Thottal Thodarum

Aug 28, 2018

Poomaram -Malayalam film

பூமரம்

தமிழ் சினிமாவின் ஸ்ட்ரைக் என்னை போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்த படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன் யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என்கிற சோம்பல் வந்துவிடக் காரணம் தொடர் படங்கள் வெளியிடாமை. என்னைப் போன்றவர்களுக்கே இப்படியான எண்ணம் என்றால்.. மாசத்திற்கு ஒரு படம் பார்க்கிறவர்களின் மனநிலை. சரி அதை விடுங்கள். அதையும் மீறி சில படங்கள் பார்க்கச் சென்று அது கொடுக்கும் மனநிறைவு தான் சினிமா.  அப்படியான ஒரு படம் சமீபத்தில் பார்த்த மலையாள படமான “பூமரம்”

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஏற்கனவே நடித்திருந்தாலும் அவரின்  முதல் மலையாள படம். வழக்கமாய் மலையாளப் படங்களின் படப்பிடிப்பு 25-30 நாட்களுக்குள் மிகச் சாதாரணமாக பெரிய பட்ஜெட் படங்களையே முடித்துவிடுவார்கள். ஆனால் சுமார் ஒன்னரை வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை முடிக்க. அதனாலேயே கதையின் நாயகனை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்த மீம்ஸ்கள் ஏராளம். ஆனால் அத்தனைக்கும் பதில் சொல்கிறார்ப் போல ஒரு படம்.

ரொம்பவே சிம்பிளான கதை. மஹாராஜா காலேஜ் சேர்மன் காளிதாஸ். அக்கல்லூரியில் நடக்கும் 5 நாள் கல்சுரல் தான் கதைக் களம். ஏற்கனவே செயிண்ட் மேரீஸ் காலேஜ் தான் ஐந்து வருடங்களாய் எல்லா முக்கிய கோப்பைகளையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இம்முறையும் அதை தக்க வைக்க, திறமையாய் தயாராகி வர, அதே நேரத்தில் மஹாராஜா காலேஜும் தயாராகிறது. அஹா.. வழக்கமான காலேஜ் சண்டை படமா? என்ற முடிவுக்கு வராதீர்கள்.

சமீபத்தில் இவ்வளவு இயல்பாய் ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. ஆரம்பக் காட்சியில் அப்பாவும் மகனும் பேசிக் கொள்ளும் நீண்ட வசனக்காட்சி. அதில் பேசப்படும் விஷயங்கள். டைட்டில் அதனூடே பயணிக்கிறது. வசனங்களை கவனிக்க தவறினால் நிச்சயம் கொஞ்சம் என்னடா இது என்கிற மனநிலையை கொடுக்கக்கூடிய காட்சிதான் என்றாலும், அக்காட்சியின் கனம் க்ளைமேக்ஸில் அற்புதமாய் உணர்த்தப்படுகிறது.

கதையில் எங்கேயும் யாரும் தண்ணியடித்துவிட்டு, சலம்பவில்லை. குத்து பாட்டோ, ஆட்டமோ போடவில்லை. கல்லூரி மாணவர்களின் அத்துனை கொண்டாட்டங்களையும் அவர்களூடேயே இருந்து பார்த்து அனுபவித்ததைப் போல ஒர் உணர்வை நமக்கு ஏற்படுத்தியது இயக்குனரின் அபார திறமை.

ஏன் மலையாள படங்களில் மட்டும் இசை அவ்வளவு மிருதுவாய், நெகிழ்வாய் இருக்கிறது? என்ற கேள்விக்கான பதில் இப்படம் நெடுக சொல்லப்படுகிறது. கல்லூரி பேராசிரியர் முதல் நாள் இரவில் காதல் கவிதை படிக்கிறார். மைம் ஆக்டிங்கில் சொல்லப்படும் அசோகரின் கதை. பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம். ஆதிவாசிகளின் நடனம், வெஸ்டர்ன் இசை.  ஒவ்வொரு கல்லூரி டீமுடம் இருக்கும் அதற்கான பயிற்சியாளர்கள். அவர்களின் திறமை. அதிலும் செயிண்ட் தெராசா கல்லூரிக்கு வரும் ட்ரைனர் டான்சர் அட்டகாசம். கலாச்சார கலைகள் முதற் கொண்டு, இன்றைய புதிய தலைமுறை கலைகள் வரை  மிக இயல்பாகவே இசையும், கலையும் அவர்களூடே பயணிக்கிற விதம். பாடப்படும் பாடல்கள். எல்லாமே ஸூத்திஙான விஷயம்.

குட்டிக் குட்டிக் கேரக்டர்களின் காதல், ப்ரோபசல்கள், பார்வை பறிமாற்றங்கள், நூல் விடுதல், புதிய காதலுக்கான தொடக்கம், காதலை சொல்ல சான்ஸ் தேடும் தருணங்கள் என மாண்டேஜுகளாய் படம் முழுவதும் விரவியிருக்கும் “வாவ்” தருணங்களின் படப்பிடிப்பும், எடிட்டிங்கும். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் போகும் நிகழ்வுகளில் இடையே ஏற்படும் வழக்கமான காலேஜ் சண்டை. அது கொண்டு போய் நிற்க வைக்குமிடம் போலீஸ் ஸ்டேஷன். கொஞ்சமே கொஞ்சம் திணிக்கப்பட்டதாய் தெரிந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வரும் காட்சிகள், வசனங்கள் எல்லாமே ஆஸம்.

குறிப்பாய் சொல்லப் போனால் முப்பதுக்கும் மேற்பட்ட கேரக்டர்கள். இதில் யாருமே ஹீரோ, ஹீரோயின் என தனியாய் பிரிக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சிக்கு முக்கியமானவர்கள். க்ளைமேக்ஸில் தங்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு விடிவு தேடி கடக்கும் நெடிய இரவும், அதன் முடிவும், பாடலும் மயிர்க்கூச்செரிய வைக்கும் காட்சிகள். ஏனோ தெரியவில்லை. மிகவும் எமோஷனலாய் என்னை மாற்றிவிட்டது.

கல்லூரி கல்சுரலில் கேமராவை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு, நான்கைந்து நாட்கள் கழித்து, எடுத்துப் போட்டு பார்த்து எடிட் செய்த படம் போல அத்துனை இயல்பான படப்பிடிப்பு. ஞானம் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு.  அட்டகாசமான அபிரிட் சைனின் இயக்கம். மிக இயல்பான நடிப்பை நல்கிய நடிகர்கள். என ஒரு கோஜாஜ் குதூகல உணர்வை அளித்த படம். “பூமரம்”


Aug 25, 2018

மேற்கு தொடர்ச்சி மலை

ட்ரோனை கண்டு பிடிச்சவனை பாராட்டணும். அதை கதைக்கு சரியாய் பயன்படுத்திய தேனி ஈஸ்வருக்கும், லெனின் பாரதிக்கும் வாழ்த்துக்கள். மேற்கு தொடர்ச்சி மலை நல்ல சினிமா, யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு, பெஸ்டிவல் படம் பார்க்குறவங்க, சமூக விழிப்புணர்வு உள்ளவர்களுக்கான படம்.
குட்டிக் குட்டி கேரக்டர்கள். சினிமா வாடையே இல்லாத நடிகர்கள். அது தான் ப்ள்ஸ். சில சமயங்களில் மைனஸ். படம் நெடுக இயல்பாய் வெளிப்படும் அரசியல் கருத்துக்கள் ப்ளஸ்னா கருத்தா ஆயிரம் பேசினாலும், ஒட்டாம இருக்கிறது மைனஸ்.
ரெங்கசாமியோட வாழ்க்கை தடம்புரண்டதுக்கு காரணம் விவாசாயம் பொய்ததனினால் இல்லை. அவனுக்கு பெரிதாய் சம்பந்தமே இல்லாத கொலையினால் எனும் போது எமோஷனால் இன்வால்வ் ஆக முடியவில்லை. அந்த நிலம் அவனிடமிருந்து பறி போகும் போது பொழைக்க வந்து பெரும் பணக்காரணாய் மாறியவன் மீது கோபம் வருவதற்கு பதிலாய் சரி அவனும் என்னதான் பண்ணுவான் என்ற எண்ணம் மேலோங்கி விடுவதும். இதுதான் நடக்க போகிறது என்கிற ஏழை டெம்ப்ளேட் வாழ்க்கை தெரிந்தபடியால் துணுக்குற முடியவில்லை. அந்த கேரக்டரின் நடிப்பும். அதன் வளர்ச்சியும் நிஜமோ நிஜம். எங்கேயும் எல்லா இடத்திலேயும் மீடியேட்டர்கள் தான் வாழ்வார்கள். வாழ்கிறார்கள்.
உலகெங்கும் குறுக்கும் நெடுக்குமாய் விரவிக் கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களில் ஒருவனாய் ரெங்கசாமி மீது வருத்தம் வரவில்லை.
இளையராஜா என்று பெயர் போட்டிருக்கிறார்கள். ஒரு பாடலில் எமோஷனாலாய் மாற உதவியிருக்கிறார். பட் அதுவரை உலக படமாய் போன படம் பட்டென யதார்த்ததிலிருந்து மாறி கொஞ்சம் கமர்ஷியல் படமாய் ஆனது.
பட் என்னடா படமெடுக்குறீங்க என்று காண்டாகி திரிகிறவர்களுக்கும், நல்ல படமே வராதா?னு ஏங்குறவங்களும், இதோடா நல்ல படம் பாரு என்று உலகபடம் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு அல்வா. டோண்ட் மிஸ். ஐ லைக் திஸ் மூவி.

Aug 15, 2018

கொத்து பரோட்டா 2.0 -63

கொத்து பரோட்டா 2.0
கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் கொடுத்த மிரட்டல்கள் தான் என்கிற அவரின் கடிதமும் தான். உடனே கந்து வட்டி பைனாசியர், ஏற்கனவே ஜி.வியின் சாவுக்கு காரணமானவர். அரசியல் பலம் காரணமாய் அராஜகம் செய்கிறவர், வீட்டிற்குள் வந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுவார் என்றும், பணம் கொடுக்க வேண்டியவரை கூட்டிக் கொண்டு போய் ஒர் அறைக்குள் நிர்வாணமாய் நிற்க வைத்து, திட்டுகிறவர் என்றெல்லாம் டெரர் செய்திகள் மீண்டும் வர ஆரம்பிக்க, தமிழ் சினிமாவே கந்துவட்டியால் அவதிப்படுகிறது என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாய் கந்துவட்டி செழியனை கைது செய்ய வேண்டுமென்று விஷால் ஒரு பக்கம் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் அவரிடம் தொடர்ந்து பணம் வாங்கி படமெடுத்து வரும் பல தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் அன்பு செழியன் மீது பழி சொல்கிறார்கள் என்றும், அவர் நல்லவர் எங்கள் வகையில் இது வரை எந்த மாதிரியான தொந்தரவும் செய்ததில்லை என்று பத்திரிக்கையாளர்களைக் கூப்பிட்டு பேசும் அளவிற்கு தமிழ் சினிமா இரண்டாய் பிரிந்து ஒரு பக்கம் சப்போர்ட்டும் இன்னொரு பக்கம் எதிர்ப்புமாய் பேசிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் எதிர்ப்பவர்கள் கூட அன்புவிடம் ஏகப்பட்ட கோடி கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள் எனவே இந்த் பிரச்சனையை வைத்து வட்டி கட்டாமல், செட்டில் மெண்ட் போக வாய்ப்பிருக்கிறது என்பதால்தான் கூவுகிறார்கள் என்று ஆதரிப்பவர்கள் ஒரு புறம் பேசி கொண்டிருக்க, உண்மையில் பணம் கொடுத்தது சசிகுமாருக்குத்தானே தவிர இறந்த அவரது உறவினர் அசோக்குமாருக்கு இல்லாத போது, தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பராய் கூட இல்லாதவரை எப்படி தயாரிப்பாளர் என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் பணம் கேட்பதானால் ச்சிகுமாரிடம் மட்டுமே அன்பு செழியன் கேட்க முடியும் என்கிற போது இந்த மரணமே கொஞ்சம் குழப்படியாய் உள்ளது என்று ஒரு சாரார் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை யார் கடன் வாங்கியாவது படமெடுக்க சொல்கிறார்கள்? என்று நக்கலாய் கேட்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும் இம்மாதிரியான பிரச்சனைகள் வருவதற்கான முக்கிய காரணம் சரியான முறையில் ப்ளான் செய்யாமல் போய் மாட்டிக் கொள்வதே முக்கிய காரணம். முக்கியமாய் அதர் பீப்பிள் மணி எனும் ஓ.பி.எம் மூலம் வியாபாரம் செய்கிறவர்கள் அனைவருமே இந்த பிரச்சனையில் ஒரு நாள் அல்லது ஒருநாள் மாட்டிக் கொள்வார்கள் என்பது உறுதியான விஷயம்.

படத்துக்கு ரெட் போட்டுவிட்டார்கள் அதனால் பெரும் நஷ்டம் வரும் என்று புலம்புகிறவர்கள் இதற்கு முன்பு இப்படியெல்லாம் நடந்ததில்லை என்பது போல புலம்புவது அதிசயமாய் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் கொட்டுவாயில் லேப் லெட்டர் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகாது எனும் போது செட்டில் மெண்ட் பேசி ரிலீஸான பல நூறு படங்களை கண்டது தான் தமிழ் சினிமா.இன்றைக்கு திடீரென அன்பு தான் இந்த ரூல்ஸை வைத்து மிரட்டுவதாக சொல்வது அதீதமே

கடன் என்றைக்குமே அன்பை முறிக்கும். அது அன்புவிடமிருந்து வாங்கினாலும் சரி அல்லது வேறு எந்த மாநிலத்து ஆட்களிடம் வாங்கினாலும் சரி. சரியான ப்ளானிங் இல்லாமலும், தன் மார்கெட்டை சரி கட்டிக் கொள்ள பெரிய பட்ஜெட் படமாய் எடுக்க ஆசைப்படும் நடிகர்களும், இன்னமும் நூறு கோடியெல்லாம் தமிழ் நாட்டிலேயே வசூலிக்க முடியாத மார்கெட்டில் நூறு கோடியில் படமெடுக்க ஆசைப்படும் நாயகர்கள், இயக்குனர்கள் இருக்கும் வரை இம்மாதிரியான  உயிரிழப்புகளும், குற்றச்சாட்டுக்களும் இருக்கத்தான் செய்யும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Mugguru Love Story
யெப் டிவியின் லேட்டஸ்ட் ஒரிஜினல் வெப் சீரீஸ். பிரபல நடிகர் நவ்தீப் நாயகனாகவும், அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய்யின் சிறப்பு தோற்றத்துடன் வெளிவந்திருக்கும் புதிய சீரீஸ். சுவாதி விஜயவாடா பெண். எதிலும் தனக்கு எது தேவை என்று முடிவெடுக்க முடியாதவள். அவளுடய கட்டுப்பெட்டி அம்மா ஐஸ்வர்யா. அப்பா செல்லமான சுவாதி தனியே ஹைதராப்பத்தில் வேலைக்கு போக விருப்பபடுகிறாள். அம்மாவோ அவளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட பையனைத் தேட, அப்பாவின் செல்லத்தின் காரணமாய் ஹைதை வேலைக்கு வருகிறாள்.  வந்த இடத்தில் அவள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளர் நவ்தீப்புக்கும் இடையே காதல். அதே நேரத்தில் ரேடியோ ஆர்.ஜே ஒருவனிடமும் காதல். ஒரே நேரத்தில் இருவரையும் எப்படி காதலிப்பது என்ற சுவாதியின் வழக்கமான குழப்பம். குழப்பத்திலிருந்து சுவாதி வெளியே வந்தாளா? இல்லையா? யாரை தெரிந்தெடுத்தால் என்பதுதான் கதை.
சிம்பிளான கதை ஐஸ்வர்யா, நவ்தீப் தன்ராஜ் போன்ற தெரிந்த நடிகர்கள். நல்ல ப்ரொடக்‌ஷன் குவாலிட்டி என்றாலும் ஆங்காங்ககே சில எபிசோடுகளில் பட்ஜெட் பல்லை காட்டுகிறது. சுவாதியாய் தேஜஸ்வினி. அந்த பெரிய உதடுகள் முகத்துக்கு செக்ஸியாய் இருக்க, முகம் பாவமாய் வைத்து குழப்படியாய் பேசிடும் இடங்களில் ஆரம்பித்து பல இடங்களில் க்யூட்டாக நடிக்கிறார். ஐஸ்வர்யாவின் கேமியோவும் அழகு. அர்ஜுன் ரெட்டி விஜய்யை பயன் படுத்தியவிதம் இண்ட்ரஸ்டிங். ஆங்காங்கே கொஞ்சம் நாடகத்தனமான டயலாக் காமெடிகள் இருந்தாலும் நாயகியின் கேரக்டரைஷேஷன், அவளுடய தோழியாய் வரும் பெண், முறைப்பையன் ஆகியோரை வைத்து வசனம் மூலமாய் காமெடியை ஒர்க்கவுட் பண்ணிய விதம் சுவாரஸ்யம்.

மிக்கி ஜே மேயரின் டைட்டில் பாடல், ராஜ் கே நல்லியின் நீட்டான ஒளிப்பதிவு. நல்ல காஸ்டிங். ஷஷாங் ஏலட்டியின் சிறப்பான இயக்கம் சீரிஸின் வெற்றிக்கு உதவியிருக்கிறது.  இன்னும் கொஞ்சம் ரிச்சான பட்ஜெட் கொடுத்திருக்கலாம், நாடகத்தன்மையை குறைத்திருக்கலாம், க்ளீஷே காட்சிகளை குறைத்திருக்கலாம், திரும்ப திரும்ப காதல் குழப்பம் போன்றவைதானா? இந்திய வெப் சீரிஸ் என்றாலே இப்படித்தானா? என்று தோன்றினாலும் கிட்டத்தட்ட ஸ்டார்டப் நிலையில் தான் இந்திய வெப் சீரிஸ் உலகம் இருக்கிறது. எனவே இலகுவாய் மக்களிடம் சேரும் கண்டெண்டுகளை கொஞ்சம் வித்யாசமாய் அணுக ஆரம்பித்திருக்கிறார்கள். இதை இன்னமும் தமிழ் வெப் சீரிஸ் உலகம் முயற்சிக்கவேயில்லை என்பது வருத்தமே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டூலெட் – குறும்படம்
வாடகைக்கு வீடு தேடுவது என்பது இம்சையான விஷயம். அதை தேடும்போதும், தேட நேரும் போது கிடைக்கும் அனுபவங்களையும் பார்க்கும் போது எப்பாடுபட்டாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டுமென்ற வெறி வரும். அப்படி வெறி வந்து உறுதி பூண்டவர்கள் வீடு வாங்கி சந்தோஷமாய் இருந்த கதையும் உண்டு. வாங்கி கடன்காரர்கள் ஆகி இம்சைக்குண்டானவர்களும் உண்டு. ஆனால் சொந்தமாய் வீடு வாங்க முடியாதவர்கள் எனும் பெரும்பான்மை இனம் உள்ளவர்கள் உள்ள நாட்டில்,  பேச்சுலர்களுக்கு ஒர் சட்டம், குடும்பஸ்தர்களுக்கு ஒர் சட்டம், இண்டிபெண்டண்ட் பெண்களுக்கு ஒர் சட்டம், முஸ்லிம்களுக்கு, ப்ராமணர்களுக்கு, சைவம் , அசைவம் என ஆளுக்கு ஏற்றார்ப்போல வாடகைக்கு வீடு விடுகிறவர்கள் அவர்களுக்கு என்று ஒரு சட்டத்தை, பொதுபுத்தியை, வரைமுறையை வைத்திருக்கிறார்கள். இக்குறும்படம் இவையெல்லாவற்றையும் சில ஷாட்களில் மிக அழகாய் சொல்லி க்ளைமேக்ஸில் பொட்டில் அடித்திருக்கிறார் இயக்குனர் ஜெயசந்திர ஹஸ்மி.  https://www.youtube.com/watch?v=OqhpBqg5NO4&feature=youtu.be
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடந்த கதை – குறும்படம்
சற்றே பழைய குறும்படம். அழகிய பெரியவனின் “குறடு” சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார்கள். நகரங்களில் எல்லோரும் செருப்பு போட்டு நடப்பது சாதாரணம்விஷயம். ஆனால் கிராமங்களில் இன்றைக்கும் ஜாதி வேற்றுமை, தீண்டாமை போன்றவைகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி அதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட ஒர் இளைஞன் செருப்புப் போட்டு நடந்த கதைதான் இது. ஏன் நாம் மட்டும் செருப்பு போடக்கூடாது? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் அலையும் சிறுவன், கொஞ்சம் புரிந்து ஏன் நாங்க செருப்பு போடக்கூடாது என்று கேள்விகேட்டு அடிவாங்கியவன், ஊருல இருக்குற எல்லாம் நாயும் மேலத்தெருவுல ஒண்ணுக்கடிக்குது. அந்த நாயைவிடவா குறைஞ்சிட்டோம் என்று பெருமும் இளைஞனுக்கு செருப்புப் போட்டு நடக்க ஒர் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதையும் ஊர் மேலத்தெரு எதிர்க்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறான் அந்த இளைஞன் என்பதை ப்ளாஷ்பேக்காய் புதிய செருப்பைபோட்டு ஆனந்தமாய் நடக்கும் தன் பேரனுக்கு செல்ல ஆசைப்படுகிறவரின் பார்வையில் போகிறது. அழுத்தமான கதை. ஜாதிக் கொடுமையை, தீண்டாமையை அழுத்தமாய் பேசியிருக்கிறது. மைனஸாய் பார்த்தால் கொஞ்சம் நீளம். பட்.. சொல்ல வந்ததை மிக அழுத்தமாய், நேர்மையாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பொன்.சுதா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Aug 13, 2018

சத்யம்ங்கிறது தியேட்டர் இல்லை எமோஷன்


சத்யம் தியேட்டரை மூடப் போகிறார்கள் என்று அறிந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை நல்ல சினிமா பார்த்திருக்கிறோம் என்று மனம் லிஸ்ட் போட்டது. காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கோலோச்ச ஆரம்பித்த காலத்தில் தேவி, சத்யம், அபிராமி போன்றவர்கள் மட்டுமே இருந்த காலம். தெலுங்கு குஷி எல்லாம் நூறு நாட்களுக்கு மேல் சாந்தத்தில் ஓடிய காலம். 

தனியாய் சினிமா பார்க்க ஆர்மபித்த காலத்திலிருந்து சத்யம் மேல் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் சாந்தமில் போடப்படும் க்ளாஸிக் ஆங்கில படங்கள். மிகவும் சிறுவனாய் இருந்த காலத்தில், சாந்தம், பைலட் ஆகிய திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் அதுவும் ஆக்‌ஷன், எல்லாம் இல்லாத நல்ல ட்ராமா, கதை சொல்லும் படங்கள் எல்லாம் காலைக் காட்சி போடுவார்கள். அங்கே தான் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான “பரத் அனே நேனு” வின் ஒரிஜினலான “த அமெரிக்கன் ப்ரெசிடெண்டை” பார்த்தேன். 

இண்டர்வெல்லில் தம்மடித்துக் கொண்டு அதீத ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு படப்பெயரைச் சொல்லி, டைரக்டர், ஆக்டரி பேரைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கும் மாமாக்களை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். அவர்களையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனான என்னை ஆரம்ப நாட்களில் அவர்கள் மதிக்கவேயில்லை. தொடர்ந்து நான்கைந்து படங்களில் இரண்டு தியேட்டர்களில் பார்க்க ஆர்மபித்ததும்,கூப்பிட்டு படங்கள் பற்றியும், அந்தப்படஙக்ள் எங்கே எப்போது இந்த திரையரங்குகளில் வெளியாகிறது போன்ற தகவல்களை சொல்வார்கள். அப்படி என்னுள் சினிமாவை வளர்த்த தியேட்டர்

கல்லூரி முடித்த பின் முன்னாள் ப்ளேமுடய இந்நாள் காதலனுடன் Fx Murder by Illusion படத்தை கார்னர் சீட்டில் அவளுடன்  பார்த்த அரங்கு. என எனக்கு சத்யமுடனான நெருக்கம் அதிகம். அதை மூடப் போகிறார்கள் என்றதும் துக்கம் தொண்டையை அடைக்காமல் என்ன செய்யும். கடைசி படம் ஃப்ரீ வில்லி 2 நைட் ஷோ பார்த்துட்டு எல்லாரும் தியேட்டர்லேர்ந்து கிளம்பிப் போனப்புறம், தியேட்டர் வாசல்ல இருக்கிற படியில உட்கார்ந்துட்டு கிளம்பினேன்.  

மூட நினைச்சு அங்க வேற இப்ப இருக்குற கார் பார்க்கிங் இடத்துல ஒரு பில்டிங் கட்ட கடக்கால் எல்லாம் பொட்டுட்டாங்க. முடின தியேட்டர் வாசல்ல ஒரு வாட்டி நின்னுட்டுத்தான் மவுண்ட்ரோடை க்ராஸ் பண்ணுவேன். அப்ப ஒரு கெட்டது சத்யம் தியேட்டர் குடும்பத்துக்கு நடந்தது. குடும்பப் பெரியவரை ஆந்திராவுல நக்ஸலைட் சுட்டுக் கொன்னாங்க. அமெரிக்காவுல இருக்குற அவரு பையன் வந்தாரு. எல்லா ப்ராஜெக்டும் அப்படி அப்படியே இருக்க, சத்யமை மீண்டும் திறக்குற வேலைய ஆரம்பிச்சாரு.  என் நியாபகம் சரியாய் இருந்தா இந்தியன் திரைப்படம் தான் சத்யமை புதுப்பிச்சு ஆரம்பிச்சு வச்ச படம். இப்போ மாதிரியான புதுப்புது டிசைன். கலர், நல்ல சீட், சவுண்ட், டி.டி.எஸ். என பல புது விஷயங்கள். தியேட்டர்னா இப்படிக் கூட இருக்கலாமான்னு வாயை பொளக்க வச்சாங்க.. கமலுக்காக ரெண்டு வாட்டின்னா தியேட்டருக்காக இன்னும் ரெண்டு வாட்டி பார்த்த படம் இந்தியன்.

கொஞ்சம் கொஞ்சமா அவர்கள் சீட்டுக்களை மாற்றி அமைத்த விதம். புதிய தியேட்டர்களை வடிவமைத்தது. டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷனில் இன்னவோஷன் என பல புதியவைகளை தமிழ் நாட்டு திரையரங்குகளுக்கு அறிமுகப்படுத்தியது சத்யம்தான். தமிழ் நாட்டில் தியேட்டர்களில் புரட்சியை ஏற்படுத்தி, தியேட்டருக்கு என்றே தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டது சத்யம்தான். 

ஆன்லைன் புக்கிங். மழைக்காலங்களில் ஓப்பன் பார்க்கிங்கிலிருந்து காரில் வரும் ரசிகர்களை பெரிய குடைக் கொண்டு தியேட்டர் வரை அழைத்து வரும் பாங்கு. டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் ஆரம்பக் காலத்தில் பல சமயங்களி ஹேங்க் ஆகி படம் மீண்டும் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்தே ஓட ஆரம்பிக்கும் அப்போதெல்லாம் முக்கால் வாசி படம் ஓடியிருந்தாலும் கூட, படத்தின் டிக்கெட் பணம், மற்றும் பார்க்கிங் பணம் எல்லாவற்றையும் ரிபண்ட் செய்துவிடும் கஸ்டமர் சர்வீஸ். கொடுக்கும் காசுக்கு மேலாய் ரசிகர்களை அவர்களின் பின்னூட்டங்களை மதிக்கும் நிர்வாகம் என சொல்லிக் கொண்டே போகலாம். 

விஜய் படம் ஆடியோ லாஞ்ச் ஆனாலும் சரியாய் படத்தை ஆரம்பிக்க துறத்துனவங்க. என் படத்தோட ஆடியோலாஞ்சை சத்யத்துல வைக்க முடியாட்டாலும், அட்லீஸ்ட் சாந்தத்திலயாவது வையுங்கனு ஆசைப்பட்டேன். அத்தனை பிரஸ்டீஜியஸ் அரங்கு. 

இரண்டு சம்பவங்கள் என்னால் மறக்க முடியாது. ஒரு முறை தெலுங்கு படத்திற்கு டிக்கெட் வாங்கிவிட்டு பார்க்கிங்கில் வண்டியை வைத்துவிட்டு, அந்த டிக்கெட்டை வைக்கும் போது படத்தின் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை வேறு டிக்கெட் வாங்கலாம் என்று யோசித்து வாங்கும் முன் டிக்கெட்டை தொலைத்துவிட்டேன் என்று சொன்னேன். டிக்கெட் சீட் நம்பர் நியாபகம் இருக்கிறதா? என்றார். நம்பர் நியாபகம் இருந்ததால் சொன்னேன். உறுதிப்படுத்திக் கொண்டு நீங்க டிக்கெட் வாங்க வேணாம் சார். நீஙக் போய் படம் பாருங்க. ஆனால் வெளியே இருந்து யாராச்சும் டிக்கெட் எடுத்துட்டு வந்தா நான் உள்ளே விட மாட்டேன்னு சொல்ல முடியாது. ஒரு வேளை படம் ஹவுஸ் புல் ஆயிருச்சுன்னா உங்களை நான் வெளியே அனுப்ப வேண்டியிருக்கும். அப்படி ஏதும் ஆகலைன்னா.. நீங்க படம் பார்க்க நாங்க அனுமதிக்கிறோம் என்று சொல்லி என்னுடன் ஒரு ஆளை அனுப்பி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை  என்னை டிஸ்டர்ப் செய்யாமல் அதே சீட்டில் உட்கார வைத்தார்கள். பின்பு சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் ரோட்டில் கிடந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வர, அவரை அந்த சீட்டில் உட்கார வைத்துவிட்டு, எனக்கு பால்கனியில் ஒரு சீட்டை தெரிந்தெடுத்து உட்கார வைத்து, ஒரு மணி நேரம் வரை உடனிருந்து யாரும் அந்த சீட்டிற்கு வரவில்லை என்று உறுதி செய்து கொண்டு  கிளம்பினார். 

அதே போல கும்கி படத்திற்கு டிக்கெட்டை சத்யம் கவுண்டரில் வாங்கினோம். டிக்கெட்ட் ப்ரிண்டிங்கில் ஏதோ குழப்பம். ஒரே வரிசையில் ரெண்டு செட் டிக்கெட் பிரிண்டாகி அதில் எனக்கும் என் நண்பருக்குமான டிக்கெட் மாட்டிக் கொண்டது. எஸ்கேப் அரங்கில். சொன்னோம். ஒரு எக்ஸிக்யூட்டிவ் வந்தார். முதலில் வந்த டிக்கெட் பார்ட்டிகளுக்கு அவர்களது இடத்தை ஒதுக்கு கொடுத்து விட்டு, பத்து ரூபாய் டிக்கெட் வரிசையில் எங்களை உட்கார வைத்துவிட்டு,  ஒரு அரை மணி நேரம் படம் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, வெளியே போனார். படம் ஓடிக் கொண்டிருந்தது. ஆளைக் காணவில்லை. நம்முள் இருக்கும் கேட்டால் கிடைக்கும் ஆள் முழித்துக் கொள்ள, இவங்களை விடக்கூடாது என்று கருவிக் கொண்டிருந்த போது இடைவேளை. எழுந்தா என் முன்னாடி அதே எக்ஸிக்யூட்டிவ். கோபமா கத்தலாம்னு நினைச்சப்பா, ஒரு டப் பாப்கார்னுடன் ஒரு டால் கோக்கை கொடுத்துட்டு, தங்களுடய சைட் தவறு அதனால மன்னிக்கணும்னு எல்லாம் அதீத மன்னிப்பு கேட்டாஙக்.. சத்யம் நம்ம செல்லப்பிள்ளைங்கிறதுனால மனமிறங்கி மன்னிச்சூஊஊ. இதெல்லாம் ட்விஸ்ட் இல்லை. படம் எல்லாம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும் போது அந்த எக்ஸ்க்யூட்டிவ் மீண்டும் எங்களை அழைத்தார். தனியே கூட்டிப் போய் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் இரண்டு டிக்கெட்டுக்கான 240 ரூபாய் இருந்தது.  படமும் பார்த்துவிட்டு, இண்டர்வெல் ஸ்நாக்சும் கொறித்துவிட்டு, பணம் வாங்குவது உறுத்தலாய் இருக்க, எதுக்குங்க? என்று இழுத்தேன். எங்க தவறினால் உங்களுடய படம் பார்க்கும் அனுபவம் தடையாகிருச்சு. ஸோ. எங்களான காம்பன்ஷேஷன் என்றார். 

தொட்டால் தொடரும்  படத்துக்கு தியேட்டர் கேட்க போன போது, முனிகன்னையவிடம், அட்லீஸ்ட் ஸ்டியோ 5லயாவது ஒரு ஷோ கொடுங்க. ஏன்னா அது என் தியேட்டர் என்றேன். அதிர்சியாய் நிமிர்ந்தார். பின்ன என்னங்க நான் அத்தனை படம் உங்க தியேட்டர்ல பார்திருக்கேன் நான் கொடுத்த காசுல கட்டின தியேட்டர் தானே அது? என்றதும் சிரிகக்வே சிரிக்காதவர் சிரித்தார். ஸ்டூடியோ 5 திரையரங்கை கொடுக்காமல் எஸ்கேப்பில் கொடுத்தார். இப்படி பல விஷயங்கள்.  இப்ப சொல்லுங்க  சத்யங்கிறது ஏன் வெறும் தியேட்டர் இல்லை எமோஷனு.

கேபிள் சங்கர்

Love Per Square feet

Love Per Square feet
நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள் இந்திய மார்கெட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமேசான் ஒரு புறம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வரும் பிரபல படங்களை உடனடியாய் வாங்கி தன்னுடய ஸ்ட்ரிமிங் லிஸ்டில் அணிவகுக்கும் அதே நேரத்தில், ரியாலிட்டி ஷோக்கள் கூட தயாரித்து வெளியிட ஆரம்பிதிருக்கிறார்கள். சக போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ் அந்த அளவுக்கு சினிமா கண்டெண்டுகளுக்கு டஃப் பைட் கொடுக்காவிட்டாலும், தங்களது நெட்வொர்க்குக்காக மட்டுமே படங்களை தயாரித்து கொடுக்க, பிரபல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ப்ராட் பிட், வில் ஸ்மித் போன்ற பிரபல ஹாலிவுட் நடிகர்களை வைத்து நெட்ப்ளிக்ஸுக்காக மட்டுமே படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்கள். வில்ஸ்மித்தின் ப்ரைட் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. இப்படங்களின் வெற்றி மேலும் சுமார் 80 நேரடி ஸ்ட்ரிமிங்கிற்காக மட்டுமே தயாராகும் ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்க நெட்ப்ளிக்ஸ் தயாராகிவிட்டடது. ஜேம்ஸ் காமரோன், கிரிஸ்டபர் நோலன் போன்றோர் வெள்ளித்திரை அல்லாத ஒரு திரைப்படத்துக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நோலன் தனக்கு நெட்ப்ளிக்ஸ் அளித்த வாய்ப்பை மறுதளித்துவிட்டார்.

ஆனால் இந்திய படங்களைப் பொறுத்த வரை புதிய திறமைகள், உலகளாவிய வகையில் நேரடியாய் மக்களிடம் சென்றடைய இம்மாதிரியான ஸ்ட்ரீமிங் சர்விஸ்கள் பெரிய வரப்பிரசாதம். சென்சார் இல்லை, தயாரிப்பாளருக்காக, குத்து பாட்டு வைக்கத் தேவையில்லை. வெகுஜன மக்களுக்காக காம்பரமைஸ் செய்யத் தேவையில்லை என்பது போல பல சுதந்திரங்கள் இருந்தாலும், என் படம் பெரிய ஹிட் என்ப்தாய் மார்த்தட்டிக் கொள்ள டேட்டா கிடைக்காத பட்சத்தில் கொஞ்சம் சுவாரஸ்யக் குறைவாய்த்தாந்தோன்றும்.   தற்போது ஹிந்தியிலும் அதை ஆரம்பித்திருக்கிறார்கள். ஷாருக்கான், பர்ஹான் அக்தர், யாஷ் ராஜ் போன்ற பிரபல நிறுவனங்களிடம் வரிசைக்கட்டி ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. பிரபல நிறுவனங்கள் ஆட்டத்தில் இறங்கும் போது நிச்சயம் வெகு ஜன மக்களையும் சேர்ந்தடையும். சுமார் ஒரு மில்லியன் இந்திய வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நெட்ப்ளிக்ஸின் மார்கெட் உண்மையில் சொல்லப் போனால் தியேட்டர் மார்கெட்டை விட பெரிதாய் வளரக்கூடியது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் ஹிந்தியில் காதலர் தின ஸ்பெஷலாய் வெளிக் கொணர்ந்திருக்கும் ஹிந்தி நேரடி ஸ்ட்ரீமிங் படம் தான் “Love Per Square feet”

ரொம்பவே சிம்பிளான கதை. பாங்கில் வேலை செய்யும் மிடில் க்ளாஸ் சஞ்சய்க்கு எப்படியாவது ஒரு வீடு சொந்தமாய் வாங்க வேண்டுமென்பதே கனவு. அதே கனவு தலைமேலே உள்ளவன் கொஞ்சம் அதிர்ந்து நடந்தாலும், காரை கொட்டும் வீட்டிலிருந்து விடுதலை வேண்டி கனவு காணும் கரீனா.  சஞ்சய்யின் பாஸ் ரஷிக்கும் அவனுக்குமிடையே செக்ஸ் இல்லாத கில்மா உறவு போய்க் கொண்டிருக்கிறது. அதே போல கரீனாவுக்கும் அவளுடய உறவுக்கார சாமுவேலுக்குமிடையே திருமணம் செய்ய பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இருவருடைய கனவு வீட்டை அடைய ஒரு வழி கிடைக்கிறது அரசு சல்லீசு விலையில் குலுக்கல் முறையில் ஒதுக்கு ப்ளாட்டுக்கள். அதை எப்படியாவது வாங்க வேண்டுமானால் வேறு வழியே இல்லை. திருமணம் ஆனவராக இருக்க வேண்டியது கட்டாயம். அதனால் இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை வாங்க ப்ளான் போடுகிறார்கள். அதற்காக போலி திருமண ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் நடக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. இருவருடைய முன்னாள் காதல்களைப் பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும், காதல் என உறவாகி, புதிய வீட்டில் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் உறவுமாகிவிட, இருவரின் நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் பொஸஸிவாக மாறுகிறது.

எதையும் தடுக்க முடியாத ஒர் அசந்தர்ப்ப நேரத்தில் சஞ்செய்க்கும் ரஷிக்குமிடையே அந்தசம்பவம் நடந்து விட, அதை சொல்லாமல் இருப்பது துரோகம் என எண்ணி, உண்மையை சொல்லிவிடுகிறான். இதனால் இருவரிடையே பிரிவு உண்டாகிறது. வீடு வேண்டுமானால் இருவரும் ஒன்றாய் ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டி இருக்க, குடும்பத்தினர் அனைவரும் இவர்களின் ப்ரச்சனைகளுக்கு முன்னமே இருவரது திருமணத்துக்கும் ஒத்துக் கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க, என்ன நடக்கிறது என்ப்துதான் க்ளைமேக்ஸ்.

கொஞ்சம் டெம்ப்ளேட்டான ஹாலிவுட் தனமான காதல் காட்களும், பாடல்களும் இழுவையாய் இருந்தாலும், நம்மூர் ஆண்டவன் கட்டளையில் கட்டாயத்தினால் புருஷன் பொண்டாட்டி ஆகி அதனால் ஏற்படும் இன்னல்களை நகைச்சுவையுடன் சொல்லி பார்த்திருந்தாலும், விக்கி கௌஷல், அங்கிராவின் நடிப்பும், கண் உறுத்தாத ஒளிப்பதிவும், ஆங்காங்கே தெறிக்கும் இயல்பான நகைச்சுவையும் ஒரு நல்ல ஃபீல் குட் படத்தை பார்த்த திருப்தியை அளிக்கிறது.


Aug 9, 2018

கொத்து பரோட்டா 2.0-62

கொத்து பரோட்டா 2.0-62
கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இன்ஞினியரிங் கல்லூரி
என் மகனை பி.டெக் சேர்க்க பணம் கட்டிய போது கல்லூரி பஸ் வேண்டுமென்றால் 26-30 ஆயிரம் வரை சொன்னார்கள். கிலோமீட்டர் கணக்கிட்டு. அதுவும் ஆப்ஷன் தான் என்ன இப்போதே பணம் கட்டவில்லையென்றால் பின்பு பஸ் வசதியை பெற முடியாது என்ற லேசான பயமுறுத்தல் மட்டுமே இருந்தது. என் மகனின் நண்பன் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு கல்லூரி பஸ் பீஸ் 46 ஆயிரம் ரூபாய். நீ பஸ்ஸில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. 46ஆயிரம் பீஸ் கட்டியே தீர வேண்டும். அவனுடன் படிக்கும் பெண் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் வீடு. ஆனாலும் அவள் கல்லூரி பஸ்ஸுக்கு பீஸ் கட்டியாக வேண்டும் என்று வசூலிக்கிறார்கள். கல்லூரி பீஸுடம் இந்த தொகையையும் கட்டாயமாய் கட்டியே ஆக வேண்டும். கல்விக்கான தொகையே பெரும் பாராமாய் பெற்றோர்களுக்கு இருக்க, இம்மாதிரியான கட்டாய கொள்ளைகளை யார் தட்டிக் கேட்பது?. பெற்றோர்களும் நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதுமென்று கேள்வி கேட்க வழியில்லாமல் பணம் கட்டி விடுகிறார்கள். இது முதல் வருடம் மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கும் இதே ரூல்ஸ்தான். இவர்களைப் போல இன்னும் பல கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் பெற்றோர்களிடம் தங்கள் கொள்ளையை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
லஷ்மி குறும்படத்தைப் பற்றி சென்ற வாரம் நான் எழுதிய வேளையில் சோசியல் நெட்வொர்க்கில் பெரிய  சர்ச்சையே ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரத்தையும், பெண்களையும் கேவலப்படுத்தியிருப்பதாக ஒரு குழுவும், பெண் சுதந்திரம் என்று இன்னொரு குழுவும், புருஷன் தப்புப் பண்ணா பொம்பளையும் தப்புப் பண்ணலாமா? என்றும், தப்பு ரைட்டு எல்லாம் அவங்கவங்க நிலையிலிருந்து பாக்கணும் என நடுநிலை கும்பலும் விவாதித்து அந்த குறும்படத்தை பெரிய ஹிட்டாக்கிவிட்டார்கள். இதுல எப்படி பாரதியார் பாடலைப் பயன்படுத்தலாம் என்று தனி ஆவர்தனம் வேறு. இப்படி பல சர்ச்சைகளை இக்குறும்படம் உருவாக்கினாலும், மனித உறவுகளிடையே ஏற்படும் முரண் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். அது சுவாரஸ்யமா இல்லையா? என்பது கேட்பவர்கள், எதிர் கொள்கிறவரின்  மனநிலையை, பொறுத்தது. அந்த குறும்படத்தில் லஷ்மி எடுக்கும் முடிவை அந்த கதையின் முடிவாய் நினைத்து பெரிது படுத்தாமல் போகிறவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையுமில்லை. ஆனால் அது தான் சமூகத்தின் நிஜ முகம் என்று நினைத்துக் கொண்டோ, இதைப் பார்த்து நம் வீட்டுப் பெண்கள்/ ஆண்கள் தவறு செய்வார்கள் என்றோ பயப்படுகிறவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று எனக்கு படுகிறது.  பெண்கள் நாங்கள் என்ன அவ்வளவு கீழ்தரமானவர்களா? என்றும், அந்த பொண்ணு ரிலேஷன்ஷிப்பப் பத்தி பேசுற ஆம்பளைங்க எங்கயாச்சும் அவ புருஷனோட ரிலேஷன்ஷிப் பத்தி பேசினாங்களா? என்றால் இல்லை. ஆணுக்கு ஒர் கட்டுப்பாடு, பெண்ணுக்கு ஒன்று என்று விவாதம் செய்கிறவர்கள் பல பேர் தங்களை பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் தான். பெரும்பாலும் உறவுகளிடையே ஆன இன்செக்யூரிட்டி தான் இம்மாதிரியான விவாதங்களை வெளிக் கொணர்கிறது என்பது என் எண்ணம். இந்த உலகம் உள்ளவரை இந்த ஆண் – பெண் உறவுகளிடையே ஆன முரண் இருந்து கொண்டேதானிருக்கும். ஸோ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆழ்கடல் -குறும்படம்.
அதே லஷ்மி பிரியாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இன்னொரு குறும்படம் தான் இது. இதிலும் பேசப்படுவது ஆண் பெண் உறவுகளிடையே ஆன காம்ளெக்ஸான விஷயம் தான். காதல் என்றால் ஒருவன் ஒருத்தியுடன் தானா? அவர்களுடய ரிலேஷன்ஷிப்புக்கு அர்த்தம் என்ன? பெயர் என்ன? என்பது போன்ற பல கேள்விகளை  இக்கதையில் வரும் பெண் இயக்குனருக்கும் , ஆண் எழுத்தாளருக்குமிடையே ஆன வசனங்களிடையே பேசப்படுகிறது சென்சிட்டிவான , ஆனால் போல்ட்டான வசனங்கள், ஆரம்பத்தில் பர்சனலாய் தெரியும் காட்சிகள் சட்டென கதையின் காட்சிகளாய் மாறும் அநாயசம் எல்லாவற்றையும் மீறி அதீத ஆங்கிலம் படத்தை நம்மிடமிருந்து அந்நியபடுத்துகிறது என்பது ஒரு புறம் உண்மை. மைனஸாய் புக்கிங் ஆங்கில வசனங்கள் இருந்தாலும் ஹரிஷ் உத்தமன், லஷ்மிபிரியாவின் நடிப்பும் பின்னணியில் வரும் அழகான பாடல், ஒளிப்பதிவு எல்லாம் குட் ரகம். குட்டி ஆண்ட்ரியாவாக லஷ்மிப்ரியா உருவாகி வெளிவரும் நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.  https://www.youtube.com/watch?v=0gbIEVETpb0
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கால் கட்டு – வெப் சீரீஸ்
மிக சீரியஸான கண்டெண்டாய் இல்லாமல் கணவன் - மனைவிக்கிடையே நடக்கும் ஊடல், கூடலை மட்டுமே வைத்து சின்னச் சின்ன எபிசோடுகளை தருகிறார்கள் இவர்கள். எல்லாமே 5 நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள். முதல் எபிசோடில் கொஞ்சம் அந்நியமாய் இருந்த ப்ரதீப், சத்யாவின் நடிப்பு போகப் போக அந்நோன்யமாய் மாறிவிட்டதிலிருந்தே சீரீஸின் வெற்றி புரியும். எழுதி இயக்கி தயாரித்திருப்பவர் வெற்றி. இன்ஸ்டண்டாய் துணுக்கு போல அழகான குட்டிக்குட்டி சம்பவங்களின் தொகுப்பை பார்க்க விரும்புகிறவர்களுக்கு. https://www.youtube.com/watch?v=V1j3vHIqZ4g&t=7s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Qarib Qarib Singlle
 Before sunrise, sunset போன்ற படங்களை எடுக்க நிறைய பேர் முயற்சித்திருந்தாலும் சரியாய் கை கூட போனது தான் அதிகம். ஏனென்றால் இரண்டு பேர் மட்டுமே பயணிக்கிற படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள், நிறைய பயணங்கள், அற்புதமான நடிப்பு என எல்லாம் கலந்து கட்டி அமைந்தால் தான் படம் ஒர்க்கவுட் ஆகும். இந்த படங்களில் இன்ஸ்பயர் ஆன பல பேர் ஒரிரு காட்சிகள் அம்மாதிரி அமைத்து வெற்றிப் பெற்றிருந்தாலும் முழு படம் அமையவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தப்படம் அதை தாண்டி வந்திருக்கிறது. வியோகி மிடில் ஏஜ் ஆசாமி. கொஞ்சம் பணக்காரன். லொட,லொட பேச்சுக்காரன். இதையெல்லாம் விட அற்புதமான கவிஞன். ஜெயா விதவை. அழகி. சொந்தக் காலில் நிற்பவள். தன் தனிமையை போக்கிக் கொள்ள எதையாவது பிடித்து நிற்க மாட்டோமா என்று அலைபாயும் 35 வயதில் நிற்பவள். இவளின் தனிமையை குழந்தையை பார்த்துக் கொள்வதிலும், உறவினர்களுடன் ஷாப்பிங் போக உடன் போவதிலும் கழித்துக் கொண்டிருப்பவளிடம், அவளது தோழி, அட்லீஸ்ட் டேட்டிங் சைட்டில் யாரையாவது பிடித்து, டெம்பரவரி ரிலேஷன்ஷிப்பாவது வைத்துக் கொள் என்கிறாள். சிங்கிள் சைட்டில் ரிஜிஸ்டர் செய்த மாத்திரத்தில் நிறைய ஆபர்கள் வர, வியோகியின் டீசண்ட் அப்ரோசின் காரணமாய் சந்திக்க முடிவு செய்கிறாள்.

ந்திப்பில் அவனின் ஆளுமை எரிச்சலடைய வைத்தாலும் வழியேயில்லாமல் அவனுடன் பயணிக்க வேண்டியிருக்க, தன்னைப் பற்றி சொல்லும் போது தான் மூன்று பெண்களை காதலித்திருப்பதாகவும், அவர்களுடன் பிரேக்கப் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் அவர்கள் எனக்காக மனதின் ஓரத்தில் அழுது கொண்டிருப்பதாகவும் சொல்ல, அப்படியெல்லாம் இல்லை என்பவளிடம் வா கூட்டிப் போய் காட்டுகிறேன் என்கிறான். இவர்களின் பயணமும், அந்த காதலிகள் இவனிடம் வைத்திருக்கும் காதலும், இவர்கள் இருவருக்கிடையே ஏற்படும் நெருக்கம், பிரிவு தான் படம்.

படம் முழுவதும் நம்ம பூ பார்வதியும், இர்பான் கானும் அட்டகாசப் படுத்தியிருக்கிறார்கள். மிடில் ஏஜ் டேட்டிங் என்பதால் அச்சு பிச்சு பேச்சில்லை. அறிவார்ந்த பேச்சு. லேசான அலட்டல், லொடலொடவென தன்னைப் பற்றியும் தன் காதலிகளைப் பற்றியும் நிறுத்தி நிதானமான பேசும் முறை, கவிதை சொல்லும் விதம், பார்வதி தன்னை இக்னோர் செய்யும் போது காட்டும் முதிர்ச்சி, பார்வதியை இம்பரஸ் செய்வதற்காக பக்கோடா வாங்கப் போய் ரயிலை மிஸ் செய்துவிட்டு, அந்த ரயில பிடிக்க பயணம் செய்யும் காட்சியில் அவர் காட்டும் நிதானம்தன் முன்னால் காதலிகளை கண்டதும் கண்களில் வெளிப்படுத்தும் சந்தோஷம் என மனுஷன் அட்டகாசமாய் நடித்திருக்கிறார். 


தனிமையும், துணை தேடும் வேட்கையும் ஒரு சேர்ந்திருக்க, இயல்பிலேயே கொஞ்சமே கொஞ்சம் அர்தடாக்ஸ் மலையாளி உள்ளே இருக்க, முதல் சந்திப்புக்கு தயாராகும் காட்சியில் புதுப் பெண்ணைப் போல பார்வதி காட்டும் எக்ஸ்பிரஷன்கள் ஆஸம். கண்களில் எத்தனை பரபரப்பு, எதிர்பார்பு. ஒரு பக்கம் இர்பானின் தொடர் பேச்சு, இரிடேஷன்களை எல்லாவற்றுக்கும் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்களில் பார்வதி ஸ்கோர் செய்து கொண்டே போய்விடுகிறார். இருவருக்குமிடையே ஆன புரிதல் வரும் காட்சிகள் திணிக்கப்படாமல் மிக இயல்பாய் அமைத்து, இயக்கிய தனுஜா சந்திராவின் இயக்கம், ஈஷிட் நாராயணின் ஸுமூத் ஒளிப்பதிவு, விஷாலின் உறுத்தாத இசை, கான், பார்வதியின் அற்புதமான நடிப்பு என இதயத்தை வருடும் ஃபீல் குட் மிடில் ஏஜ் காதல் கதை.E

Aug 3, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது? 16

நான் நடுக்கடல்லேர்ந்து சினிமாவுக்கு வந்தவன் சார் என்றார் நண்பர். போனில். என் சினிமா வியாபாரம் புத்தகத்தைப்   சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்துவிட்டு, பல நண்பர்களுக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே என்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் சமயம் இப்போதுதான் கிடைத்து என்றார்.

“நன்றி.. அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன நடுக்கடலேர்ந்து சினிமாவுக்கு வந்தேன்கிறீங்க?. “ என்றேன் ஆவல் தாளாமல்.

“ஆமாம் சார் நான் ஒரு மரைன் இன்ஜினியர். பணம் சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டேயிருந்தாலும் ஏதோ ஒண்ணை மிஸ் பண்றோம்னு தோணிட்டேயிருதுச்சு.  ஒரு நாள் நடுக்கடல்ல என் கேப்டன் கிட்ட சொன்னேன். நான் சினிமாவுக்கு போகப் போறேன். இந்த வேலை வேணாம்ணு. அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். சரி போன்னுட்டு. ஹெலிக்காப்டரை வர வழைச்சு, கரையில இறங்குனவன் நான்.”

அவர் சொன்னது எனக்கு த்ரில்லிங் அனுபவமாய் இருந்தது. ஆனால் அப்படி ஆவலாய் தமிழ் சினிமாவுக்குள் வந்தவரின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை கேட்க மனம் பரபரத்தது.

“ஆனா பாருங்க. எந்த சினிமாவுக்காக பறந்து வந்து இறங்குனேனோ.. அது என்னை அவ்வளவு சுலபமா வரவேற்கவேயில்லை. தேடல்.. தேடல். தேடல். கொஞ்சம் கொஞ்சமா காண்டேக் பிடிச்சு ஒரு அஸிஸ்டெண்டா வரத்துக்குள்ள தலையால தண்ணி குடிக்க வேண்டியதாப் போச்சு. அஸிஸ்டெண்ட்னா… அத்தனை மதிப்பான வேலையில்லை. அதுவும் என்னை மாதிரியான மரியாதையான இடத்துலேர்ந்து வந்தவங்களுக்கு அது பெரிய அவமானம். பட்.. புரிஞ்சுச்சு.. என்னோட மரைன் இன் ஜினியரிங்கை விட இது பெருசுன்னு நினைச்சுத்தானே வந்திருக்கேன். தென். அதப் பத்திக் கவலைப் படக்கூடாதுன்னு. நாயா அலைஞ்சேன். ஆட் ஃபிலிம் எல்லாம் வேலை செய்தேன். பட்.. எங்கே போய் எங்கே திரும்பினாலும் திரும்பத் திரும்ப ஒரே இடத்துல நிக்குறாப் போலயே ஃபீலிங்.

யோசிச்சு பார்த்தா நான் விரும்புற சினிமாவுக்கான இடம் இது இல்லைனு என் மனசு சொல்லிட்டேயிருந்துச்சு. என் கேப்டனுடய ரிலேட்டிவ் மூலமா நான் ஹாலிவுட்டுக்குள் நுழைஞ்சேன்.”
என்றவரை ஆச்சரியமாய் பார்த்தேன். “என்னது ஹாலிவுட்டா?”

“ஆமாம் சார்.. ஆனா அங்க உள்ள நுழையிறது சாதாரண விஷயமில்லை.நம்மூர்ல ஒரு மாதிரியான நெக்லெட்னா. அங்க வேற மாதிரி. ஏசியனு சொல்லிச் சொல்லியே நம்மளை ஓரங்கட்டுவானுங்க. அதையும் மீறி சைனீசுக்கு கிடைக்குற மரியாதையை கூட நமக்கு தரமாட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா, பழகி, நம்மளோட வேலைய பார்த்து மதிக்க ஆர்மபிப்பானுங்க. அது வரைக்கும் கொஞ்சம் மானக்கேடா இருந்தாலும் ,தாங்கணும். நான் போன போது எனக்கு மொதல்ல கொடுத்த வேலை க்ளாப் அடிக்கிறதுதான். நம்மூர் மாதிரி சாக்பீஸுல எழுதறது இல்லை. டிஜிட்டல் இன்புட் நாமதான் கரெக்டா கொடுக்கணும். என் ஜினியரிங் படிச்சவனுக்கு இதெல்லாம் வேலையே இல்லை. ஆனால் அதான் என்னை மரியாதைக்குரியவனா ஆக்குச்சு.

அங்கேயும் எல்லா பிரச்சனையும் இருக்கு. ரேசிசம், மிக முக்கியம் . ஆனா நம்மூரைப் போல யாரையும் அடிச்சுப் போட்டு மேல ஏறணும்னு நினக்க மாட்டானுங்க. நீ பாட்டுக்கு உன் வேலைய பாரு நான் என்னுதங்கிற அவன் டேர்ம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பட் அவமானப் பட ரெடியாய் இருக்கணும். அது இங்கேனு இல்லை எங்கேயா இருந்தாலும்.  அப்படியே பொறுமை பழகி, ஒரு இண்டிப்பெண்டண்ட் படம் ஒன்னு, ஒரு ஹாரர் படம் ஒன்னுன்னு ரெண்டு படம் அஸிஸ்டெண்டா ஒர்க் பண்ணேன். நாமளே ஒரு ப்ராஜெக்ட் பண்ணனும்னு பல முயற்சிகளுக்கு பிறகு இன்னைக்கு நான் ஒரு இண்டிபெண்டண்ட் படம் பண்ணியிருக்கேன். 16 பெஸ்டிவல்ல கலந்து அவார்ட் வாங்கியிருக்கு, என்றவரைப் பார்க்க ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவர் ஆசீர்வதிக்கப்பட்டவரைப் போல இருந்தார். “எந்த வெள்ளைக்காரன் என்னை ஏசியன்னு கலாய்ச்சானோ அவனே என்னைக் கூட்டி வச்சி அவார்டும் கொடுத்து, என் பட்த்தைப் பத்தி ப்ரோமோவுக்கு பேச வச்சிருக்கேங்கிற சந்தோஷம் ரொம்பவே பெருசு. இந்த படம் கொடுத்த வெற்றி. இன்னைக்கு ரெண்டு மூணு ஸ்டூடியோவுல ஸ்கிரிப்ட் ஓகேன்னு சொல்லி ப்ராசஸ் ஆயிருக்கு. எது பண்ணாலும் மனசு என்னவோ இங்கேயேத்தான் இருக்கு. என்னதான் ஹாலிவுட் படம் பண்ணாலும், ஜெயிச்சாலும் மனசு பூரா இங்கேயே இருக்கு. ஒரு நாள் வருவேண்ணே. .நிச்சயம் எனக்கு பிடிச்ச ஒரு படத்தை பண்ணுவேன். ஆனா எனக்கான சினிமாவோட வியாபாரத்த சொல்லிக் கொடுத்த உங்களை மறக்கவே மாட்டேங்க.. “ என்றபோது எனக்கு  கண்கள் கலங்கியது.


ஒரு புத்தகம் எழுதி அதனால் பணம் சம்பாதித்தோமோ இல்லையோ?. எட்டு வருடங்களுக்கு பிறகு ஒருவர் தேடி வந்து  உன் புத்தகத்தினால் தான் எனக்கான அறிவு கிடைத்தது என்று பாராட்டும் போது, இன்னும் இன்னும் உழைக்க மனம் தயாராகிறது.