Thottal Thodarum

Dec 20, 2016

கொத்து பரோட்டா 2.0-10

கொத்து பரோட்டா 2.0-10
நாடே ரெண்டு பட்டுக் கிடக்கிறது. அமெரிக்காவுக்கு ஒர் 9/11 போல, நம்மூருக்கு ஒரு 9/11. 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற அறிவிப்பினால். கருப்புப் பணத்தை, ஐ.எஸ்.ஐயினால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க ஊடுருவப்பட்டிருக்கும் கள்ளப் பணத்தை , வரிக்குள்ளேயே வராத பாரலல் மணியை கணக்குக்குள் கொண்டு வர, விலை வாசி குறைய, ரியல் எஸ்டேட் மார்கெட் சீர் பட, நாட்டின் பொருளாதாரம் மேம்பட, என ஆயிரம் ப்ளஸ்கள் இந்த அறிவிப்பால் நடக்கும் என்கிற பாஸிட்டிவ் உணர்வு முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கத்தான் செய்தது. அம்பானிக்களுக்கும் அதானிகளுக்கு காட்டும் அக்கறையை மக்களுக்கு காட்டாத மோடி அரசு என ஒரு பக்கம் இந்த திட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் கோஷமிட்டுக் கொண்டிருக்க,  இன்னொரு பக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்காக ரெண்டொரு நாள் கஷ்டப்பட தயாராக இருக்க மாட்டோமா? என்று உசுப்பிவிடப்பட்ட தேசப் பற்றோடு வளைய வருவதில் பெரிய கஷ்டமொன்றும் பல மிடில் க்ளாஸ்களுக்கும், இணைய வாசிகளுக்கும் இல்லை. யாரும் பேங்க் போய் அநாவசிய கூட்டத்தை ஏற்படுத்தாதீங்க.. பணம் தேவையாக இருக்கும் அடித்தட்டு மக்கள் முதலில் மாற்றிக் கொள்ளட்டும் என்றெல்லாம் ஸ்டேடஸ் போட்டவர்கள், முதல் நாள் முத ஷோவுக்கு போகிறார்ப் போல போய் 2000 ரூபாய் நோட்டோடு செல்பி எடுத்து போட்டுக் கொண்டனர். தினக்கூலிகள், சிறு வியாபாரிகள், சிறு தொழில் உற்பதியாளர்கள், ஆன்லைன், டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், ஸ்மார்ட் போன் போன்ற வஸ்துக்களையெல்லாம் பழகாதவர்கள் அதிகம் உள்ள நாடு நம் நாடு. ஆனால் அவர்களையெல்லாம் பழக்குவதற்குத்தான் இந்த முயற்சி என்று வைத்துக் கொண்டாலும்.  புழக்கத்தில் இருக்கும் 80 சொச்ச சதவிகித நோட்டுக்களை ரெண்டொரு நாட்களில் மாற்றுவது என்பது சாதாரண விஷயமில்லை. ரகசியமாய் அதிரடியாய் செய்தால்தான் இம்மாதிரி முயற்சிகள் வெற்றி பெறும் என்று சொன்னாலும், செயல்படுத்திய பின் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு ஏற்றார்ப் போல அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு செயல் படுத்தியிருக்க வேண்டும். பழைய நோட்டுக்களுக்கு பதிலாய் 500, அல்லது 100 ரூபாய் நோட்டுக்களை கொடுத்திருந்தால் கூட கொஞ்சம் ஆங்காங்கே சில்லரைப் பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, அதற்கு சில்லரை தேடும் நிலைக்கு வைத்தது, ஏடிஎம்கள் தொடர்ந்து பணப்பட்டுவாடா செய்ய ஏதுவாய் வேலை செய்வது. தகுந்த சில்லரை விநியோக முறை. வங்கிகளில் பணம் மாற்றும் முறை, என முன்னேற்ப்பட்டையும் செய்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருப்பேன். இதுல கையில மை வேற வைக்கப் போறீங்களாமே? அஹான்… முதல் ரெண்டு நாள் இருந்த தேப்பற்று உத்வேகமெல்லாம் கையிலிருக்கும் காசு போல குறைந்து கொண்டே வருகிறது. பாத்து பண்ணுங்க மோடி ஜி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Money Monsters
ஜார்ஜ் க்ளூனி, ஜூலியா ராபர்ட்ஸ், நடிகை, ஜோடி பாஸ்டரின் இயக்கம் என ஈர்ப்புக்கான எல்லா விஷயமும் இருந்ததால் போய் உட்கார்ந்தாயிற்று. டிவியில் இந்த ஸ்டாக்கை வாங்கு, அந்த ஸ்டாக்கை வாங்கு என ரெகமெண்ட் பண்ணும் ஷோ ஹோஸ்ட் செய்பவராக கூளூனி. அவர் சொன்ன ஸ்டாக்கை வாங்கி நஷ்டப்பட்ட ஒருவன் சேனலின் உள்ளே நுழைந்து அவரை பணையக் கைதியாக வைத்துக் கொண்டு, நீ சொன்ன ஸ்டாக் எப்படி நஷ்டமானது என்று பப்ளிக்காக அந்த கம்பெனி ஓனர் பேச வேண்டுமென்ற கோரிக்கை வைக்க, கிட்டத்தட்ட எட்டு நூறு மில்லியன் தொகையை ஆட்டையைப் போட்டு சவுத் ஆப்பிரிக்காவில் இன்வெஸ்ட் செய்த தில்லாலங்கடியை எப்படி வெளிக்  கொணர்கிறார்கள் என்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளில் எப்பவுமே ஹீரோ யாராக இருந்தாலும் காமன் மேன் தான் விக்டிம். பல படங்களில் இந்த மாதிரியான கேரக்டரில் ஹீரோ இருப்பார். இதில் அவருக்கு உதவுகிறவராய் இருக்கிறார். ஷார்ப்பான வசனங்கள், சுவாரஸ்யமான ப்ளாட், எல்லாம் இருந்தும் க்ளைமேக்ஸுன் போது கொஞ்சம் தெலுங்கு படம் போல சவ சவதான். ஸ்டாக் மார்க்கெட், அது இது என்று உட்டாலக்கடி அடித்தாலும் மீடியாவின் செய்தி வெறி, அதற்காக எப்படியெல்லாம் இயங்குகிறது என்பது அடிநாதமாய் ஓடுவது சுவாரஸ்யம். படம் நம் மக்கள் நீ எப்படி மல்லையாவ விட்ட? அம்பானிய விட்ட? அதானிய விட்டேன்னு கேட்டுட்டு இருக்குற டைமுக்கு செம்ம மேட்ச்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா தொழில் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கிறது. கருப்புப்பணம் அதிகம் ஊடாடும் தொழில் சினிமா. பெரும்பாலும் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் தொகையானது கருப்பாகவே இருக்கும். இனி அதற்கான மாற்று வழியையோ, அல்லது நேர்வழியாகவே எதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இதில் பாவப்பட்டவர்கள் லிஸ்டில் இயக்குனர் மற்றும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாம் கடைசி நேரத்தில் ஒப்பந்த தொகையே வராமல், படம் ரிலீஸானல் போதுமென்று கையெழுத்து போட்டு கொடுக்கும் நிலை தான் அதிகம்.  படம் ஓடாமல் போனால் தயாரிப்பாளரின் நிலை அதை விட மோசம் என்பது தனிக்கதை. இந்த பணப் பரிவர்த்தனை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது தினக்கூலி தொழிலாளர்களான லைட் மேன்கள், யூனிட்களில் வேலை செய்கிறவர்கள் தான். தினம் மாலையில் செட்டில் செய்யப்படும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரொக்கமாய் இல்லாத காரணத்தால் பல ரெகுலர் கம்பெனிகள் ஆன்லைனில் ட்ரான்ஸ்பர் செய்ய முயல ஆரம்பித்திருக்கிறார்கள். வரிவிதிப்பிற்குள் இது வரை பெரும்பாலும் வராத இவர்களும் வந்து தான் ஆக வேண்டிய நிலை. இது பலருக்கு கஷ்டமாய்த்தான் இருக்கும்  என்றாலும்  வேறு வழியில்லை. பழகித்தான் ஆக வேண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் கேஸ் மானியத்துக்கும், வெள்ளத்தின் போது நிவாரண நிதி பேங்க் அக்கவுண்டில் கொடுத்த போது வாங்கியவர்கள் தான்.  @@@@@@@@@@@@@@@@@@@@@
மனிதன்  ஆறறிவு கொண்டவன். அதனால் பேரழவு காலத்திலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள பல வழிகளை கையால்கிறான்.  பணத்தட்டுப்பாட்டை அவன் சமாளித்த விதங்கள் பல அட போட வைக்கக்கூடிய விஷயங்கள். எட்டாம் தேதி ராத்திரியே இருக்குற பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு நகைக்கடைக்கு ஓடி 500, 1000த்தை நகையாய் மாற்றியவர்கள். நடு ராத்திரி ஏடிஎம்மில் க்யூவில் நின்று தன் கையிருப்பையெல்லாம் டெபாசிட்டாய் போட்டு, ஏ டி எம் மை ஏ.டி.பேங்கிங்காய் மாற்றியவர்கள். ரயில் டிக்கெட், ஏர் டிக்கெட் பல்க் புக்கிங் செய்தவர்கள். சேஞ்ச் இல்லை என்பதால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறவனெல்லாம் 500க்கும் ஆயிரத்துக்கு பெட்ரோல் போட வைத்தவர்கள். புத்திசாலித்தனமாய் 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு சில்லறைக்கு  சோடக்சோ பாஸ் கொடுத்தவர்கள்.  ஐந்நூறுக்கு நூறு, ஆயிரத்துக்கு இரு நூறு என்று இன்ஸ்டெண்ட் மணி சேஞ்சர் ஆனவர்கள் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை வரும் போது கொடுங்கள் என்று இலவசமாய் உணவளித்தவர்களிடையே, பணப்பறிமாற்றமே இல்லாமல் முழு தொகைக்கும் உணவை வாங்கச் சொன்னவர்கள். பத்திருபது சில்லரைகளையும் கொடுக்காமல் விட்டவர்கள்.  ஏ.டி.எம்களில் பணம் நிரப்பும் வண்டியை பின் தொடர்ந்து சென்று எங்கெல்லாம் பணம் நிரப்பப்படுகிறது என்று நண்பர்களுக்கு வாட்சப் தட்டிவிட்டவர்கள். மெயின் ரோட்டில் இல்லாத எதாவது மாலின் பேஸ்மெண்டில் உள்ள, தெரு முக்கினுள் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் ஏடிஎம்களையெல்லாம் தெரிந்து சுலபமாய் பணம் எடுத்தவர்கள், தெரிந்த கடன் வைக்கக்கூடியவர்களிடம் கடன், க்ரெடிட் கார்டில் ஆயிரக்கணக்கில் கடன் வைத்திருப்பவர்கள் பக்கத்து மளிகை கடைகளில் கடன் சொல்ல கூச்சப்பட்டு நிற்பவர்கள், வேசிகளிடம் ஆயிரம், 500 ரூபாய் நோட்டை மாற்றியவர்கள், டாஸ்மாக்கில் நல்ல காலத்துலேயே எம்.ஆர்.பிக்கு மேல் காசு வாங்குகிறவர்கள், 92 ரூபாய் சரக்கு ப்ளாட் நூறு ரூபாய் ஆனால் 5 வாங்கணும் என்று டார்கெட்டும் எக்ஸ்ட்ரா பணமும் சம்பாரித்த சேல்ஸ் மேன்கள், ரியல் எஸ்டேட் ப்ரொக்கர்கள் போல பழைய டிவிஎஸ் 50 வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் பத்து சி, நூறு சி மாத்தணும் என்றோ, மாத்தித் தர்றேன் என்றோ நட்ட நடுரோட்டில் 40 பர்செண்ட் எக்ஸேஞ்ச் ரேட் பேசிக் கொண்டிருப்பவர்கள்,  இருக்கும் நாட்டில் மெல்லமாய் போகலாம் தேவையானவங்க வாங்கட்டும், இருக்கிறத வச்சி மேனேஜ் பண்ணிப்போம் என்று பதட்டப்படாமல் தேவைகதிகமாய் பணம் எடுக்க க்யூவில் நிற்காமல் சரியான நேரத்தில் டெபாசிட் செய்தும், பேங்குக்கு போய் பணம் எடுத்தும், அளவாய் செலவு செய்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து, காக்க வைக்க வேண்டியவர்களுக்கு காக்க வைத்தும், மிக தேவைக்கு க்ரெடிட் கார்டிலும், டெபிட் கார்டிலும் தேய்த்தும் சமாளிக்கிறவர்கள் கோடி. மனிதனுக்கு அறாம் அறிவு உண்டு. அவன் வாழ எந்தவிதமான செயல்களையும்,   வழிகளையும் மேற்கொள்ளக்கூடியவன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுநிசிக் கதைகள்
எனக்கும் இரவு நேர ரோந்து போலீஸ்காரர்களுக்கும் ஏதோ ஒர் உறவு இருக்கிறது போல. நடு ராத்திரியில் அடிக்கடி அலைபவன் நான். பெரும்பாலான செக்கிங் நேரங்களில் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் செக்கிங்கை மீறி என்னுடன் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இம்மாதிரியான சம்பவங்களை எழுதுமளவுக்கு. சமீபத்தில் அப்படித்தான் வழக்கம் போல நானும், நண்பர் கே.ஆர்.பியும் படம் பார்த்துவிட்டு பேசிக் கொண்டே அவரை ட்ராப் செய்ய போய்க் கொண்டிருந்தேன்.  ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் செக் செய்த அந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து பாவம் சார் என்றேன். ஏன் என்று கேட்டவர் பிடிக்குதோ பிடிக்கலையோ உங்களை மாதிரியான் ஆபீஸர்களின் சேவைதான் பல குற்ற சம்பவங்களை தடுக்குது என்றேன். அதே நேரத்தில் பல நேர்மையாளர்களை இம்சிக்கவும் செய்கிறது.  என்றவுடன் சற்றே க்ரிப்பினிலிருந்து இறங்கியவர், எங்களை அனுப்பி வைக்க மனசில்லாமல் பேச ஆரம்பித்தார். பேச்சு இன்றைய இளைஞர்களைப் பற்றியும், அரசைப் பற்றியும் போனது. தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னா, பாரை பத்து மணி வரைக்கும் திறந்து வைக்கக்கூடாது என்றார். இன்றைய தேதியில் எவனொருவன் டீசண்டாக இருக்கிறானோ அவன் தான் எல்லா கேப்மாரி வேலைகளையும் செய்கிறான் என்றார்.  முன்னாடியெல்லாம் காருல பொண்ணிருந்தா அது பேமிலின்னு டிஸ்டர்ப் பண்ண மாட்டோம். இன்னைக்கெல்லாம் காரில் எவன் பேமிலிய கூட்டிட்டு வர்றான்?.  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு காரில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருக்க, ஒர் ஆண் மட்டுமே வந்த காரை மறித்தார்கள். ப்ரோக்ராம் முடிச்சிட்டு வர்றோம் என்றார்கள். ஆண் குடிக்கவில்லை. இரண்டு பெண்களும் குடித்திருந்தார்கள். பாருங்க.. என்ன ப்ரோக்ராம்னு எங்களுக்கும் தெரியும். பட் கேட்க முடியாது என்று சலித்துக் கொண்டார்.   பெண் போலீஸைப் பற்றி பேச்சு வந்தது. சினிமாவுல விட அதிகமான அசிங்கம் எங்க டிபார்ட்மெண்டுலதான் நடக்குது. புதியதாய் வரும் பெண் போலீஸ்காரர்களின் வெற்றி, அவர்கள் துரிதத்தில் அடையும் பதவிகளுக்கு பொறாமை பட்டார். நானெல்லாம் இத்தனை வருஷ சர்வீஸுல எங்கயோ போக வேண்டியவன். என்ன நான் பொம்பளையில்லை என்று வருத்தப்பட்டார். எல்லா இடத்திலும் பெண்கள் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. திறமையால், உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள் கூட இருக்கிறார்கள் என்றேன். சிறிது நேரம் மெளனமாய் இருந்தார். பெண் போலீஸார்கள் காவலுக்கு ரோட்டில் நிற்கும் நேரங்களில் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, மாதவிடாய் கால நிலைகளை கடக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சொன்ன போது “33 சதவிகிதம்  கேட்கிறாங்க இல்லை. படட்டும்என்றார்.  ஏதும் பேசாமல் கிளம்பிவிட்டேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நாளைய இயக்குனர் சீசன் 2வில் போட்டியில்  கலந்து கொண்ட படம் இந்த போஸ்டர். இக்குறும்படத்தை இயக்கியவர் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார். எழுதியது அடியேன். அவருடய ஆரம்பக்கால குறும்படங்களுக்கு என்னுடய கதையை அவர் பயன்படுத்தியிருக்கிறார். என்னுடய பூர்வாசிரம பெயரில் கதை, திரைக்கதை எழுதியிருந்தேன். சிறுகதைகளை குறும்படம் ஆக்குவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல.  ஆனால் அதே நேரத்தில் அது சிறப்பாகவும் அமைவதற்கு பல சான்ஸ்கள் உள்ளது. அதை தன் முதன் முயற்சியிலேயே சிறப்பாக செய்தவர் ரவிகுமார்.  சுவாரஸ்யமான ட்விஸ்டுடன் இருக்கு இந்த குறும்படத்தை பாருங்கள் . https://goo.gl/OuE30E



Post a Comment

1 comment:

விஸ்வநாத் said...

33 சதவிகிதம் கேட்கிறாங்க இல்லை.
படட்டும்