Thottal Thodarum

Aug 31, 2021

Asst புராணம் -2

 அஸிஸ்டெண்ட் புராணம் -2

”நான் ஒரு ஷார்ட் பிலிம் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டு சொல்லுங்க” என்ற்படி, 2013 ஆம் ஆண்டு வாக்கில் மிக ஒல்லியான உருவத்தோடு 25 வயது இளைஞன் ஒருவன் என்னை வந்து அணுகினான். படத்தைப் பார்த்தேன். மிகச் சுமார் லெவலுக்கும் கீழே இருந்தது அந்த வீடியோ. ஆனால் அவனிடம் ஒரு கருத்தை சொல்லவிழையும் ஆர்வம் இருந்தது அந்த படத்தில் தெரிந்தது.  படத்தில் இருந்த நிறை குறைகளை எடுத்து சொன்னேன். முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் முழுவதுமாய் கேட்டு முடித்தான்.

“என்ன பண்ணிட்டிருக்க? எந்த ஊரு?”

“ஊரு திருச்சி சார். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். ஒரு தங்கச்சி. அப்பா, அம்மா இருக்காங்க.  ஒரு காலேஜுல வேலை செய்யுறேன். மாசம் 10 ஆயிரம் சம்பளம். எனக்கு சினிமால டைரக்டர ஆகணும். என்னால வேலை செய்ய முடியலை. என் நினைப்பு பூராவும் சினிமாவுலேயே இருக்கு. வேலைய ரிசைன் பண்ணிட்டு சினிமாவுல இறங்கலாமானு குழப்பமாவே இருக்கு. என்னை உங்க கிட்ட அஸிஸ்டெண்டா சேர்த்துக்கிறீங்களா? “ என்ற அவன் குரலில் ஆர்வமும், மரியாதையும் பொங்கி வழிந்தது. வழக்கமாய் இப்படி பேசுகிறவர்களிடம் ஒரு போலித்தனமான மாடுலேஷன் இருக்கும். அது அவனிடத்தில் இல்லை.

“வீட்டுல சம்பாரிக்கிற ஆள் நீ ஒருத்தன் தான்னு சொல்லுறே? வேலைய விட்டுட்டா அக்கா கல்யாணக்கடனையெல்லாம் எப்படி அடைக்குறது?. சினிமாவுல நீ மாசம் சம்பாரிக்கிற பணத்துக்கு எப்பவும்  கேரண்டி கிடையாது. அதுவும் உதவி இயக்குனருக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி”

“மாசம் ஒரு நாலாயிரம் தர மாட்டாங்களா சார்?”

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மாதம் பத்தாயிரம் சம்பாரிப்பவன் நாலாயிரம் வந்தால் கூட போதும் சினிமாவில் சேர வேண்டுமென்ற ஆர்வப்படுவது ஒன்றும் புதிதில்லை. சினிமா ஒரு விடாது கருப்பு. ஒரு முறை கால் வைத்துவிட்டால் எங்கேயாவது தொட்டுக் கொண்டே இருந்துவிட மாட்டோமா என்கிற போதையை கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

“என்ன சொல்றதுனு தெரியலை. நான் வேலை ஆரம்பிக்கும் போது வேணும்னா கூப்பிடுறேன். நான் சம்பளம் இல்லாம கூப்பிட மாட்டேன். தொடர்புல இரு” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டேன்.

அதன் பிறகு என் தொடர்பில் இல்லாமல் இருந்தவன் என்னுடய படம் ஆரம்பித்து பாதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வந்தான். முன்பு பார்த்ததை விட ஆள் மிகவும் இளைத்திருந்தான். விசாரித்ததில் என்னைப் பார்த்த பிறகு சிறிது நாட்களில் வேலையை ரிசைன் செய்துவிட்டு ஒரு வளரும் இயக்குனரிடம் உதவியாளராய் சேர்ந்திருக்கிறான். அந்தப் படம் ஒரு மூன்றாம் நிலை காமெடி நடிகரை ஹீரோவாக வைத்து ஆரம்பிக்கப்பட்டு, எல்லா சினிமா வழக்கப்படி பாதி படத்தில் நின்றதோடு மட்டுமில்லாமல், ஷூட்டிங் சமயங்களில் ஒழுங்கான சாப்பாடு, பேட்டா, இப்படி ஏதுமில்லாமல் மொத்தப் பட்டினியோடு வேலை செய்திருக்கிறார்கள். இதில் எங்கே சம்பளம் பற்றி பேச?. மொத்தமாய் படம் நின்று போனதும் எல்லாரையும் அனுப்பிவிட, பையன் பாவம் நொந்து நூலாய்ப் போய் வந்திருந்தான்.

“சரி என்ன பண்ணப் போறே?”

“உங்க படத்துல ஏதாச்சும் வேலை?”

“இப்ப என் படத்துல ஆட்கள் இருக்காங்கப்பா.. அடுத்த படம் தான். அதுக்கு இது ஹிட்டாகணும்” என்று சிரித்தேன். அவன் சிரிக்கும் நிலையில் இல்லை.

“நான் ஒண்ணு சொல்லுறேன். உன்னை டிமோட்டிவேட் பண்ணச் சொல்லலை. நீ எம்.பி.ஏ படிச்சிருக்க. கொஞ்சம் அழுத்தி வேலை தேடினா கிடைச்சிரும். போய் எங்கயாச்சும் ஜாயின் பண்ணு”

“அப்ப என் சினிமா. “ என்று கேட்ட போது கிட்டத்தட்ட கண்களில் கண்ணீர் மல்கி நின்றிருந்தது.

“அது எங்கேயும் போகாதுடா தம்பி. போய் பைனான்ஸியலா கொஞ்சம் ஸ்டெபிலைஸ் ஆகு. தங்கச்சி கல்யாணம் எல்லாம் செட்டில் பண்ணு. என்ன சினிமா எடுக்கணும் அவ்வளவுதானே? எல்லா நாளும் சாயங்காலம் ஃபீரியாத்தானே இருக்கே?. கதை எழுது, படி, நல்லா படம் பாரு. உன் சினிமா அறிவை வளர்த்துக்க. சனி ஞாயிறுல ஷார்ட் பிலிம் பண்ணு. யூட்யூப் இருக்கு. உனக்கான டைம் வரும் போது நிச்சயம் அதுல அடையாளம் கிடைச்சி மேல வரலாம். நான் சொல்லுறது கஷ்டமாத்தான் இருக்கும். எத்தனையோ பேர் பெரிய ஆள் ஆகியிருக்காங்கனு லிஸ்ட் சொல்லலாம். ஆனா பெர்முடேஷன் காம்பினேஷன்ல பார்த்தா நீ தாங்க மாட்டேனு தோணுது. வறுமை உன்னை காலி பண்ணிரும். உன் டேலண்ட் வெளிய வரணும்னா உன்கிட்ட வறுமை இருக்கக்கூடாது” என்றேன்.

பதில் ஏதும் சொல்லாமல் போனவன். சில மாதங்களில் மீண்டும் வந்து சந்தித்த போது சென்னையில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளனாய் சேர்ந்திருதான். மாதம் பதினெட்டு ஆயிரம் சம்பளம். என்றான். அக்கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு குறும்படம் எடுத்து வெளியீட்டுக்கு என்னை தலமை ஏற்று நடத்தித் தர சொன்னான். அந்தப்படம் முந்தைய படத்தைவிட பெட்டராய் இருந்தது. பின்பு அவ்வப்போது தொடர்பிலேயே இருந்தான். அடுத்தடுத்து நான்கைந்து குறும்படங்கள். ஒரு மியூசிக் விடியோ என்று வேலை பார்த்துக் கொண்டே எடுத்தான். விளம்பரப் படம் எடுக்க வாய்ப்பு வந்தது. திருமணம் ஆனது. மனைவி ஒரு போலீஸ்காரர். அவருக்கு ஏற்படும் இன்னல்களை அடிப்படையாய்க் கொண்டு எடுத்த ஒரு குறும்படம் மிகப்பெரிய ஹிட். இரண்டு குழந்தைகள்.

கொரோனா எல்லாரையும் புரட்டிப் போட்டதைப் போல இவனையும் புரட்டிப் போட்டது. நல்லவிதமாய். கொரோனா காலத்தில் திருச்சி ஏரியாவைச் சுற்றி பலகாரக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்த வடநாட்டவர்களை கொரோனா வெளியேற்றியதால் அதற்கு தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்து பட்சணங்கள் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்து சிறு தொழிலதிபர் ஆகியிருக்கிறான்.

சென்ற வாரம் என்னை வந்து சந்திக்க அனுமதி கேட்டான். எப்போதும் அப்படித்தான். கேட்காமல் வர மாட்டான். என்ன விஷயம் தம்பி? என்று கேட்ட போது, ‘நேர்ல சொல்லுறேன் சார்” என்று சொன்ன நேரத்திற்கு வந்து நின்றான். கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸும் கொய்யாக்களோடு. என்ன என்பது போல பார்த்தேன்.

“சார். நான் பிஹெச்டி வாங்கியிருக்கேன். டாக்டர் ஆயிட்டேன். அதுக்கு காரணம் நீங்கதான்” என்றான்.

“நான் சொன்னத கேட்டகணும்னு முடிவு பண்ணது நீதான். ஸோ..  நீதான் காரணம். எனக்கு க்ரெடிட் கொடுக்காத. மனசுக்குள்ள ஒரு பெரிய டைரக்டரை காலிப் பண்ணிவிட்டுட்டேனு கூட திட்டுவ இல்லை” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“இல்ல சார். இப்ப இன்னும் நாலைஞ்சு வருஷத்துல யார் தடுத்தாலும் என்னால சினிமா பண்ணிர முடியும்னு நம்பிக்கை இருக்கு. கூட நீங்க இருக்கீங்க. அப்புறம் எனக்கென்ன கவலை” என்று கிளம்பினான் புஷ்பநாதன் ஆறுமுகம் என்கிற பெயருடய என்னிடம் வேலையே செய்யாத என் உதவி இயக்குனர். சமூகத்தின் மீதான கவலை அவனிடம் எப்போது இருந்து கொண்டே இருக்கும். அது   குறும்படங்களான கூர்வாள், காவல் தெய்வம் குறும்படங்களைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். சென்னை பசங்க என்கிற பெயரில் உள்ள மியூசிக் ஆல்பமும்  எனது Moviewood OTT தளத்தில் கிடைக்கிறது. பார்த்துவிட்டு வாழ்த்துங்கள்.

Asst புராணம்-1


Post a Comment

No comments: