Thottal Thodarum

Nov 26, 2018

நடிகையர் திலகம் வெற்றியா?

நடிகையர் திலகம் வெற்றியா?
நடிகை சாவித்திரியின் வாழ்கையை பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்ட போதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் காஸ்டிங் பற்றி தெரிய வர, கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்து கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான காஸ்டிங் என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது அவரது வாழ்க்கை பயணத்தில் ஏறி இறங்கிய அத்துனை சம்பவங்களையும சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாய் நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும்? என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது.

ஏனென்றால் பயோ பிக் எனும் வாழ்க்கை வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கையாளும் லாவகம் தெரிந்த இயக்குனர்கள் மிகவும் குறைவு. அதுவும் அரசியல் பிரமுகர்கள் என்றால் அவர்களைப் பற்றிய காரசாரமான நெகட்டிவ் விமர்சனங்களை காட்டவே முடியாது. இந்திய அளவில் சென்சார் ஆன படத்துக்கு எந்த மூலையிலிருந்து எதிர்ப்பு வருமென்று யாருக்கும் தெரியாது. அளூம் அரசின் ஆதரவுடன் துண்டு துக்கடா கட்சிகள் கூட ப்ரச்சனையை பெருசாக்கி, ஊதி பட வெளியீட்டை தடுக்க முடிகிற நாடு இது. தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி என அவர்களின் அரசியல் வாழ்வைப் பற்றி வேண்டாம், அவர்களது திரையுலக வாழ்க்கையைப் பற்றி எடுத்தால் கூட அதை அரசியலாக்கி, பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதையெல்லாம் மீறி மணிரத்னம் எம்.ஜி.ஆர் – கருணாநிதி ஆகியோரை அடிப்படையாய் வைத்து எடுத்த இருவர் படத்திற்கு வந்த எதிர்ப்பு எல்லோரும் அறிந்ததே. தன்னைப் பற்றிய படம் என்பதை அறிந்து அதில் என்னென்ன வைத்திருக்கிறார்கள் என்று ஒன்றுக்கு நான்கு முறை பார்த்து விசாரித்தே கலைஞர் அனுமதித்தார் என்றும் கூறுவார்கள்.

இப்படியான ஒரு மாநிலத்தில் பயோ பிக் என்பது கத்தி மேல் நடப்பது போல. அதிலும் மக்கள் மனதில் இன்றைக்கும் நல்ல பெயரோடு இருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியைப் பற்றி எனும் போது இன்னும் கொஞ்சம் ஆர்வம் அதிகமாகத்தான் செய்தது. நடிகையர் திலகத்தின் வாழ்க்கை எனும் போது அதில் ஜெமினி கணேசனை புறந்தள்ளிவிட்டு விட முடியாது. ஏனென்றால் அவரின் ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் மிக முக்கிய காரணமான கேரக்டர் ஜெமினி.

ஜெமினி ஒர் திறந்த புத்தகம். அதனால் குடும்பத்திலிருந்து பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் அவர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னால் கூட  அவரின் மகள் வயதுடைய பெண்ணை பகிரங்கமாய் அறிவித்து திருமணம் செய்து கொண்டவர். ஆனால் சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சினிமா உலகங்களையும் கவர் செய்தே தீர வேண்டும். சொந்த வாழ்க்கை என்று வரும் போது அவரது பொருளாதார தாழ்வுக்கு மிக முக்கியமான காரணம், அவரது குடிப்பழக்கம். அதற்கு காரணம் நிஜ வாழ்வில் ஜெமினிக்கும் அவருக்குமிடையே ஆன பிரிவு. பின்பு சாவித்ரிக்கும் சந்திரபாபுவுக்குமிடையே ஆன உறவு அதன் மூலம் அதிகமான குடிப்பழக்கம் போன்றவைகளைப் பற்றி பேசியே ஆகவேண்டும்.

ஆனால் இந்த திரைப்படத்தில் தமிழக சினிமாவில் அவர் கோலோச்சிய விஷயங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை. இரண்டு மொழிகளில் எடுக்கப்படவிருக்கிற படம் என்று அறிவித்திருந்தாலும், கடைசியில் தமிழில் வரும் போது டப்பிங் படமாகவே வெளிவந்திருக்கிறது. அதனால் தான் சிவாஜி பற்றி பேசும் போது பாசமலர் காட்சியை ரீ கிரியேட் செய்து மட்டுமே காட்டியிருக்கிறார்கள். நாகேஸ்வரராவை பற்றி பேசியிருக்கும் அளவிற்கு என்.டி.ராமாராவைப் பற்றி பேசவில்லை. கடைசியாய் சங்கரய்யா என்பவரை தேடிப் போனார் என்று கதை ஆரம்பிக்கும் போது நான் ஒருவேளை சந்திரபாபுவைத்தான் அப்படி மாற்றி வைத்திருக்கிறார்களோ என்று கூட நினைத்தேன். ஒரு வேளை சந்திரபாபுவுக்கும் சாவித்ரிக்குமான உறவு குறித்து காட்டினால் சாவித்திரியின் மீதுள்ள புனித பிம்பம் குறைந்துவிடும் என்கிற பயம் காரணமாய்க் கூட இயக்குனர் அதை தொடாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதெல்லாம் சின்னஞ்சிறிய குறைகளாகவே எனக்கு தெரிகிறது. ஏனென்றால் ஒரு கட்டத்திற்கு பிறகு படம் பார்க்கும் பார்வையாளர்கள் சாவித்திரியின் வாழ்க்கையோடு ஒன்ற ஆரம்பித்துவிடுகிறார்கள் என்பதை திரையரங்கில் கேட்கும் “உச்” கொட்டும் சத்தமும், மிகுந்த அமைதியுமே சாட்சி.

தரமான படங்கள் மலையாளத்தில் வருவதும், அவை கமர்ஷியல் வெற்றி பெறுவது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால் மசாலா படங்களுக்கு பெயர் போன தெலுங்கு சினிமா உலகத்திலிருந்து தொடர்ந்து எவடே சுப்ரமணியம், அர்ஜுன் ரெட்டி, மஹாநடி போன்ற படங்கள் வெளிவந்து கமர்ஷியல் வெற்றி பெறுவது மகிழ்ச்சியான விஷயம்.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் இந்த படம் தமிழில் வெற்றியா என்று கேட்டீர்களானால் நிச்சயம் டப்பிங் பட பட்ஜெட்டுக்கு வெற்றியே. ஆனாலும் சிறு ஊர்களில் நிறைய அரங்குகளில் இரண்டாவது நாளிலேயே படம் தூக்கப்பட்டுவிட்டதாய் தகவல். இரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன வார இருட்டு அறையில் முரட்டுக் குத்துக்கு நடுவில், மிக சொற்பமான திரையரங்குகளே கிடைத்திருக்க, பெரு நகரங்களில் உள்ள திரையரங்கள், மற்றும் மல்ட்டிப்ளெக்ஸுகள் திங்கள் கிழமை கூட இரவு காட்சிக்கு 80 சதவிகிதம் பார்வையாளர்களை கொண்டு வந்திருக்கிறது.  இளைஞர்கள் தங்களது தாயை அழைத்துக் கொண்டு திரையரங்க்குக்கு வந்ததை கண் கூடாய் பார்க்க முடிந்தது. படம் முடிந்து பல பெண்கள் கண்களை துடைத்துக் கொண்டு போனதை பார்த்த போது சாவித்திரி அவர்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். சமயங்களில் உண்மையை சொல்லாமல் இருப்பது கூடநல்லதுதான் போல.



Post a Comment

No comments: