Thottal Thodarum

Jun 30, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -12

சினிமா அவ்வளவுதான் இனி அது மெல்லச் சாகும் என்று சொல்லும் போதெல்லாம் ஓர் புதிய டீம் வந்து எல்லாவற்றையும் தலைகீழாய் போட்டு புரட்டி புத்துயிர் கொடுத்துவிடும். ஒரு தலை ராகம், புது வசந்தம், சேது, காதல், பீட்சா, என பெரிய லிஸ்டே இருக்கிறது. அது போலத்தான் சினிமாவை நம்பி வரும் புதியவர்களும். புதியவர்கள் என்றவுடன் இளைஞர்கள் என்று தோன்றினால் அது தவறு. சினிமாவில் எந்த அளவிற்கு இளைஞர்கள் வருகிறார்களோ அதே அளவிற்கு 50ஐ கடந்தவர்களின் வரவும் அதிகம்.

அந்த காலத்துல எம்.ஜி.ஆரே 40க்கு மேலத்தான் வந்து ஜெயிச்சாரு. எனக்கு என்ன 45 ஆறது. அட்லீஸ்ட் ஒரு நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆயிட மாட்டேனா? என்ற நம்பிக்கையோடு தினம் ஒவ்வொரு ஆபீஸாய் ஏறி, தன் போட்டோவை கொடுத்துவிட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டரை கைக்குள் போட்டுக் கொள்ள மாதத்தில் ஒருவர் என முறை வைத்து சரக்கடித்து, நட்பு கொண்டாடி, சரக்கின் நன்றிக்காக, அவர் கோ டைரக்டரிடம் அறிமுகப்படுத்திவிட, சிகப்பாய் இருந்தால்  கோயில், கல்யாணம், ஆபீசர், கொஞ்சம் வசனம் பேச வரும் என்றால் டாக்டர் போன்ற கேரக்டர்கள் கிடைக்கும். இப்படி பல லாபி செய்து கிடைக்கும் வாய்ப்பை டயலாக் ஒழுங்காய் பேசாத காரணத்தால், பணால் ஆகிப் போன சம்பவங்கள் இவர்களுக்கு ஏராளம்.அப்படி ஒரு முறை வாய்ப்பு போனால் மீண்டும் டயலாக் வாய்ப்பு வருவது என்பது மிகவும் கஷ்டம் தான் அந்த டைரக்‌ஷன் டீமைப் பொருத்தவரை.

தமிழ்நாட்டில் இருக்கும் ஆண் பெண்களிடம் உங்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தால் ஓகேவா? என்று கேட்டால் கிட்டத்தட்ட எழுபது சதவிகிதம் பேர் தலையாட்டுவார்கள். எப்படிங்க அவ்வளவு தைரியமா சொல்லுறீங்க? என்று கேட்டோமானால், சமீபத்தில் மிகச் சாதாரணமாய் வந்து மிக பெரிய இடத்தை அடைந்த ஹீரோக்களின் பெயரைச் சொல்லி, நான் அவனை விட ஸ்மார்ட்டா இல்லை ரெண்டு படம் நடிச்சா நமக்கும் நடிப்பு வந்திரப் போவுது என்பார்கள்.

மிடில் ஏஜ் கேரக்டர்களில் நடிக்க எப்பவுமே சினிமாவில் ஆட்கள் தேவைதான். போலீஸ், ஏட்டு, குருக்கள், அய்யர், ஆபீஸர்ஸ், கலெக்டர், ஜட்ஜ், டாக்டர் என டிமாண்ட் அதிகம். அப்படிப்பட்ட கேரக்டர்களில் புதியதாய் வந்து வாய்ப்புகள் கிடைத்து நல்ல நடிகர்களாய் ஜெயித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதை விட அதிக அளவில் தோல்வியடைந்தவர்களும் உண்டு.  பெரும்பாலும், செய்யும் தொழில் நஷ்டமடைந்தவர்கள், கம்பெனி லாஸ் ஆகி வேறு வேலைக்கு போக முடியாதவர்கள். என ஒரு புறம் வாழ்க்கையில் தோற்றவர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம்  கொஞ்சம் வசதியாய் காரோ, பைக்கோ வைத்துக் கொண்டு, சுய தொழில் ஒன்றை செய்து கொண்டே நடிப்பையும் ஒரு கை பார்க்க முயல்கிறவர்கள். இரண்டு வகையான ஆட்களில் இரண்டாம் வகை ஆட்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே வாய்ப்புகள் கிடைக்கும். ஏனென்றால் பொருளாதார சுதந்திரம். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் உடனடி உதவி இயக்குனர்களின் தொடர்பும், நட்பின் காரணமாய் சின்னச் சின்னக் கேரக்டர்களில் வாய்ப்பு கிடைத்து சட்டென ரெண்டொரு சீன்களில் நடிக்க வாய்ப்பை பெற்று விடுவார்கள்.

ஆனால் முதல் வகை ஆட்களுக்கு அப்படியான வாய்ப்பு வருவது அப்படி சுலபமல்ல. தொடர்ந்து அலைய வேண்டும். ஏஜெண்டுகள் மூலமாய் கூட்டம் கூட்டமாய் வரும் காட்சிகளில் போய் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாய் வலம் வந்து அங்கே அவர்களின் கட்டிங் போக கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்கிற நிலையின் காரணமாய் இரண்டாம் நிலை ஆட்கள் போல நேரடியாய் உதவி இயக்குனர்கள் தொடர்பின் மூலமாய் வாய்ப்பை பெற செலவு செய்ய முடியததால் கேரக்டர்கள் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. அப்படி கிடைக்கும் வாய்ப்பு ஒர் மெடிக்கல் மிராக்கிள் தான்.

நண்பர் ஒருவர் ஜூனியர் ஆர்டிஸ்டாய் வலம் வந்து கொண்டிருந்தவர். தீடீரென காலையில் ஒரு கால். “சார்.. உடனே வாங்க லொக்கேஷனுக்கு ஒரு த்ரூஅவுட் ரோல் வாய்ப்பு.” என்று உதவி இயக்குனர் சொன்னதும் “பெருமாளே.. கண்ணைத் தொறந்திட்டே..” என்று பதட்டத்துடன் போய் சேர்ந்தார். ஏற்கனவே ஷூட்டிங் ஆரம்பித்திருந்தது. டைரக்டரின் நண்பர் ஒருவரைத்தான் அந்த கேரக்டருக்கு பிக்ஸ் செய்திருக்க, அவர் ஏனோ வரவில்லை/ அவருக்கு பதிலாய்த்தான் இவருக்கு அழைப்பு. அவசர அவசரமாய் கமிஷனர் உடை போடப்பட்டு, வசனம் எல்லாம் சொல்லிக் கொடுத்தாயிற்று. நண்பருக்கு பதட்டமாய் இருந்தாலும், பெரிய நடிகர்கள் காம்பினேஷன். நிச்சயம் படத்தின் நீளத்திற்காக குறைக்கபட முடியாத காட்சி என்று காட்சியின் வசனத்தை படிக்கும் போதே அவருக்கு தெரிந்தது. சட்டென மனதில் வாங்கிக் கொண்டு, தயாரானார்.

“சார். சொதப்பிறாதீங்க” என்று உதவி இயக்குனன் காதை கடித்துவிட்டுப் போனான். இவருக்கு பதட்டமாய் இருந்தாலும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் தயாரானார். ஷாட்டுக்கு முன்னால் ஒரு மானிட்டர் பார்க்க தயாரானார்கள். முக்கிய நடிகர்கள் காம்பினேஷனில் காட்சி விவரிக்கப்பட்டு, மானிட்டர் ஆரம்பிக்க, நண்பரின் முறை வந்ததும் சொல்லிக் கொடுத்தது போல நான்கு வரி டயலாக்கை நல்ல மாடுலேஷனோடு சொல்லி முடித்தார். இயக்குனர். சந்தோஷமாய் கை தட்டி குட் என்று சொல்லிவிட்டு டேக் போகலாமா என்ற போது. பரப்ரப்பாய் ஒருவர் உள்ளே நுழைந்தார்.  இயக்குனரிடம் கொஞ்சம் நெருக்கமாய் நின்று தயக்கமாய் ஏதோ காதோரமாய் சொல்ல, இயக்குனர் நண்பரையே பார்த்தபடி அவருடன் பேசி முடித்தபின் உதவி இயக்குனரைப் பார்த்து “பிரபா.. சாருக்கு கமிஷனர் ட்ரஸைப் போட்டுட்டு, இவரை இன்ஸ்பெக்டராக்கிருங்க” என்று கேமராமேனிடம் ஷாட் விளக்க போய்விட்டார். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. உதவி இயக்குனர் அருகே வந்து “அன்லக்கிசார்.. நீங்க. .இவனுக்கு பதிலாத்தான் உங்களை இங்க போட்டேன். அவனே திரும்ப வந்திட்டான் டைரக்டருக்கு ரொம்ப க்ளோஸு அவன்” என்று அவர் ட்ரெஸ்ஸில் உள்ள கமிஷனருக்கான ஸ்டார்களை கழட்ட காஸ்ட்யூமரிடம் சொல்லிவிட்டு, கிளம்பினார். அன்றைய ஷூட்டிங் தான் நண்பர் நடித்த கடைசி படம்.


Post a Comment

No comments: