Thottal Thodarum

May 31, 2017

கொத்து பரோட்டா -2.0-28

கொத்து பரோட்டா -2.0-28
எஸ்.பி.பி  v/s இளையராஜா
எஸ்.பி.பியின் வெளிநாட்டு கச்சேரியில் தன்னுடய பாடல்களை அனுமதியில்லாமல் பாடக்கூடாது என்று இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் என்றதும் இணையமெங்கும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கோஷங்கள் முழங்க ஆரம்பித்துவிட்டது.  சொல்லப் போனால் காப்பிரைட் சட்டப்படி அவர் கேட்டதில் ஏதும் தப்பேயில்லை. ஒரு இசையமைப்பாளராய் அதன் உரிமை முழுவதும் அவர் வைத்திருக்கும் பட்சத்தில் அது சரியே. ஆனால் நெடுநாள் நண்பர்களான எஸ்.பி.பிக்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு என்ன பிரச்சனை என்ற கேள்வி ஒரு புறம் எழுந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இந்த காப்பிரைட் பற்றிய அறிவு கிடையாது என்பதே உண்மை. 

முன்பெல்லாம் தயாரிப்பாளருக்குத்தான் எல்லா உரிமையும் இருந்தது. என்றைக்கு பெயருக்குப் பின்னால் தயாரிப்பாளர்கள் ஓட ஆர்மபித்தார்களோ அன்றைக்கு வந்தது அவர்களுக்கு ஆப்பு. இளையராஜா உட்பட பல பெரும் ஜாம்பவான்கள் தங்களது வேலைப் பார்க்கும் படங்களுக்கு சம்பளத்தில் தான் வேலை பார்த்து வந்தார்கள். பின்னாளில் ராயல்டி, டிஜிட்டல் உரிமை என பல விஷயங்கள் வளர, வளர சம்பளம் படத்திற்கு  வேலை  செய்ய மட்டுமே மற்றபடி பாடல்களுக்கான அத்தனை உரிமையையும் எனக்கே என்கிற ஒப்பந்தமிட்டால் தான் இசை என்றாகிப் போய் பெரிய இசையமப்பாளார்கள் அம்மாதிரியான ஒப்பந்தங்களையே இடுகின்றனர்.

அதன் படி, திரைப்பட பாடல்களை விற்கும் உரிமையை தயாரிப்பாளர் இசை வெளியீட்டு கம்பெனிக்கு விற்றவுடன் அவருக்கும் பாடல்களுக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அதன் பிறகு உரிமை பெற்ற நிறுவனம் ரேடியோ, டிவி, ஹோட்டல், மீயூச் ஷோ, மெல்லிசை கச்சேரி என அத்தனைக்கு உரிமை பணம் பெற்று, அதன் மூலம் வரும் வருமானத்தில் இசையமைப்பாளர்களுக்கு, பாடலாசிரியர்களுக்கு, என ஒர் தொகையை பிரித்துக் கொடுக்கிறது. வருமானத்தில் 50 சதவிகிதம் தயாரிப்பாளர் அல்லது உரிமை பெற்ற நிறுவனம், 25 சதவிகிதம் இசையமைப்பாளர், 25 சதவிகிதம் பாடலாசிரியர்களுக்கு என பிரித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் என்றைக்கு கணக்கு கொடுத்து என்னைக்கு வாங்குவது என்று யோசித்த இசையமைப்பாளர்கள்   தங்களது இசையமைப்பு வேலைக்கென சம்பளமாய் இல்லாமல், பேக்கேஜாய் ஒர் தொகை பேசி, பின்னணியிசையில் ஆரம்பித்து, பாடகர்கள், பாடலாசிரியர்கள் முதற்கொண்டு  அத்துனை பேரையும் அதனுள் கொண்டு வந்து இசையமைக்க  ஆரம்பித்தார்கள். அப்படத்தின் இசை உரிமையை தாங்களது பினாமி கம்பெனிக்கோ, அல்லது தங்களது பெயரிலேயே இசை நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் உரிமையை வாங்கிக் கொள்வது. அப்படி வாங்கிக் கொள்ளும் பட்சத்தில் காப்புரிமை சட்டத்தின் படியான அத்தனை வருமானமும் இசையமைப்பாளருக்கு வந்துவிடும். உரிமை பெற்ற நிறுவனமானது இசையமைப்பளர், பாடலாசிரியர், ஒர் குறிப்பிட்ட சதவிகித தொகை பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அல்லது பட வேண்டும்.  பாடலாசிரியர்கள் தங்களுக்கும் சதவிகிதம் வேண்டுமென ஜாவித் அக்தர், குல்சார் எல்லாம் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் போராட்டம் எல்லாம் நடத்தி, சட்டமே இயற்றி வெற்றி பெற்றார்கள். பாடகர்களும் தற்போது அதற்காக போராடி வருகின்ற நிலையில் வெற்றி கிடைத்தால் எனக்கும் எதிர்காலத்தில் ஒரே ஒரு படத்தில் பாட்டு பாடிய எனக்கும் ராயல்டி வர வாய்ப்பிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹோட்டல்களில் நடக்கும்  விழாக்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு, மேடை கச்சேரிகளுக்கு, லிப்ட்டில் ஒலிக்கவிடும் இசைக்கு என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடத்திற்கும், ஏற்றார்ப் போல வருடாந்திர தொகை ஒன்றை The Indian Performing Rights Society Limited எனும் நிறுவனம் http://www.iprs.org/cms/  இந்த இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது. அதன் படி வசூலிக்கப்படும் தொகை யாருக்கு காப்புரிமை இருக்கிறதோ அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. உரிமை வேறு நிறுவனங்களிடம் இருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவருக்கும் பிரித்தளிக்கப்படும். ஆனால் பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தங்களது பெயரிலேயே ஒப்பந்தம் போட்டப்ப்ட்டு விடுவதால் அனைத்து தொகையையும் பிரித்துக் கொடுப்பதெல்லாம் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை பெரும்பாலான பெரிய இசையமைப்பளர்கள் அனைவரும் தெரிந்தே செய்கிறார்கள். 

இளையராஜாவுக்கும் எஸ்.பிபிக்குமான பிரச்சனை ஏன் பெரிதாகப் பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர்களது நட்பு. அவ்வளவு நெருக்கமானவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் என்பது, அதுவும் அவரது நிகழ்ச்சி கடந்த வருடத்திலிருந்தே உலகலவில் நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே பேசித் தீர்த்திருக்க வேண்டிய விஷயத்தை இப்படி சந்திக்கு கொண்டு வந்ததன் பின்னணி என்னவாக இருக்கும் என்பதுதான் காரணம்.

பைரஸி உச்சத்தில் தாண்டவமாடும் இந்நாட்களில் ஆடியோ உரிமை என்று பெரிய பணம் ஏதும் கிடைக்காத பட்சத்தில் எதற்கு சல்லீசு விலையில் ஆடியோவை விற்க வேண்டும் என்று முடிவு செய்த பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது  நிறுவனங்கள் பெயரிலேயே ஆடியோ கம்பெனி ஒன்றை ஆரம்பித்து காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் ஒரு படத்திற்கு மோஷன் பிக்சர்  டீசரில் ஆரம்பித்து ட்ரைலர், லிரிக் வீடியோ, பாடல்களின் வீடியோ வரை யூ ட்யூப்பில் கிடைக்கும் வருமானம், ரேடியோ, போன் காலர் ட்யூன் மற்றும் மற்ற காப்புரிமை உரிமைகள் மூலமாய் கிடைக்கும் பணம் என இப்படி செலவு செய்கிற பணத்தை திரும்ப எடுக்கவும்  மீண்டும் தயாரிப்பாளருக்கே உரிமை எனும் பவர் கிடைத்திருக்கிறது. என்ன இவையனைத்து கொஞ்சம் வியாபாரம் தெரிந்த, ப்ராண்டட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே  கிடைத்திருக்கிறது.   காப்புரிமை சட்டப்படி அவரவர்களுக்கான உரிமை மற்றும் வருமானத்தை பேணுவதற்காக  போராடுவது சரியே. இந்தியாவை பொறுத்த வரை ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் உலக அளவில் இவைதான் சரியான முறை. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Vaangavetti
தடால் புடால் டிவிட்டர் ஸ்டேட்மெட்டுகள் போல தட,தட, விறு விறு, கேங்ஸ்டர் படங்களுக்கும் பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. ஷிவா, சத்யா, கம்பெனி, டி, சர்கார், என கேங்ஸ்டர் கதைகளை ரத்தமும், சதையுமாய், பொங்கி வழியும் வயலென்ஸோடு இவர் சொல்லும் விதமே அலாதி. சமீபகாலமாய் பெரிதாய் ஹிட் ஏதுமில்லாவிட்டாலும் வீரப்பன், அது இது என படமெடுத்து கொண்டுதானிருக்கிறார். சமீபத்தில் இதுதான் என் கடைசி தெலுங்கு படம் என்ற தடாலடி ஸ்டேட்மெண்டோடு வெளியான படம் தான் இது.

1970களில் விஜயவாடா நகரையே கிடுகிடுக்க வைத்த பஸ்ஸ்டாண்ட் ராதா எனும் வங்கவீதி ராதா, ரங்கா சகோதரர்களைப் பற்றிய கதை.  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான வெங்கட ரத்னத்தின் அடியாளாய் பெரிய அளவிற்கு வளர்ந்து பின்னொரு நாளில் பிரச்சனை காரணமாய் வெங்கட ரத்னத்தை ராதாவே கொல்கிறான். க்ரூப் பிரச்சனையில் ராதா கொல்லப்பட, அவனது தம்பியான ரங்கா தலைமை பொறுப்புக்கு வருகிறான்.  அண்ணனைவிட பவர்புல்லான ரவுடியாய் வலம் வரும் நேரத்தில் இரண்டு ஸ்டூடண்ட் யூனியன் மாணவர்கள் மூலம்  காலேஜ் பாலிடிக்ஸில் நுழைந்து, மெல்ல அரசியல் கட்சி தலைவனாகிறான். தலைமை பிரச்சனையில் கல்லூரி மாணவர்கள் தலைவராகவும், ரங்காவில் ரைட், லெப்டாக வலம் வந்த காந்தி, நேரு இருவரில் காந்தி கொல்லப்பட, மீண்டும் ரங்காவின்  பவர் ஆட்டம் கொடுக்கிறது. 

தெலுங்கு தேசம் என்.டி.ஆர் கட்சியில் சேர்ந்து காந்தியின் தம்பி நேரு  எம்.எல்.ஏ ஆகிறான். ரங்கா காங்கிரஸில்  பவர் பாலிடிக்ஸும், ஜாதி பாலிடிக்ஸும் வெறி கொண்டு இருபக்கத்திலும் ஆட, ரங்காவை கொல்ல நினைக்கும் காந்தி, நேருவின் கடைசி தம்பியும் ரங்காவால் கொல்லப்படுகிறான். ரங்காவை எப்படி கொல்லப்படுகிறான் என்பதும், அதை ப்ளான் செய்யும் காட்சிகளும் திக் திக் நிமிடங்கள். 

படம் நெடுக, ரத்தம் ஆறாய் ஓடுகிறது, நிஜமாகவே நடந்த கதை என்பதால் இம்மாதிரியான படங்களில் கற்பனை சம்பவங்களுக்கு இடமளிக்காததால் கொஞ்சம் சவசவவென காட்சிகள் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.   அது மட்டுமில்லாமல்  இம்மாதிரியான படங்கள் அதிகமாய் பார்த்து பழகி போனதால் படத்தில் வரும் ட்விஸ்ட் எல்லாம் அதிரடியாய் இல்லாமல் இருப்பதும்  ஒர் காரணம்.

இப்படம் வெளியான போது ரங்கா குடும்பத்தினர் வர்மாவிடம் பஞ்சாயத்து செய்த்தாக சொன்னார்கள். கம்மா நாயுடு பார்டியான என்.டி.ஆரின் தெலுங்கு தேசத்திற்கும் கப்பு பிரிவினரான ரங்காவிற்குமிடையே ஆன ஜாதி சார்ந்த அரசியல் மிக அழகாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற லாவகம், ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் வன்மம். அரசியலை நேரிடையாய் சொல்லக்கூடிய தைரியமும் வாய்ப்பும் தெலுங்கு படங்களில் மட்டுமே உள்ள சுதந்திரம். அதை மிக அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.  என்னதான் சிறப்பாக கையாண்டு இருந்தாலும், இதற்கு முன் வந்த இவரது படங்களில் இருக்கும் பதைபதைப்பும் விறுவிறுப்பும் ஒரு மாற்று கம்மிதான்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – அந்தரங்கம்
ரொம்பவும் சிம்பிளான மாமியார் மருமகள் பிரச்சனைக் கதைதான். அதை சொன்ன விதத்தில்தான் இக்குறும்படம் தனித்து இருக்கிறது. வழக்கம் போல புது மருமகளை தன் கால் கட்டைவிரலுக்கடியில் வைக்க ஆசைப்படும் மாமியார். வேறு வழியேயில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மருமகள். இருவருக்கும் சுத்தமாய் ஒத்தே வருவதில்லை. டிவி சிரீயல் உட்பட. மருமகளுக்கு ஹிந்தி டப்பிங் என்றால் மாமியாருக்கு சன் டிவி. வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் லீக்கேஜ் இருக்கிறதா என்று பார்க்க ஒருவன் வருகிறான் அவன் திருடன். மாமியாரை அடித்துவிட்டு நகைகளை கொள்ளையடிக்கிறான். ஏற்கனவே ஆறு கொலை செய்தவன் நீங்கள் ஒத்துவராவிட்டல் இருவரையும் கொன்றுவிடுவேன் என்று மருமகள மிரட்டுகிறான். அப்போது மருமகள் தன் மாமியாரை கொன்றுவிட்டால் உனக்கு மேலும் நகைகளை தருகிறேன் என்று கோரிக்கை வைக்கிறாள். க்ளைமேக்ஸ் படு சுவாரஸ்யம். மருமகளாய் மிஷா கோஷல், மாமியாராய் ஸ்ரீபிரியா. இருவரின் நடிப்பும் அட்டகாசம்.மிகச் சின்ன கருவை வைத்து சுவாரஸ்யமான குறும்படத்தை அளித்தவர் மணிகண்டன். பி. https://www.youtube.com/watch?v=8vSvWjhjnso


May 24, 2017

கொத்து பரோட்டா 2.0-27

கொத்து பரோட்டா -2.0-27
ORU MEXICAN APARATHA
அரசியல் என்பது மலையாளிகளின் வாழ்க்கையில் ஊடுருவிய விஷயம் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் குடும்பப் படங்களில் கூட மிக இயல்பாய் ஆண்/ பெண் பேதமில்லாமல் போகிற போக்கில் அரசியல் பேசிவிடுவார்கள்.  ஒரு மெக்ஸிக்கன் அபரதா முழு கல்லூரி அரசியல் படம்.. 70களில் கம்யூனிஸ்ட் கட்சியான SYFன் அனுதாபியான கோச்சானினைக் கல்லூரி கேம்பஸில் வைத்து கொல்லப்படுவதுடன் ஆரம்பிக்கும் கதை என்பதுகளுக்கு ட்ராவல் ஆகிறது. மீண்டும் அதே கல்லூரி, ஆனால் அங்கே KSQ எனும் மற்றொரு கட்சி தான் பல வருடங்களாய் கல்லூரி பாலிடிக்ஸில் கொடி கட்டி பறக்கிறது. அங்கே எப்படி SFYயின் கொடியை பறக்க விடுகிறார்கள் எனும் சாதாரணக்கதை தான்.ஆனால் அதை படமாகியிருக்கும் விதத்தில் தான் சுவாரஸ்யம். ஏகப்பட்ட கேரக்டர்கள், கல்லூரி ஆஸ்டல். குடி, காதல், காதல் தோல்வி, கல்லூரிகுள் இருக்கும் அரசியல் காரணமாய் நடக்கும் மாணவ துரோகங்கள், கல்லூரி கலை விழா, என படு லைவாக வீஷுவல் படுத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட துணை நடிகர்கள், இது மாஸ்டர் ஷாட், இது மிட், என்றில்லாமல் மிக இயல்பாய் திரைமொழியில் நம்மை அவர்களுள் ஒருவராய் அலைய விடுகிறார்கள். முதல் பாதி காலேஜ் கலாட்டா என்றால் பின் பாதி கல்லூரி தேர்தல், அதன் பின் உள்ள அரசியல், மாணவர்களின் அரசியல் ஆர்வம், கொலை வெறி என பல விஷயங்களை பேசுகிறது. என்ன ஏகப்பட்ட கேரக்டர்களினால் யாருடய கதை என்று செட்டிலாகத்தான் அரை மணிநேரம் ஆகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Las elegidas
உலூசிஸும், சோபியாவும் சந்திக்கிறார்கள், காதலிக்கிறார்கள், உடலுறவு கொள்கிறார்கள். கொண்ட மாத்திரத்தில் உனக்காக நானும் ஏதும் செய்வேன் என்கிறான். அவளும் ஆமோதிக்கிறாள். தன்னுடய வீட்டிற்கு சோபியாவை உலூசிஸ் கூட்டிப் போகிறான். அங்கே அப்பா பார்பிக்யூவில் சமைத்துக் கொண்டிருக்க, அன்பாய் வரவேற்று, அவளது குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார். அவளுடய அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதையும், தாயும் சின்னத் தம்பியும் இருப்பதாய் சொல்கிறார். அவர் ஆதரவாய் பேசி ஆறுதல் சொல்கிறார். அதே சமயம் அண்ணன் தன் மனைவி குழந்தையின் சகிதம் வந்து சேருகிறான்.  சோபியாவிடம் உன்னிடம் சரியாக நடந்து கொள்கிறானா என் தம்பி என்று விசாரித்து, உன்னைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருகிறேன் உலூஸிஸ் மூலம் என்கிறான். அப்பா தன்னுடய 54வது பிறந்தநாள் கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிகச் சந்தோஷமாய் அமைகிற நாளுக்கு பிறகு உலூஸிஸ் அவளிடம் நாம் ஊரை விட்டு ஓடிவிடலாம் என்கிறான். ஏன் என்று கேட்டதற்கு தன் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொல்லி ரகசியமாய் ஊரை விட்டு கிளம்பும் நேரத்தில் அவனை தொடர்ந்து வந்த அவனது அண்ணன் உலூசிஸை அடித்துப் போட்டுவிட்டு, சோபியாவை தூக்கிக் கொண்டு செல்கிறான். அவளை விபசாரவிடுதியில் சேர்க்கிறான். ஒன்றுமறியா இளம் அப்பாவி பெண்களை காதல் என கவர்ந்து மெல்ல அவர்களது பின்புலத்தை அறிந்து கொண்டு, வறுமையை பயன்படுத்தி, மிரட்டி, அவரக்ளை விபச்சாரிகளாக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இவர்கள் என்று விளக்கப்படுகிறது. விபச்சார விடுதி, அங்கு நடக்கும் அராஜகங்கள், கொடுமைகள், காண்டம் எப்படி மாட்டுவது என்பதில் ஆரம்பித்து எப்படியெல்லாம் உடலுறவு கொள்ள வேண்டுமென்று லைவ் டெமோ சொல்லிக் கொடுக்கப்பட்டு, எது எதெற்கு எவ்வளவு பணம் வாங்க வேண்டும்? என மெனு கார்டு போல உடலுறவின் பல முறைக்களுக்கு தொகை செட் செய்வது. மாதவிடாய் காலங்களிலும் உடலுறவுக்கு தயார்படுத்துவது போன்ற காட்சிகளை ஆபாசமில்லாமல், மிக நாசூக்காக சொல்லியிருக்கிறார்கள். அடிபட்ட உலூஸிஸ் தங்கள் குடும்பத்திற்கு இழுக்கு சேர்த்ததாய் அவனது அப்பாவும் அண்ணனும் அடித்து துவைக்க, அவ்வளவிற்கு அப்புறமும் உலூஸிச் தனக்கு சோபியா வேண்டும் என்கிறான் அப்படியானால் வேறொரு பெண்ணை மயக்கி கூட்டி வந்து சேர்த்துவிட்டு, அவளை கூட்டிக் கொள் என்று அப்பா கண்டீஷன் போட, வேறு வழியில்லாம இன்னொரு பெண்ணை தேட ஆரம்பிக்கிறான். அதே நேரத்தில் ஒவ்வொரு விபச்சார விடுதியாய் ஒரு வருடத்துக்கு முன் காணாமல் போன தன் பெண்ணை தேடியலையும் ஒருவர், சோபியாவின் வயதை கேட்டறிந்து தன் பெண்ணும் அவள் வயதுதான் என்று சொல்லி வருந்தி, அவளை எப்படியாவது காப்பாற்றுகிறேன் என்கிறார். உலூசிஸ் இன்னொரு பெண்ணை கொஞ்சம் கொஞ்சமாய் கவர்ந்து அவளை தன்னுடன் தனி வீடெடுத்து தங்கவைத்து, அவளுக்கு வேறொரு விதமான ப்ரெஷரை கொடுத்து தனக்காக விபச்சாரம் செய்தால் தன் கடனெல்லாம் சரிகட்டிவிடலாமென்று எமோஷனல் ப்ளாக் மெயில் செய்கிறான். இன்னொரு பக்கம் சோபியா தப்பிக்க தகுதியான நாள் குறித்து எல்லாம் ப்ளானும் ரெடியாக இருக்க, என்ன நடக்கிறது என்பதுதான் க்ளைமேக்ஸ்.. இப்படம் ஸ்பானிஷ் படமாய் இருந்தாலும் எல்லா ஊருக்கும் நாட்டிற்கும் இன்றைய நிலையில் பொறுத்தமான நிஜக் கதை தான். உலூஸிஸ் இன்னொரு பெண்னை கண்டுபிடித்து மயக்கி தன் வீட்டிற்கு கூட்டிவரும் போது, சோபியாவிற்கு நடந்த அதே காட்சிகள், அப்பா, சமைப்பது, அவரது பிறந்தநாள், கேக் கட்டிங்க், அண்ணன் இப்போது வேறு ஒரு பெண்ணுடனும் குழந்தையுடனும் வருவது என காட்சி வரும் போது நம் அடி மனதில் வருத்தம் தோய ஆரம்பித்துவிடும். அய்யோ.. புள்ளை ஏமாறப்போவுதே என்று பதைக்கும். இளம் பெண்களை அதிலும் பொருளாதாரத்தில் மிக நலிந்த நிலையில் இருக்கும் இளம்பெண் குழந்தைகளை  ஜீன்ஸும், டீசர்ட்டும், மால்களுக்கு கூட்டிக் கொண்டும் போய் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து கவர்கந்து பின் என்ன ஆகிறது? என்பதை மால்களி ஓரங்களில் வெட்கப்புன்னகையோடு இடுப்பை சுற்றிய கைகளை தட்டி விட்டுக் கொண்டே நடக்கும் பெண் குழந்தைகளைப் பார்க்கும் போது திக்கென்றுதான் இருக்கிறது. அதே உணர்வை இப்படத்தை பார்க்கிற போதும் வருவதை தவிர்க்க முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The Salesman
ஆஸ்கர் விருது பெற்ற வெளிநாட்டு திரைப்படம். ஈரானிய படங்களுக்கு மட்டும் கதை என்கிற வஸ்துவுக்கு பஞ்சமே வராது. ஏனென்றால் மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட திரைப்படக்கதையாய் மாற்றி விடுகிறார்கள். எமாட்டும் ராணாவும் தம்பதிகள். எமாட் பள்ளி வாத்தியாரும் கூட. கணவன் மனைவி இருவருக்கும் தொழில் முறை நடிப்பு என்பது பாஷன்.  The death of  a salesman எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறவர்கள். தம்பதியரின் வீடு சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் காலி செய்ய நேரிடுகிறது. புதிய வீட்டிற்கு போய் செட்டிலாக முயன்று கொண்டிருக்கும் நேரத்தில், ரானாவை ரத்த களறியில் பாத்ரூமில் கண்டெடுக்கிறார்கள். சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்ற படுகிறாள். ஆனாலும் அவளின் மன உளைச்சல் போகவில்லை. யாரோ ஒருவன் பாத்ரூம் வரை வந்து பார்த்து அவள் கத்த ஆரம்பித்ததும் தாக்கிவிட்டு ஓடியிருக்கிறான் என்று சொல்கிறாள். இதற்கு முன் இந்த வீட்டில் இருந்தவள் ஒரு விபச்சாரி என தெரிய வர, அவளின் பொருட்களும் அங்கேயே ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதையெடுக்க சொல்கிறான் எமாட். வீட்டில் ஓரிடத்தில் பணமும், ஒரு கொத்து சாவியும் கிடைக்க, சாவிக்கான வண்டியை தேடி அலைகிறான். அது ஒரு லோட் அடிக்கும் ட்ரக். அதை கொண்டு வந்து தன்னுடய வீட்டின் பார்க்கிங்கில் வைத்துவிட்டு, அலுவலகத்திற்கு செல்கிறான். தன் ஸ்டூடண்ட்  ஒருவனின் அப்பா மூலமாய் வண்டியின் எண்ணை வைத்து அட்ரஸை கண்டுபிடிக்கிறான். அந்த வண்டியை சம்பந்தப்பட்டவன் வேறொரு சாவி போட்டு எடுத்துப் போயிருக்க, அதை தொடர்கிறான். ஒர் இளைஞன் தான் அதை ஓட்டுகிறவன் என்று தெரிந்து கொள்கிறான். அவனுடய வண்டியை தனக்கு லோட் அடிக்க வேண்டுமாய் கேட்கிறான்.  மிகுந்த பிரயாசைக்கு பிறகு வருவதாய் ஒத்துக் கொள்கிறான்.  அவனின் வருகைக்காக காத்திருக்கிறான் எமாட் தன்னுடய பழைய வீட்டில். ஆனால் வருவது அந்த இளைஞனின் மாமனார். வயதானவர். இதய நோய் உள்ளவர். தன்னுடய பெண்ணுக்கும் இளைஞனுக்கு விரைவில் திருமணம் நடக்க விருப்பதால் பர்சேஸுக்கு போயிருப்பதாய் சொல்கிறார். தொடர்ந்து பேசுகையில் தன் மனைவியை தாக்கியது அவர்தான் என்று தெரிகிறது. அவரை அடைத்துவைத்துவிட்டு, உன் மனைவி, மகள், மருமகனை அழைத்திருக்கிறேன். அவர்கள் வரட்டும் உன் சுயரூபத்தை தெரிந்து கொள்ளட்டும் அது வரை காத்திரு என்று சொல்கிறான். அதன் பின் நடக்கும் உணர்ச்சிமயமான நிகழ்வுகள் வாவ்.. அட்டகாசம். கதை சொன்ன விதமும், க்ளைமேக்ஸில் நடக்கும் போராட்டங்கள், ஒரு சின்ன சபலத்தினால் பாதிப்படையப் போகும்  தன் குடும்பத்தை நினைத்து அவர் வயதையும் மீறி மன்னிப்பு கேட்குமிடம். அதன் பின் எமெட் எடுக்கும் முடிவு எல்லாமே க்ளாஸ்..  எமெட்டும், ராணாவும் நடிக்கும் நாடகத்தின் நிகழ்வுகளின் மூலம் வேறு ஒரு வர்ஷனை இணைத்திருப்பதும், இருவரது நடிப்பும்  அட்டகாசம். ஏன் விசாரணையெல்லாம் லிஸ்டுலேயே வரவில்லை என்பதை இப்படம் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
இளைஞன் காபி ஷாப்பில் காத்துக் கொண்டிருக்கிறான். இளைஞி கோபமாய் வருகிறாள். இருவருக்கிடையே ஆன முந்தைய நாள் சண்டையினால் ப்ரேக்கப் ஆகிவிடலாம் என்று அவள் முடிவெடுக்க, பேச ஆரம்பிக்கிறார்கள். இருவருக்கிடையே ஆன நெருக்கம், காதல், அதையெல்லாம் விட பொசசிவ்னஸ் வெளிப்படுகிறது. காதலை உயிர்ப்புடன் வைக்கும் இந்த பொஸஸிவ்னெஸ் பற்றி பேசி இணைகிறார்கள். நடித்திருக்கும் அரவிந்த், வைதேகி இருவரும் இயல்பாய் நடிக்க முயன்றிருக்கிறார்கள். அரவிந்த் பாலாஜியின் நல்ல விஷூவல்ஸ், அரவிந்த் ராஜகோபாலின் சில ஷார்ப் வசனங்கள் எல்லாம் அடங்கிய டெம்ப்ளேட்டான கதை தான் என்றாலும் ப்ரெசெண்ட் செய்த விதத்தில் அருண் டிவிஏஆர் ராகவ் ஸ்கோர் செய்கிறார்.  இருவரும் ப்ரேகப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்க, இளைஞனுக்கு மட்டும் கோபம், https://www.youtube.com/watch?v=CJeq4JfNJWc

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

May 17, 2017

கொத்து பரோட்டா -2.0-25

கொத்து பரோட்டா 2.0-25
ஒவ்வொரு பெரிய படம் வரும் போதும், படம் வெளியான அடுத்த நாளே 40 கோடி, 60 கோடி கலக்‌ஷன் என்று வீறிட்டு அலறும் வழக்கங்கள் எல்லாமே சோசியல் மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு பிறகே. அதிலும் ரசிகர்களும், காசு வாங்கிக் கொண்டு ப்ரோமோட் பண்ணும் ஆட்களும், கைக்கு வந்த தொகையை போட்டு குறிப்பிட்ட நடிகர், தயாரிப்பாளரின் பெயரோடு டேக் செய்து விட்டுவிடுவார். தயாரிப்பாளருக்கு நிஜமான கலக்‌ஷன் தெரியும் என்றாலும் வேறு வழியில்லை. பப்ளிக்கில் அதெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. ஓசியில கிடைக்கிற பப்ளிசிட்டியை எதுக்கு கெடுத்துக்கணும்னு விட்டுவிடுவார். சமீபத்தில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசிய ஆடியோ தமிழ் சினிமாவில் சும்மாவாச்சும் நூறு கோடி, நானூறு கோடி என்று சொல்லிக் கொண்டு, நடிகர்களின் மனதை குளிர்விப்பதைவிட நிஜத்தை சொல்லி, சம்பளத்தை குறைத்து நாலு காசு நிஜமாகவே பாருங்க என்று சொன்னதற்கு மொக்கையாய் என்ன நீ கையப்பிடிச்சி இழுத்தியா என்கிற ரேஞ்சுக்கு, தியேட்டர் விளம்பரங்களில் பங்கு தந்தாயா?, பாப்கார்ன் விற்றதில் பாதி கொடுத்தாயா? என்று குற்றம் சாட்டுகிறார். தியேட்டரில் வரும் விளம்பரங்களிலோ, பார்க்கிங் மற்றும் ஸ்டால் வருமானத்திலோ தயாரிப்பாளர் பங்கு என்று உலகளவில் எங்குமே கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த ஆண்டு முதல்வரின் உடல்நிலை மோசமான நேரத்தில் ஆரம்பித்து, வர்தா புயல், முதல்வர் மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஆட்சி திரிசங்கு நிலை, என தொடர்ந்து சினிமாவை விட நிஜத்தில் மக்களை புரட்டிப் போடும் நிகழ்வுகளும், செய்திகளுமாய் வந்து கொண்டிருக்க, சினிமா மீதான ஆர்வம் குறைந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை அள்ளி வீச, நாங்கள் எல்லாம் அப்படியில்லை என்று விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள் ஒருபுறம் தயாரிப்பாளர்கள் மேல் குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருந்தாலும், திரைப்பட வசூலைப் பொறுத்தவரை இன்றளவிலும் வெளிப்படை தன்மையில்லாத ஒர் நிலை தான் தமிழ் சினிமாவில். சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸைப் பொறுத்தவரை வாரம் தவறாமல் வசூலை பிரித்து செக்காய் கொடுத்துவிடும் நிறுவனங்களும் உண்டு. ஆறு மாதம் வரை வசூலை பிரித்துக் கொடுக்காத மல்டிப்ளெக்ஸுகளும் உண்டு. என்ன மல்ட்டி ப்ளெக்ஸுகளை பொறுத்தவரை 120 ரூபாய் என்பது இன்றைய அளவில் நிலையான தொகை. அதனால் ஒப்புக் கொண்ட சதவிகித விகிதாசாரப்படி சரியாய் பிரித்து கொடுத்துவிடுவார்கள். வெளி மாவட்டங்களில் அப்படியல்ல. பெரும்பாலும், அரசு நிர்ணையித்த விலையை விட அதிகமாய்த்தான் விற்பார்கள். தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர் ஒரு விலைக்கு வாங்கி அதை பிரித்து தியேட்டருக்கு இவ்வளவு என்று மினிமம் கியாரண்டி முறையில் தான் போட்ட முதலை படத்தின் வெற்றி தோல்விக்கு முன்னமே பார்க்க அதிக விலைக்கு விற்க, போட்ட அதிக முதல்லை எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் எடுக்க சாதாரண அதிகரிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாய் தொகை வைத்து விற்று போட்ட காசை எடுக்க முயல்கிறார். அதனால் கணக்கு காட்டப்படுவதில்லை. பெரிய படங்களுக்கான இந்த பழக்கம் சிறு முதலீட்டு படங்களுக்கும் தொடர்வது தான் பரிதாபம். வெளிப்படையாய் தயாரிப்பாளர் தன் படத்திற்கு எந்தெந்த தியேட்டர்கள், எத்தனை டிக்கெட் விற்றது? என்ற கணக்கை இன்றைய இணையத்தின் வளர்ச்சியின் மூலமாய் நேரடியாய் பார்க்க முடியும். ஆனால் அதற்கான ஏற்பாட்டை தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, திரையரங்கு உரிமையாளர் சங்கமோ  முன்னெடுத்து செயல்பட இன்று வரை  இன்னும் விழையாமல் இருப்பதன் பின்னணி சுயநலம். எனக்கென்ன நான் நல்ல விலைக்கு விநியோகஸ்தருக்கு விற்றாகி விட்டது என்று தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மினிமம் கேரண்டியில் தலையில் கட்டியாகிவிட்டது நாம எஸ்கேப் என்று எஸ்ஸாகி விடுவதால் என்ன டேஷுக்கு நான் உனக்கு கணக்கு காட்ட வேண்டும் என்று அவர்கள் ஒரு புறமிருக்க, நீ பொய் கணக்கு சொல்லுற என்று இன்னொரு பக்கம் கூட்டம் சேர்ந்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நல்ல திரையங்கில் படம் பார்க்க 120 கொடுக்க தயங்காத, மக்கள், கொஞ்சம் கூட தரமேயில்லாத அரங்கிலும் அதே 120 ரூபாயை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் தான் பைரஸியை சுவீகரிக்க ஆரம்பித்துவிடுகிறான். வெளிப்படையான வியாபாரம் மட்டுமே தமிழ் சினிமாவை பொய் நூறு கோடி க்ளப்புகளிடமிருந்தும், வீண் விளம்பரங்களிலிருந்தும், சக்ஸஸ் பார்டியிலிருந்து காப்பாற்றும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Better Call Saul
படங்களுக்கு பார்ட் ஒன், டூ என சீக்யூல் வந்த காலம் போய் ஃப்ரீக்யூல், அதாவது வந்த பாகங்களுக்கு எல்லாம் முன்னம் நடந்த கதை என்று படங்கள் வந்து கொண்டிருந்த வழக்கம் தற்போது சீரியல்களுக்கும் எக்ஸ்டெண்ட் ஆகியிருக்கிறது. ப்ரேக்கிங் பேட் சீரியலில் வரும் பிரபல கேரக்டரான “சால் குட்மேன்” கேரக்டரை வைத்து எடுக்கப்பட்ட ஃப்ரீக்யூல் தான் இந்த பெட்டர் கால் சால். ஜிம்மி ”மெக்கில்” லாக பாப் ஓடன்கிரிக்.  ப்ரேக்கிங் பேடில் வரும் உட்டாலக்கடி க்ரிமினலான கிரிமினல் லாயராய் வந்து எல்லார் மனதையும் கவர்ந்த  கேரக்டரின்  முன் கதை தான். ப்ரேகிங் பேடில் வரும்  சால் குட்மேனாய் இல்லாமல் ஜிம்மி மெக்கிலாய் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வெறியுடன், கரஸில் வக்கீலுக்கு படித்துவிட்டு, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற ரீதியில் வளையவரும் தொண, தொண, வளவள, எதையும் குறுக்கு வழியிலேயே யோசிக்கும், ஸ்மார்ட் வக்கீலான இவருக்கும், ஒரு பெரிய லா ஃபர்மிற்கு பார்ட்னராய் இருக்கும் அவரது அண்ணனுக்கு இடையே நடக்கும் தொழில் போட்டி, பாசப் போராட்டம். அண்ணன் மெக்கில் தன் தம்பியின் வளர்ச்சிக்காக தன் ஈகோவை விட்டுக் கொடுக்காதவர். தீடீரென வெய்யில், எலக்ட்ரானிக், மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்களால் ஏற்படும் அலைவரிசைகளினால் உடல் பாதிப்பு அடையும் வியாதி அவருக்கு. இருட்டிலேயே பெரும்பாலும் வாழும் அவர் தனக்கு உபத்திரவமாய் இருந்தாலும், அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனிருந்து உதவும் பாசக்கார தம்பியாகவும் இருக்கிறான் மெக்கில். தன் முயற்சியில் ஒர் பெரும் கேஸை மெக்கில் கொண்டு வர, அதன் பின் நடக்கும் விஷயங்கள், அண்ணன் தம்பியினிடையே நடக்கும் துரோகங்கள் என கதை போகிறது. ப்ரேக்கிங் பேடில் வரும் முக்கிய கேரக்டரான எர்மேண்ட்டையும், போதை பொருள் தாதா டூடோ, அவருடய மாமா கேரக்டர்கள் மட்டுமே இதுவரை இந்த இரண்டு சீசன்களில் இணைந்திருக்கிறர்கள். ஏப்ரலில் மூன்றாவது சீசன்.  பார்ப்போம் மெக்கில் சால் குட்மேனாகி, நிஜ கிரிமினலாய் மாறி நிற்கும் மூன்றாவது சீசனுக்காக ஐயாம் வெயிட்டிங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ரங்கபுரவிஹாரா – அகம் பேண்ட்

மியூசிக் மோஜோ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், இண்டிபெண்டண்ட் மீயூசிக், பேண்ட்கள் அனைவருக்குமான டார்கெட் நிகழ்ச்சி. மியூசிக்மோஜோவின் வீடியோக்கள் மூலம் பிரபலமான இசைக்கலைஞர்கள் பலர். சமீபத்தில் உறியடி படத்தில் வரும் “காந்தா” என்கிற பாடல் கூட மசாலா காஃபி எனும் பேண்ட் பாடி மியூசிக் மோஜோ, கப்பாடிவி போன்ற சேனல்களின் மூலம் பிரபலமாகி, தமிழ் வர்ஷன் வரும் அளவிற்கு புகழ் பெற்றார்கள். நம்மூர் ஷான் ரோல்டனின் “மயக்குற பூ வாசம்” பாடலும் அப்படி புகழ் பெற்ற ஒன்று தான். அந்த வகையில் சமீபத்தில் அகம் எனும் பேண்ட் எம்.எஸ்.சுப்புலஷ்மியின் ‘ரங்கபுரவிஹாராவை” பேண்ட் வர்ஷனாக்கி ஹிட்டடித்தார்கள். இந்த இளைஞர்களின் பெரிய பலம் நம் கர்நாடக இசையை மேற்கத்திய இசையோடு ஃப்யூஷனில் அற்புதமாக கொடுக்கும் திறன். பாடும் பாடகர்களின் குரல் வலம். இந்த ரங்கபுரவிஹாராவை பாடும் ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் குரலை கேளுங்கள். வாவ்.. ஒர் இனிய அனுபவம். https://www.youtube.com/watch?v=c3O0PhhD6B4

May 10, 2017

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-24
தமிழ் சினிமாவும் தமிழ் ராக்கர்ஸும் இணை பிரியாத எதிரிகளாகிவிட்டார்கள். சிங்கம் படத்தின் துரைசிங்கம் தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிப்பதுதான் சிங்கம் 4 படத்தின் கதை என்று மீம்ஸ் வரும் அளவுக்கு அவர்களின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டது. நீ படத்த ரிலீஸ் பண்ணு, நான் காலையில லைவ்வுல போடுறேன் என்று சவால் விடும் அளவிற்கு. சிங்கம் படம் ரிலீஸான நேரத்தில் அவர்களும் லைவில் படம் போட, அதை முடக்க இவர்களின் நடவடிக்கை என பரபரப்பாகவே இருந்தது. பைரஸி நிச்சயமாய் சினிமாவை முடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பெரிய படங்கள் என்றில்லாமல். சின்ன படங்கள் கூட ஹெச்.டியில் பைரஸியில் வெளியாகிறது. பெரும்பாலான சின்னப்படங்களின் பைரஸி, வெளிநாட்டு உரிமைகள் விற்கப்படும் போது, அடியில் கண்ட சொத்துகள் அனைத்தும் என்கிற ரீதிரியில் டிஜிட்டல் உரிமங்களைக் கூட விற்று விடுகிறார்கள் மிகச் சகாய விலைக்கு. நான் இயக்கிய தொட்டால் தொடரும் படத்தினை தயாரிப்பாளர் யாருக்கும் விற்கவில்லை. வெளிநாட்டு உரிமையை அவரே வைத்திருந்தார். சிங்கப்பூர், மலேசியாவில் திரையிட்டார். யாருக்கும் டிஜிட்டல் உரிமையை கொடுக்க வில்லை. டிவிடி உரிமையை கொடுக்க வில்லை. அதனால் படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு பைரஸி என்கிற பேச்சுக்கே இடமில்லை. எல்லா சின்ன படங்களையும் கேமரா வைத்து ரிஸ்க் எடுத்து திருட்டு வீடியோ எடுக்க மாட்டார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு என் திரைப்படம் ஹெச்.டியில் 5.1 ஆடியோவோடு பளிச் ப்ரிண்ட் வெளியானது. அது எப்படி வெளியானது என்று எனக்கு தெரியும். என் திரைப்படத்தின் வெளிநாட்டு இண்டர்நெட் உரிமையை விற்றோம். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் டெண்ட் கொட்டாய், ஹீரோ டாக்கீஸ், தற்போது பிரபலமாக உள்ள நெட்ப்ளிக்ஸ், அமோசான் ப்ரைம் போன்ற நெட்வொர்க்குகளின் ஆன்லைனில் பார்க்க உரிமையை விற்பது. அதில் விற்பனை செய்த ஒரு மணி நேரத்தில் என் படம் நாங்கள் கொடுத்த அதே குவாலிட்டியில், தமிழ் ராக்கர்ஸில் மட்டுமல்ல, அனைத்து பைரஸி சைட்டுகளிலும்,
ஆன்லைனில் படம் பார்க்க, பணம் கொடுத்து பார்க்கிறவர்கள் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் அதே தளத்துக்கு பைரஸிக்காக டவுண்ட்லோட் செய்து , அதை பைரஸி சைட்டில் அப்லோட் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படியாக வெளிவந்த சமீபத்திய படம் “லைட்மேன்” எனும் டாக்குமெண்டரி படம். படத்தை இந்த மாதம் பத்தாம் தேதி வெளியிட ப்ளான் செய்து, அதே நேரத்தில் வெளிநாட்டு இண்டர்நெட் உரிமையை ஹீரோ டாக்கீஸில் கொடுத்திருக்கிறார்கள். பைரஸிக்காரர்களைப் பொறுத்தவரை புதிதாய் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஸ்வீட் எடு கொண்டாடு என்கிற மனப்பான்மைதான். டவுன்லோடிட்டார்கள் அப்லோடிவிட்டார்கள். இதற்கு காரணம் இண்டர்நெட் ரைட்ஸ் வாங்கி வெளியிடும் நிறுவனங்கள் கிடையாது. திருடன் அவர்களின் வாடிக்கையாளராய் பணம் கொடுத்துத்தான் இருக்கிறான். ஆனால் இம்மாதிரியான தளங்களின் செக்யூரிட்டி தான் இங்கே கேள்வியாகிறது. ஆனால் நெட்ப்ளிக்ஸின் சமீபத்திய தயாரிப்பான ஐபாய் எனும் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் மட்டுமே கிடைக்கும் அதையே நம்மூர் தமிழ் ராக்கர்ஸ் போல இருக்கும் அதகளக்காரர்களின் சைட்டுகளில் பார்க்க முடிகிற போது நம்மூர்காரர்களின் சைட்களின் செக்யூரிட்டிகள் எல்லாம் ஜுஜுபி.
ஐரோப்பிய நாடுகளில் இலங்கை தமிழர்களால் நடத்தப்படும் பிரபல ஆஃப்களில் யார் முதலில் பைரஸி ஹெச்.டி பிரிண்டுகளை வெளியிடுகிறார்கள் என்ற போட்டியே இருக்கிறதாம். டென்மார்க்கில் விநியோகஸ்தராய் இருக்கும் என் நண்பரின் கூற்று. இவர்களின் பைரஸியினாலும், போட்டியாலும், சமீபகாலமாய் தமிழ் திரைப்பட விநியோகத்தையே நிறுத்தி வைத்திருப்பதாய் சொன்னார்.
இன்றைக்கு தமிழ் சினிமாவிற்கு ஆன்லைன் வியாபாரம் என்கிற பிரகாசமான வியாபாரம் உருவாகியிருக்கிறது. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பணம் கொடுத்து பார்க்கிறார்கள். அதே போல மிக இந்தியாவிலும் ஆரம்பித்தால் கொஞ்சம் பைரஸிக்காரர்களுக்கு டஃப் பைட் கொடுக்கலாம். ஆனால் அங்கே ஏழு டாலருக்கு மாதம் பூராவும் படம் காட்டுகிறவர்கள் நம்மிடம் வரும் போது மாசம் ஆயிரம் கொடு, ரெண்டாயிரம் கொடு என்றால் மீண்டும் பைரஸிக்கே ஓட்டு போயிவிடும். அதை விட, எந்த தியேட்டரிலிருந்து பைரஸி எடுத்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும் டெக்னாலஜி யை வைத்துக் கொண்டு கண்டு பிடித்த பின் இது வரை அந்த திரையரங்க உரிமையாளர் மீதோ, அல்லது திரையரங்கின் மீதோ நடவடிக்கை எடுத்ததாய் தெரியவில்லை. எத்தனையோ சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் மீது கேஸ் என்று போட்டு விட்டு அடுத்த வாரமே புதிய படத்தை வெளியிடுகிறார்கள். எவன் படம் பைரஸி போனால் எனக்கென்ன, நம்ம படம் வராத வரைக்கும் ஓக்கே என்கிற விதமான ஒற்றுமைதான் இங்கே பெரிய மைனஸ். அது மட்டுமில்லாமல் பைரஸியை ஒழிக்க வேண்டுமென்றால் தியேட்டர்கள் நல்ல தரமானதாய் இருக்க வேண்டும். உள்ளே நுழையும் போதே பார்வையாளனின் ட்ரவுசரை அவிழ்க்க முற்படும் வகையில் பார்க்கிங்கிலிருந்து ஆரம்பிக்கும் அராஜகம். என ஆரம்பித்து, அரசின் முழு ஆதரவும் வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல், தயாரிப்பாளர்களின் ஒற்றுமையில்லாமல், சகாய விலையில பார்க்க வகை செய்யாமல், நம் எண்ணம் துரிதமாய் ஈடேறாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Strange Things
நெட்ஃப்ளிக்ஸின் சைன்ஸ் பிக்‌ஷன், ஹாரர் சீரீஸ். மேட் டஃபர், ராஸ் டஃபர், எனும் இரட்டையர்கள் ட்ஃபர் ப்ரதர்ஸ் எனும் பெயரில் எழுதி இயக்கிய சீரீஸ். 1980களில் ஆரம்பிக்கிறது கதை. ஹாக்வின்ஸ் எனும் ஊரில் ஒரு சிறுவன் காணாமல் போகிறான். அவனை தேடும் படலத்தில் ஆரம்பிக்கிறது. அவனுடய அம்மா, முரட்டு அண்ணன். என கதை போனாலும், கதையின் உண்மையான நாயகர்கள் தொலைந்த சிறுவனின் நண்பர்கள் . பையனின் தாய்க்கும் லோக்கல் போலீஸ் ஆபீசருக்குமான நட்பு, அதன் காரணமாய் அவர் ஒரு புறம் தீவிரமாய் தேட, சிறுவனின் நண்பர்கள் இவர்களை நம்பாமல் தேட ஆரம்பிக்கிறார்கள். அப்போது அவர்கள் ஒரு சைக்கோகினிஸிஸ் பவர் கொண்ட சிறு பெண்ணை சந்திக்கிறார்கள். அவளை தங்கள் வீடுகளில் பெற்றோருக்கு தெரியாமல் தங்க வைத்து, நண்பனையும் தேடுகிறார்கள். அவளின் மைண்ட் பவரினால் அவர்களுக்குள் ஏற்படும் குழப்பம், அவள் தப்பி வந்த ஊர் எல்லையில் உள்ள ஹாஸ்பிட்டல், அங்கு அவள் உள்ளாக்கப்படும் டெஸ்டுகள். ஊரில் நடக்கும் அமானுஷ்யங்கள், எனக் கலந்து கட்டி ஹிட்டித்த சீரிஸ். பெரும்பாலான எபிசோடுகளில் சிறுவர்கள் தான் நாயகர்கள் என்பதால் சுவாரஸ்யம் அதிகம். அவர்களின் அதீத ஆர்வம், புதிதாய் வந்த பெண்ணால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, பிரிவு. போட்டி. அப்பெண்ணின் நடிப்பு. என சுவாரஸ்ய திரில் ரைட் தான். என்ன ஸ்பீல் பெர்க்கின் ஈ.டி யை நினைவுப்படுத்தாமல் இருக்காது. கிட்டத்தட்ட அதன் உட்டாலக்கடி என்றே கூட சொல்லலாம். இயக்குனர்கள் அவர்களின் ரசிகர்கள் என்றும், இன்ஸ்ப்ரேஷன் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்
குடி அதன் தீமைகளையும் பற்றி பேசும் குறும்படங்கள் நிறைய வந்திருந்தாலும், இந்த 5 நிமிட குறும்படம் அதை அழுத்தமாய் மனதை பிசையும் வகையில் சொன்ன படம். கவிஞர் சு. சிவராமன் என்பவரின் கவிதைக்கான வீஷுவல். படத்தின் க்ளைமேக்ஸில்ல் கிடைக்கும் சோகம் அடக்க நேரமாகும். குழந்தைகளை வைத்து படமெடுப்பது சிரமான காரியம். கவிதையின் ஆழத்தையும், சிற்ந்த நடிப்பையும் ஒரு சேர எதையும் குறைவில்லாமல் சிறப்பாய் அளித்திருக்கிறார் இயக்குனர் புஷ்பநாதன். வாழ்த்துக்கள். https://www.youtube.com/watch?v=Jtr0PVg7LkE
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடு நிசிக் கதைகள்
சென்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய் விட்டு அசோக் நகர் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்தேன். வழக்கமாய் உதயம் தியேட்டருக்கு முன்னால் செக் போஸ்ட் வைத்து செக் செய்து கொண்டிருக்கும் போலீஸார்.. இங்கே ரவுண்டாவுக்கு அருகில் செக் போஸ்ட் அமைத்திருந்தனர். ரவுண்டானாவை நெருங்கும் வேளையில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென்று நியாபகம் வர, சட்டென வலது புறம் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் நியாபகத்துக்கு வர, வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஏடிஎம் இருக்கும் வளாகத்துக்கு சென்றேன். இருட்டாய் இருந்த வளாகத்தினுள் என் பின்னே யாரோ தொடர்வது போல இருக்க, திரும்பிப் பார்த்த போது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர்.
என்ன சார்..?” என்றேன்.
தண்ணியடிச்சிருக்கீங்களா?”
நான் ஒன்றும் புரியாமல்.. “இல்லியே?” என்றேன்.
கிட்ட வந்து ஊதுங்க.. நாங்க எடம் மாத்தினது தெரியாம வந்து மாட்டிக்கிட்டு, சட்டுனு எஸ்ஸாக ஏடிஎம்முக்கு நுழைச்சிட்டா மாட்டாம போயிருவீங்களா?” என்று கிட்டே வந்து தேவர் மகன் ஸ்டைலில் முகத்துக்கு அருகே தன் முகத்தை பார்க் செய்தார். மூச்சில் எந்த வாடையும் இல்லாததால்.. முகம் வாடிப் போக,

தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுங்கிறது சட்டம். வண்டிய நிறுத்திட்டு, ஏடிஎம் போகக்கூடாதுன்னு கிடையாது.. உங்க கடமை உணர்ச்சிய பார்த்தா. ரொம்ப சந்தோஷமா இருக்கு தலைவரெ” என்றேன். அவர் ரியாக்‌ஷன்.. என்னத்த சொல்ல.

May 4, 2017

கொத்து பரோட்டா 2.0-22

Split
ஸ்பிலிட் பர்சனாலிட்டி என்றால் ஒருவனுக்குள் இரு மனங்கள் கொண்டவர் என்று தான் இத்தனை நாளாய் நினைத்துக் கொண்டிருப்போம். இல்லை.. ஒருத்தன் மனசுக்குள்ள 23 விதமான மனுஷன் இருக்கான். அவனுள் அந்த 23 பேரில் எவனின் எண்ணம் அதீத ஆதிக்கம் பெறுகிறதோ, அவனைப் போலவே மாறி அட்டகாசம் பண்ணுகிற “கெவின் வெண்ட்வெல் க்ரம்ப் “ என்பவனின் கதை தான் இந்தப் படம். 23ல் ஒருவனான டெனிஸ்  மூன்று இளம் பெண்களை கடத்துகிறான். அந்த மூன்று பெண்களில் ஒருத்தியான கேஸி மட்டும் கொஞ்சம் தெளிவு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கேரக்டராய் வரும் டெனிஸை பார்த்து குழம்பினாலும், ”ஹெட்விக்” எனும் ஒன்பது வயது சிறுவனுடனான மனநிலையின் போது அவனை புரிந்து கொள்கிறாள். அவன் மூலம் தப்பிக்க நினைக்கிறாள். டாக்டர் ப்ளெட்சர்  கெவினின் மனநல மருத்துவர். தன்னுள் இருக்கும் இன்னொரு கேரக்டர் தன்னை ஆக்கிரமிப்பதாகவும், தன்னை காப்பாற்றும் படி தொடர்ந்து மெயில் அனுப்பும் டெனிஸ், மற்றும் பேரி கேரக்டர்களின் குழப்பத்தை தெளிவுப்படுத்த முனைகிறார். கேஸியின் வாழ்க்கையில் தன் மாமனால் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதன் தாக்கம், அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டரினால் பாதிக்கப்பட்ட ஹெட்விக்கின் தாய். அவளால் மனநிலை பாதிக்கப்பட்ட ஹெட்விக். தன்னை புரிந்து கொண்ட ஒரு பெண்ணாய் கேஸியை நினைத்து பழக, கேஸி தப்பிக்க ஹெட்விக் கேரக்டரை பயன்படுத்துகிறாள். ஆனால் இருக்கும் 23 கேரக்டர்களை விட, அதீதமான கேரக்டரான  பீஸ்ட் தான் எல்லாவற்றுக்கும் மேல். கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு கேரக்டரின் ஆக்கிரமிப்பை மீறி, அவன் பீஸ்டாக மாறுவதற்குள் அவனை காப்பாற்ற துடிக்கும் மருத்துவர், அந்த மூன்று பெண்கள், முழுவதும் பீஸ்டாய் மாறி நிற்கும் கெவின். க்ளைமேக்ஸ் கொஞ்சம் கூட அதிரடியில்லாமல் ஹிட்காக்கியத்தனமானது. சுமார் 9 மில்லியன் ரூபாயில் தயாரான படத்தின் வசூல் 100 மில்லியனுக்கு மேல். மீண்டும் ஒரு முறை மனோஜ் நைட் ஷியாமளன் ஹிட்டடித்திருக்கிறார். அவருடய பேவரேட் கதைக்களனில். சிறுவயது ஹெட்விக் கேரக்டர் கதையெல்லாம் பார்க்கும் போது கமலின் ஆளவந்தான் சின்னம்மா சீன்கள் நியாபகத்திற்கு வந்தது. படத்திற்கு பெரிய பலம் மனோஜை அடுத்து கெவினாய் நடித்திருக்கும் ஜேம்ஸ் மெக்வாயின் நடிப்பு. 24 கேரக்டரில் ஒவ்வொரு கேரக்டருக்குமான பாடி லேங்குவேஜ், கண் அசைவுகள், வாய்ஸ் மாடுலேஷன் என மனுஷன் அதகளப்படுத்துகிறார். அதிலும் உச்சபட்ச பீஸ்ட் கேரக்டராகவே மாறும் காட்சிகள் க்ளாஸ். மனோஜின்  ரைட்டிங்கில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம் அவருடய அன்ப்ரேக்கபிள் கேரக்டரோடு  கெவின் கேரக்டரை இணைத்ததும், அப்படத்தின் ஹீரோ ப்ரூஸ் வில்லீஸை கொண்டு வந்ததும் மாஸ்டர் ஸ்ட்ரோக். சற்றே குழப்பமான கதை தான். அதை மிகத் திறமையாய் திரைக்கதையமைத்து நம்மை கட்டிப் போட்டிருக்கிறார். மனோஜ் நைட் ஷியாமளன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஒர் பெண்ணியவாதியின் பேஸ்புக் பக்கத்தை படிக்க நேர்ந்தது. ஆண்கள் சானிட்டரி நேப்கின் உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கிற தலைப்பை பார்த்ததும் சரி.. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை ஆண்கள் புரிந்து கொள்வது பற்றிய கருத்தாய் இருக்குமென ஆர்வமாய் படித்தேன். அங்கே படித்த விஷயமாவது. “நான் வழக்கமாய் ஆண்களுக்கான ஜீன்ஸ்களையே வாங்கி அணிந்து கொள்கிறேன். காரணம் அதன் விலை சாதாரணம எழுநூறுக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் கிடைக்கும் சிறப்பான ஆண்களின் ஜீன்ஸ் பெண்களுக்கு என்று பிரத்யோகமாய் வரும் போது இரண்டாயிரம், மூவாயிரம் என்று கொள்ளை அடிக்கிறது இந்த சமுதாயம். ஆண் / பெண் பேதத்தை ஆணாதிக்கத்தை உடைகளின் விற்பனைகளில் கூட விட்டு வைக்கவில்லை என்றும், ஆண்கள் சானிட்டரி நேப்கின்கள் பயன்படுத்த ஆரம்பித்தால் அதன் விலை குறையும். அதை நாம் வாங்கி பயன்படுத்தலாம் என்று போனது அந்தக் குட்டிக் கட்டுரை. ஆணின் ஜீன்ஸை ஏன் உபயோகிக்கிறாய் ? என்று கேட்டால் ஆணாதிக்க சமுதாயம் என்று திட்டக்குட திட்டலாம். ஆனால் இவர்களின் பெண்ணியம், பெண்ணுரிமை, போன்ற விஷயங்கள் எதை நோக்கி போகிறது என்பதே புரியாத போது பெண்களை, பெண்ணியவாதிகளை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான் போல…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – breking up bad
காதலர் தினம் வந்தாலும் வந்ததும் இணையமெங்கும் காதல் கதையும், கவிதையும் குறும்படங்களாய் பொங்கி வழிய ஆரம்பித்திருந்தது. அதில் பார்த்த சுவாரஸ்ய குறும்படம் breking up bad. காதலர் தினத்தன்று ப்ரேகப்பான இரண்டு பேரின் சோகம். ப்ரேகப்பிற்கான காரணத்தை சொல்லும் அவரவர் பர்ஷப்ஷன் என சுவாரஸ்யமான, ரைட்டிங், இயல்பான பர்பாமென்ஸ், ஸூத்திங்கான விஷுவல் என ஒரு ஃபீல் குட் குறும்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். கொஞ்சம் விஸ்தரித்து எழுதினால் ஒரு நல்ல திரைப்படத்துக்கான களம் உள்ள கதை. https://www.youtube.com/watch?v=pltLD3_FKu8&feature=youtu.be
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொடர்ந்து நடக்கும் ஹாசினி போன்ற பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், கொடூற கொலையும் மனதை பாதிக்கத்தான் செய்கிறது. இக்குற்றத்தை செய்கிறவன் நம்மில் ஒருவனாய், நல்ல படிப்பு, குடும்பப் பின்னணியும் கொண்டவனாய்த்தான் இருக்கிறான். எங்கிருந்து வருகிறது இந்த வக்கிரம்?. சுலபமாய் கிடைக்கும் போர்ன் படங்கள் மூலமாகவா?. சமீபகாலமாய் நிறைய வீடியோக்கள் சைல்ட் போர்ன் வகையாய் இல்லாமல் அமெச்சூர் வீடியொக்களாய் வலம் வர ஆரம்பித்திருக்கிறது. வெளிநாட்டு குழந்தைகள் கிடையாது. பெரும்பாலும் நம் நாட்டு, வட நாட்டுக் குழாந்தைகளுடனான வீடியோக்கள். இதை பார்வார்ட் செய்யும் மக்களின் மனநிலையை பார்த்தால் பயமாய் இருக்கிறது. நாமும் ஒரு முறை ட்ரை செய்துதான் பார்த்தால் என்ன என்று நினைத்தவனில் பல பேர் ஹாசினி போன்ற குழந்தைகளின் செயல்படுத்த முற்படுகிறான் என்றே தோன்றுகிறது. குடிப்பவர்கள் எல்லோரும் குடிகாரர்கள் ஆக முடியாது என்பார்கள். அவர்களது மூளையில் ஒருவிதமான திரவம் அதிகம் சுரப்பவர்கள் தான் குடிகாரர்களாய் ஆக முடியுமாம். அது போல இம்மாதிரியான வீடியோக்களும். இவற்றால் பாதிக்கப்பட்ட, மன அளவில் மிகவும் குழம்பிப்போனவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு குடும்பத்திலும்,, குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுக்கும் போதே.. வீட்டில் உள்ள பெரியவர்களை குழந்தைகளை குழந்தைகளாய் பார்க்க பழக்க வேண்டும் போலிருக்கிறது. போர்ன், இல்லாத நாட்களில் கூட இம்மாதிரியான பாலியல் கொடுமைக்கு பலியான பல பெண் குழந்தைகள் வெளியே சொல்ல முடியாமல் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் நண்பர் வீட்டிற்கு போயிருந்தேன். அங்கே இரண்டு குழந்தைகள், இருவருக்கும் எட்டிலிருந்து பத்து வயதிருக்கும். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்றார் நண்பர். தனியே அவர்களத் பெட்ரூமில் விலையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இரு குழந்தைகளின் நடவடிக்கையும் குழந்தைகளாய் இல்லை. கொஞ்சம் நெருங்கிப் பார்த்த போது, பையன் அவன் பார்தத ஆணின் செக்ஸுவல் செயல்பாட்டை செயல்படுத்த முற்பட்டான். அப்பெண் குழந்தையும், ஆர்வமாய் அவனுக்கு ஒத்துழைத்தது. நான் உள்ளே சென்றதும் சட்டென இருவரும் பதறியடித்து எழுந்து திருதிருவென முழித்தார்கள். நான் ஏதும் சொல்லாமல் ஹாலில் போய் விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு, நண்பரை அழைத்து, அக்குழந்தைகளை கொஞ்சம் வாட்ச் செய்யுங்கள். வீட்டில் அவனது பெற்றோரின் சேர்க்கை விஷயத்தை பார்த்துவிட்டு, செயல்படுத்த விழைகிறான் என்றேன். முடிந்தால் பெற்றோரிடம் சாடை மாடையாய் சொல்லி புரிய வையுங்கள். பையனுக்கு தெரியும் என்றேன். குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பது என்பது கம்பி மேல் நடப்பது போன்ற செயலாகிவிட்டது இன்றைய காலத்தில், பத்து பெத்த காலத்துல அப்பிடியா இருந்தது என்று கேட்டீர்களானால் அக்காலம் வேறு இக்காலம் வேறும் குழந்தைகளுக்கு எது தேவையில்லையோ, அது குழந்தைகளுக்கான விஷயமாய் எக்ஸ்போஸ் ஆகும் காலம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜெ வின் உடல்நிலையில் ஆரம்பித்து இன்று வரை மீடியா நொடிக்கு நொடி ப்ரேக்கிங் நியூஸாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஜெ வின் மரணம், புயல், ஜல்லிக்கட்டு, இதோ இப்போதைய அரசியல் நிலை என சோசியல் மீடியா அல்லோலகல்லோப் பட்டுக் கொண்டிருக்கிறது. ராத்திரி தூங்கி எழுந்திருக்கிறதுக்குள்ள எதாச்சும் அங்கிருக்கிறவன் இங்கயோ.. இங்கிருக்கிறவன் அங்கயோ..ன்னு பரபரங்குது. எண்டர்டெயின்மெண்டுக்கு சினிமா, பாட்டு, ஆட்டம் பாட்டம்  எல்லாத்தையும் விட இப்போ நடக்குற அரசியல் ஆட்டம் செம்மையாய் போய்ட்டிருக்கு. இதுல என் ஜாய் பண்ற விஷயம் என்னன்னா.. டிவிட்டர், பேஸ்புக் மீம்ஸ், கமெண்ட் போடுறவங்கதான்.. இவர்களின் அபார நகைச்சுவை உணர்வு, அரசியல் அறிவு போன்றவகளைப் பார்த்து ஆச்சர்யமாக்வேயிருக்கிறது. ஒரு அறிக்கையோ, ஒரு சம்பவமோ நடந்த அடுத்த நொடி அதற்கான மீம் வீடியோக்களையோ, காட்சிகளையோ தெரிந்தெடுத்து, கமெண்டுகளை போட்டு பரக்க விடுகிறார்கள். இணையத்தில், வாட்ஸப்பில் பரவும் வீடியோக்களைப் பார்த்தால் நடப்பு அரசியலில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது மிகச் சுலபமாய் புரிந்துவிடும். பல பேருக்கு புரிந்தாலும் பிரச்சனை இன்னும் நாலு வருஷம் ஆட்சியிருக்க, எல்லாத்தையும் அழிச்சுட்டு மொதல்லேர்ந்து ஆரம்பிக்கிற நிலை வந்தால் இப்ப செலவு பண்ண காசை எடுக்க முடியாதுங்கிற பயம். மீண்டும் எலக்‌ஷன் அது இதுன்னா.. வருவோமாங்கிற பயம் என பல பயங்கள். அரசியல்ங்கிறது சேவைங்கிறது போய் எப்ப வியாபாரம் ஆயிருச்சோ.. வியாபாரம் பண்ண வர அரசியல்வாதிக்கும் எதிக்ஸ் இல்லை. பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடுற நமக்கும் எதிக்ஸ் இல்லாம போயிருச்சு. ம்ம்ஹும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
x