கொத்து பரோட்டா -17/06/13
நேற்று கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எக்மோர் சென்றிருந்தேன். அமிர்தம் சூர்யா, வளர்மதி, லதா சரவணன், எஸ்.சங்கர நாராயணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தி புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை சொன்னார்கள். எனக்கு அமிர்தம் சூர்யாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவரை அவர் கலந்து கொண்டு பேச வேண்டிய புத்தகத்தைப் பற்றி படிக்காமல் வந்து பேசியதேயில்லை. முழுக்க படித்து, அப்புத்தகத்தைப் பற்றிய மிக இயல்பான விமர்சனத்தோடு சுவாரஸ்யமான பேச்சை பேசுவார். நேற்றும் அப்படித்தான் ஒரிரு கவிதைகளை படித்துக் காட்டியவர் அக்கவிதைகளை வரி பிரித்து சொல்லும் போது நிறைய அர்த்தங்கள் புரிபட ஆரம்பித்தது. கவிதைகளை எப்படி படிக்க வேண்டும் என்று புரிய ஆரம்பித்தது. கவிதைக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்று நினைப்பில் கவனமில்லாம இருந்த என்னைப் போன்றவர்களுக்கு அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு இன்ஞ் முன்னேறியிருக்கிறது என தோன்றியது. நன்றி அமிர்தம் சூர்யா. @@@@@@@@@@@@@@@@@@@@@