Thottal Thodarum

Jun 29, 2017

கொத்து பரோட்டா -2.0-31

கொத்து பரோட்டா 2.0-31
காற்றில்லாமல் புழுங்கியபடி இருக்கும் தமிழ் சினிமா உலகிற்கு புத்துணர்ச்சி கொண்டு வருவதாய் உறுதியிட்டு பதவியேற்றிருக்கும் புதிய தலைவர்களுக்கு ஒர் வேண்டுகோள், பைரஸி, அதிக படங்கள், திரையரங்கு கட்டணம், என ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கிடையே முக்கியமாய் பார்க்க வேண்டிய ஒன்று டிஜிட்டல் சினிமா. இனிமேல் நெகட்டிவ் வேண்டாம் டிஜிட்டலில் படமெடுத்தால் படப்பிடிப்பின் செலவில் பாதி குறைந்துவிடும் என்று அதை ப்ரொமோட் செய்தார்கள். படமெடுக்க மட்டுமல்ல இனி படத்தை ஒளிபரப்ப டிஜிட்டல் முறை ஒரு ப்ரிண்டுக்கு அன்றைய தொகை சுமார் அறுபதாயிரம். டி.டிஎஸ் ராயல்டியோடு. அதற்கு பதிலாய் திரையரங்கில் டிஜிட்டல் ப்ரொஜக்டரை வைத்துவிட்டு, டிஜிட்டல் மூலம் ஒளிபரப்பினால் வெறும் ஏழாயிரம் ரூபாய் தான் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் க்யூப் நிறுவனம். அட பரவாயில்லையே ஒரு பிரிண்ட் அறுபதாயிரத்துக்கு பதிலாய் ஏழாயிரத்து சில்லறையில் புத்தம் புதிய ப்ரிண்டாய் நூறு நாட்கள் ஓடுமே என்று தயாரிப்பாளர்களும் ஆதரிக்க, டிஜிட்டல் படப்பிடிப்பும், ப்ரொஜக்‌ஷனுக்கும் டிமாண்ட் வர, அதை திரையரங்குகளில் விதவிதமான வகைகளில் சுலப தவணை, விளம்ப்ர வருவாயில் எடுத்துக் கொள்கிறோம் என்று மார்கெட் செய்யப்பட்டு இன்றைக்கு பிலிமில் படம் காட்டும் ப்ரொஜெக்டர் காட்சிப் பொருளாய் வைக்கப்பட்டிருக்கிற நிலையில்.

ஆனால் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஆரம்பிக்கப்பட்ட க்யூபின் கட்டணம் இன்று பல மடங்கு பெருகி விட்டது. அன்றைய நிலையில் தமிழ் நாட்டில் இருந்த பத்து சதவிகித திரையரங்கு கூட இல்லாத நிலைக்கான விலை. ஆனால் இன்றோ சுமார் எழுபது சதவிகிதம் திரையரங்குகளை தங்கள் வசம் வைத்திருக்கும் அந்த நிறுவனம் வாங்கும் தொகை மிக அதிகம். நெட்வொர்க்குகளை பொறுத்தவரை அதிக வாடிக்கையாளர் வர, வர, தொகை குறைய ஆர்மபிக்கும். ஆனால் இங்கே அப்படியே தலை கீழ். ஒரு வாரத்துக்கு இப்போது ஒரு படம் ஒரு ஷோ ஓடினாலும், சரி வாரம் ஓடினாலும் சரி.. ஒன் கே ப்ரொஜக்‌ஷனுக்கு பத்தாயிரம் சில்லரை. அதிலும் மல்டிப்ளெக்ஸ் போன்ற அரங்குகளில் 2கே அதற்கு இருபதாயிரத்து சில்லரை. 4 கே என்றால் அதன் விலை அதிகம். க்யூப்பிற்க்கு போட்டியாய் யூ.எப்.ஓ, பி.எக்ஸ்.டி, ஸ்கிராம்பிள், சோனி, போன்ற நிறுவனங்கள் வந்தாலும் விலை என்னவோ க்யூபைப் போலத்தான்.
கணக்குப் போட்டு பார்த்தால் நூறு திரையரங்குக்கு பத்தாயிரம் வீதம் ப்ரிண்டுக்கு வாரம் பத்தாயிரம் என்று கணக்கு வைத்துக் கொண்டால் பத்து லட்சம் ஆகிறது. இதில் 2கே, 4 கே எல்லாம் தனி. பல சிறு முதலீட்டு படங்களுக்கு க்யூப்பிற்க்கு கட்டிய பணம் கூட வசூலாவதில்லை என்பது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் அதே படம் அடுத்த வாரம் அத்தனை திரையரன்க்குகளில் ஓட வேண்டுமென்றால் கிட்டதட்ட அதே பத்து லட்சம் அவிழ்க்க வேண்டும். மூன்றாவது நான்காவது வாரம் முதல் வாடகை குறைவு தான் என்றாலும் இப்போதெல்லாம் நான்காவது வாரம் படம் ஓடுவது என்பதெல்லாம் பெரும் கொண்ட கனவாகிவிட்ட நிலையில் இருக்கிறது தமிழ் சினிமா.

ஒரு திரைப்படத்திற்கு போடப்பட்ட ஒரு ப்ரிண்டை வைத்து மூன்று தியேட்டர்கள் படம் ஓட்டிய காலமெல்லாம் உண்டு. உதாரணமாய் உதயத்தில் 11 மணிக் காட்சி என்றால், முதல் ரீல் முடிந்தவுடன் ரூட்டிங் வண்டியில் பக்கத்து சாலிகிராமம் தியேட்டருக்கு 11.30 பின்பு அதே ப்ரிண்ட் 12 நேஷனலில் திரையிடப்பட்ட காலமெல்லாம் உண்டு. ப்ரிண்ட் செலவு அதிக பட்சம் 60 ஆயிரம் ரூபாய். ரூட்டிங் அடிப்பவருக்கான போக்குவரத்து சம்பளம் என்பது அன்றைய கால சம்பளம் குறைவு தான்.  இந்த மூன்று தியேட்டருக்கும் அவர் அவர் பிரிண்டுக்காக செலவு செய்யும் தொகை அறுபதாயிரமும் வேலையாள் சம்பளமும் தான். பின்பு படம் ஓடிய பின் மற்ற சின்ன ஊர்களுக்கு பிரிண்ட் கொண்டு போகப்படும். ஆனால் அதே டிஜிட்டல் திரை என்றாகும் போது மூன்று தியேட்டருக்கும் வாரம் பத்தாயிரம் வீதம் முப்பதாயிரம். ரெண்டாவது வாரம் மீண்டும் அதே தொகை. பின்பு நமக்கான ப்ரிண்ட் என்பது கிடையாது அப்படி நமக்கே நமக்கென வேண்டுமானால் இருபதாயிரம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.  இன்றைக்கு ஒரே மாலில் ஒரு ஸ்கிரினிலிருந்து இன்னொரு ஸ்கிரீனுக்கு மாற்றுவதற்கு கூட தனி கூலி. இந்த செலவையெல்லாம் பார்க்கும் போது ஒரு பெட்டிய வைத்து மூன்று தியேட்டர்களுக்கு ரூட் அடிக்கும் செலவை விட, அதிக திரையரங்களில் வெளியிட்டு, அதிக பணம் செலவு செய்து ப்ரிண்ட் செலவு கூட எடுக்க முடியாத நிலையில் இன்றைய தயாரிப்பாளர்கள் தள்ளிவிடப் பட்டிருக்கிறார்கள்.

பல சிற்றூர்களில் ஏன் நம் சென்னை போன்ற நகரில் உள்ள சிங்கிள் ஸ்கீரின் அரங்குகளில் என்ன தான் டிஜிட்டல் போட்டாலும் கருகும்மெனதான் படம் தெரியும் காரணம் ப்ரொஜக்‌ஷனுக்கான பல்பை கூட மாற்றாமல் ஒட்ட ஒட்ட ஓட்டும் தியேட்டர் சிகாமணிகள். மல்ட்டிப்ளெக்ஸுகளிலேயே சத்யம் ஒருவிதமாகவும், ஐநாக்ஸ் ஒரு விதமாகவும், பிவி.ஆர் ஒருவிதமாகவும் இருக்கும் இப்படி பல விஷயங்களில் டிஜிட்டலின் தரம் பல விதங்களில் இருக்க, இவர்களின் கட்டணம் ஒரே விதமாய் ஒருமித்த தொகையாய் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் மிக முக்கியமாய் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் இந்த டிஜிட்டல் ப்ரொஜெக்‌ஷனுக்கான பணம் அதன் விலை குறைப்பு. இப்போது வாங்கும் விலையில் 50 சதமாவது குறைத்தால் தான் தயாரிப்பாளர்களின் சுமை குறையும். குறைக்கப்பட வேண்டும்.
@@@@@@@@@@@@@@@
தமிழ் சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவைப் பற்றிய ஆவணப்பட வெளியீட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இவர்கள் இருவரும் நாற்பது வருடங்களுக்கு மேலாய் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள், நடிகர் திலகம் சிவாஜி, சிவகுமார், லஷ்மி, எம்.எம்.ராஜன் என பல பேரை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியவர்கள். ரத்தக்கண்ணீர், பராசக்தி, உயர்ந்த மனிதன் என புகழ் பெற்ற படங்களின் இயக்குனர்கள். நாற்பது வருடங்களுக்கு மேல் 54 படங்களை இணைந்தே இயக்கியவர்க்ள். நான்கைந்து தேசிய விருது படங்களை இயக்கியவர்கள் என இவர்கள் இருவரும் இணைந்து சாதித்திருக்கும் சாதனைகள் ஏராளம்.

ஆவணப்படம் முழுக்க இவர்களால் அறிமுகப்படுத்தப்ட்ட நடிகர்கள், டெக்னீஷியன்கள், இவர்களின் பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளர்களான ஏவிஎம். குடும்பத்தினர் ஆகியோர இந்த இரட்டையர்களைப் பற்றி வெளிப்படுத்தும் நிகழ்வுகள், எம்.ஜி.ஆர் சரோஜாதேவியுடனான சண்டைக்கு நடுவில் அவர்களிடம் நடிப்பை வாங்கியது எப்படி? உயர்ந்த மனிதன் படத்தில் அசோகன், சிவாஜி இருவருக்கிடையே மன வேறுபாடு இருந்த காலத்தில் எப்படி அவர்களை சமாளித்தார் என்பது போன்ற நிகழ்வுகள் சுவாரஸ்யமென்றால்,  அவர்களின் கேரக்டர்கள் அதை விட சுவாரஸ்யம். எப்படி? எதனால் இவர்கள் இருவரும் இணைந்தார்கள் என்பதும், எப்படி வேலைகளை பிரித்துக் கொண்டார்கள். இவர்களிடையே ஈகோ இல்லாமல் இத்தனை வெற்றிப் படைப்புகளை அளித்து எப்படி என பல தகவல்கள் விரவியிருக்கிறது.


நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தை பார்த்து முடித்தபின் வந்திருந்த விருந்தினர்கள் முதல் படம் பார்த்த சினிமா ஆர்வலர்கள் பலரும் எமோஷனலாகி விட்டார்கள். ஒர் இயக்குனராய் இவர்களின் சாதனைகளை கண்டு நானும் எமோஷனலாது தான் உண்மை. எப்பேர்பட்ட படைப்புகளை கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடன் பயணித்திருக்கிறார்கள். ஒரு படத்தை இயக்கி எடுத்து முடித்து வெளியிடவே நாக்கு தள்ளிப்போகும் தற்போதைய சூழ்நிலையில், ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளைப் பற்றி, ஆளுமை, செயல்திறன், அவர்களின் வெற்றி, தோல்வி, வாழ்க்கையைப் பற்றி  இன்றைய  இளைய சமுதாயத்திற்கு எடுத்து சொல்லப்பட, ஆவணப்படுத்தபட வேண்டியது மிக அவசியம். அதை சிறப்பாக செய்திருக்கும் இதன் இயக்குனர் தனஞ்செயனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். நியாயமாய் இயக்குனர் சங்கமோ அல்லது திரைதுறை சார்ந்த ஏதாவது ஒர் சங்கம்  முன் வந்து  ஆவணப்படுத்த வேண்டியதை கிருஷ்ணன் பஞ்சு குடும்பத்தினர் இணைந்து தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடி தீர்ப்பது நம் கடமை.

Jun 18, 2017

சாப்பாட்டுக்கடை- கறிசோறும் கல்தோசையும்

சினிமா பட டைட்டில் போன்ற பெயருடன் ஒர் உணவகம். ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு எதிரே ஒரு காபி ஷாப்பின் அமைப்பில் இருந்தது.  கறிசோறுக்கும் இந்த டெக்காருக்கும் சம்பந்தமேயில்லை என்று யோசனை வந்தாலும் கறிசோறு என்றதும் நாவில் எச்சிலூற ஆரம்பித்துவிட்டது.  





சிக்கன் சாதம் பெப்பருடன் வாசனை தூக்கியது. டிபிக்கல் ஹோம் மேட் டேஸ்ட்டுடன். மட்டன் சோறும் குட். மீன் சோறு, மாங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய் எல்லாம் போட்டு அரைத்த குழம்பை கலந்த சோறு. அட்டகாசம். ரசத்தில் கொஞ்சம் பெப்பர் தூக்கல். தயிர் சாதம் மட்டும் மோர் சாதம் போல இருந்தது.  ரொம்ப நாளாய் ஊரை விட்டு வந்து நாக்கு செத்துப் போன பயலுவளுக்கு எல்லாம் இனி வேட்டை தான். ஏனென்றால் விலை வெறும் 100 தான்.

சைட்டிஷ்ஷாய் மட்டன் சுக்கா, நல்லி, மீன், நாட்டுகோழி, போட்டி என வகை வகையாய் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழி அளவான மசாலாவோடு, செக்கு எண்ணைய் மணத்துடன், கார சாரத்தோடு அட்டகாசம். மட்டன் சூப், மற்றும் நாட்டுக்கோழி சூப் செம்ம.. காரம் மணத்தோடு. 



மாலையில் கல் தோசை, கறி தோசை, இட்லி, மூளை பணியாரம் என சைட்டிஷ்சாய், மீன், சிக்கன், மட்டன்  பீஸோடு, கிரேவியும் தருகிறார்களாம். இன்னொரு டயட் லீவு நாளில் போக வேண்டும்.  மறக்காமல் இவர்களுடய குல்பியை சாப்பிடாமல் வர வேண்டாம். அட்டகாசம் ஆசம். அண்ட் கிரீமி.
     

Jun 14, 2017

கொத்து பரோட்டா -2.0-30

கொத்து பரோட்டா 2.0-30
சென்ற வார ராயல்டி கட்டுரையில் நான் கூட ஒரு படத்தில் பாடியிருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன் அதற்கு காரணம் நான் வழக்கமாய் பாடும் கரோக்கே பார்தான் காரணம். அங்கே தான் என் குரல் வளத்தை அந்த இசையமைப்பாளர் கண்டு கொண்டு வாய்ப்பளித்தார். இன்றைக்கு க்ரோக்கே பாரெல்லாம் தேவையில்லை எப்படி டப்மேஷ் எனும் ஆப்  பல பேரின் திறமைகளை வெளிக் கொணர்ந்ததோ அது போல தற்போது ஸ்மூல் எனும் புதிய ஆப் பல திறமையான பாடகர்களை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆம் இந்த ஆப் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமான கரோக்கே ஆப். எப்படி டப்மேஷில் டயலாக் போர்ஷனை அப்லோட் செய்து  வைத்திருப்பார்களோ? அது போல தமிழ் ஹிட் பாடல்களின் மைனஸ் வர்ஷனும், பாடல் வரிகளையும் அப்லோடிட்டிருப்பார்கள். நாம் ஆப்பை திறந்து, பாடலை தெரிவு செய்து ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாடினால் வீடியோவாக சேவ் ஆகும். சமீபத்தில் வெளியான  ரெண்டு புதிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல். ஒன்று நான்கைந்து பேர் சேர்ந்து பாடிய ராஜாவின் “என் கண்மணி” பாடல். அட்டகாச ஜுகல் பந்தி என்றால். .ரம்யா துரைசாமி என்பவர் பாடிய வள்ளி பட பாடலான “என்னுள்ளே.. என்னுள்ளே” அட்டகாசம். பாடுகிறவர்கள் அனைவரும் அமெச்சூர் பாடகர்களே ஆனாலும் கிட்டத்தட்ட பர்பக்‌ஷனோடு இருந்தது. என்ன இந்த ஆப் மொத்தமும் இலவசம் கிடையாது. முத்ல முறை மட்டும் ஒரு பாடல் சோலோவாக பாடி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். மற்றபடி ட்யூட்டாகவோ, அல்லது ஒரே பாடலை இரண்டு மூன்று பேராகவோ பாடி ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். தனியே சோலோ, ட்யூட் வேண்டுமென்றால் பணம் கேட்கிறது மாத, வருட வாடகை என்று. பாடலின் மேல் ஆர்வமிருக்கிறவர்களுக்கு மாதம் 55 ரூபாய் ஒன்றும் அதிகமாய் தோன்றாது என்றே தோன்றுகிறது. https://www.youtube.com/watch?v=jU7lR5qdh4E&t=23s
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் விஷால் வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள். அவர் அணியினர் முன் நிற்கும் சினிமா தொழில் சார்ந்த பிரச்சனைகள் பல. அவற்றுள் பைரஸி பற்றி பேச நிறைய இருந்தாலும் முக்கியமாய் பேச வேண்டிய விஷயம் சிறு முதலீட்டு படத் தயாரிப்பாளர்களுக்கு விநியோகஸ்தர்கள்/ தியேட்டர் அதிபர்களிடமிருந்து வரும் வசூல் கணக்கு வழக்குகள். பெரிய படங்களுக்கு வசூல் பிரச்சனையில்லையா? என்று கேட்டீர்களானால் அவர்களுக்கும் உண்டுதான் ஆனால் பெரும்பாலான பெரிய படங்களின் வியாபாரம் எம்.ஜி, அட்வான்ஸ், என விநியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளரும், தியேட்டர் அதிபர்களிடமிருந்து விநியோகஸ்தரும் வசூல் செய்துவிடுவதால் வந்த வரைக்கும் லாபம் என்ற வகையில் வியாபாரம் போய் விடுகிறது.  சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் நிலை அப்படியில்லை.  யாராவது ஒரு விநியோகஸ்தரை நம்பி படத்திற்கான விளம்பரச் செலவிலிருந்து க்யூப், யூஎஃப் ஓ, ஸ்க்ராபிள், பி.எக்ஸ்.டி என எல்லா டிஜிட்டல் ஒளிபரப்புக்கும் பணம் கட்டி,  போஸ்டர், பேனர்களுக்கு செலவு செய்து, விநியோகம் செய்து கொடுக்கிறேன் எனும் நிறுவனங்களுக்கு குறைந்த பட்ச தொகையாய் ஒரு தொகையை முன் பணமாய் கட்டி வெளியிடுகிறார்கள்.  அப்படி வெளியான படத்தின் கணக்கு வழக்கை ஒழுங்காக தருகிறார்களா? என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சென்னை மல்ட்டி ப்ளெக்ஸுகளில் கணக்கு சரியாகவே வந்துவிடும்.  ஏனென்றால் இங்கே அரசின் வரி முதற்கொண்டு கணக்கு காட்டப்பட்டு அந்தந்த வாரத்துக்கு செக் மூலம் தயாரிப்பாளருக்கான ஷேரை  விநியோகஸ்தரிடம் கொடுத்து விடுவார்கள். ஆனால் வெளியூர் தியேட்டர்கள், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் எல்லாம் அப்படியில்லை. பெரும்பாலும் வாய்க் கணக்காய் காலையில் ரிப்போர்ட் என்று ஒரு நம்பரை சொல்வார்கள். அது ரொம்பவும் சின்னபடமாய் இருந்துவிட்டால் போதும், அவ்வளவு தான். விநியோகஸ்தர் தரப்பிலிருந்து தினமும் ஒர் எக்ஸெல் ரிப்போர்ட் மெயிலில் அனுப்புவார்கள். எந்தெந்த ஊரில் எவ்வளவு காட்சிகள், எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்  என ஒரு கணக்கு வரும். அது தியேட்டர்காரர்கள் சொல்வதுதான் அதை செக் செய்ய முன்பெல்லாம் தியேட்டர் ரெப் என்றொருவர் இருப்பார். இன்றைக்கு அப்படியெல்லாம் இருப்பதாய் ஏதும் உத்தரவாதமில்லை. ஆனால் தினசரி செலவு கணக்கில் மட்டும் ரெப் சம்பளம் 300 ரூபாய் வந்துவிடும். ஒரு நாளைக்கு மொத்த வசூலே தியேட்டர் பங்கு போக 300-400மாய் கணக்கு காட்டப்பட்ட படத்திற்கு அதிலும் இம்மாதிரியான செலவுகள் போக ஒன்றுமே மிஞ்சுவதில்லை.

சமீபத்தில் வெளியான ரகுமான் படமொன்றின் தயாரிப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர், தியேட்டர் சைடிலிருந்து கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டை பார்த்து ரத்தக்கண்ணீர் தான் வந்தது.  வழக்கமாய் டி.சி.ஆர் எனும் டெய்லி கலக்‌ஷன் ரிப்போர்ட் அனுப்புவார்கள். இண்டர்நெட் காலத்துக்கு முன் தியேட்டரில் விநியோகஸ்தரின் ரெப் பத்து ருபாய், 20 ரூபாய், 30 ரூபாய் டிக்கெட் என வரிசைக்கிரமாய், இந்த நம்பரிலிருந்து இந்த நம்பர் வரை என்று டிக்கெட் சீரியல் நம்பர் கவுண்டர் பாயிலை கணக்கெடுத்து அந்த ஷோ  ஆரம்பித்தவுடன் டெலிபோனில் சொல்லுவார். அதை மேனேஜர் கொடுக்கும் டி.சி.ஆர் ரிப்போர்ட்டும் உறுதிப்படுத்தும். இன்றைக்கு டெக்னாலஜி வளர்ந்த காலத்திலும் ரெப்புக்கு பதிலாய் தியேட்டர் அலுவலரே இத்தனை டிக்கெட் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் அரசு நிர்ணையித்த டிக்கெட் விலைக்கு விற்காமல் விலை போடாத கூப்பன் மூலம் தான் விற்பனை நடைபெறுகிறது.  அப்படி விற்ற டிக்கெட்டுகளின் நம்பர் ஏதும் சொல்லாமல் 15 டிக்கெட், 40 டிக்கெட் ப்ளாட் ரேட்டாய் 60-80 ரூபாய்க்கு விற்றதாய் கணக்கு சொல்லப்படும். ஒரு வாரம் கழித்து வரும் டிசிஆரில் கூட பொத்தாம் பொதுவாய் இத்தனை டிக்கெட் என  வெறும் நம்பர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நம்பரிலிருந்து இந்த நம்பர் வரை என்று கூட கணக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. இதற்கு ரெப் சம்பளம் 300 ரூபாய் வேறு வசூலில் கழிக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான சின்ன பட தயாரிப்பாளர்களுக்கு எப்படி தயாரிப்பு பற்றி பெரிய அனுபவமில்லாமல் மாட்டிக் கொள்கிறார்களோ அதை விட ரெண்டு படி மேலே போய் விநியோகம் பற்றி ஒரு அரிச்சுவடி கூட தெரியாமல் மாட்டிக் கொண்டு, படம் நல்லாயில்லை, ஆர்டிஸ்ட் இல்லைன்னா படத்துக்கு கூட்டம் வரலை, எனும் கூற்றின் உண்மை, பொய் எதுவும் அறியாமல் ரெண்டு கோடி ரூபாய் படத்தின் வசூல் மொத்தமே பத்து லட்சத்திற்கும் குறைவாய் வந்து, சினிமாவே ரொம்ப மோசங்க.. என்றோ.. அல்லது பெரிய ஆர்டிஸ்ட் இருந்தாத்தான் படம் பண்ணுவேன் என்று வளரும் நடிகர் யாராவது ஒருத்தருக்கு அவர் வாழ்நாள் சம்பளமாய் ஒரு பெரிய சம்பளத்தை கொடுத்து இன்னும் பெரிதாய் இழப்பார்.

மேற்ச்சொன்ன தயாரிப்பாளர் இயக்குனர் இருவரும், சென்னையின் முக்கிய திரையரங்கின் முதல் நாள் காட்சியின் போது உடனிருந்து தியேட்டரில் போய் தலை எண்ணி, பரவாயில்லை நம்ம படத்திற்கு இத்தனை பேர் முதல் நாள் வந்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார். ஆனால் கணக்கு வந்ததோ வெறும் நூற்றுச் சொச்சம். பின் வரும் நாட்களில் அதை விட மோசம்.

இங்கே தயாரிப்பாளர் பொய் சொல்கிறார் என்று விநியோகஸ்தரும், தியேட்டர்காரர்கள் சரியான கணக்கு தருவதில்லை என்று விநியோகஸ்தரும், ஆள் வந்தா நாங்க ஏன் சார் பொய் சொல்லுறோம் என்று தியேட்டர்காரர்களும் ஆளாளுக்கு ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, ஆக வேண்டிய காரியத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். யாரோ ஒரு ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு தன்னுடய சீட் அமைப்பு. எத்தனை ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணையித்து, ரசிகன் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் புக் செய்து படம் பார்க்க முடியும் போது, ஒரு தயாரிப்பாளனுக்கு தன் படத்தின் டிக்கெட் விற்பனையை ஏன் மூன்றாம் நான்காம் மனிதன் சொல்லும் தகவலை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்?.
எல்லா திரையரங்கின் டிக்கெட் விற்பனையும் கணினி மூலம் மட்டுமே விற்க வேண்டுபடியாகவும், அந்த விற்பனையை அப்படத்தின் தயாரிப்பாளரும் அவ்வப்போதே பார்க்கக்கூடிய அளவில் ஏற்பாடு செய்ய முடியும். கேரளாவில் டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்பட்டுவிட்டது.  டிக்கெட் விற்பனை வெளிப்படையாகும் போது, அரசு நிர்ணையித்த கட்டணத்தை மீறி விற்க முடியாது.  எனவே இப்போது இருக்கும் நிலை அனைவருக்கும் பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் சூப்பர் ஹிட் படம் என்று விளம்பரப்படுத்தும் படங்களின் நிஜ வசூல் நிலை எல்லாம் கேட்டால் நொந்து போய்விடுவீர்கள்.  விற்பனையில் வெளிப்படைத்தன்மை  ஒவ்வொரு நடிகனின் மார்கெட் நிலையை மிகத் துல்லியமாய் வரும் கணக்கு நிர்ணையித்துவிடும். வசூல் நிலவரம் தெளிவாகும். அதற்கேற்றார்ப் போல வியாபாரம் சிறப்பாகும். நல்ல ஆரோக்கியமான நிலை இருந்தால் நிறைய வியாபாரிகள், இன்வெஸ்டர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்கள். இதையெல்லாம் செய்ய மலையை புரட்டிப் போடத் தேவையில்லை. முற்றிலும் கணினி மயமாக்க அனைத்து தியேட்டர்களிலும் இன்று கம்ப்யூட்டர், இணையம் இருக்கிறது. டிக்கெட் விற்பனைக்கான சர்வர் மட்டுமே. அதனின் மெயிண்டெனெஸ் மட்டுமே.. இதனால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்ட்ர் அதிபர்கள்  அனைவருக்குமே நல்லது. விஷால் தலைமையிலான அணி இதை செய்யும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளபடியால் தான் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் குழுவில் உள்ளவர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், அவர்களின் இத்தனை நாள் பிரச்சனையை வழிக்கு கொண்டு வர இதே நல்ல சமயம். செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு.. இன்னொரு சினிமாக்காரன்.


Jun 7, 2017

கொத்து பரோட்டா - 2.0-29

கொத்து பரோட்டா 2.0-29
Take off
2014 ஆம் ஈராக் நாட்டு ராணுவத்திற்கும்,  ஐஎஸ் ஐஎஸ்ஸுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில்  அகதிகளாய் மாட்டிக் கொண்ட 41 இந்திய நர்ஸுகளை அங்கிருந்து தப்பிக்க வைத்த கதை தான் இந்த டேக் ஆப். இம்மாதீரியான நிஜ ரெஸ்க்யூ கதைகளில் விற்பன்னர்கள் ஹாலிவுட்காரர்கள்.  ஆர்கோ போன்ற ஏராளமான படங்கள் உதாரணம். சமீபகாலங்களில் ஹிந்திப்படங்களும் அதில் திறன் பெற்று விட்டார்கள். ஏர்லிப்ட், பேபி, போன்ற படங்கள் உலக அளவில் நல்ல வசூலும் பெற்றுவிட்டார்கள். இம்முறை மலையாள சினிமா முயற்சி செய்துள்ளது. ஈராக்கில் நடந்த சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு, கொஞ்சம் கற்பனையை தூவி 41 நர்ஸுகளுக்கு பதிலாய் 19 நர்ஸுகளாய் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.

ரெஸ்க்யூ, ஈராக், போர், என அதிரும் விஷயமாய் படம் ஆரம்பிக்காமல், டிபிக்கல் மலையாள படமாய் ஆரம்பித்து இடைவேளைக்கு பிறகுதான் போருக்கே வருகிறார்கள். அது வரை, டைவர்ஸ், நர்ஸுகளின் வாழ்வு, பொருளாதார நிலை, முதல் கணவன் மூலமாய் பெற்ற பையன், புதிய கணவன் என டிபிக்கல் குடும்ப படமாய் போகிறது. இதையே தனிப்படமாய் எடுத்திருக்கலாம்.  பட்.. நம்ம பார்வதியின் நடிப்புக்காக என்று பார்தோமேயானால் வாவ்.. அந்த சிடு சிடு முகமும், இயலாமையும், கோபமும், டைவர்ஸியான என்னை பின் தொடராதே என்று குஞ்சாகோபனிடம் கோபப்பட்டாலும் உள்ளுக்குள் வெளிப்படுத்தும் காதல் என மனுஷி அதகளப்படுத்துகிறார். பிற்பாதியில் நிறைமாத கர்பிணியாய் அத்தனை பெண்களுக்கும் தைரியம் கொடுத்து, ரெஸ்க்யூ ஆப்பரேஷனுக்கு உதவியாய் முன்னின்று, தீவிரவாதிகளிடம் மாட்டி, அவர்களிடமிருந்து வெளிவந்து தன் கணவனையும் காப்பாற்ற விழைகிற வீரப்பெண்மணி கேரக்டருக்கு முன் பகுதியில் காட்டிய, கோபம், சிடுசிடுத்தனம் சட்டென இம்பல்சிவாய் முடிவெடுக்கும் தைரியம் எல்லாம் உதவியிருக்கிறது.

இரண்டாம் பாதியின் ஹீரோக்கள் என்று சொன்னால் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ், ஒலியமைப்பை வடிவமைத்தவர்களான சங்கர் மற்றும் கோவிந்த் தான். ஒரு சமயத்தில் நர்ஸுகள் அடைக்கப்பட்டிருந்த அறையின் மேல் ஷெல் விழுந்து வெடிக்கும் காட்சியில் தியேட்டரில் ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது எங்கே நம்மேல் விழுந்துவிட்டதோ என்று தோணும் அளவிற்கு துல்லியமான ஒலியும், படம் நெடுக வெடிகளுக்கிடையே ஓடும் கேமரா, ஓடும் பையனை துரத்தும் குஞ்சாகோபன், பார்வதியுடன் மாடியிலிருந்து ஓடும் வெளியே வரும் போது உள்நாட்டுப் போருக்காக ராணுவத்தினர் மீது கல்வீசும் காட்சியில் வந்து நிற்கும் வரை அட்டகாச பாலோஅப். இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கு இது முதல் படம்.இவர் விஸ்வரூபம், ட்ராபிக், போன்ற படங்களின் எடிட்டர். இவரின் முதல் இயக்க முயற்சியே மலையாள சினிமாவின் முக்கிய படமாய் அமைந்துவிட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் தமிழ் சினிமாவிற்கு  திரும்பவும் போராத காலம். கடுகு, பாம்புச்சட்டை, என்கிட்ட மோதாதே, தாயம், 1 ஏ,எம், வைகை எக்ஸ்பிரஸ், இதைத் தவிர, கட்டம்மராயுடு, ஹிந்தி பில்லவுரி,  அனார்கலி ஆஃப் ஆரா, மலையாளம் டேக் ஆஃப், ஹனிபீ 2 செலிபரேஷன்,  சென்ற வார ஹிட் தொடர்ச்சியான குற்றம் 23, மாநாகரம்  போன்றவை வேறு. இத்தனை படங்களுக்கும் வசூல் என்று பார்க்க வேண்டுமென்றால் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். எனவே இருக்குற ரீலீஸான எட்டு தமிழ் திரைப்படங்களும், மல்டிப்ளெக்ஸுகளில்  ஒரு ஷோவும் அரை ஷோவுமாய் ஓடுகிறது. ஒரு காலத்தில் காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் என்று அழைக்கபடும் தியேட்டர்களில் அதுவும் சென்னையில் மட்டுமே காலை காட்சி ஒரு படமும் மற்ற மூன்று காட்சிகள் ஒரு படமுமாய் ஓடும். பின்புமெல்ல அது செங்கல் பட்டு ஏரியா தியேட்டர்களிலும் பரவி, இப்போது தமிழ் நாடு முழுவதும் நான்கு காட்சிகள் ஒரே படம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று வழக்கொழிந்துவிட்ட நிலையாகிவிட்டது.

ஹிந்தி மற்றும் மலையாளப்படங்களுக்கு பெரும்பாலும், மாலை அல்லது இரவு காட்சி கன்பார்ம். தமிழ் படங்களுக்கு பெரிய விநியோகஸ்தர் பலம் மட்டும் இல்லையென்றால் காலை மற்றும் மதியக் காட்சி மட்டுமே. சமீபத்தில் ஒரு பெரிய மல்ட்டிப்ளெக்ஸ் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன காரணம் கொஞ்சம் லாஜிக்கலாய் இருந்தது. மலையாளம் மற்றும் இந்தி படங்கள் பெரும் கும்பலாய் வருவதில்லை. அது மட்டுமில்லாமல் குறைந்தது இரண்டு வார இடைவெளி விழுகிறார்ப் போலத்தான் படங்கள் வெளியாகிறது. இதனால் படம் பற்றிய விமர்சனம் போன்றவற்றை படித்துவிட்டு வார நாட்களில் கூட கூட்டம் வருகிறது. ஆனால் அதே நிலை தமிழ் சினிமாவிற்கு கிடையாது. அது மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் இதர மொழி படங்களை வெளியிடும் போது தியேட்டர் ஸ்டால்களில் விற்பனை டிக்கெட் விற்பனையை விட அதிகமாகவே கிடைக்கிறது. குறிப்பாய் ஹிந்தி படம் பார்க்கும் மக்கள் ஸ்டாலில் செலவு செய்யும் தொகை இரண்டு மடங்கு என்கிறார். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் தமிழ் சினிமா சூப்பர் ஹிட் என்றால் மட்டுமே குழந்தை குட்டியோடு படம் பார்க்க வருவார்கள். குழந்தைகள் தான் ஸ்டாலின் டாகெட்டே. ஆனால் ஹிந்தி படம் பார்க்க வரும் மக்கள் வரும் போதே, கோக் ம்ற்றும் இதர பேக்கேஜ் ட்ரிங்கோடுதான் உள்ளேயே வருவார்கள். இடைவேளையின் போது லைட்டாய் காபி போன்ற வஸ்துக்களோடு அவர்கள் படம் பார்ப்பது முடியும்.

கிடைத்த காட்சிகளில் போட்டு படம் பிக்கப் ஆகி மூச்சு விடுவதற்குள் அடுத்த வாரம் எட்டு படம் லைனில் இருக்க, என்ன தான் செய்ய முடியும் ஒரு படத்தின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும்.யாராவது முதல் மூன்று நாட்களில் ஆகும் வசூல் தான் படத்தின் அடுத்த வார நிலையை ஊர்ஜிதப்படுத்தும் என்கிற நிலையில் சிறு முதலீட்டு படம் முதல் பெரு முதலீட்டு படம் வரை சமீபகாலமாய் 90 சதவிகித ஓப்பனிங் என்பது கூட பெரிய விஷயமாகிவிட்ட நிலையில் சின்ன படங்களுக்கு முதல் காட்சியில் முப்பது சதவிகிதம் ஆட்கள் வந்தாலே அதிசயம் என்று ஆகிவிட்டிருக்கிறது. சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களில் முப்பது டிக்கெட், நாற்பது டிக்கெட் என்பது அதிகபட்சமாகிவிட்டிருக்கிறது. இரவுக் காட்சிகள் சின்ன முதலீட்டு படங்களுக்கு பல சிற்றூர்களில் இல்லவே இல்லை என்றாகிவிட்டது. தயரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்து புதியதாய் பதவிக்கு வரும் குழுவினர் இதற்கு இப்போதாவது சரியான முடிவெடுக்கவில்லையென்றால் ம்ம்ஹும் ரொம்பவே கஷ்டம் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
குறும்படம்
Error
டிஜிட்டல் யுகத்தின் ஆரம்பகாலக்கட்டம். வழக்கமாய் ஏதாவது வியாதி, சமூக கருத்துக்களுக்காக மட்டுமே குறும்படங்கள் என்றிருந்த காலத்தில் கதைகள் அடியெடுக்க ஆரம்பித்த வேளையில் வெளிவந்த இந்த குறும்படம், அடியாட்கள், கொலை, ஆள்மாறாட்டம் என இன்றைய ஹீஸ்ட் குறும்பட பாணியில் எடுக்கப்பட்டது.  டெக்னிக்கலாய் இன்றைய குறும்படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை என்றாலும், டைட்டில் ஓடும் வரை பொறுமை காக்க வேண்டியது அவசியம். மற்றபடி ஒர் சிறந்த குறும்படத்தை அளித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.பிரகாஷ்.  இவரின் சினிமா கனவு நினைவானதாய் என்றுதான் தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=IBQE0w87EIQ&index=29&list=PLl7TKySwBnINuc7JT-WwlqKJ-KzhiCLUV