Thottal Thodarum

Jun 12, 2018

கந்துவட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -9


முதல் வாய்ப்பு… அதுவும் பெரிய நிறுவனம், நடிகர் என்று  ஆரம்பித்துவிட்டு அது தடைப்பட்டு நின்று போனால் அந்த இயக்குனரின் வாழ்க்கை மிகப் பெரிய் கேள்விக்குறியாகிவிடும். நண்பர் ஒருவரின் வாழ்க்கை அப்படி மாறிய கதை தான் இது. பிரபல இயக்குனரிடம் உதவியாளராய் நான்கைந்து வருடம் பயணம். எல்லாம் சிறப்பாய் போய்க் கொண்டிருக்க, ஒரு நாள் அன்றைய சிறு பட்ஜெட் படங்களின் நட்சத்திர தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிய வர, பெரும் முயற்சி செய்து அவரின் சந்திப்புக்கு ஏற்பாடாகிறது.

அந்த நாளுக்காக காத்திருந்தது வீண் போகவில்லை. நட்சத்திர தயாரிப்பாளருக்கு நண்பர் கதை சொன்னவிதம் மிகவும் பிடித்துவிட, “இந்தாபிடி” என்று ஒரு நல்ல தொகைக்கு அட்வான்ஸ் செக் வாங்கியாகிவிட்டது. எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி. நண்பனின் முதல் பயணமே மாபெரும் வெற்றித் தயாரிப்பாளருடன் எனும் போது நண்பனின் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கை. நண்பன் கதையை இன்னும் மெருகேற்ற விழையளானான்.

அடுத்த கட்டமாய் தயாரிப்பாளர் அவனை அழைத்து ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். ‘இன்ப அதிர்ச்சி” தான் என்றாலும் அதை அவன் எதிர்ப்பாக்கவில்லை. இன்றைய மாஸ் முதல் நிலை நடிகர். அன்றைக்கு நல்ல ஃபீல் குட் படங்களில் நடித்து வியாபாரம் ஆகக்கூடிய நிலையில் இருந்தவர். அவரிடம் சென்று கதை சொல்லச் சொல்லி அனுப்பி வைத்தார். நண்பருக்கு லேசாய் பயம் வந்தது. ஏனென்றால் அது நாள் வரை அவரது தந்தைதான் கதை கேட்டு வந்தார். திடீரென இவரிடம் போய் கதை சொல்லச் சொன்னத காரணம் புரியமால் லேசான பதட்டத்தோடுதான் சென்றார். நடிகரோ, இவரை சிறப்பாய் வரவேற்று மிகவும் ஆற அமர உட்கார வைத்து கதை கேட்டார். காட்சிகளுக்கிடையே ஆன விளக்கங்கள், வசனங்கள் என எல்லாவற்றையும் டீட்டெயிலாய்  கேட்டறிந்தார். மிகவும் ஆர்வமானார். கதையை முழுவதும் கேட்ட மாத்திரத்தில் பிடித்திருக்கிறது இல்லை என்பதை உடனே சொல்லாமல் தம்மடிக்க போய்விட்டார். நண்பருக்கோ பதட்டம் அதிகமாகிவிட்டது. அரை மணி நேரத்துக்கு பிறகு வந்தவர் நண்பரை அழைத்து, கதை பிடித்திருப்பதாகவும், தயாரிப்பாளரிடம் தான் பேசுவதாகவும் சொல்லிவிட்டு,  க்ளைமேக்ஸில் மட்டுமே மாறுதல் தேவை என்று ஒரு இக்கு வைத்திருக்கிறார். 

நண்பருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால் க்ளைமேக்ஸுக்காகதான் அனைவருமே படத்தின் கதை பிடித்திருப்பதாய் சொல்கிறார்கள் என்பது அவரது நம்பிக்கை. “கதை உங்களுக்கு ஓகேன்னா. சார் கிட்ட சொல்லிருங்க. ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்.” என்று விண்ணப்பம் வைத்திருக்கிறான் நடிகரிடம்.. அதாவது தயாரிப்பாளருக்கு க்ளைமேக்ஸ் மிகவும் பிடித்தமானதாக இருப்பதால்.. ஒரிரு நாளில் ரெண்டொரு க்ளைமேக்ஸுகளை தயார் செய்து கொண்டு, அவரிடம் இதைப் பற்றி பேசும் வரை அமைதிகாக்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்து விட்டு வந்துவிட்டதாய் எங்களீடம் சொன்ன போது “ஏண்டா.. தயாரிப்பாளர் தானே அனுப்பினாரு. அவரிடம் சொல்லாமல் இப்படி ஏன் முடிவெடுத்தாய்? “ என்று கேட்டபோது. “நல்ல நடிகர், தயாரிப்பாளர் காம்பினேஷன் ஒரு புதுமுக இயக்குனருக்கு கிடைப்பது என்பது சாதாரணமானதல்ல. அங்கே இங்கே சரிக்கட்டித்தான் ப்ராஜெக்டை ஆரம்பிக்க வேண்டும் . நடிகர் அட்வான்ஸ் வாங்கி டேட் கொடுத்துட்டா, தயாரிப்பாளருக்காகவாவது செய்தே தான் ஆகணும். இல்லாட்டி இவ்வளவு பெரிய தயாரிப்பாள்ர் படத்திலிருந்து வெளியேறினால் அவருக்குத்தான் ப்ரச்சனை “என்றான் எனக்கும் சரியென்றே பட்டது.

நாயகன் நண்பரிடம் வாக்கு கொடுத்தது போல, தயாரிப்பாளரிடம் க்ளைமேக்ஸ் பற்றி பேசாமல், ஓகே சொல்லிவிட, அட்வான்ஸ் வாங்கியாகிவிட்டது. தயாரிப்பாளர் மற்ற டெக்ச்னீஷியன்களுக்கு எல்லாம் அட்வான்ஸ் கொடுத்து சூட்டிங் தேதியை பிக்ஸ் செய்ய ஆர்மபிக்க, நண்பர் நடிகரிடம் வேறு க்ளைமேக்ஸ் சொல்வதாய் சொன்னதையே மறந்து போனார். நடிகர் மறக்க வில்லை. நண்பருக்கு போன் போட்டு என்ன ஆச்சுங்க க்ளை மேக்ஸ்? என்று கேட்க, நேரில் வருதாய் சொல்லிவிட்டு, தயாரிப்பாளரிடம் போய் “இப்ப ஹீரோ திடீர்னு க்ளைமேக்ஸ மாத்த சொல்லுறாரு” என்பது போல தயாரிப்பாளரிடம் சொன்னவுடன். “இதான் க்ளைமேக்ஸ், தயாரிப்பாளர் இதான் வேணும்டாரு” என்று சொல்லச் சொல்லி அனுப்ப, நடிகரிடம் போனார் நண்பர்.

வழக்கம் போல நல்ல வரவேற்பு. ”என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்று நடிகர் ஆர்வமாய் கேட்க, தயாரிப்பாளரின் வாய்ஸ் மீதான நம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிற தற்போதைய நிலையை சாதகமாய் பயன்படுத்த எண்ணி “ அதே பழைய க்ளைமேக்ஸ் தான் சார்..” என்றார் நண்பர்.

“அன்னைக்கு மாத்துறேன்னு சொன்னீங்க? “
”ப்ரோடியூசர் மாத்த வேணாம்ண்டாரு..” கொஞ்சம் அழுத்தமான் குரலில் நண்பன்.

நடிகர் ஏதும் பேசவில்லை. “ ஓகே.. நீங்க கிள்மபுங்க.. நான் தயாரிப்பாளரிடம் பேசிக் கொள்கிறேன் ‘ என்று சொல்லிவிட்டு, தயாரிப்பாளரிடம் பேசியிருகிறார். படத்தில் நடிக்க விருப்பமில்லயென்றும், அட்வான்ஸ் பணத்தையும் திரும்பக் கொடுத்தனுப்பியிருந்தார். தயாரிப்பாளரிடம் அவர் சொன்ன காரணம். உங்க டைரக்டர் உங்க கிட்ட சொன்ன கதை ஒண்ணு. என் கிட்ட சொன்னது ஒண்ணு. ஸோ.. அவர் கிட்ட நீங்க தயாரிபாளர்கிட்ட சொல்லிட்டீங்களான்னு கேட்டதுக்கு அவர் பதில் சொன்ன விதமும் எனக்கு பிடிக்கலை. இப்படி ஆர்மபத்துலேயே நேர்மையில்லாத இருந்தா என்னால ட்ராவல் பண்ண முடியாது” என்று சொல்லிவிட, தயாரிப்பாளர் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் நடிகரை பகைத்துக் கொள்ள முடியாமல், படத்தை ட்ராப் செய்துவிட்டு, அதே நடிகரின் கால்ஷீட்டை வைத்து பின்னாளில் பெரிய படமெடுத்து பெரும் வெற்றியைக் கொடுத்தார். ஆனால் அன்றைக்கு பின்னால பாத்துக்கலாம்னு ப்ளான் போட்ட நண்பன் இன்று வரை படம் எடுக்கவில்லை. வாய்ப்பு தேடிக் கொண்டேயிருக்கிறான். 15வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.



Post a Comment