Thottal Thodarum

Oct 21, 2016

கொத்து பரோட்டா -2.0-4

கொத்து பரோட்டா 2.0-4
நவராத்திரி கொலு என்பது நம்ம வீட்டு பெண்களுக்கு சுவாரஸ்யமான விஷயமானாலும், என் போன்ற பெரும்பாலான ஆண்களுக்கு கொஞ்சம் திகிலான விஷயம்தான்.  கொலுவுக்கான இடம் ஒதுக்குவதில் ஆரம்பித்து, கொலு ஸ்டாண்டை நட்டு போல்ட் மாட்டி நிறுத்துவது என்பது என் இன்ஜினியரிங் படிப்புக்கான வருடாந்திர சவால். கொலு பொம்மைகளை பரணிலிருந்து இறக்கி அதன் தூசி துடைத்து எடுத்துக் கொடுத்து, தூசி அலர்ஜியாகி, வேர்த்து வழிந்து வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் ஆனால் இத்தனைக்கும் நடுவே சாயங்காலமானால்  வீட்டிற்கு வருகிற பெண்களும் நம் வீட்டு பெண்களின் அலங்கார அணிவகுப்பும், வயசுப் பையன்கள் தங்கள் கேர்ள் ப்ரெண்டுகளை சும்மா கொலுக்கு கூப்பிட்டேன் என்று அழைத்து வருவதும், வெற்றிலை பாக்கு வாங்கிய படியே ஊர் கதையை மென்று துப்பிப் போகும் பேரிளம் பெண்கள், எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட குடும்ப பாடல் போல ஆயர் பாடி மாளிகையையோ,, கண்ணன் வருவான் கதை சொல்லுவான் பாடலை பாடும் ஹெரிடேஜ் பெண்மணிகள் . புதிதாய் பட்டுப் பாவாடை கட்டும் சுட்டி பெண் குழந்தைகள் நாநாவித சுண்டல்கள், விதவிதமாய் கொடுக்கப்படும் கிப்ட் அயிட்டங்களும் சுவாரஸ்யம்தான். என்ன திரும்ப எல்லாவற்றையும் எடுத்து வைக்க வேண்டுமென்று நினைக்கும் போது ஸ்பைனில் லேசாய் விதிர்த்து இப்பவே ஓடுகிறது. ஹேப்பி நவராத்திரி.
 One Indian Girl
ஆங்கிலத்தில் எழுதும் இந்தியா எழுத்தாளர்களின் பாட்ஷா என்றால் அது சேத்தன் பகத்  தான். காரணம் ஆங்கில நாவல்கள் என்றால் பாமரர்களுக்கு கிடையாது என்ற எண்ணத்தை மாற்றி, காமன்மேன் ஆங்கிலத்தில் படு சுவாரஸ்யமான நடையில் , டெம்ப்லேட்டான கதைகளன், கேரக்டர்கள் என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், விற்பனையில் ஒன்றும் குறைவில்லை. அமேசான் ப்ரீபுக்கிங்கில் ரெண்டே மணி நேரத்தில் 70 ஆயிரம் காப்பி விற்றிருக்கிறது. நல்லா விக்குற புக்கை எழுதுறவங்களை இலக்கியவாதிகள் எழுத்தாளராய் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தான். இவரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளாத இலக்கியவாதிகள் அதிகம் பேர்.

சரி புத்தகத்துக்கு வருவோம். ராதிகா மிடில் க்ளாஸ் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த  இரண்டு பெண்களில் கடைக்குட்டி.. அக்காள் அழகி, பெரிதாய் படிப்பில் நாட்டமில்லாதவள், சீக்கிரமே குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவள். ஆனால் ராதிகாவோ, அவ்வளவாக அழகில்லாதவள், படிப்பில் ஆர்வமுடையவள்,  படிப்பு அவளை நியூயார்க் நகரத்தில் பேங்கிங் வேலையில் உட்கார வைக்கிறது. டிபிக்கல் இந்திய பஞ்சாபிப் பெண்ணான அவளுக்கும் அங்கே இருக்கும் வங்காள இளைஞனுக்குமிடையே காதல், லிவ் இன், ப்ரேகப், ஹாங்காங்கில் ஒரு முதிர்ந்த காதல், காமம், ப்ரேகப், இந்த கதை இங்கே இந்தியாவில் அவளது கல்யாண கொண்ட்டாட்டத்தில் ஆரம்பிக்கிறது. முன்னாள் காதலர்கள் இருவரும் நாங்க அன்னைக்கு செஞ்சது தப்புத்தான்.. கல்யானத்த நிறுத்திட்டு என்னோட வந்திருன்னு தயாரா இருக்க, இவ என்ன பண்றாங்கிறதுதான் கதை. சேத்தன் பகத் ஒரு ஆங்கில சுஜாதா. எதையும் சுவாரஸ்யமாய் சொல்வதில் விற்பனன். சுமாரான பெண், அல்லது ஆண், அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பெண்/ஆண், சந்தப்பங்கள், அதன் சார்ந்த வெற்றிகள், இதன் இடையில் ஒரு ஸ்மூச்சிங், கிஸ்ஸிங், அண்ட் ப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது இவரது பார்முலா. இதில் எல்லாவற்றையும் தாண்டியிருப்பதால் அவரது டெம்ப்ளேட்டிலிருந்து வெளியேறிவிட்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும் அவரின் ஹிட் பார்முலா இதிலும். பெண்ணியம் பற்றிய இவரது விளக்கங்கள் நிச்சயம் விமர்சனங்களுக்குள்ளாக்கப்படும். சினிமாவில் இவரது கதைகள் ஹிட்டடிக்க ஆரம்பித்த்திலிருந்து சினிவாவுக்கென்றே இவர் நாவல் எழுத ஆரம்பித்துவிட்டார்அதில் இதுவும் அடக்கம். பட். எல்லாரும் படிச்சிட்டு என்ன இதெல்லாம் எழுத்தா? என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தாலும், புக்க எடுத்தா கீழ வைக்க முடியாத விறுவிறு, நடையில் சுவாரஸ்ய நாவல் தான்  ஓன் இண்டியன் கேர்ள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை-சூப்பர் பிரியாணி
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி பிரியாணின்னா அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்தது போக, இன்னைக்கு ரோட்டுக்கு நாலு பிரியாணி கடை இருக்குது. அப்படி சைதாப்பேட்டையில கிட்டதட்ட 25 வருஷத்துக்கு மேல ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் கடைசூப்பர் பிரியாணி”. கோடம்பாக்கம் ரோட்டில் எம்.ஜி.ஆர். படம் போட்ட கடைன்னா யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. மட்டன் , சிக்கன் பிரியாணி, முட்டை மசாலா, சாப்ஸ், சிக்கன் சாப்ஸ்னு அசத்தலான சைட்டிஸும் உண்டு. பாஸ்மதி முஸ்லிம் பிரியாணிதான்னாலும் இவங்களோட டேஸ்ட் வெரி ஹோம்லி, காரணம் நிஜமாவே அவங்க வீட்டுலேர்ந்து செய்து எடுத்துட்டு வர்றதுதான். அதிகம் எண்ணையில்லாம, சாப்பிட்ட அப்புறம் நெஞ்சக்கரிக்காம இருக்குற மசாலா, நன்கு வெந்த பீஸுகள் என மினிமம் கேரண்டி பிரியாணி. முதல்ல இவங்க சின்ன கடையாத்தான் வச்சிருந்தாங்க. இப்போ பக்கத்தில ஒரு ஏசி உணவகமா மாத்தி வச்சிருக்காங்க.. ஸோ.. முன்ன மாதிரி வேர்ந்து வழிஞ்சு சாப்பிட வேணாம். யூ கேன் கிவ் ட்ரை. https://www.youtube.com/watch?v=PQsCYG5hYgI
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
M.S.Dhoni – Untold Story
இந்திய அளவிலான மாஸ் ஹீரோ இல்லை, நம்மூர்  பெருங்கொண்ட ஆட்களும் இல்லை. ஆனால் அரங்குகள் பொடிசுகள் முதல் பெருசுகள் வரை நிரம்பி வழிகிறது. தோனி என்கிற பெயருக்கான காந்தம். தோனி எனும் யூத் எழுச்சி நாயகனின் வாழ்க்கையில் சொல்லப்படாத கதை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்ஆனால் அவர் பிறந்ததிலிருந்து உலகக் கோப்பை வெற்றி பெற்றது வரை எல்லாமே கிட்டத்தட்ட தோனி/ கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த ஒன்றுதான். இதில் சொல்லப்படாத ஒன்று என்றால் அவரின் முதல் காதல், அக்காதலியின் மரணம் போன்ற விஷயங்கள். நிஜ வாழ்க்கையில் ராஞ்சி போன்ற சிற்றூரிலிருந்து ஒரு மிடில் க்ளாஸ் இளைஞன் கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவதற்கு அவரது அபாரமான ஆட்டம் மட்டுமே காரணமாய் காட்டப்பட்டிருப்பதும், டிக்கெட் கலெக்டராய் தன் திறமை வீணாகிறதே என்று ரிஸ்க் எடுக்க முடிவெடுத்து, ஜெயித்தது எல்லாம் ஓகே தான். ஆனால் அதில் எந்த விதமான போராட்டமும் இல்லாத வாழ்க்கை தான் சொல்லப் பட்டிருக்கிறது. தோனியின் கேப்டன்ஸியை பற்றியோ, அவரது நிஜ வாழ்வில் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகள் தொடர்பு பற்றியோ, பிசிசிஐ, லோக்கல் டீம் செலக்ஷன், கங்கூலியின் ஆதரவு, உள் பாலிட்டிக்ஸ், ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ், என தோனியின் வாழ்க்கையில் சொல்லப்படாத, வெளியிடப்படாத  சுவாரஸ்ய கதைகள் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு மூன்று மணி.. அசோகர் மரம் நட்டார்.. அதற்கு தண்ணி ஊற்றினார் என்பது போல ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகம் லெவலிலேயே இருப்பது அசுவாரசியம். சுவாரஸ்யம் என்றால் டோனிக்கு ஹெலிக்காப்டர் ஷாட் அடிக்க கற்றுக் கொடுக்கும் நண்பர், அதன் பின்னணி, அவரின் காதல் எபிசோட். தற்போதைய மனைவியை காதலித்த எபிசோட், ஆங்காங்கே வரும் ஷார்ப் வசனங்கள், சுஷாந்த்சிங்கின் நடிப்பு போன்றவை மட்டுமே. மற்றபடி மூன்று மணி நேர சிங்கிள் மேன் துதி பாடி கல்லா கட்டும் முயற்சியே.. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்.
வித்யாசமான விஷயங்களை போரடிக்கும் அடிக்காது என்பதைத் தாண்டி முயற்சி செய்ய முடிகிற இடம் குறும்பட உலகம். பெரும்பாலான குறும்பட இயக்குனர்கள் முயற்சிக்காத விஷயம். இதில் அரவிந்த் குழு கொஞ்சம் வித்யாசம் 12.எம் என்றொரு குறும்படத்திற்கு பிறகு அந்த அவரின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய குறும்படம் ஆதி. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து இளைமை தொலைக்காதவன் நான் எனும் ஆதியைப் பற்றிய கதை. ஏன் மகாபாரதத்தில் கிருஷ்ணணே நான் தான் என்கிறான். உண்மையா? இல்லையா? என்பது தான் கதை. இம்மாதிரி கதைகளில் இருக்கும் ஒர் சுவாரஸ்யம் முரண்கள் மட்டுமே. அதை விளக்க, விஷுவலாய் போக முடியாது.. ஏனென்றால் பட்ஜெட். எனவே பெரும்பாலானவர்கள் வசனத்தினாலேயே கதை நகர்த்தி விடுவார்கள். அதையேத்தான் இதிலும் செய்திருக்கிறார் அரவிந்த். பட். புத்திசாலித்தனமான வசனங்கள். அடிப்படை சுவராஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூரிஷான நடிப்பு. ஷாட்ஸ் எல்லாவற்றையும் மீறி சிங்கப்பூரில் இருக்கும் நான்கைந்து சினிமா ஆர்வர்வலர்களின் வெளிப்பாடு எனும் போது நல்லபடைப்பே..  எழுத்தாளர்  Jerome Bixby எழுதிய The Man From The Earth எனும் நாவலின் தழுவல் தான் இந்த குறும்படம்.  https://www.youtube.com/watch?v=lsIySSf6CKk
@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why was the guitar teacher arrested? 
For fingering A minor. 

குமுதம் 19-10/16

Post a Comment

1 comment:

Raj said...

அண்ணே இந்த குறும்படத்தை பத்தி ஏற்கனவே எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்