கவிஞரின் பார்வையில்....
rajasundararajan@gmail.com அன்பின் சங்கர், போக்குவரத்தில் வண்டி ஓட்டிச் செல்கிற போது, நமக்கு முந்தி, பிந்தி, அடுத்து ஊர்கிற வண்டியோட்டிகளின் மன-ஓட்டம் இன்னதென்று அறியக் கிட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த போது, அந்தக் கிழவிக் குணவார்ப்பின் மன-ஓட்டங்கள் அப்படி அப்பட்டமாகப் புரியவர - வியந்தேன் என்று சொல்லமாட்டேன் – திகைத்தேன்! ஏனென்றால், அதுவரை நான் பார்த்திருந்த (தமிழ், ஆங்கில, ஹிந்தி) மசாலாக்களில் ஆக்ஷன், பேச்சு, பின்னிசை அளவிலேயே கதை நகர்த்துதலைக் கண்டிருந்தேன். மெய்ப்பாடுகள் வழியாகத்தான் குணவார்ப்புகள் விளக்கம் பெறுகின்றன. உண்மைதான், ஆனால் கதைக்கள விவரணைதான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆடுகளம்’ படத்தில், நடிகர்கள் ஓரொருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் கதைக்களம் எடுத்துத் தொடுக்கப்பட்ட வகையினாலேயே அக் குணவார்ப்புகள் தனித்தன்மை பெறுகின்றன. அப்படி, இயக்குநரே கர்த்தாவாகிறார். புத்தக வடிவுக்குட்பட்ட உங்கள் கதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். உண்மையில், வாங்கி இரண்டு நாட்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்துவிட்டேன...