Thottal Thodarum

Jul 8, 2017

கொத்து பரோட்டா -2.0-32

கொத்து பரோட்டா -2.0-33
Black Mirror –The National Anthem
ப்ளாக் மிரர் எனும் பிரிட்டிஷ் தொலைக்காட்சி சீரிஸ். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. முதல் விஷயம் இது தொடர் கிடையாது. ஒவ்வொரு எபிசோடும், ஒவ்வொரு கதை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் படம். இரண்டாவது எல்லா படங்களுமே டிவி, கம்ப்யூட்டர், மொபைல் எனும் கருப்பு திரையினால் ஏற்படும் சந்தோஷம் துக்கம், மற்றும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட கதைகள். பெரும்பாலான கதைகள் எதிர்காலத்தில் நடப்பது என பல சுவாரஸ்ய பொக்கேக்களை கொண்ட தொடர் இது. முதல் சீசனுகு பிறகு நெட்பிளிக்ஸ் அவர்களுக்காக தனியே தயாரித்து தரச் சொல்ல, இப்போது மூன்றாவது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.  முதல் சீசனில் வந்த முதல் கதை தான் மேற்ச்சொன்ன தலைப்பில் வரும் படம்.

பிரிட்டிஷ் பிரதமர் அதிகாலையில் எழுப்பபடுகிறார். இளவரசியை யாரோ ஒருவர் கடத்திவிட்டதாகவும், யூட்யூபில் வீடியோவில் கடத்தியவன் கோரிய கோரிக்கையை காட்டுகிறார்கள்.  கடத்தல் காரன் கோரிக்கையை இளவரசியே அழுதபடி படிக்க, பிரிட்டிஷ் பிரதமர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.  இளவரசி விடுவிக்கப்பட வேண்டுமானால் பிரதமர்  ஒரு பன்றியுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், அதை தொலைக்காட்சியில் நேரலை செய்ய வேண்டுமெனவும் கடத்தல் காரன் கோரிக்கை. உடனடியாய் யூடியூப் வீடியோவை தடை செய்ய சொல்ல, அதை செய்தாகிவிட்டதாகவும், ஆனாலும் பல கோடி பேர் அதை டவுட்லோட் செய்து பரப்பி வருவதாகவும் சொல்கிறார்கள்.  பன்றியுடன் உறவு வைத்துக் கொள்வதா? ஏதாவது செய்து இளவரசியை காப்பாற்ற முடியாதா? என்று கேட்கிறார் பிரதமர். இருக்கும் நான்கைந்து மணி நேர கெடுவுக்குள் முயற்சிக்கலாமே தவிர உறுதியாய் ஏதும் சொல்ல முடியாது என்று கை விரிக்கிறது அரசு இயந்திரம்.  ஆனாலும் ஒரு பக்கம் போலீஸும், ராணுவமும் கிடைத்த தகவல்களை வைத்து தேடுதல் வேட்டை நடத்துகிறது.  பிரதமரின் முகத்தை மட்டுமே வைத்து வேறு ஒருவர் உடலோடு  ஒளிபரப்பு செய்யலாம் என்று முடிவு கடத்தல் காரனுக்கு தெரிந்து இளவரசியில் கை விரலை கட் செய்து டிவி சேனலுக்கு அனுப்புகிறான் கடத்தல் காரன்.

பிரிட்டிஷ் ராஜ குடும்பம் இளவரசிக்காக தியாகம் செய்யாவிட்டால் அவரை தங்கள் குடும்பம் ஆதரிக்காது என்று ப்ரெஷர் கொடுக்க, தன் ராஜ விஸ்வாசத்தை காட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு. வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். ஒரு பக்கம் தேடுதல் வேட்டை, இன்னொரு பக்கம் மக்களின் ஆட்டு மந்தைத்தனமான எமோஷனல் அதரவு, டிவி சேனல்களின் நியூஸ் வெறி, என போய் கொண்டிருக்க, பிரிட்டிஷ் பிரதமர் ஒரு பன்றியுடன் உடலுறவு செய்யும் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகிறது.  பார்க்க அருவருப்பாக இருந்தாலும், மக்கள் பார்க்கிறார்கள். பார்த்துக்  கொண்டேயிருக்கிறார்கள்.  இதனிடையில் இளவரசியை நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே கடத்தல் காரன் வெளியே விட்டு விடுகிறான்.  அவன் அனுப்பிய விரல் இளவரசியுடயது அல்ல. அவனுடயது. யார் அவன்? எதற்காக அப்படி செய்தான்?. இளவரசியின் கடத்தலுக்கு பின்னான நிலை என்ன? ப்ரிடிட்டிஷ் பிரதமரின் நிலை? அவரது மனைவியின் மனநிலை? என்பதை எல்லாம் சர்காஸமாய் சொல்லியிருக்கும் படமிது. ஓடும் 45 சொச்ச நிமிடங்களும் நம்மை கட்டிப் போடும் படம். டோண்ட் மிஸ்.

கேட்டால் கிடைக்கும்
சர்வீஸ் சார்ஜுக்கும், சர்வீஸ் டாக்ஸுக்கும் பல பேருக்கு வித்யாசம் தெரியாத காலமொன்று இருந்தது. ஆனால் இன்றைக்கு அது பற்றி பல பேருக்கு தெரிந்தாலும், இல்லாத சட்டமொன்றை வைத்து இந்த ரெஸ்ட்டாரண்டுகள் அடிக்கும் கொள்ளையை பற்றிக் கேட்பதும் இல்லை. ரெண்டொரு மாதங்களுக்கு முன்னால் சர்வீஸ் சார்ஜ் என்பது மக்கள் தங்கள் விருப்பப்பட்டு கொடுப்பதாகும். அதை பில்லோடு சேர்த்து வாங்க கூடாது என்று அறிவித்தார்கள்.  சரி இந்த சர்வீஸ் சார்ஜ் என்பது என்ன?  உணவகத்தில் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவை உங்களுக்கு அளிக்கிறார்கள்.  அதற்கான விலையையும் நீங்கள் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு அதை எடுத்துக் கொண்டு வந்தவருக்கு முன்னெல்லாம் அவருடய சர்வீஸ் நன்றாக இருந்தால் டிப்ஸ் அளிப்போம். அது நாம் விருப்பப்பட்டு அளிப்பது.  அதை கொஞ்சம் கொஞ்சமாய் பெரிய ரெஸ்டாரண்ட்கள் அவர்களுடய பில்லில் சேர்க்க ஆரம்பித்தார்கள். நீங்கள் சாப்பிடும் பில்லின் தொகைக்கு 5 முதல் 20 சதவிகிதம் வரை.  அதாவது ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் உணவருந்தினால் அதற்கு  50 -200 ரூபாய் வரை சர்வீஸ் சார்ஜ்.  இத்தனை வருடங்களாய் நீங்கள் விரும்பிக் கொடுத்த தொகையானது கட்டாயமாய் கொடுக்கப் பட வேண்டிய ஒன்றானது. இத்தோடு விட்டார்களா என்றால் அது தான் இல்லை. நம் உணவுக்கான தொகை, அத்தோடு இந்த சர்வீஸ் சார்ஜுக்கும் சேர்த்து, வாட், சர்வீஸ் டேக்ஸ், கிர்ஷ் கல்யாண் எல்லாம் வரும். ஸோ.. நாம் சாப்பிட்ட உணவுக்கு மட்டுமில்லாமல் கொடுக்கும் டிப்ஸுக்கு சேர்த்து வரி கட்டுகிறோம்.  இந்த சர்வீஸ் சார்ஜானது எதற்கு? யாருக்கு போகிறது? என்று பார்த்தீர்களானால் நமக்கு சர்வீஸ் செய்யும் சர்வர்களுக்கும், செஃப்புகளுக்குமே செல்லும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் பல பெரும் உணவகங்களில் இவர்களுக்கான சம்பளமே இதிலிருந்தான் கொடுக்கப் படுகிறது. நேரடியாய் நிஜமாய் உழைக்கும் ஒருவர் விருந்தினர் விருப்பப்படி சர்வீஸ் செய்து அதிகம் சம்பாதிப்பதை தடுத்து, மொத்த காசையும் பில் தொகையில் வாங்கிக் கொண்டு, அதில் மூன்று முதல் நான்கு சதவிகிதம் பகிர்ந்தளிப்பார்கள் என்கிறார்கள்.  அரசும் தங்கள் பங்கிற்கு முன்பு இதில் குழப்பமான விதிமுறைகளையே வைத்திருக்க, அதை பயன்படுத்தி, இந்த ரெஸ்டாரண்டுகளும் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டது.

koஉணவகத்தின் விலைப் பட்டியல் அவர்கள் இருக்குமிடத்திற்கான வாடகை, வசதிகள், உணவின் தரம், அதற்கு ஏற்படும் செலவுகள் எல்லவற்றையும் சேர்த்துத்தான் விலை கணக்கிடப்படுகிறது.  அப்படியிருக்க, நம்மிடம் டிப்ஸை எப்படி கட்டாயப்படுத்தி வசூலிக்க முடியும்?. டிப்ஸாய் வரும் பணத்தை அவர்கள்  வேலையாட்களுக்குத்தான் கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த தொகையையும் சேர்த்து வசூலிக்கப்படும் தொகை எப்படி கணக்கு காட்டப்படுகிறது?. சர்வீஸ் சார்ஜையும் சேர்த்து வரி வசூலிக்கும் போது ஒரு பில்லுக்கு கிட்டத்தட்ட நான்கு ரூபாய் வரை வரியாய் அதிகம் வரும். ஏற்கனவே ஏகப்பட்ட வரிகளைக்கட்டி,  கூன் விழுந்திருக்கும் நம் முதுகின் மேல் பச்சகுதிரை தாண்டி விளையாடும் இம்மாதிரியான தில்லு முல்லு ரெஸ்டாரண்டுகளை என்ன சொல்வது. ஜனவரி மாதம் இதைப் பற்றி புகார்கள் அதிகமாக கண்டிப்பாக பில்லோடு தொகை நிர்ணையிக்க கூடாது என அரசு அறிவித்தது. அதை பற்றி சொல்லி நீங்கள் எப்படி சார்ஜ் செய்வீர்கள் என்று கேட்பவர்களுக்கு சட்டென பில்லில் சர்வீஸ் சார்ஜை கழித்துக் கொண்டு கொடுங்கள் என்று வாங்க ஆரம்பித்தார்கள். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாதவர்களும், கேட்க கூச்சப்படுகிறவர்களும் கொடுப்பதை  ரெஸ்டாரண்ட்க்காரர்கள் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
பல ரெஸ்டாரண்டுகளில் சர்வீஸ் சார்ஜை பில்லுடன் வசூலித்தாலும், கஸ்டமர்கள் பழக்க தோஷத்தில் வைக்கும் டிப்ஸுகளுக்கு தடையில்லை. அதை அந்த பணி செய்தவர் எடுத்துக் கொள்வார்கள். அப்போது பாருங்கள் நம்மிடம் வசூலிக்கப்படும் பணம் யாருக்கு செல்கிறது?.  அப்படி சர்வீச் சார்ஜ் வாங்கும் உணவகத்தில் நான் டிப்ஸ் என்று தனியாய் கொடுக்காமல் இருந்தேன். இந்த அறிவிப்பு வரும் வரை. அரசின் அறிவிப்புக்கு பிறகு நான் எந்த ஒர் உணவகத்திலும் சர்வீச் சார்ஜ் கொடுப்பதில்லை. அதற்குரிய வரியையும் கழித்துவிட்டுத்தான் கொடுப்பேன். ரெண்டொரு நாளைக்கு முன்  மத்திய அமைச்சர் தன் ஆணித்தரமான அறிவிப்பின் மூலம் சர்வீஸ் சார்ஜ் என்பது கட்டாயம் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதன் வரையரைகளையும் விளக்கியிருக்கிறார்.   http://economictimes.indiatimes.com/wealth/personal-finance-news/service-charge-not-mandatory-government-issues-guidelines/articleshow/58299472.cms
கஷ்டப்படுவனுக்கு கொடுக்குற காசுல ஏன் கணக்கு பார்க்கணும்? என்று செண்டிமெண்ட் பேசாமல் அது அவர்களுக்கு போகாத பணம். அவர்கள் பெயரில் கொள்ளையடிப்பதற்கு நான் உடந்தையாய் இருக்கக் கூடாது.  ஒரு ரூபான்னாலும் ஊழல் ஊழல் தான்.  கேட்டால் கிடைக்கும். கேளுங்க சர்வீஸ் சார்ஜை ஒழிப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் –Khujili

பேரைக் கேட்டாலே கில்மாவாக இருக்கிறதா?. யெஸ் இந்த கதை பேசும் விஷயம் செக்ஸ்தான் என்றாலும், அதை சொன்ன விதத்தில் அஸம் என சொல்ல வைத்திருக்கிறார் இயக்குனர் சோனம் நாயர்.  கதை நாயகர்களான ஜாக்கி ஷராப்புக்கும், நீனா குப்தாவுக்கும் வயது வந்த பையனிருக்க, ராத்திரி வீட்டுக்கு வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு செல்கிறான். முதுகு அரிப்புக்கு போடும் லோஷனைத் தேடி அவன் அறைக்கு போகும் ஜாக்கியின் கையில்  விலங்கு ஒன்றை எடுத்துக் கொண்டு வருகிறார். என்ன புள்ளை வளர்கிறாய்? என தைய்யா தக்கா என குதிக்கிறார். இது எதற்கு உபயோகப்படுத்துவார்கள் என்று தெரியுமா? என்று கேட்க, நீனா குப்தா வெட்கத்துடன் “BDSM”  என்கிறார். அதை கேட்டு அதிர்ந்த ஜாக்கி, இது பற்று உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க, பெண்கள் வாட்ஸப் க்ரூப் பற்றியும், அவர்களின் பேச்சு பற்றியும் சொல்ல, நாம் ஏன் இதை ட்ரை செய்யக் கூடாது என்று இருவருக்கும் ஆசை வருகிறது. அதன் செயல்பாடும், அதனால் வரும் சுவரஸ்ய திண்டாட்டங்களுமே கதை. நடித்த இருவரும் அட்டகாசமாய் நடித்திருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=KmRzflPuCjE

Post a Comment

No comments: