Thottal Thodarum

Jan 10, 2017

கொத்து பரோட்டா 2.0-11

கொத்து பரோட்டா 2.0-11
குறும்படம் - Cheers
தலைப்பே எதைப் பற்றிய படம் என்பதை உணர்த்தும்.  குடி எனும் ஆக்டபஸின் ஆக்கிரமிப்பை, குடும்பத்தின்  எனும் அமைப்பின் மீதான மூச்சுத் திணறலை அழுத்தமாய், நான்கு நிமிடங்களில் சொல்லியிருக்கிறது இந்தப்படம். சிம்பிளான மேக்கிங். அழுத்தமான நிகழ்வு என சட்டென பார்த்த மாத்திரத்தில் பார்க்கும் நம் மனதில் பாரத்தை ஏற்படுத்தக்கூடிய க்ளைமேக்ஸ். மணிஜியின் இயக்கத்தில் வெளிவந்த, சற்றே பழைய குறும்படம் தான் என்றாலும் பேசியிருக்கும் விஷயம் இன்னைக்கும் ஹாட்டான விஷயம் என்றே சொல்ல வேண்டும். https://www.youtube.com/watch?v=lmaEXeqwYDI&feature=youtu.be
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அறிவித்த ரெண்டொரு நாளுக்கு நானும் தேசபக்தி முறுக்கேறித்தான் கிடந்தேன். அடுத்தடுத்த நாட்களில் என் முறுக்கு குறைந்து நெகிழ ஆரம்பித்துவிட்டது.  ஏழை எளியவர்கள் போய் பணம் எடுத்துக் கொள்ளட்டும் என்றிருந்த என் போன்ற நிறைய மிடில் க்ளாஸ், , நாட்டுப்பற்று  மக்கள் ஏடிஎம், பேங்க்குகளிலிருந்து வெளி வரும் அறிவிப்புகளை பார்த்தும், கேட்டும், கொஞ்சம் வயிறு கலங்கிப் போய் க்யூவில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். ஐந்நூறு இதோ வரும் அதோ வரும் என்றிருக்க, வெளியான வட மாநிலங்களில் ஏடிஎம்களில் எடுக்கப்படும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் டோனர் தீர்ந்து போன ஜெராக்ஸ் பிரிண்ட் போல பாதி அழிந்து வருவதும், ஒழுங்காய் ப்ரிண்ட் செய்து எடுக்கப்படாத 2000 ரூபாய் நோட்டுக்களின் படங்களையும் பார்க்கும் போது மேலும் பீதியடையாமல் இருக்க முடியவில்லை. எடுத்த 100 ரூபாய் சில்லரையையும் செலவு பண்ண ஆயிரம் யோசனைகள்.  டிசம்பர் 30 வரை எடுக்கலாம் என்றவர்கள் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சரியாகும் என்கிற அறிவிப்புக்கள் எல்லாம் காற்றில் போய், தினத்துக்கு ஒரு சட்டம், பேங்குக்கு ஒரு ரூல்ஸ் என்று செயல்பட ஆரம்பிக்க, பதட்டம் மக்களிடையே கூடத்தான் செய்தது. க்ரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் மூலம் ட்ரான்ஸாக்‌ஷன் செய்து கொள்ள வேண்டியதுதானே? என்று ஒரு சாரார் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் தினக்கூலிக்கு ஏதுடா பேங்கு அக்கவுண்ட்? ஏடிஎம் கார்டு? என்று கண்கள் சிவக்க கேள்வி கேட்பவர்கள் இன்னொரு புறம்.  நிஜம் தான் கூலி வேலை செய்கிறவர்களுக்கு, சிறு முதலீட்டு தொழில் செய்கிறவர்களுக்கு கடும் பிரச்சனைதான். இவையெல்லாம் சில்லறை தட்டுப்பாடு இல்லாமல் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் ப்ரச்சனை சுமூகமாயிருக்கும்.  ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு  சில்லரையில்லாமல் அலைவது பற்றி பேசினால், 500 ரூபாய் நோட்டுக்கு சில்லரையில்லாதவர்களைப் பற்றி பேசுகிறார்கள். எல்லாரையும் வரி விதிப்புக்குள் கொண்டு வரக்கூடிய திட்டம் என்று பாராட்டினால். அம்பானியைப் பாருங்க, அதானிய பாருங்க அவங்களை கேட்டீயா? என்று கேட்கிறார்கள். இவர்கள் கேட்பதற்கு ஈடாய் அரசும் அவர்களிடம் ஒரு  கேள்வி கூட எழுப்பாமல், வராக்கடனில் அவர்களின் கடனை சேர்த்து அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறது. எனக்கு தெரிந்த எலக்டீசிஷியன் நண்பர் ஒருவர் சின்னச் சின்ன வேலைகளை செய்து இன்று ஒரிரு பெரிய காண்ட்ரேக்டுகளை எடுத்து செய்யும் அளவிற்கு வளர ஆரம்பித்திருந்தார். இந்த அறிவிப்பு வந்த அடுத்த நாள் எனக்கு போன் செய்தார்.
”சார்.. என்னாண்ட கொஞ்சம் பணம் இருக்கு. எப்படி மாத்துறது?” என்றார்.

”பேங்குல டெபாசிட் பண்ண ஈஸியா மாத்திரலாம் தம்பி” என்றேன். 

”எனக்கு கரண்ட் அக்கவுண்டேயில்ல சார்.. கேஸு, பைன் எல்லாம் வருங்கிறாங்க..” என்று இழுத்தார்.

”அதெல்லாம் ரெண்டரை லச்சத்துக்கு மேல தான். சேவிங்ஸ் பேங்குல போட்டுட்டு கணக்கு காட்டிரு” என்றேன்.

”அமெளண்ட் கொஞ்சம் அதிகம் சார்..”

சற்றே யோசனையாய் ”என்ன ஒரு ஐந்து லட்சம் வச்சிருப்பியா?”

அவன் தயங்கி “ஆயிரம் மட்டுமே 17 லட்சம் வச்சிருக்கேன் சார்” என்றார். 
அவர் என் நண்பர் தான். உழைத்து முன்னேறியவர்தான்.  பார்ப்பதற்கு பணக்காரராய் தெரிய மாட்டார்.  சாதாரண எலக்டீஷியனிடம் எவ்வளவு பணம் இருந்திரப் போவுது எனும் பொது புத்தியுடனான என் அப்ரோச்சைப் போலவே பெரும்பாலானவர்களிடம் எண்ணம் இருக்கிறது என்றே தோன்றுகிறது.  நிஜமாகவே பணம் மாற்ற அல்லாடும் மக்களிடையே அதையே தொழிலாய் மாற்றிக் கொண்டு, க்யூவில் நிற்க, பணம் மாற்றிக் கொடுக்க என்று சம்பாதிக்க ஆரம்பித்தவர்களையும் பார்க்க நேரிட்டது. எந்த பணக்காரணாவது க்யூவில நிக்குறானா? என்று கேட்கிறவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி?  பணக்காரனை விடுங்கள். எத்தனை மிடில் க்ளாஸ் குடும்பங்கள் அவர்களது ரேஷனுக்காக அட்டையை எடுத்துக் கொண்டு க்யூவில் நின்றிருக்கிறார்கள்?. அவர்களது வேலைக்கார அம்மாவோ, அல்லது அய்யாவோ தான் அங்கே நின்று அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொண்டு, இவர்களுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். ஸோ.. பணக்காரன் என்று நீங்கள் நினைப்பவர்களின் வீட்டில் நிறைய வேலைக்கார அம்மாக்களூம் அய்யாக்களும் உள்ளனர். இதையெல்லாம் சொல்லியதால் நான் ஏதோ மோடி ஆதரவாளர் எனும் பிம்பம் ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இணையத்தில் இந்தியாவே பொங்குகிறது என்பது போல காட்டும் ஸ்டேடஸ்களை மட்டுமே நீங்கள் படிப்பவராக இருந்தால் நிச்சயம் ஹைபர் டென்ஷன் வந்து சாக வேண்டியதுதான். ஏடிஎம் க்யூஇவ்ல் இருக்கும் பெரும்பாலான இளைஞர்களிடம் க்யூவில் நிற்கும் எரிச்சல் இருக்கிறது. ஆனால் கோபம் இல்லை. பெருசுகளிடம் ஆதங்கம் இருக்கிறது. ரெண்டொருவருக்கு கோபமும், ஆதங்கமும் மாறி மாறி வந்து நான் சொல்லி என்னத்த ஆவப் போவுது என்கிற இயலாமை இருக்கிறது.  என்னளவில் இம்மாதிரியான மாற்றங்களினால் இந்தியா வல்லரசாகும் என்றால் அதை ஓரத்தில் நம்பி, ஆதரவு கொடுத்துத்தான் பார்ப்போமே என்று ஆசைப்படும் மிகச் சாதாரணன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் செல்லாத பணத்தினால் திரையுலகின் பாதிப்பு? என்கிற தலைப்பில் ராத்திரி ஒன்பது மணிக்கு விவாதிக்க கூப்பிட்டிருந்தார்கள். திரையுலக பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள் என்று பார்த்தால், வந்திருந்த விருந்தினரில் ஒருவர் பேஸ்புக்கில் வரும் அத்தனை செய்திகளையும், வரிசைப்படுத்தி, எல்லாரும் செத்துட்டு இருக்காங்க. .உடனடியா புரட்சி வெடிக்கப் போவுது என்று விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.  போகிற போக்கில் அது திரையுலக பிரச்சனை பேசுமிடமாக இல்லாமல் பொது அரசியலைப் பேசுமிடமாக ஆகிவிட, அவர் மூச்சு விட எடுத்துக் கொண்ட டைமில் திரையுலக பிரச்சனையைப் பற்றி மூன்று கருத்துக்களை மட்டும் சொல்லிவிட்டு எஸ் ஆனேன். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பல சமயங்களில் நல்ல நகைச்சுவை உணர்ச்சி வேண்டும் என்று என் நண்பரொருவர் சொல்வார். அது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The Night Of
கிரிமினல் ஜஸ்டிஸ் எனும் பிரிட்டிஷ் மினி சீரீஸை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட அமெரிக்க 8 எபிசோட் சீரீஸ். நியூயார்க்கில் வசிக்கும் நாஸ் எனும் நாசீர் கானைப் பற்றிய கதை. நாஸ் அமெரிக்காவில் பிறந்த பாகிஸ்தானி மாணவன். அப்பா ஒரு டாக்ஸி ட்ரைவர். அம்மா ஒரு பொத்திக்கில் வேலை பார்ப்பவர். கருப்பின கல்லூரி நண்பன் ஒருவன் பார்ட்டிக்கு அழைக்கிறான். உடன் வரும் நண்பன் வராததால் அப்பாவுக்கு தெரியாமல் அவருடய டாக்ஸியை எடுத்துக் கொண்டு பார்ட்டிக்கு கிளம்புகிறான். வழி தேடி போகும் போது சிற்சில இடஞ்சல்கள். அப்போது காரில் ஒர் இளம் பெண் ஏற, அவளின் அழகில் மயங்கி அவளுடன் பயணிக்கிறான். பின்பு தனிமை, அழகு, காமம், போதை வஸ்துக்கள், செக்ஸ் என்ற சடுதியில் எல்லாம் நடந்துவிட, கண் முழித்துப் பார்க்கும் போது அவள் கொல்லப்பட்டிருக்கிறாள். பயத்தில் அங்கிருந்து தப்பிக்க நினைத்து அவன் செய்யும் செயல்கள் அவனை போலீஸில் பிடியில் சிக்க வைக்க, கொலை பழி அவன் மீதாகிறது. ஆசியன். பாகிஸ்தானி வேறு கேட்க வேண்டுமா? . அவனை காப்பாற்ற வருகிறார் ஜான் ஸ்டோன். ப்ராத்தல், திருட்டு வழக்குகளுக்கு  ஆஜராகும் பெட்டிக்கேஸ் லாயர். அவருக்கு ஒரு வித்யாசமான தோல் நோய் வேறு. எப்படி அவனை அந்த கேஸிலிருந்து காப்பாற்றுகிறார்?. அமைதியான, கொஞ்சம் அழுத்தமான நாஸ் இந்த பிரச்சனை மூலமாய் அடையும் கஷ்டங்கள். ஜெயில் தண்டனை. அந்த ஜெயில் கொடுக்கும் அனுபவம். எப்படி அவனை மேலும் உறுதியானவனாக, அழுத்தமானவனாக மாற்றுகிறது என்பது தான் கதை. முதல் எபிசொடிலிருந்து எட்டாவது எபிசோட் வரை எங்கேயும் புட்டேஜுக்காக ஜல்லியடிக்கவேயில்லை. நாசராக நடித்திருக்கும் ப்ரிட்டிஷ் நடிகரான ரியாஸ் அஹமத் ஆகட்டும், அவரை காப்பாற்ற முனையும் வக்கீல் ஜான் ஸ்டோன். அவரின் நடிப்பு என அட்டாகசமான கேரக்டர்கள். அமெரிக்க ஜெயிலில் நடக்கும் அதிரடிக் கொலைகள். கடத்தல்கள் என விறுவிறு, பரபரக் காட்சிகள். இந்த சிரீஸில் ஜான் ஸ்டோனாக பிரபல நடிகர், தயாரிப்பாளர் ஜேம்ஸ் கண்டோல்பினி நடிப்பதாய் இருந்து அவரது திடீர் மறைவினால் அந்த கேரக்டரில் ராபர்ட் டீ நீரோ நடிப்பதாய் இருந்தது, டேட் பிரச்சனையால் நடிக்காமல் விலக, அதில் ஜான் டுர்ட்டுரோ நடித்தார். கிட்டத்தட்ட, டி நீரோவின் குரல், முகச்சாயல் கொண்டவர் என்று கூட சொல்லலாம். அழுத்தமான க்ரைம் தொடர் பார்க்க விரும்புகிறவர்களுக்கான அட்டகாசமான சீரிஸ். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுநிசிக் கதைகள் -2
நைட் ஷோ முடித்துவிட்டு, சிஜடி நகர் வழியாய் வந்து கொண்டிருந்த போது வழக்கம் போல போலீஸ் மறித்தார். “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுவிட்டு அசுவரஸ்யமாய் எதிர் திசை தெருவில் தெரிந்த நடமாட்டத்தை நோட்டம் விட்டார்.

படம் பார்த்துட்டு வர்றேன் சார்.

டிக்கெட் இருக்கா?

இல்லை

அதெப்படி டிக்கெட் இல்லாம?

நெட் புக்கிங் சார்

அப்படின்னா.. என்று கேட்டுவிட்டு எங்கே தனக்கு தெரியவில்லை என்று காட்டிவிட்டால் மரியாதை குறைவாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் நெட்  ஓகே..ஓகே.. சரி.. என்ன படம்? எனக்கு எரிச்சலாய் இருந்தது. நான் பார்த்துவிட்டு வந்த இந்திப்படத்தின் பேரை சொன்னால் இவருக்கு தெரியுமா? எந்த ஷோ எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று தெரியுமா? 

இந்தி படம் சார்.

என்ன படம்?

சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசாரிக்கிறது ரொம்பவே ஓவர் சார்.. பேப்பர்ஸ் பாருங்க, லைசென்ஸ் கேளுங்க, டிக்கெட் புக்கிங்க கூட மொபைல்ல செக் பண்ணுங்க..  சரி..

அதிகாரிங்க விசாரிக்க சொல்லியிருக்காங்க சார். படம் பேர் சொல்லுங்க.. “ என்றார் விடாப்பிடியாய்

நான் சிரித்தபடி தே இஷ்கியா

அவர் முகத்தில் தெரிந்த ரியாக்‌ஷனை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. அனுபவிக்கணும்.



Post a Comment

4 comments:

இராய செல்லப்பா said...

மேற்கு சிஐடி நகர் வழியாகவா? நிறைய மரங்கள் விழுந்து கிடக்குமே, (வர்தா புயலில்) எடுத்து விட்டார்களா? நீங்கள் ஒரு சினிமா டைரக்டர் என்று சொல்லியிருந்தால் ராஜ மரியாதை கிடைத்திருக்குமே!...-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

Unknown said...

Book fair???

Krishna said...

தே இஷ்கியா!!! - அடல்ட் கார்னெர் இல்லாத குறையை போக்கிவிட்டது. - கிருஷ்ணா குமார்.

'பரிவை' சே.குமார் said...


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.