Thottal Thodarum

Oct 12, 2013

நய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்

நேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழைந்தேன். 7.15க்குத்தான் படமென்றார்கள். 50 ரூபாய் வாங்கவேண்டிய சிங்கிள் ஸ்கீரின் தியேட்டரில் டிக்கெட் விலை 90 என்றார்கள். மூன்று வகை டிக்கெட் விலைகள் இருக்க வேண்டும். தனுஷின் புதிய படம் முதல் நாள் மாலைக் காட்சி கூட்டமேயில்லை என்னையும் சேர்த்து சுமார் இருபது பேர் மட்டுமே இருந்ததை பார்த்த போது படத்தைப் பற்றி ஒப்பினியன் வேண்டாமென்று காத்திருந்து டிக்கெட் எடுத்தேன். இப்போது சுமார் எழுபது பேர் வரை இருந்தார்கள். 


சீட்டுக்கள் எல்லாம் படு திராபை. ஆட்டமான ஆட்டம். இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் அந்த தியேட்டருக்குள் நுழைந்திருந்தேன் என்பதால் மனசை தேற்றிக் கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். அஜித்தின் ஆரம்பம் ட்ரைலர் எல்லாம் கருப்படித்த விஷுவலாய் தெரிந்தது. வழக்கம் போல ப்ரொஜக்டர் லைட்டை மாற்றாமல் ஓட்டிக் கொண்டிருப்பதால் வரும் விஷயம். என்ன தான் டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷன் என்றாலும் நாற்பதாயிரம் மணிகளுக்கு பிறகு அதன் பல்ப்பை மாற்றியாக வேண்டும் அப்படி மாற்றவில்லையென்றால் கொஞ்சம் கொஞ்சமாய் கருமையடைந்துத்தான் தெரியும். இந்த பல்ப் இப்போதுதான் கருமை அடைய ஆரம்பித்திருக்கிறது.  அதையும் படம் போட்ட்டார்கள். செண்டர் ஸ்பீக்கரில் ஏதோ ப்ரச்சனை. கொஞ்சம் நேரத்தில் யார் செண்டரில் நின்று பேசினாலும் ஸ்பீக்கர் கிழிந்து போய் ட்ரான்சிஸ்டரில் பேசுவது போல கேட்க ஆரம்பித்தது. அதை மறைக்க, லெப்ட், ரைட் இரண்டு பக்கத்தின் சத்தத்தையும் ஏற்றி விட, அது அவர்களின் ப்ரச்சனையை அதிகமாக்கியதே தவிர வேறேதும் நடக்கவில்லை. வெளியே வந்து தியேட்டர் ஆட்கள் யாராவது இருப்பார்கள் என்று தேடினால் ஒருவனையும் காணவில்லை. கொஞ்சம் குரல் கொடுத்தும் பார்த்தேன் யாரும் வருவாரில்லை. மெல்ல ப்ரொஜக்‌ஷன் ரூமிற்கு போய் எட்டிப் பார்த்த போது 20 வயதுக்கும் குறைவான ஒரு பையன் படத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். படம் சத்தம் ஒழுங்கா வரலை என்றேன். “அவ்வளவு சத்தமாவா கேட்குது” என்று கேட்பது போல அப்படியா? என்றான்.  இருங்க பார்க்கிறேன் போய் உட்காருங்க என்றான். சரியாய் அடுத்த பதினைந்து நிமிடம் வரை சத்தத்தை சரி செய்யும் எந்த விதமான முயற்சியும் எடுப்பதாய் தெரியவில்லை. மீண்டும் வெளியே வந்து அவனை கூப்பிட்டேன். இப்போது என்னுடன் இன்னும் நான்கைந்து பேர் சேர, “ஒண்ணு ஒழுங்கா படம் ஓட்டு இல்லைன்னா காசை திருப்பிக் கொடு.” என்று கேட்க ஆரம்பித்தார்கள். அதற்குள் அங்கே வந்த ஒருவன் என்னிடம் வந்து வெளியே போய் கத்து என்றான்.  “நீயார்?’ என்று கேட்டதற்கு சரியான பதிலில்லை. விட்டு எகிறேன். அதற்குள் அங்கேயிருந்த ஒருவன் இது எங்க ப்ராப்ளம் இல்லை சார். பி.எக்ஸ்.டி ப்ராப்ளம். என்றான். எனக்கு சிரிப்பாய் வந்தது. பி.எக்ஸ்டி ஒளிபரப்பும் முறை. ஒலி அதற்கான தனி டெக்னாலஜி. 

அப்படின்னா சொல்லு நான் பி.எக்ஸ்டி. ஜானகிராமன் கிட்ட பேசுறேன். என்றதும் சட்டென ஜெர்க்கான ஆப்பரேட்டர் பையன். அவங்களே வந்துட்டாங்க என்று சொல்ல, இரண்டு தாடி வைத்த இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு, படத்தை நிறுத்தி, திரும்பப் போட்டு, இன்னும் கொஞ்சம் சத்தத்தை வைத்து படத்தை ஓட்டத்தான் முயன்றார்களே தவிர, சரி செய்ய முயலவேயில்லை. என் கோபம் அதிகமானது. ஒண்ணு பணத்தை திருப்பிக் கொடு, இல்லை சரி செய்து ஓட்டு இப்படி ஓட்டிக்கிட்டே டைம் ஆயிருச்சுன்னு ஏமாத்தாதே என்றதும்”அதெப்படி பணத்தை திருப்பி கொடுக்க முடியும்? இவ்வள்வு நேரம் படம் ஓடிச்சி இல்லை?” என்றான். “சத்யத்தில கொடுக்கலை?” என்றேன். 

“அவங்க கொடுப்பாங்க? அவங்களும் நாங்களூம் ஒண்ணா?”

“அப்ப அவங்க இருபது ரூபா பார்க்கிங் வாங்கினா நீயும் வாங்குறியே? அதை குறைக்கிறியா?” என்றதும் உடன் இருந்தவர்கல் இன்னும் கோபமாய் ‘யோவ் அவர் கேக்குறது நியாயம்தானே..? ஒழுங்கா படம் ஓட்டு இல்லை நிறுத்திட்டு காசைக் கொடு” என்று கோஷம் அதிகமாக. வேறு வழியேயில்லாமல் எல்லோருக்கும் டிக்கெட் பணம் வாபஸ் செய்யப்பட்டது. பார்க்கிங் காசை திரும்ப வாங்கலாம் என்றால் ஆள் எஸ்கேப்.  இனி இன்னொரு முறை தலையெழுத்துக்காகக் கூட அந்த தியேட்டருக்குள் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். நீங்களும் எடுங்கள். சரி நய்யாண்டி படம் பற்றி ஏதும் சொல்லவில்லையென்று நீங்கள் கேட்பது புரிகிறது. நோ.. கமெண்ட்ஸ்..



Post a Comment

8 comments:

saravanan said...

இப்பொழுதெல்லாம் தனுஷ் தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளரை ஆண்டி ஆக்கிக்கொண்டிருக்கிறார்

சுரேகா said...

கேட்டால் கிடைக்கும் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் தலைவரே!

உலக சினிமா ரசிகன் said...

அந்த தியேட்டரில் திருட்டு டிவிடியில் வரும் ‘தியேட்டர் பிரிண்ட்’ குவாலிட்டியில்தான் படத்தை திரையிடுவார்கள்.
அங்கிருக்கும் இருக்கைகள் ஒரு பழைய தியேட்டர் இழுத்து மூடப்பட்ட போது ‘எடைக்கு வாங்கி வந்தது’.

சிம்பா said...

நீங்க தப்புசீங்க...பார்கிங் காசு தானே.. போனா போவட்டும்... சொந்த காசுல சூனியம் வச்சுகிறது இது தான் போல//

ரஹீம் கஸ்ஸாலி said...

எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் உங்களை வச்சு நய்யாண்டி பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன் தலைவரே

r.v.saravanan said...

கேட்டால் கிடைக்கும் நியாயம் கிடைச்சுடுசே சங்கர் சார் குட்

Saravanakumar said...

செம தில்லு boss உங்களுக்கு..

”தளிர் சுரேஷ்” said...

உங்களால் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது! வாழ்த்துக்கள்!