர்.டிசி சைட்டை விட படு மோசமாய் தொங்கிப் போய் நிற்கும். அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி ரேஞ்சுக்கு சபதத்தோடு, தொடர் முயற்சியில் வெற்றிபெற்றால் முதல் பக்கத்தை படித்து விட்டு, அடுத்த பக்கத்தை தொட்டால் எரர் மெசேஜ் வந்து நிற்கும். சரி டீத்திங் ப்ராப்ளம் என காத்திருந்து பல புகாருக்கு பிறகு கொஞ்சம் ஓக்கே வானால், அடுத்த பிரச்சனை ஆதார் நம்பருடன் இணைந்த மொபைல் நம்பர் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்   என்பது போன்ற சீரிய விதிகளை பாலோ செய்து. அவர்கள் கேட்டிருக்கும் தரவுகளை டிஜிட்டல் டேட்டாவாக மாற்றி அப்லோட் செய்தால், அதன் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். அது வந்தவுடன்  மீண்டும் பகீரத பிரயத்தனங்களுடன் லாகின் செய்து பார்த்தால் தான் நம் அப்ளிக்கேஷன் நிலை தெரியும்.

ஒரு வழியாய் எல்லா கந்தாயங்களையும் முடித்து சென்சாருக்கான தொகையை ஆன்லைன் ட்ரான்ஸ்பர் செய்யும் வசதிக்கு க்ளிக் செய்தால் அது வேலை செய்யாது. இல்லை அந்த பக்கத்திலிருந்து கல்லுளிமங்கன் போல நகரவே நகராது. சரி இதை பர்றி நம் இடைத்தரகரிடம் கேட்டால் ஆயிரத்து சொச்ச மார்க்கு வாங்கியும் “நீட்”டில் பாஸ்சாக முடியாதவர் போல விழிப்பார். ஆர்.ஓவிடம் சொன்னால் கால் டைவர்ட் ஆகி, அங்கிருக்கும் அடுத்த நபருக்கு செல்லும். அவர் அப்படியா? ஒர்க் பண்ணலையா? ஆவுமே சார்.. நல்லா பாருங்க என்பார். எத்தனை முறை கேட்டாலும் அவர் ஏதோ கம்ப்யூட்டர் விற்பனர் போலவும், நமக்கும் அதற்கும் ஸ்நானப் ப்ராப்தியும் இல்லாதவர்கள் போலவும் பேசுவார். பெங்களூரிலிருந்து நான் லாகின் செய்தேன் என்று சொன்னதற்கு நீங்க உங்க கம்பெனிய சென்னையில வச்சிட்டு ஏன் பெங்களூர்ல லாகின் பண்ணீங்க? என்ற கேள்வி கேட்கும் அலவிற்கு விற்பனர் அவர். பின்பு நம் பின்புலத்தையும் கம்ப்யூட்டர் அறிவையும், ஆற்றலையும் விளக்கி சொன்னால், கொஞ்சம் பம்மி. “அதுக்கு நீங்க பாம்பே கால்செண்டருக்குத்தான் காண்டேக்ட் பண்ணனும்” என்பார். 

பாம்பே கால் செண்டர் என்பது “ஏக் காவ் மே ஏக் கிஷான் ரஹதாத்தா” ரேஞ்ச் தான் கிந்தி தெரியாவிட்டால் மொத்தமும் போச்சு, ஏற்கனவே லைன் கிடைக்க, அரை மணி நேரம் ஆகும். அத்தனைக்கும் மீறி காளியாத்தா, மாரியாத்தாவையெல்லாம் வேண்டிக் கொண்டு, இங்கிலீஷ் பேசுறவன் வரணும் என்கிற வேண்டுதல் பலித்தால் நல்லது. அல்லது மீண்டும் முதலிலிருந்தே ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஒரு வழியாய் லைன் கிடைத்து நம் பிரச்சனையை எல்லாம் சொல்லி புரியவைத்தால், அங்கேயும் “அப்படியா.. சரியா செக் செய்தீர்களா? ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து அனுப்புங்களேன்?” என்பது போன்ற ஹெல்புகள் மட்டுமே முதலில் கிடைக்கும். அவர்களின் மெயில் ஐடிக்கு எல்லாவற்றையும் அனுப்பிவிட்டு காத்திருந்தால் பதில் மெயில் வரும் என்று எதிர்பார்பது பேராசை. எனவே மீண்டும் கால் செண்டர். அவர்கள் இம்முறை ஆமாம் சர்வர் பிரச்சனை என்று ஒத்துக் கொண்டு, காலையில ட்ரை பண்ணுங்க, இல்லாட்டி நடுராத்திரி ட்ரை பண்ணுங்க என்பார்கள். நான் ஏன் நடுராத்திரியில சுடுகாட்டுக்கு போகணும் என்று கேட்க நினைத்தாலும் முடியாது.  ஆன்லைன் இல்லாட்டி என்ன அதான் ஆப்லைனில் பணம் கட்டலாமில்லை என்று நம்மூரில் கேட்டால் “அதெல்லாம் வாங்க கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க சார் “ என்கிறார்கள். அப்புறம் என்ன எழவுக்கு ஆப்லைன் ஆப்ஷன் என்றே தெரியவில்லை.

இப்படி எல்லா இம்சைகளையும் தாண்டி ஒரு வழியாய் சர்வர் கிடைத்து, பணம் கட்டி, க்யூவில் நின்று, எஸ்.எம்.எஸ் மூலமும், மெயில் மூலமும் பணம் கிரெடிட் ஆனதாய் வந்த பின்புதான் நமக்கு நிம்மதி வரும். பிறகு சென்சார் நடக்கவிருக்கும் தேதிக்கான காத்திருப்பு. நீங்க உங்கள் கண்டெண்டை லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவிப்பு வந்த மாத்திரத்தில் லோட் செய்து வைத்தால். நாளை காலையில் சென்சார் என்றால் முதல் நாள் நடு ராத்திரிக்கு கொஞ்சம் முன்னே நாளைக்கு காலையில் சென்சார் என்று லோக்கல் ஆர்வோ மெசேஜ் அனுப்புவார்.  ஒரு வழியாய் அடித்து பிடித்து தியேட்டரை கன்பார்ம் செய்து சென்சாரை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.

தரகர்களை வைத்து, பேரம் பேசி, லஞ்ச லாவன்யத்தை வளர்பதை தவிர்க்கத்தான் இந்த ஆன்லைன் விஷயம் ஆரம்பத்தில் டீத்திங் ப்ராப்ளம் இருக்கத்தானே செய்யும் என்பீர்களானால் கிட்டத்தட்ட நானகைந்து மாதங்கள் ஆகிவிட்டது. இன்றைக்கும் இதே நிலை தான் இந்த இணையதளத்தில் நிலை. அதே நிலைதான் நம்மூர் ஆட்களின் உதவும் அறிவும்.

எல்லாவற்றுக்குமே பாம்பேயிடமிருந்துதான் மெசேஜ் வரணுமென்றால் எதற்காக ரீஜினல் சென்சார் அலுவலகம்?. இன்றைய தேதியில் பெரும்பாலனவர்களுக்க் அடிப்படை கம்யூட்டர் அறிவு படித்தவர்களுக்கு இருக்கிறது என்றாலும் இம்மாதிரி பிரச்சனைகளின் போது கால் செண்டரை அணுகி தெளிவு பெற ஹிந்தியோ, ஆங்கிலமோ சரளமாய் பேசத் தெரிந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை நோக்கி போக முடியுமென்பது எப்படி எல்லோருக்கும் சாத்தியம்?. பேமெண்ட் கேட்வேயில் உள்ள பிரச்சனையை இத்தனை தொடர் புகார் மின்னஞ்சல்களுக்கு பிறகும் சரியாகவில்லை என்றால் யாரைத்தான் அணுகுவது?. இத்தனை பிரச்சனை இருக்கும் பட்சத்தில் ஏன் ஆப்லைன் ஆப்ஷனான ட்ராப்ட், செக் போன்ற வகைகளில் பணம் பெற ஏன் மறுக்கிறார்கள்?. தயாரிப்பாளர்களுக்கு ஏன் ரெண்டு தினம் முன் அவர்களதுபட சென்சார் விஷயமாய் தகவல் வருவதில்லை?. சென்சார் நடந்து முடிந்த பின் உங்களது படம் இன்றைக்கு சென்சார் என்று மெயில் அனுப்பவது எந்த வகையில் திறமையான மேனேஜ்மெண்ட்?.

இத்தனை கேள்விகளுக்கு ஒர் சிறிய,சீரிய முயற்சியாய் அவர்களது சர்வரையும், பேமெண்ட் கேட்வேயும் சரியாகும் வரை ஆப்லைனில் செயல்பட அனுமதித்தால் பல தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியாய் இருக்கும். ஸ்டரைக், சிறிய படங்களுக்கு திரையரங்கு கிடைக்காமை, ஜி.எஸ்.டி, லோக்கல் டேக்ஸ், அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலை என பல பிரச்சனைகளை, வட்டி சுமைகளை வைத்துக் கொண்டு, ஆயிரம் பிரச்சனைகளோடு படத்தை தயாரித்து வெளியிட வரும் தயாரிப்பாளர்களை அட்லீஸ்ட் பத்து நிமிடத்திற்கு கிட்டத்தட்ட ரெண்டாயிரம் ரூபாய் பணம் சென்சார் பீஸாய் கட்டி, அவர்கள் பார்ப்பதற்கான அரங்குக்கு பணம் கட்டி, அவர்களது டிபன், காப்பி, சாபாட்டு செலவுக்கு பணம் கொடுத்து கிட்டத்தட்ட 50-1 லட்சம் ரூபாய் செலவு செய்ய காத்திருக்கும் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?.

Jun 18, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா ? -10


சாட்டிலைட், டிஜிட்டல், இந்தி, தெலுங்கு, என பல விதமான வியாபாரங்கள் ஒரு சினிமாவுக்கு இருக்கிறது என்று தெரிந்து அதை அனைத்தையும் தங்களின் தொடர்புகளால் விற்று விடும் தயாரிப்பாளர்கள் இருக்கும் இதே திரையுலகில் தான் இதெல்லாம் இருக்குனு சொல்றாங்க.. ஆனா அது ஏன் என் படத்துக்கு மட்டும் கேட்டு வர மாட்டேன்குறாங்கன்னு தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கும் இடம் தான் தமிழ் சினிமா.

அப்படியாப் பட்டவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ உங்க படம் பத்தி கேள்விப்பட்டேன். இந்தி ரைட், தெலுங்கு ரைட் வாங்கிக்கிறோம்” என்று போன் வந்தால் எப்படி இருக்கும் அந்த தயாரிப்பாளருக்கு. உச்சி முதல் உள்ளங்கால் வரை சந்தோஷம் புரைக்கேறி குதித்தார். “ என்ன விலை?” என்று கேட்டது எதிர் முனை.  இவருக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. “ மார்கெட்டுல நம்ம படம் பத்தி நல்ல பேச்சு இருக்கு. இந்திக்கு ஒரு பத்து ரூபா கேட்டுட்டு இருக்கேன்” என்று தயக்கத்தோடு, இன்னும் ஜாஸ்தியா சொல்லியிருக்கலாமோ? இல்லை ஜாஸ்தியா சொல்லிட்டோமோங்கிற குழப்பத்தோட பதில் சொல்ல,

” சரி.. விடுங்க.. வேணும்னா நான் தெலுங்கும் சேர்த்து எடுத்துக்குறேன். 14 ரூபா ஓகே வா” என்றார்.

இதுக்கு ஏழு அதுக்கு ஏழு அடிச்சோம்டா லக்கி ப்ரைஸ் என்று நினைத்தாலும் “இல்லீங்க 17னா ஓகே” என்று கொஞ்சம் கொத்து காட்டினார்.

“சரி விடுங்க 15 ஓகே பண்ணுங்க.. அதுக்கு மேல முடியாது. எங்களுது மும்பை கம்பெனி. மாசத்துக்கு இத்தனை படம்னு நாங்க லிஸ்ட் போட்டுத்தான் எடுப்போம் உஙக் படம் சாட்டிலைட் போயிருச்சுங்களா?”

“இல்லை பேசிட்டிருக்கோம்” கெத்து

“இந்த மாசம் டார்கெட்டுல சாட்டிலைட் ஒர் படம் பாக்கி இருக்கு சோ.. தெலுங்கு, ஹிந்தி ரைட்ஸ் ஒரு 15. சாட்டிலைட் ஒரு 25 ஓகேவா.. மொத்தம் 40. இருபது ரூபா உங்க அக்கவுண்ட் டீடெயில் எல்லாம் அனுப்புங்க.. உங்க படத்தோட டீடெயில் எல்லாம் வாட்சப்புல அனுப்புங்க.. ஒரு அரை அவர்ல உங்க அக்கவுண்டுக்கு 50 பர்செண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிருவோம். மீதி பணம் நாளைக்கு எங்க ஆபீஸுலேர்ந்து ஆளுங்க வந்து அக்ரிமெண்ட் போட்டப்புறம் ட்ரான்ஸ்பர் பண்ணிருவோம்.. ப்ரொவைடட் உங்க படத்து மேல ஏதும் பைனான்ஸியல் ப்ரச்சனை இல்லைங்கிறத தெரிஞ்சதுனாலத்தான் சொல்லுறோம் . ஓகே..”
என்றதும் தயாரிப்பாளர் மயக்கம் போடாத குறைதான்.  உடனடியாய் தன்னுடய டீடெயில் எல்லாத்தையும் அவனுக்கு அனுப்பி வைத்தார். அனுப்பிய அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அந்த ஆளிடமிருந்து போன். “சார்.. உங்க கிட்ட ஜி.எஸ்.டி  இல்லையா?” என்ற குரலில் அதிர்ச்சி இருந்தது. 

“இல்லீங்க.. படத்துக்கு எல்லாமா ஜி.எஸ்.டி கட்டணும்?”

“எனி பிஸினெஸ் ஜி.எஸ்.டி இஸ் மஸ்ட் சார்.. ஆஹா.. இப்ப உங்களோட நான் பிஸினெஸே பண்ண முடியாது. நீங்க இப்ப அப்ளை பண்ணாலும் இருபது நாளாவது ஆகும். .. என்ன பண்ணலாம். ?
 என்று எதிர் முனை அமைதி காத்தது.

இங்கே தயாரிப்பாளர் போனை மூடிக் கொண்டே பக்கத்திலிருந்த ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் “ என்னயயா ஜி.எஸ்.டி எடுக்க சொல்லச் சொல்லவேயில்லையே? என்று கடிந்து கொண்டே “ வேணும்னா ஒரு 10 பர்செண்ட் பிடிச்சி வச்சிக்கங்க.. நான் இருபது நாள்ல ஜி.எஸ்.டி எடுத்ததும் ட்ரான்ஸ்பர் பண்ணுஙக்” என்றார்.

“இல்லீங்க அதெல்லாம் சரிப்படாது.. சரி ஒண்ணு பண்றேன் உங்களுக்காக ஏன்னா இந்த மந்த டார்கெட்டை நான் முடிக்கணும். ஸோ.. ரிஸ்க் எடுத்து ட்ரான்ஸ்பர் பண்ணுறேன். அதுக்கு முன்னாடி நான் அனுப்பப் போற 20 லட்சத்துக்கு 2 பர்சண்ட் எனக்கு சார்ஜ் பிடிப்பாங்க.. சோ.. நீங்க எனக்கு அதுக்கான யு.டி.ஆர் நம்பரை கொடுத்தீங்கன்னா.. நான் உங்களுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிருவேன். பண்ணிட்டு சொல்லுங்க” என்று போனை கட் செய்துவிட..

மேனேஜர் ஏல்லாவற்றையும் கேட்டு விட்டு. “சார். பொருளு நம்முளுது. அவன் வாங்கப் போறான்.  மீடியேட்டர் எல்லாம் வச்சி வித்தாக்கூடா வித்த காசு வந்ததுக்கு அப்புறம் தான் அவனுக்கான கட்டிங் கொடுக்குறது வழக்கம். இங்க் எல்லாமே உல்டாவா இல்ல இருக்கு. எனக்கு ஜி.எஸ்.டி வேணும்னா தெரியாம இருக்கலாம். பட் சினிமா தெரியும்” என்றார்.

”அவன் யூ.டி.ஆர் தானே கேட்டான்”

“சார்.. அவன் அக்கவுண்டுக்கு அனுப்புன உடனே தான் யுடிஆர் நம்பர் வரும். யுடிஆர் நம்பர் வந்திருச்சுன்னா.. நம்மால அக்கவுண்டுல இருக்கிற பணத்தை ஸ்டாப் பண்ண முடியாதுங்க. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு. சதுரங்க வேட்டையில நம்ம வினோத் சொன்னா மாதிரி. ஒருத்தன ஏமாத்துனம்னா.. அவனோட ஆசையை தூண்டணும்னு  சொல்வாரு.. அது போல இவன் நம்ம ஆசைய தூண்டிட்டான். அடுத்த ஏமாற்றதுதான் மிச்சம்.

அப்போது ஒரு மெசேஜ் வந்தது. அது ஒரு கார்பரேஷன் பேங்க் அக்கவுண்ட் டீடெயில்.  “என்னய்யா அக்கவுண்ட் நம்பர் எல்லாம் கரெக்டாதானே இருக்கு ஏதோ கார்பரேட் கம்பனி போல.. ஏர் மீடியா நெட்வொர்க்னு எல்லாம் இருக்கே?’

அடுத்த முறை போன் வரும் போது தன் அத்தனை சந்தேகங்களோடு தயாரிப்பாளர் “ தம்பி.. பொருளு என்னுது.. நான் எதுக்கு உங்களுக்கு பணம் அனுப்பணும். நீங்க ஒண்ணு பண்ணுங்க.. ஒர்ருவாவை எனக்கு அனுப்புங்க.. அதிலேர்ந்து உங்க 2 பர்செண்ட நான் திரும்ப அனுப்புறேன். நாளைக்கு அக்ரிமெண்ட் போடும் போது மொத்த பணத்தையும் ட்ரான்ஸ்பர் பண்ணிக்கலாம்” என்றவுடன். கொஞ்சமும் அசராமல் 

“இன்னையோட மந்திலி டார்கெட் முடிஞ்சுருங்க.. உங்களுக்கு அடுத்த மாசம் இதே ஆபர் கொடுப்பமா இலல்யான்னு தெரியாது. யோசிச்சிக்கங்க.. “ என்றது எதிர் முனை..

“இல்லீங்க.. ஆபர் போனா பரவாயில்லை. அடுத்த மாசம் நீங்க சொல்லுற ஆபரை சொல்லுங சம்மதம்னா பிசினெஸ் பண்ணுவோம் என்றதும் கட் ஆன போன் தான் திரும்ப எடுக்கப்படவேயில்லை.

இது கதையல்ல நிஜம். சமீபகாலமாய் தமிழ் திரையுலகில் நடந்து கொண்டிருக்கும் நிஜம். மேற்ச் சொன்ன கம்பனி அக்கவுண்ட் டீடெயில் கூட உண்மைதான். ஆர்வக்குட்டி தயாரிப்பாள்ர்கள் பலர் இப்படி ஏமாந்து உள்ளார்கள். எனவே தமிழ் சினிமா கந்துவட்டிகளால் மட்டுமே நடக்கவில்லை. இம்மாதிரியான ஏமாற்றுக் காரர்களுக்காகவும் நடக்கிறது.



Jun 14, 2018

கொத்து பரோட்டா 2.0-58

கொத்து பரோட்டா 2.0-58
படிக்கிற பழக்கம் வழக்கொழிந்து கொண்டே வருகிறது என்பது எப்படி உண்மையோ அதே அளவுக்கு ஓரமாய் படிப்பவர்கள் உருவாகிக் கொண்டும் இருக்கிறார்கள். படிப்பவர்கள் இல்லாமலா சேத்தன் பகத்தில் புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கிறது என்பீர்களானால் நியாயமாய் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு கோடிக் கணக்கில் விற்க வேண்டும். சினிமாவில் தற்போது வரும் பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு படிக்கும் பழக்கமே சுத்தமாய் இல்லை என்பதும், அதை விட எழுதும் திறமை  அட்லீஸ்ட் கம்ப்யூட்டரிலாவது எழுதும் பழக்கம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். மேக்ஸிமம் ட்விட்டரில் ரெண்டு வரியும், பேஸ்புக்கில் நாலு வரியும் மட்டுமே இவர்களின் மொத்தமான எழுத்துப் பணி. வெறும் சினிமா பார்த்தே படமெடுக்க வருகிறார்கள். அதனால் தான் பெரும்பாலான தற்போதைய படங்களில் கேரக்டர்கள் மனதுக்கு நெருக்கமாய் இருப்பதில்லை.

என்னிடம் உதவியாளராய் வர விரும்பும் இளைஞர்களிடம் நான் கேட்பது ரெண்டே ரெண்டு கேள்விதான். புத்தகங்கள் படிப்பாயா? சமீபத்தில் பார்த்து மிகவும் பிடித்த படமெது?. என்பதுதான். முதல் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் பொன்னியின் செல்வனையும், சுஜாதாவையும் கட்டாயமாக சொல்வார்கள்.  பொன்னியின் செல்வன் எத்தனை பாகம் என்ற கேள்வியிலேயே டக் அவுட் ஆகி போகிறவர்கள் ஒருபுறமென்றால் இன்னொரு புறம் சரியாய் பதில் சொல்லி, சரி பழுவேட்டரையர் யார்? என்று கேள்விக்கு மிக தீவிரமாய் மூளையை நிரடி தேடிப் பார்த்து “சாரி சார். மறந்திருச்சு.” என்பார்கள். சுஜாதா பற்றிக் கேட்டால் இன்னும் சுத்தம். இந்தியன் படத்துக்கு டயலாக். மணிரத்னம் படம் என்று ஜல்லியடிப்பார்கள். இன்னும் கொஞ்சம் பேர் அவரோட திரைக்கதை எழுதுவது எப்படி? மட்டும் படிச்சிருக்கேன் சார்.. என்பார்கள். அப்படியா உனக்கு பிடித்த சிறந்த திரைக்கதை எது என்று கேட்டால் அப்போதைக்கு பரபரப்பாய் ஓடி ஒர் பெரிய நடிகரின் பெரும் மசாலா படத்தை சொல்வார்கள்.  சமீபகாலமாய் திரைப்படங்களிலிருந்து திரைப்படமெடுக்க காப்பியடிப்பதிலிருந்து இம்ப்ரூவ் ஆகி, குறும்படம் எடுக்க குறும்படத்தையே காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஸோ படிப்பது என்பது இல்லாததால் தான் இந்த நிலை. எப்படியாவது வருங்கால சந்ததியரை புத்தகம் படிக்க பழக்குவது என்பது எதிர்கால இந்தியாவுக்கு மிக அவசியமான ஒன்று என்றே தோன்றுகிறது.

அப்படியான விஷயத்தை ஆந்திர அரசு “புக் ஹுண்டி” என்ற பெயரில் மாணவர்களை பள்ளி லைப்ரரியிலிருந்து புத்தகங்களை எடுத்துக் கொள்ளவும், அவர்களிடமிருக்கும் புத்தகங்களை லைப்ரரிக்கு கொடுக்கவும் ஏதுவாய் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு விதத்தில் இது நல்ல முயற்சி தான். அட்லீஸ்ட் இப்படி ஆரம்பிக்கும் போதாவது ஒரு சில பக்கங்களை படிக்க ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது. கூடவே வாரத்திற்கு மூன்று க்ளாஸ்களாவது லைப்ரரி ப்ரீயட் வைத்து புத்தகம் படிப்பதை கட்டாயமாக்கினால் இன்னும் சிறப்பாய் அமையும். பெரும்பாலான கல்லூரிகளில் லைப்ரரிக்கான ப்ரீயட் மதியம் வரும் கடைசி இரு வகுப்புகளாய் இருக்க, கட் அடித்து பஸ் பிடித்து வீடு வருவதற்கோ, மேட்னி செல்வதற்கோ, எதாவது ஒரு மாலில் கோக்கை சப்பிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதற்கோதான் செலவாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் நாட்டின் சினிமா டிக்கெட் விலையை 25 சதவிகிதம் உயர்த்தியதை ஒத்துக் கொள்ளாமல், மேலும் உயர்த்திக் கேட்டும், அரசின் பத்து சதவிகிதம் கேளிக்கை வரியை எதிர்த்தும் புதிய படங்களை வெளியிடாமல் போராடி மல்ட்டிப்ளெக்ஸுகளில் அதிகபட்சம் 150 + கேளிக்கை வரி+ ஜி.எஸ்.டி யோடு சேர்த்து 200 ருபாய் வருகிறது. இதனூடே ஆன்லைன் புக்கிங் சார்ஜ் வேறு. சிங்கிள் ஸ்க்ரீன், சிற்றூர், பெரிய ஊர், மாநகராட்சி, பேருராட்சி என்று தனித்தனியே இல்லாமல் மொத்தமாய் எல்லா தியேட்டர்களிலும் அதிக பட்சம் ஏசி அரங்குக்கு 120, ஏசி இல்லாத அரங்கிற்கு 100 ரூபாய் + வரிகள் என நிர்ணையித்து உள்ளார்க்ள். இதற்காக மிகவும் போராடியவர்கள் தியேட்டர்காரர்கள்தான். விலையேற்றத்தை ஒப்புக் கொண்ட பின் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இனி எம்.ஆர்.பியில் தான் திண்பண்டங்கள் விற்க வேண்டும். பார்க்கிங் கட்டணம் வாங்கக்கூடாது என்றெல்லாம் விஷால் அறிக்கை விட, தியேட்டர் அதிபர்கள் கொந்தளித்துவிட்டார்கள். இவர் யார் எங்களை கலக்காமல் அறிக்கை விடுவது என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையெல்லாம் முன்பே சட்டத்தில் உள்ளதுதான். இதற்கு முன் அதிகபட்ச விலை 50-120 இருந்த போது சென்னையை அடுத்த மற்ற ஊரக்ளில் எல்லாம் 200-300 கொடுத்துத்தான் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். அரசுக்கும் இது தெரியும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண சின்ன படங்களுக்கு குறைந்தபட்சம் என்பதிலிருந்து 100 என பல வருடங்களாய் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு அந்த தொகைக்குத்தான் வசூல் விபர்ங்களும் வரும்.

இப்போது அபீஷியலாய் அரசு நிர்ணையித்துவிட்டது. இனி அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி, தயாரிப்பாளர்களை ஏமாற்றி தொழில் நடத்தாமல் முன்பு கிடைத்ததை விட முப்பது முதல் நாற்பது ரூபாய் அதிகமாய் வருமானம் வரும் வழிவகை அரசு செய்திருக்கிறது. இனியாவது கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட், நியாயமான பார்க்கிங் கட்டணம், நல்ல குடிநீர், இருக்கை வசதியோடு திரையரங்குகளை அமைக்க செய்தால் மெல்ல மக்கள் மீண்டும் உள்ளே வர வாய்ப்பு.  ஏற்கனவே இவர்களின் அராஜகமான விலையினால் தியேட்டருக்கு வரும் வழக்கத்தையே மாற்றிக் கொண்ட நாற்பது ப்ளஸ் ரசிகர்களை இழந்தவர்கள். இன்றைய இண்டர்நெட் உலகில் பைரஸி, வெப் சீரீஸ், ஸ்ட்ரீமிங் வீடியோ என பல பொழுது போக்குகள் மக்களை அதிலும் முக்கியமாய் இளைஞர்களை ஆக்கிரமித்திருக்கும் வேலையில் அவர்களிடமிருக்கும் கொஞ்சம் நஞ்சம் பாக்கெட் மணியையும் பதம் பார்க்கும் விதத்தில் விலையேற்றம் இருக்கும் பட்சத்தில் அவர்களையும் இழக்கத்தான் போகிறார்கள் என்று தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அனுகூல் – குறும்படம்
சத்யஜித்ரேவின் எழுத்தில் வெளிவந்த சிறுகதையை சுஜய் கோஷ் குறும்படமாக்கியிருக்கிறார். மாஸ்டரின் கை வண்ணம் கதைக் கருவிலும், அதில் வரும் வசனங்களிலும் தெரிகிறது.  தன்னை பார்த்துக் கொள்ள மனித உருவிலுள்ள ரோபாட்டை விலைக்கு வாங்கி வைத்துக் கொள்கிறார் ஸ்வரூப் சுக்லா. ரோபாட்டினால் வேலை வாய்ப்பு இழந்து, மக்கள் போராடிக் கொண்டிருக்க, ஸ்வரூப் சுக்லாவின் தம்பிக்கும் வேலை போய்விடுகிறது. அண்ணன் வீட்டில் ரோபாட் இருப்பதை பார்த்து கடுப்பாகிப் போய் அதை அடித்து உடைத்துவிடுகிறான். அதை சரி செய்ய வரும் ரோபாட் கம்பெனிக்காரி இனியொரு முறை இம்மாதிரி நடந்தால் ரோபாட் அதிக வோல்டேஜ் கரண்டை வெளிப்படுத்தி தன்னை தற்காத்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டு செல்கிறாள். இதற்கிடையில் ஸ்வரூப் சுக்லாவுக்கும் ரோபாட்டினால் வேலை போக , அதன் பின்பு நடக்கும் கதை படு சுவாரஸ்யம். இந்த குறும்படத்தின் மிகப் பெரிய பலம் சத்யஜித்ரேவின் எழுத்தும் எதிர்காலத்தில் ரோபாட்டுகளால் ஏற்படப் போடும் பிரச்சனைகளையும் யூகித்த விதம் தான். ரோபாட்டுகளை வேலைக்கு வைக்கும் வீட்டின் முன் போராட வரும் கம்யூனிசவாதி. ஸ்வரப் சுக்லாவின் தம்பி கேரக்டர் என செம்ம இண்டர்ஸ்டிங் https://www.youtube.com/watch?v=J2mqIgdae5I&feature=youtu.be 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Suits -சீசன் 1
சூயிட்ஸ் ஒரு அமெரிக்க டிவீ சீரிஸ். 2011 இதன் முதல் சீசன் ஆரம்பித்தது. நியூயார்கில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு வக்கீல்களை சுற்றி நடக்கும் கதை. மைக் ரோஸ் ஒரு ஸ்கூல் ட்ராப் அவுட். அதீத புத்திசாலி. நியாபகங்களில் அவன் ஒரு கம்ப்யூட்டர். தன் பாட்டியை பார்த்துக் கொள்வதற்காக நண்பனின் மரியூவான விநியோகிக்கும் வேலையை செய்து கொண்டே லா ஸ்கூலில் ஆள் மாறாட்டம் செய்து பரிட்சை எழுதி சம்பாதித்துக் கொண்டிருந்தவன். ஒரு நாள் போலீஸ் துரத்திலிடையே ஹார்வியின் இண்டர்வியூக்குள் நுழைந்து விட, அவனின் சட்ட அறிவைப் பார்த்து ஹார்வி அவனை தன்னுடய உதவியாளனாய் சேர்த்துக் கொள்கிறான். அவன் சட்டம் படிக்கவில்லை என்பது தெரிந்தும் அவனை வைத்துக் கொள்கிறான். ஹார்வியின் ஈவு இரக்கமற்ற ஆட்டிட்டியூட், மைக் ரோஸின் இன்னொசென்ஸ் கலந்து புத்திசாலித்தனம் இரண்டும் சேர்ந்து பல வெற்றிகளை தேடிக் கொண்டுக்கிறது. அவர்களது நிறுவனத்திற்கு. ஹார்விக்கு மைக்கின் உண்மை நிலையை வெளியே தெரியாம பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வேறு.
கிட்டத்தட்ட நம்ம கணேஷ் வசந்தை இங்கிலீஷில் பேசி பார்த்தார் போல இருக்கிறது. என்ன வசந்த் போல மைக் செக்ஸ் ஜோக்ஸ் சொல்வதில்லையே தவிர எல்லா டகல்பாஜி வேலைகளையும் செய்கிறார். இந்த தொடரின் முக்கியமான அம்சம் ஸ்க்ரீன் ரைட்டிங். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு கேஸ். சுவாரஸ்ய கதை சொல்லலும், மிக சிறந்த நடிப்பும் வசனங்களும் நம்மை அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு கடத்தி செல்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Jun 12, 2018

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -9


முதல் வாய்ப்பு… அதுவும் பெரிய நிறுவனம், நடிகர் என்று  ஆரம்பித்துவிட்டு அது தடைப்பட்டு நின்று போனால் அந்த இயக்குனரின் வாழ்க்கை மிகப் பெரிய் கேள்விக்குறியாகிவிடும். நண்பர் ஒருவரின் வாழ்க்கை அப்படி மாறிய கதை தான் இது. பிரபல இயக்குனரிடம் உதவியாளராய் நான்கைந்து வருடம் பயணம். எல்லாம் சிறப்பாய் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் அன்றைய சிறு பட்ஜெட் படங்களின் நட்சத்திர தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிய வர, பெரும் முயற்சி செய்து அவரின் சந்திப்புக்கு ஏற்பாடாகிறது.

அந்த நாளுக்காக காத்திருந்தது வீண் போகவில்லை. நட்சத்திர தயாரிப்பாளருக்கு நண்பர் கதை சொன்னவிதம் மிகவும் பிடித்துவிட, “இந்தாபிடி” என்று ஒரு நல்ல தொகைக்கு அட்வான்ஸ் செக் வாங்கியாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. நண்பனின் முதல் பயணமே மாபெரும் வெற்றித் தயாரிப்பாளருடன் எனும் போது நண்பனின் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கை. நண்பன் கதையை இன்னும் மெருகேற்ற விழையளானான்.

அடுத்த கட்டமாய் தயாரிப்பாளர் அவனை அழைத்து ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். ‘இன்ப அதிர்ச்சி” தான் என்றாலும் அதை அவன் எதிர்ப்பாக்கவில்லை. இன்றைய மாஸ் முதல் நிலை நடிகர். அன்றைக்கு நல்ல ஃபீல் குட் படங்களில் நடித்து வியாபாரம் ஆகக்கூடிய நிலையில் இருந்தவர். அவரிடம் சென்று கதை சொல்லச் சொல்லி அனுப்பி வைத்தார். நண்பருக்கு லேசாய் பயம் வந்தது. ஏனென்றால் அது நாள் வரை அவரது தந்தைதான் கதை கேட்டு வந்தார். திடீரென இவரிடம் போய் கதை சொல்லச் சொன்னத காரணம் புரியமால் லேசான பதட்டத்தோடுதான் சென்றார். நடிகரோ, இவரை சிறப்பாய் வரவேற்று மிகவும் ஆற அமர உட்கார வைத்து கதை கேட்டார். காட்சிகளுக்கிடையே ஆன விளக்கங்கள், வசனங்கள் என எல்லாவற்றையும் டீட்டெயிலாய்  கேட்டறிந்தார். மிகவும் ஆர்வமானார். கதையை முழுவதும் கேட்ட மாத்திரத்தில் பிடித்திருக்கிறது இல்லை என்பதை உடனே சொல்லாமல் தம்மடிக்க போய்விட்டார். நண்பருக்கோ பதட்டம் அதிகமாகிவிட்டது. அரை மணி நேரத்துக்கு பிறகு வந்தவர் நண்பரை அழைத்து, கதை பிடித்திருப்பதாகவும், தயாரிப்பாளரிடம் தான் பேசுவதாகவும் சொல்லிவிட்டு,  க்ளைமேக்ஸில் மட்டுமே மாறுதல் தேவை என்று ஒரு இக்கு வைத்திருக்கிறார். 

நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால் க்ளைமேக்ஸுக்காகதான் அனைவருமே படத்தின் கதை பிடித்திருப்பதாய் சொல்கிறார்கள் என்பது அவரது நம்பிக்கை. “கதை உங்களுக்கு ஓகேன்னா. சார் கிட்ட சொல்லிருங்க. ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்.” என்று விண்ணப்பம் வைத்திருக்கிறான் நடிகரிடம்.. அதாவது தயாரிப்பாளருக்கு க்ளைமேக்ஸ் மிகவும் பிடித்தமானதாக இருப்பதால்.. ஒரிரு நாளில் ரெண்டொரு க்ளைமேக்ஸுகளை தயார் செய்து கொண்டு, அவரிடம் இதைப் பற்றி பேசும் வரை அமைதிகாக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்து விட்டு வந்துவிட்டதாய் எங்களீடம் சொன்ன போது “ஏண்டா.. தயாரிப்பாளர் தானே அனுப்பினாரு. அவரிடம் சொல்லாமல் இப்படி ஏன் முடிவெடுத்தாய்? “ என்று கேட்டபோது. “நல்ல நடிகர், தயாரிப்பாளர் காம்பினேஷன் ஒரு புதுமுக இயக்குனருக்கு கிடைப்பது என்பது சாதாரணமானதல்ல. அங்கே இங்கே சரிக்கட்டித்தான் ப்ராஜெக்டை ஆரம்பிக்க வேண்டும் . நடிகர் அட்வான்ஸ் வாங்கி டேட் கொடுத்துட்டா, தயாரிப்பாளருக்காகவாவது செய்தே தான் ஆகணும். இல்லாட்டி இவ்வளவு பெரிய தயாரிப்பாள்ர் படத்திலிருந்து வெளியேறினால் அவருக்குத்தான் ப்ரச்சனை “என்றான் எனக்கும் சரியென்றே பட்டது.

நாயகன் நண்பரிடம் வாக்கு கொடுத்தது போல, தயாரிப்பாளரிடம் க்ளைமேக்ஸ் பற்றி பேசாமல், ஓகே சொல்லிவிட, அட்வான்ஸ் வாங்கியாகிவிட்டது. தயாரிப்பாளர் மற்ற டெக்ச்னீஷியன்களுக்கு எல்லாம் அட்வான்ஸ் கொடுத்து சூட்டிங் தேதியை பிக்ஸ் செய்ய ஆர்மபிக்க, நண்பர் நடிகரிடம் வேறு க்ளைமேக்ஸ் சொல்வதாய் சொன்னதையே மறந்து போனார். நடிகர் மறக்க வில்லை. நண்பருக்கு போன் போட்டு என்ன ஆச்சுங்க க்ளை மேக்ஸ்? என்று கேட்க, நேரில் வருதாய் சொல்லிவிட்டு, தயாரிப்பாளரிடம் போய் “இப்ப ஹீரோ திடீர்னு க்ளைமேக்ஸ மாத்த சொல்லுறாரு” என்பது போல தயாரிப்பாளரிடம் சொன்னவுடன். “இதான் க்ளைமேக்ஸ், தயாரிப்பாளர் இதான் வேணும்டாரு” என்று சொல்லச் சொல்லி அனுப்ப, நடிகரிடம் போனார் நண்பர்.

வழக்கம் போல நல்ல வரவேற்பு. ”என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்று நடிகர் ஆர்வமாய் கேட்க, தயாரிப்பாளரின் வாய்ஸ் மீதான நம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிற தற்போதைய நிலையை சாதகமாய் பயன்படுத்த எண்ணி “ அதே பழைய க்ளைமேக்ஸ் தான் சார்..” என்றார் நண்பர்.

“அன்னைக்கு மாத்துறேன்னு சொன்னீங்க? “
”ப்ரோடியூசர் மாத்த வேணாம்ண்டாரு..” கொஞ்சம் அழுத்தமான் குரலில் நண்பன்.

நடிகர் ஏதும் பேசவில்லை. “ ஓகே.. நீங்க கிள்மபுங்க.. நான் தயாரிப்பாளரிடம் பேசிக் கொள்கிறேன் ‘ என்று சொல்லிவிட்டு, தயாரிப்பாளரிடம் பேசியிருகிறார். படத்தில் நடிக்க விருப்பமில்லயென்றும், அட்வான்ஸ் பணத்தையும் திரும்பக் கொடுத்தனுப்பியிருந்தார். தயாரிப்பாளரிடம் அவர் சொன்ன காரணம். உங்க டைரக்டர் உங்க கிட்ட சொன்ன கதை ஒண்ணு. என் கிட்ட சொன்னது ஒண்ணு. ஸோ.. அவர் கிட்ட நீங்க தயாரிபாளர்கிட்ட சொல்லிட்டீங்களான்னு கேட்டதுக்கு அவர் பதில் சொன்ன விதமும் எனக்கு பிடிக்கலை. இப்படி ஆர்மபத்துலேயே நேர்மையில்லாத இருந்தா என்னால ட்ராவல் பண்ண முடியாது” என்று சொல்லிவிட, தயாரிப்பாளர் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் நடிகரை பகைத்துக் கொள்ள முடியாமல், படத்தை ட்ராப் செய்துவிட்டு, அதே நடிகரின் கால்ஷீட்டை வைத்து பின்னாளில் பெரிய படமெடுத்து பெரும் வெற்றியைக் கொடுத்தார். ஆனால் அன்றைக்கு பின்னால பாத்துக்கலாம்னு ப்ளான் போட்ட நண்பன் இன்று வரை படம் எடுக்கவில்லை. வாய்ப்பு தேடிக் கொண்டேயிருக்கிறான். 15வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.


Jun 2, 2018

கொத்து பரோட்டா 2.0-57

கொத்து பரோட்டா 2.0-57
டெலிகாலர்களிடமிருந்து வரும் கால்களை மிக மரியாதையாய் ஹேண்டில் செய்பவன் நான். பர்சனலாய் பல இளம் பெண்கள் இத்துறைக்கு வந்து கால் செய்யப்படும் கஸ்டமர்களின் நடவடிக்கைகளினால் படும் கஷ்டங்களை நேரடியாய் பார்த்து, என் தொட்டால் தொடரும் படத்தின் நாயகி கேரக்டரையும் டெலி காலர் கேரக்டருக்கு வடிவமைத்திருந்தேன். ஒரு காலத்தில் டெலி காலர்கள் நன்கு படித்து, மிக நல்ல சம்பளத்திற்கு வேலை செய்த காலமெல்லாம் போய். இன்று எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்திற்கும், டார்கெட் கமிஷனுக்குமாய் வேலை செய்யும் நிலை. தினம் டார்கெட். மேனேஜரின் ப்ரெஷர். டெலி காலர் குரலைக் கேட்ட மாத்திரத்தில் கோபப்பட்டு கட் செய்யும் கஸ்டமர்கள். என ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் கிளுகிளு வேலைகளையும் செய்யும் கஸ்டமர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல குரல் வளம் என்று பேசிப் பேசி கடலைப் போட்டு, பிக்கப் செய்தவர்கள் பலர். பல சமயம் எனக்கு கால் செய்யும் பெண்கள் பேசி விட்டு, “சார்.. நான் திரும்ப கூப்பிடுறேன் உங்க காலர் டோன் ரொம்ப நல்லாருக்கு. போனை எடுத்திறாதீங்க” என்ற கோரிக்கையோடு நான்கைந்து முறை தொடர்ந்து அடிப்பவர்கள் கூட உண்டு. இப்படி பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க? என்று பாவப்படும் எனக்கு சென்ற வாரம் ஒரு கால். பிரபல ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து. பேசலாமா என்றாள். பேசுங்க என்றேன். சொன்னாள். அடுத்த வாரம் திங்கட்கிழமை வாக்கில் உங்களது எக்ஸிக்யூட்டிவை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். நேரிடையாய் ஸ்கீமைப் பற்றி பேசிவிட்டு முடிவெடுக்கிறேன் என்றேன்.

திங்கட்கிழமையும் வந்தது. அதே நிறுவனத்தின் கால். மீண்டும் அதே பேசலாமா? என்ற கேள்வி மட்டுமில்லாமல் திங்கட்கிழமை அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தீர்கள் என்றாள். நான் பொறுமையாய் “உங்களது எக்ஸிக்யூட்டிவை அனுப்புங்கள் “ என்றேன். “இல்ல சார்.. இன்னைக்கே எடுத்தீங்கன்னா உங்களுக்கு பல புதிய ஆஃபர்களை கொடுக்கவிருக்கிறோம்.” என்று கடகடவென பேசிக் கொண்டே போனாள். எனக்கு கடுப்பு ஏறியது. “இதோ பாருங்கம்மா.. நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் இல்லையா? உங்கள் எக்ஸிக்யூட்டிவிடம் பேசிவிட்டுத்தான் முடிவெடுப்பேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. மீண்டும் ஆஃபர், அது இது வென சொல்லிக் கொண்டே போக, சற்றே கோபமாய் “இதபாருங்கம்மா.. நீங்க எனக்கு ப்ரீயாவே பாலிசி கொடுத்தாலும் இன்னைக்கே, இப்பவே பாலிசி எடுக்க மாட்டேன்” என்றேன். “நாங்க எதுக்கு ப்ரீயா கொடுக்குறோம்?” என்றால் குரலில் ஒருமை வந்துவிட்டது. “நான் பேசுறத கொஞ்சம் கேப்பீங்களா மாட்டீங்களா?” என்றே கோபமாய். “கேட்க முடியாதுங்க” “அப்படின்னா வை போனை” என்றேன் கெட்ட வார்த்தையை அடக்கிக் கொண்டு. இவர்களுக்காக எப்போதும்  இதயத்தின் பெரும் பகுதியில் சாப்ட் கார்னர் வைத்திருந்தவனாகிய நான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா டிக்கெட் விலையை 25 சதவிகிதம் வரை ஏற்றிக் கொள்ளலாம் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது. மல்ட்டி ப்ளெக்ஸுகளின் 120 ரூபாயை 160 வரையிலும், சிங்கிள் ஸ்கீரின் திரையரங்கங்களின் விலையை அதிகபட்சமாய் 65 ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. இதில் ஒர் பெரிய குழப்பம் என்னவென்றால் அரசு அறிவித்த பத்து சதவிகித கேளிக்கை வரி என்பது இந்த அதிகரிக்கப்பட்ட தொகையிலேயே இருக்கிறதா? அல்லது இந்த தொகைக்கு மேல் பத்து சதவிகித வரி, மேலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி சேர்த்தா என்பதில் தெளிவில்லை. சரி வரியுடன் சேர்த்து 65 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொகையில் 6.50 பைசா கேளிக்கை வரியாகிவிடும். ஏற்கனவே வாங்க வேண்டும் என்று அரசு ஆணையில் மட்டுமே இருந்த 50 ரூபாய்க்கு மேல் எட்டு ரூபாய் சில்லரை மட்டுமே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த 65 ரூபாய்க்கு ஜி.எஸ்.டி 18 சதவிகிதம் வரும் போது ஒரு டிக்கெட்டின் விலை 76.70 பைசா. தமிழ் நாட்டில் சென்னையில் கேசினோ, மற்றும் ஏ.வி.எம் ராஜேஸ்வரியைத் தவிர மற்ற எந்த ஒரு தனி திரையரங்களில் அரசு நிர்ணையித்த விலைக்கு டிக்கெட் விற்பதில்லை என்பது அரசுக்கும், மக்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். சிட்டியை விடுங்கள், தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் சிறு படங்களுக்கு 70 முதல் 80 ரூபாயும். பெரிய படங்களுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை கூப்பன் கொடுத்து டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதையும், திருச்சி, சேலம், ஈரோடு போன்ற தியேட்டர்களில் பெரிய படங்களுக்கு 250 ரூபாய் கூட சில சமயம் வாங்குகிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்தது.

நிச்சயம் 30 ரூபாய்க்கும் , 50 ரூபாய்க்கும் இன்றைய விலைவாசியில் தியேட்டர் நடத்த முடியாது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இத்தனை வருடமாய் ஏற்றப்படாமல் இருந்த டிக்கெட்டின் விலையை திரையுலகினர் கேட்டிருந்ததை விட உயர்த்தி கொடுக்காவிட்டால் பரவாயில்லை. இத்தனை நாள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்த விலைக்காவது ஏற்றிக் கொடுத்தால் தானே, இனி வரும் காலங்களில் லஞ்ச லாவண்யமில்லாமல் தொழில் செய்ய ஏதுவாக இருக்கும். இன்றைக்கு திருப்பூர் போன்ற நகரத்தில் கூட மல்ட்டிப்ளெக்ஸ் இல்லாமல் தனி திரையரங்குகளில் 80, 100 மாய் டிக்கெட் விற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த தொகையை வைத்து தொழில் நடத்த முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, எப்படி அரசு நிர்ணையித்த விலைக்கு தொழில் நடத்துவார்கள் என்பது யோசிக்க வேண்டியதாகும்.

புதிய திரைப்படங்கள் வெளியாகாது என்கிற போராட்டமே பத்து சதவிகித வரிக்கல்ல. இத்தனை வருடங்களாய் இருந்த அடிப்படை விலையை அதிகரிக்க வேண்டி நடந்த போராட்டம் என்று சொல்லியிருந்தேன் அது நிருபணமாகியிருக்கிறது. ஏனென்றால் மல்ட்டிப்ளெக்ஸ் விலையுர்வை மிகவும் எதிர்பார்த்து இருந்தார்கள். போன வாரம் வரி குறித்தும், இரட்டை வரி குறித்தும் பேசிக் கொண்டிருந்தவர்கள், டிக்கெட் விலையேற்றம் குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட இரட்டை வரி விதிப்பை குறித்து பேசவேயில்லை. முடிந்தால் அடிப்படை விலையில் வரி என்றில்லாமல் விலையின் மேல் வரி போட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால் இன்னும் சந்தோஷம்தான் அடைவார்கள் என்று தோன்றுகிறது.

பத்து பைசா, 25 பைசா, 50 பைசா எல்லாம் வழக்கொழிந்து இருக்கும் நேரத்தில் அரசு 153.60 பைசா 20 பைசா, 30 பைசா என்றெல்லாம் விலை வருமாறு நிர்ணையிப்பது அபத்ததின் உச்சம். ஆன்லைனில் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் மற்றும் வரியோடு அதிகமாய் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நேரடியாய் டிக்கெட் எடுக்க வந்தால் அதிகபட்சமாய் 40 பைசா, 50 பைசா கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏன் சில்லரை கொடுக்கவில்லை என்று கேட்கவும் முடியாது. ஆனால் மறைமுகமாய் நம் பணம் நம்மிடமிருந்து அரசின் அபத்த சட்ட வரிகளால்  நம் பாக்கெட்டில் கைவிட்டு எடுக்கப்படுகிறது. இது அரசுக்கு தெரியாதா? பத்து ரூபாய்க்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் முப்பஹ்டு ரூபாய்க்கு மாறி.. டிவியில் விளம்பரம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். இது அவர்களின் வியாபாரம்  வளர்ந்திருக்கிறதை, போட்டியை காட்டுகிறது. ஆனால் இவர்களின் வளர்ச்சிக்கான பலியாடு காமன் மேன்களாகிய பார்வையாளர்கள்.

பைரஸி, டிக்கெட் அதிக விலை, திரையரங்குகளின் மோசமான பராமரிப்பு, இணையத்தின் வளர்ச்சி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஓ.டி.டி. ப்ளாட்பார்ம்கள் என சினிமாவுக்கு மாற்றான எண்டர்டெயின்மெண்ட் வளர்ந்து கொண்டேயிருக்க, தியேட்டருக்கு வருகிறவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் திரையுலக கிரியேட்டர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இருக்கிறது. நேர்மையான வரி வசூல், நிர்வாகம். போன்றவற்றை செயல்படுத்த அரசும் மக்களுக்கு ஏற்றார் போல் இயங்க வேண்டும். பார்ப்போம் இன்னும் எவ்வளவு தூரம் மக்களின் டவுசரை அவிழ்க்கபோகிறார்கள் என்று..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
REVENGE PORN
சென்ற வாரம் ஆந்திர மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை அவருடய முறைப்பையன் கற்பழித்து கொன்றுவிட்டான். காரணம் அவள் வேறு ஒர் இளைஞருடன் நெருக்கமாய் இருந்தாள் என்பதும், அவனுடன் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதாலுமாம். பெண்களுக்கான பிரச்சனைகள் நம்மூரில் மட்டுமல்ல அமெரிக்கா போன்று வளர்ந்த நாடுகளில் கூட அப்படியேத்தான் இருக்கிறது. ஸ்டாக்கிங், அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை, மன உளைச்சல் கொடுக்கக்கூடிய விஷயங்கள் என எல்லாமே அப்படியே. இந்த ஆவணப்படம் முக்கியமாய் பேசுவது மொபைல் போன்களும், இணையமும் அடைந்திருக்கும் அதீத வளர்ச்சியின் காரணமாய் பரவியிருக்கும் போர்ன் வீடியோக்களைப் பற்றியது. தொழில் முறை போர்ன் நடிகர்களை வைத்து எடுக்கப்படும் வீடியோக்களை விட, நிஜ காதலர்களிடையே நடக்கும் கலவிகளும், அதீத நம்பிக்கை, மற்றும் க்யூரியாசிட்டியின் காரணமாய் தெரிந்தே எடுக்கப்படும் வீடியோக்களை, ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த உறவு பிரியும் போது காதலன் அந்த வீடியோக்களை சோஷியல் நெட்வொர்க்கில், நட்பு வட்ட நெட்வொர்க்கில் வெளியிடுவது என்பதுதான் பழிவாங்கலுக்கான வெளியிடப்படும் வீடியோக்கள். இது குறித்த இந்த ஆவணப்படம் இன்றைய சமுதாயத்தினரின் பர்வர்ஷனை வெளிக்காட்டுகிறது. யோசிக்க வைக்கக்கூடிய ஆவணப்படம்.