Thottal Thodarum

Jul 15, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2- 7-பைரஸியும், சேரனின் C2H

சமீப காலமாய் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் ஆரம்பித்து, அடிப்படை வேலை செய்பவர்கள் வரை புலம்புவது சினிமா நிலைம ரொம்ப மோசமாயிருக்கு என்பதுதான். ஏற்கனவே சின்னப் படங்களின் வெற்றி, மற்றும் வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இயக்குனர் சேரன் அவர்களின் C2H எனும் விளம்பரம் வந்தது. அவ்விளம்பரம் பார்த்து  நேற்று காமராஜ் அரங்கில் கூடிய கூட்டத்தில் முக்கியமானவர்கள் எல்லோருமே சின்னப் படம் தயாரிப்பவர்கள், தயாரித்துவிட்டு வெளியிட முடியாமல் காத்திருப்பவர்கள். அட எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பாளர் ஏதோ ஒரு ஐடியாவோடத்தான் ஆரம்பிச்சிருப்பாரு.. என்ற நம்பிக்கையில் கூடியிருந்த கூட்டம்.  கூடியிருந்த கூட்டத்திற்கு பதில் கிடைத்ததா? என்று கட்டுரையின் முடிவில் பார்ப்போம். கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்து அப்போதைக்கு கைவிடப்பட்ட இந்த தமிழ் சினிமா எனும் யானைக்கு மீண்டும் மணிக்கு கட்ட விழைந்த தைரியத்திற்காக சேரனுக்கு பாராட்டும் ஆதரவும்.


சரி.. C2H  என்ன செய்யப் போகிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்னால் இங்கே பைரஸி எந்த அளவிற்கு புரையோடிக் கிடக்கிறது என்று பார்ப்போம். வீடியோ கேசட் என்ற விஞ்ஞான வளர்ச்சி வரும் வரை சினிமாவிற்கு டிவி மட்டுமே கொஞ்சம் ஆட்டம் கொடுக்கக்கூடிய விசயமாய் இருந்த நேரத்தில், தமிழ் படங்களுக்கு வெளிநாட்டு உரிமை வியாபாரம் ஆரம்பிக்க, படங்களின் ப்ரிண்டுகளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே  பெட்டிகளை அந்நாடுகளுக்கு அனுப்பி வைக்க அங்கே தியேட்டரில் முதல் நாள் ஓடும் போதே V.H.S கேமரா மூலம் திருட்டுத்தனமாய் எடுக்கப்பட்ட படமும் கலரும் ஒட்டாத வீடியோ ஒன்று வரும். அது வந்த பிறகு ஒரு ரெண்டு வாரத்தில் இன்னும் கொஞ்சம் பெட்டரான பிரிண்டும், மூன்றாவது வாரத்திற்கு மேல் நல்ல  பீட்டா பிரிண்ட் உருது சப்டைட்டிலோடு வரும்.  அப்போதிலிருந்தே பைரஸி சினிமாவை பாதிக்க ஆரம்பித்தது. நான் வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த நாட்களில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு எல்லாம் வீடியோ கேசட் டோர் டெலிவரி என் நிறுவனம் தான் செய்து கொண்டிருந்தது. அவரவர்கள் படம் வந்த மாத்திரத்தில் பிரிண்டைப் பார்த்துவிட்டு, அப்பாடி.. பிரிண்ட் நல்லாயில்லை என்று சந்தோஷப்பட்டு நிம்மதியடைந்தவர்கள் ஏராளம். பின்பு கொஞ்சம், கொஞ்சமாய் வீடியோ கேசட் ஒழிந்து டிவி ஆக்கிரமித்து, பின்பு சிடி, டிவிடியாக வடிவெடுத்து, இதோ இன்று இண்டெர்நெட் எனும் வடிவில் வந்து மீண்டும் பயமுறுத்துகிறது.  எது எப்படி மாறி வந்தாலும் பைரஸியை மட்டும் ஒழிக்க முடியவேயில்லை. உலக அளவில் எந்த படத்தையும் கொஞ்சம் உட்கார்ந்து தேடினால் நிச்சயம் டவுண்டோடிட்டு விடலாம். அதுவும் சமீபத்தில் ACT ப்ராட்பேண்ட் எனும் நிறுவனம் தங்களது நிறுவன இணைப்பை பெற்றால் 8ஜிபி படத்தை இத்தனை நிமிடங்களில் டவுன்லோட் செய்துவிடலாம் என்று விளம்பரப்படுத்தும் அளவிற்கு சினிமா பைரஸி ஆக்கிரமித்துள்ளது.

இன்றைய சினிமாவின் மிகப் பெரிய ப்ரச்சனையே வாரம் நாலு படம் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் எந்த படத்திற்கும் தியேட்டர் கிடைப்பதில்லை. தியேட்டருக்கு ஆடியன்ஸும் வருவதில்லை. காரணம் படங்களின் குவாலிட்டி, மற்றும் தியேட்டர்களில் டிக்கெட் மீது வைக்கப்படும் விலை, இதனால் தான் தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை என காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்த பைரஸியை ஒழிக்கவும், சின்ன படங்கள் தங்களுக்கான இடத்தை பெறவும் செய்திருக்கும் முயற்சி தான் சேரனின் C2H. சினிமா டு ஹோம். நீ தியேட்டருக்கு வரலைன்னா என்ன? நான் சினிமாவை உன் வீட்டிற்கு கொண்டுட்டு வர்றேன் என்று வீட்டிற்கு கொண்டு வரக் கூடிய சாத்தியங்கள் அனைத்தையும் செய்திருக்கும் முயற்சியே இந்த C2H. direct to HOme, என்பதன் இன்னொரு வடிவம்.  டிவிடி, இண்டெர்நெட், டிவி, டிடிஎச், கேபிள், மொபைல் சாதனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்திருப்பது தான் இதில் விஷேஷம். 

சரி ஓகே இதை எப்படி, எதற்காக ஆரம்பித்தார் என்று யோசித்தால், அவரது படமான ஜே.கே எனும் நண்பனில் ஏற்பட்ட கசப்பனுவங்கள் காரணம் என்றே கூட சொல்லலாம். இந்த கசப்பனுவம் அவருக்கு மட்டுமல்ல நல்ல தரமான சினிமா, எடுக்க நினைத்து பெரிய நடிகர்கள் இல்லாமல் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் எல்லா சினிமா தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படும் அனுபவம் தான். மற்றவர்கள் அதற்கு என்ன செய்வது என்று புரியாமல் கை பிசைந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கான முதலடியை எடுத்து வைத்திருப்பது சந்தோஷம்.  நிகழ்ச்சியில் கே.ஆர் பேசும் போது கேரளாவில் பைரசி இல்லை, ஆந்திராவில் இல்லை, கர்நாடகாவில் இல்லை என்று சொன்னார். அங்கேயெல்லாம் பைரஸி இல்லை என்று சொல்வது மிகை என்றாலும், பைரஸி அங்கே கிடைப்பதற்கே நான்கைந்து வாரங்கள் ஆகிறது என்பதுதான் உண்மை. அங்கே மட்டும் எப்படி சாத்தியம்? அதுவும் பர்டிகுலராய் கேரளாவில்?. 

ஒரு வருடத்திற்கு முன் சம்பந்தமேயில்லாமல் நண்பர் ஒருவருக்கு கேரள போலீஸிடமிருந்து போன் வந்தது. உடனடியாய் அங்கே வந்து பார்க்கச் சொல்லி, இல்லாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுத்துவிடுவோமென்று.  என்ன காரணம் என்று கேட்டதற்கு ஒர் பிரபல மலையாள படமொன்றை டோரண்டில் அப்லோட் செய்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும்,  உடனடியாய் ரெண்டொரு நாட்களில் வந்து பார்க்காவிட்டால் அரஸ்ட் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனடியாய் ஒர் வக்கீலை அணுகி அவருக்கும் பைரஸிக்கு சம்பந்தமேயில்லை எப்படி என் பெயர் இதில் வந்தது என்று விசாரிக்க சொல்ல, வக்கீல் மூலமாய் பேசியதில் அந்த வெப்சைட்டை நடத்தும் நிறுவனத்திடமிருந்து இவரது அக்கவுண்டிற்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டிருப்பது தெரிந்து கண்டு பிடித்து கேஸ் போட்டிருப்பதாய் சொன்னார்கள். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை.. மிக சாதாரணமான வேலையில் இருப்பவர். பின்பு பேங்கிற்கு சென்று அவரது அக்கவுண்டை செக் செய்த போது , அவரது அக்கவுண்டில் ஒரு நாள் மட்டும் பணம் இருந்து பின்பு வேறு ஒரு அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டிருப்பதும், தவறுதலாய் இவரது அகக்வுண்டில் பணம் க்ரெடிட் ஆன சாட்சி கிடைக்க, கேரளா போய், எஸ்.பியை நேரில் சந்தித்து, எல்லாம் ஆதாரங்களையும் காட்டித்தான் ப்ரச்சனையிலிருந்து வெளியே வந்தார்கள். இத்தனை களேபரங்களுக்கு மீறி அவர்கள் அங்கே அக்கவுண்டை செக் செய்ய நினைத்த போது அக்கவுண்ட் க்ளோஸ் செய்யப்பட்டு, சைட்டையும் மூடிவிட்டார்கள். ஆனால் இத்தனையும் டோரண்ட் மீது கம்ப்ளையிண்ட் கொடுக்கப்பட்ட ஒரே வாரத்தில் கேரளா போலீஸார் விசாரணை செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை. இத்தனைக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஒன்று மிகப் பெரிய தயாரிப்பாளர் கிடையாது. அவருக்கே இந்த நடவடிக்கை என்றால் பார்த்து கொள்ளுங்கள். சட்டம் தன் கடமையை சரியாய் செய்வதினால் தான் பைரஸியை அங்கே கண்ட்ரோல் செய்ய முடிகிறது. ஆம் கண்ட்ரோல் செய்யத்தான் முடியும் முற்றிலும் ஒழிக்க முடிய வேண்டுமானால் நம் ஆட்டிட்டியூட் மாற வேண்டும். சரி..சேரனின் C2H டிவிடி பஜார் எப்படி செயல் படப் போகிறது? மோசர்பியர் ஆரம்பித்த குறைந்த விலை டிவிடி வியாபாரம் ஏன் ஒர்க்கவுட் ஆகவில்லை? என்பதை வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

தொடரும்

Post a Comment

4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

மிக நல்ல தகவல் அடங்கிய பதிவு சார்! பைரசி ஒழிந்தால் ஒழிய தமிழ் சினிமா ஓங்காது சார்! பாண்டிச் சேரியில் மலிவி விலையில் ந்ல்ல பிரிண்ட்டுடன் புது ப்டங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நேரம் லோக்கல் சானல்களில் இரவு காட்டப்படும். நாங்கள் கூட கேலி செய்வதுண்டு....இந்த பய புள்ளைங்க ஷூட்டிங்க் நடக்கும்போதெ கூட சுட்டுடுவாங்க போல....படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் போகரதுக்கு முன்னடியே இவிங்க சானல்ல இவங்க எல்ல வேலையும் செஞ்சு போட்டுருவாங்க போல....டைரக்டர்ஸ்,ப்ரொட்யூசர் கிட்ட சொல்லணும்...." என்று.....

கேரளாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பங்களூர் டேய்ஸ் படம் யாரோ டவுன் லோட் செய்ய முஅன்ற போது பிடிபட அந்த அளவிற்கு அங்கு போலீஸ் நடவடிக்கை எடுக்கின்றது! பயங்கர கெடுபிடி சைபர் க்ரைம் அங்கு.

நாங்களும் மாணவர்களுக்கு வேண்டி குறும்படம் சிறிய பட்ஜெட்டில் எடுப்பதால் னீங்கள் தரும் தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்கின்றோம்...சினிமா காதலால்.....

”தளிர் சுரேஷ்” said...

கேரளா போலீஸ் அம்புட்டு சுறுசுறுப்பா இருக்காங்களா? பாராட்டுக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

நண்பரே தியேட்டர்களில் கட்டணம் தாறுமாறாக ஏறிவிட்டது. அதுவும் படம் வெளியான சில தினங்களுக்கு தியேட்டர்காரர்கள் வசூலிப்பதுதான் கட்டணம். என் குடும்பத்தில் நான்கு பேர் மட்டுமே, ஆனால் ஒரு திரைப்படத்திற்குச் சென்றால், கட்டணம் மட்டுமே ஐநூறுக்கு மேல் செலுத்தியாக வேண்டும். எனவே தியேட்டர் பக்கமே செல்வதை விட்டுவிட்டேன்.
படம் வெளியிடும் நாளன்றே, மற்ற நாடுகளில் வெளியிடப்படுவதைப் போன்று ஒரிஜினல் டிவிடி க்களை வெளியிட்டால், திருட்டு சிடி கலாச்சாரைத்தை பெருமளவு ஒழிக்க முடியும் என்று எண்ணுகின்றேன்.

'பரிவை' சே.குமார் said...

மிக நல்ல பகிர்வு அண்ணா...