பஞ்சாட்சரம்
அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின் நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையே பெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒரு பெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தை கலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒரு உருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒரு ஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது. முன்னால் படை நடத்தி வந்தவன் கூட்டத்தைப் பார்த்து தேவையேயில்லாமல் “அமைதி.. அமைதி” என்று கத்தினான். அவன் போட்ட கூச்சல் தான் அங்கிருந்த நிசப்தத்தை கலைத்தது. குதிரையில் கட்டி வரப்பட்ட உருவத்திடமிருந்து எந்த விதமான் அசைவும் இல்லை. உடலெல்லாம் ரத்த சகதியாய் இருந்தது. அவன் அணிந்திருந்த அங்கி வித்யாசமாய் இருந்தது. கூட்டத்தை கலைத்துக் கொண்டு இன்னொரு படை வீரன் வேகமாய் வர, பின்னால் ஒரு சாரட்டு வண்டி அங்கே வந்து நின்றது. வண்டியில் இருந்த குதிரையோட்டி, அதீதமான பவ்யத்துடன் வண்டியை திறந்து விட...