Thottal Thodarum

Jun 7, 2017

கொத்து பரோட்டா - 2.0-29

கொத்து பரோட்டா 2.0-29
Take off
2014 ஆம் ஈராக் நாட்டு ராணுவத்திற்கும்,  ஐஎஸ் ஐஎஸ்ஸுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில்  அகதிகளாய் மாட்டிக் கொண்ட 41 இந்திய நர்ஸுகளை அங்கிருந்து தப்பிக்க வைத்த கதை தான் இந்த டேக் ஆப். இம்மாதீரியான நிஜ ரெஸ்க்யூ கதைகளில் விற்பன்னர்கள் ஹாலிவுட்காரர்கள்.  ஆர்கோ போன்ற ஏராளமான படங்கள் உதாரணம். சமீபகாலங்களில் ஹிந்திப்படங்களும் அதில் திறன் பெற்று விட்டார்கள். ஏர்லிப்ட், பேபி, போன்ற படங்கள் உலக அளவில் நல்ல வசூலும் பெற்றுவிட்டார்கள். இம்முறை மலையாள சினிமா முயற்சி செய்துள்ளது. ஈராக்கில் நடந்த சம்பவத்தை அடிப்படையாய்க் கொண்டு, கொஞ்சம் கற்பனையை தூவி 41 நர்ஸுகளுக்கு பதிலாய் 19 நர்ஸுகளாய் மாற்றி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.

ரெஸ்க்யூ, ஈராக், போர், என அதிரும் விஷயமாய் படம் ஆரம்பிக்காமல், டிபிக்கல் மலையாள படமாய் ஆரம்பித்து இடைவேளைக்கு பிறகுதான் போருக்கே வருகிறார்கள். அது வரை, டைவர்ஸ், நர்ஸுகளின் வாழ்வு, பொருளாதார நிலை, முதல் கணவன் மூலமாய் பெற்ற பையன், புதிய கணவன் என டிபிக்கல் குடும்ப படமாய் போகிறது. இதையே தனிப்படமாய் எடுத்திருக்கலாம்.  பட்.. நம்ம பார்வதியின் நடிப்புக்காக என்று பார்தோமேயானால் வாவ்.. அந்த சிடு சிடு முகமும், இயலாமையும், கோபமும், டைவர்ஸியான என்னை பின் தொடராதே என்று குஞ்சாகோபனிடம் கோபப்பட்டாலும் உள்ளுக்குள் வெளிப்படுத்தும் காதல் என மனுஷி அதகளப்படுத்துகிறார். பிற்பாதியில் நிறைமாத கர்பிணியாய் அத்தனை பெண்களுக்கும் தைரியம் கொடுத்து, ரெஸ்க்யூ ஆப்பரேஷனுக்கு உதவியாய் முன்னின்று, தீவிரவாதிகளிடம் மாட்டி, அவர்களிடமிருந்து வெளிவந்து தன் கணவனையும் காப்பாற்ற விழைகிற வீரப்பெண்மணி கேரக்டருக்கு முன் பகுதியில் காட்டிய, கோபம், சிடுசிடுத்தனம் சட்டென இம்பல்சிவாய் முடிவெடுக்கும் தைரியம் எல்லாம் உதவியிருக்கிறது.

இரண்டாம் பாதியின் ஹீரோக்கள் என்று சொன்னால் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ், ஒலியமைப்பை வடிவமைத்தவர்களான சங்கர் மற்றும் கோவிந்த் தான். ஒரு சமயத்தில் நர்ஸுகள் அடைக்கப்பட்டிருந்த அறையின் மேல் ஷெல் விழுந்து வெடிக்கும் காட்சியில் தியேட்டரில் ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது எங்கே நம்மேல் விழுந்துவிட்டதோ என்று தோணும் அளவிற்கு துல்லியமான ஒலியும், படம் நெடுக வெடிகளுக்கிடையே ஓடும் கேமரா, ஓடும் பையனை துரத்தும் குஞ்சாகோபன், பார்வதியுடன் மாடியிலிருந்து ஓடும் வெளியே வரும் போது உள்நாட்டுப் போருக்காக ராணுவத்தினர் மீது கல்வீசும் காட்சியில் வந்து நிற்கும் வரை அட்டகாச பாலோஅப். இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கு இது முதல் படம்.இவர் விஸ்வரூபம், ட்ராபிக், போன்ற படங்களின் எடிட்டர். இவரின் முதல் இயக்க முயற்சியே மலையாள சினிமாவின் முக்கிய படமாய் அமைந்துவிட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் தமிழ் சினிமாவிற்கு  திரும்பவும் போராத காலம். கடுகு, பாம்புச்சட்டை, என்கிட்ட மோதாதே, தாயம், 1 ஏ,எம், வைகை எக்ஸ்பிரஸ், இதைத் தவிர, கட்டம்மராயுடு, ஹிந்தி பில்லவுரி,  அனார்கலி ஆஃப் ஆரா, மலையாளம் டேக் ஆஃப், ஹனிபீ 2 செலிபரேஷன்,  சென்ற வார ஹிட் தொடர்ச்சியான குற்றம் 23, மாநாகரம்  போன்றவை வேறு. இத்தனை படங்களுக்கும் வசூல் என்று பார்க்க வேண்டுமென்றால் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். எனவே இருக்குற ரீலீஸான எட்டு தமிழ் திரைப்படங்களும், மல்டிப்ளெக்ஸுகளில்  ஒரு ஷோவும் அரை ஷோவுமாய் ஓடுகிறது. ஒரு காலத்தில் காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் என்று அழைக்கபடும் தியேட்டர்களில் அதுவும் சென்னையில் மட்டுமே காலை காட்சி ஒரு படமும் மற்ற மூன்று காட்சிகள் ஒரு படமுமாய் ஓடும். பின்புமெல்ல அது செங்கல் பட்டு ஏரியா தியேட்டர்களிலும் பரவி, இப்போது தமிழ் நாடு முழுவதும் நான்கு காட்சிகள் ஒரே படம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று வழக்கொழிந்துவிட்ட நிலையாகிவிட்டது.

ஹிந்தி மற்றும் மலையாளப்படங்களுக்கு பெரும்பாலும், மாலை அல்லது இரவு காட்சி கன்பார்ம். தமிழ் படங்களுக்கு பெரிய விநியோகஸ்தர் பலம் மட்டும் இல்லையென்றால் காலை மற்றும் மதியக் காட்சி மட்டுமே. சமீபத்தில் ஒரு பெரிய மல்ட்டிப்ளெக்ஸ் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன காரணம் கொஞ்சம் லாஜிக்கலாய் இருந்தது. மலையாளம் மற்றும் இந்தி படங்கள் பெரும் கும்பலாய் வருவதில்லை. அது மட்டுமில்லாமல் குறைந்தது இரண்டு வார இடைவெளி விழுகிறார்ப் போலத்தான் படங்கள் வெளியாகிறது. இதனால் படம் பற்றிய விமர்சனம் போன்றவற்றை படித்துவிட்டு வார நாட்களில் கூட கூட்டம் வருகிறது. ஆனால் அதே நிலை தமிழ் சினிமாவிற்கு கிடையாது. அது மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் இதர மொழி படங்களை வெளியிடும் போது தியேட்டர் ஸ்டால்களில் விற்பனை டிக்கெட் விற்பனையை விட அதிகமாகவே கிடைக்கிறது. குறிப்பாய் ஹிந்தி படம் பார்க்கும் மக்கள் ஸ்டாலில் செலவு செய்யும் தொகை இரண்டு மடங்கு என்கிறார். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் தமிழ் சினிமா சூப்பர் ஹிட் என்றால் மட்டுமே குழந்தை குட்டியோடு படம் பார்க்க வருவார்கள். குழந்தைகள் தான் ஸ்டாலின் டாகெட்டே. ஆனால் ஹிந்தி படம் பார்க்க வரும் மக்கள் வரும் போதே, கோக் ம்ற்றும் இதர பேக்கேஜ் ட்ரிங்கோடுதான் உள்ளேயே வருவார்கள். இடைவேளையின் போது லைட்டாய் காபி போன்ற வஸ்துக்களோடு அவர்கள் படம் பார்ப்பது முடியும்.

கிடைத்த காட்சிகளில் போட்டு படம் பிக்கப் ஆகி மூச்சு விடுவதற்குள் அடுத்த வாரம் எட்டு படம் லைனில் இருக்க, என்ன தான் செய்ய முடியும் ஒரு படத்தின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும்.யாராவது முதல் மூன்று நாட்களில் ஆகும் வசூல் தான் படத்தின் அடுத்த வார நிலையை ஊர்ஜிதப்படுத்தும் என்கிற நிலையில் சிறு முதலீட்டு படம் முதல் பெரு முதலீட்டு படம் வரை சமீபகாலமாய் 90 சதவிகித ஓப்பனிங் என்பது கூட பெரிய விஷயமாகிவிட்ட நிலையில் சின்ன படங்களுக்கு முதல் காட்சியில் முப்பது சதவிகிதம் ஆட்கள் வந்தாலே அதிசயம் என்று ஆகிவிட்டிருக்கிறது. சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களில் முப்பது டிக்கெட், நாற்பது டிக்கெட் என்பது அதிகபட்சமாகிவிட்டிருக்கிறது. இரவுக் காட்சிகள் சின்ன முதலீட்டு படங்களுக்கு பல சிற்றூர்களில் இல்லவே இல்லை என்றாகிவிட்டது. தயரிப்பாளர் சங்க தேர்தல் முடிந்து புதியதாய் பதவிக்கு வரும் குழுவினர் இதற்கு இப்போதாவது சரியான முடிவெடுக்கவில்லையென்றால் ம்ம்ஹும் ரொம்பவே கஷ்டம் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
குறும்படம்
Error
டிஜிட்டல் யுகத்தின் ஆரம்பகாலக்கட்டம். வழக்கமாய் ஏதாவது வியாதி, சமூக கருத்துக்களுக்காக மட்டுமே குறும்படங்கள் என்றிருந்த காலத்தில் கதைகள் அடியெடுக்க ஆரம்பித்த வேளையில் வெளிவந்த இந்த குறும்படம், அடியாட்கள், கொலை, ஆள்மாறாட்டம் என இன்றைய ஹீஸ்ட் குறும்பட பாணியில் எடுக்கப்பட்டது.  டெக்னிக்கலாய் இன்றைய குறும்படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை என்றாலும், டைட்டில் ஓடும் வரை பொறுமை காக்க வேண்டியது அவசியம். மற்றபடி ஒர் சிறந்த குறும்படத்தை அளித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.பிரகாஷ்.  இவரின் சினிமா கனவு நினைவானதாய் என்றுதான் தெரியவில்லை.

https://www.youtube.com/watch?v=IBQE0w87EIQ&index=29&list=PLl7TKySwBnINuc7JT-WwlqKJ-KzhiCLUV

Post a Comment

No comments: