Thottal Thodarum

Apr 26, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 4

போன கட்டுரையில் நான் சந்தித்த தயாரிப்பாளரை கடனிலிருந்து காப்பாற்றியதைப் பற்றி எழுதியிருந்தேன். ஐ நல்லா கதை வுடுறே என்று ஒரு சாராரும், இன்னொரு சாரார்.. நீ தெய்வ லெவல் என்று பாராட்டியும் இருந்தார்கள். பாராட்டு எனக்கு தகுதியில்லாத ஒன்றுதான். ஏனென்றால் அந்த தயாரிப்பாளரை நான் வேண்டாம் என்று சொன்னதும், அவரை காப்பாற்ற மட்டுமல்ல. என்னை காப்பாற்றிக் கொள்ளவும் கூட. தவறான ப்ராஜெக்டில் மாட்டிக் கொண்டு வெளியே வரவும் முடியாமல், இருக்கவும் முடியாமல் போராடுவதற்கு பதில் எனக்குதேவையான பட்ஜெட்டில் படமெடுக்க ஆள் தேடுவதுதான் புத்திசாலித்தனம். சுயநலமும் கூட.. வட்டியிலிருந்து காப்பாற்றியது எல்லாம் சுயநலத்தில் ஒர் பொதுநலம் தான்.

ஆனால் பெரும்பாலான புது தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள் படம் கிடைத்தால் போதுமென்ற எண்ணத்தில் எல்லாவற்றிக்கும் தலையாட்டி விட்டு பின்பு அவஸ்தைபடுவது மிக சாதாரணமாய் நடக்கும் விஷயம்.  சமீபத்தில் ஒரு பட விழாவிற்கு போயிருந்தேன். படத்தின் தயாரிப்பாளர் சுய தொழில் செய்பவர். அவரது நண்பர் பல வருடங்களாய் பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருப்பவர். நண்பனின் போராட்டத்தைப் பார்த்து சரி நான் உனக்காக படம் தயாரிக்கிறேன். என்று களமிறங்கியிருக்கிறார். நண்பன் சந்தோஷத்தில் திக்குமுக்காடி “மச்சான் நாம சேர்ந்து கலக்குறோம்” என்று கட்டியணைத்து கொண்டாட்டமாய் பூஜை போட்டார்கள். தயாரிப்பு நண்பர் பெரும் பணக்காரர் எல்லாம் கிடையாது. நல்ல வியாபாரம். ஓரளவுக்கு சொத்து, கையில் காசாய் பெரிய தொகையெல்லாம் கிடையாது. ஆனால் அவரால் குறைந்தது ரெண்டு கோடி புரட்ட கூடியவர் தான்.
படம் ஆரம்பித்தாகிவிட்டது. இயக்குன நண்பருக்கு அடிப்படை வேலைகளில் ஏகப்பட்ட குழப்பம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஏகப்பட்ட தடாலடி குழப்பங்கள். ஒளிப்பதிவாளரை வைத்து கொண்டு ஏதோ சமாளித்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்த ஒளிப்பதிவாளர், மெல்ல டாமினேட் செய்ய ஆரம்பித்து, கடைசியில் ஒளிப்பதிவாளர் இயக்கும் படமாய் மாறியது. இதற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். அதனால் படப்பிடிப்பு நிறுத்தம் என பல பிரச்சனைகளை படத்திற்கு வந்து, பட்ஜெட் எகிறிக் கொண்டேயிருந்தது.

இதன் நடுவில் ஏன் பட்ஜெட் ஏகிறியது என்று கேட்டதால் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் மனவருத்தம். பணம் இருக்கு என்பதற்காக கலையை பற்றி ஒன்றும் தெரியாத நீ எப்படி என்னை கேள்வி கேட்கலாமென சண்டை?. நான் பணம் போடலைன்னா நீ எப்படி உன் கலையை காண்பிக்க முடியுமென்று நியாயமான கேள்வியை அவர் முன்வைக்க, சண்டை தீர்ந்த பாடில்லை. என்னைக்கு இருந்தாலும் பணத்தை போட்டாச்சு இனி பாதில விட்டுட்டு போகுற அளவுக்கு காசில்லாதவர் என்பதை நன்கு தெரிந்தவர் இயக்குனர். நாட்கள் கடந்தது. தயாரிப்பாளருக்கு வேறு வழியில்லை. கொஞ்சம் இறங்கி வந்தார். கடன் வாங்கினார். இருக்கும் வீட்டை அடகு வைத்தார். இரண்டு கோடிக்கு முடித்துக் கொடுப்ப்தாய் சொன்ன படத்தில் பட்ஜெட் படம் முழுவதும் காப்பி எடுப்பதற்கு முன்பே சுமார் மூணே முக்கால் கோடிக்கு ஆகியிருக்கிறது. கையிலிருந்த இரண்டுகோடியை தவிர மீதியெல்லாம் தயாரிப்பாளரின் கடன்.  அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டில்தான் அந்த தயாரிப்பாளரை சந்தித்தேன். இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆளுக்கொரு திசையில் பேட்டியெல்லாம் கொடுத்துவிட்டு, தனித்தனியே போனார்கள்.

ஆடியோ விழாவிற்கு மட்டுமே சுமார் மூன்று லட்சம் செலவு. விளம்பரம் எல்லாம் சேர்த்து. இன்னமும் டி.ஐ மற்றும் இன்ன பிறவுக்கு செட்டில் செய்ய வேண்டியிருக்கிற நிலையில், எனக்கு மட்டுமே பிரத்யோகமாய் படத்தை யாருக்கும் தெரியாமல் எடிட் சூட்டில் காட்டினார். வியாபார சாத்தியங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை பார்த்து சொல்லும் படி..

படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் புதியவர்கள். டெக்னீஷியன்கள் புதியவர்கள். படத்திற்கு செலவு செய்த தொகைக்கும் படத்தில் தெரியும் வறுமையான விஷுவல்களுக்கும் சம்பந்தமேயில்லை. அவ்வளவு வீண் செலவு. படம் நெடுக தொடர்பாய் காட்சிகள் இல்லை. ஒளிப்பதிவு மட்டுமே ஓரளவுக்கு சுமார். பாடல்கள் எல்லாம் திராபை. படம் முடிந்து வெளியே வந்தவுடன் தயாரிப்பாளர் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். என்ன சொல்லப் போகிறேன் என்று. நான் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாய் இருந்தேன்.

“சாட்டிலைட், ஆடியோ, டிஜிட்டல் ரைட்ஸ் ஏதாச்சும்  வித்து அட்வான்ஸ் வாங்க முடியுமா?”

“சான்சே இல்லைங்க. இன்னைக்கு எல்லாமே படம் வெளியான பின் மட்டுமே இந்த வியாபாரம் எல்லாம் நடக்குது. ஆடியோ தவிர. ஆடியோவுக்கு வியாபாரமெல்லாம் இல்லை. சும்மா கண்டெண்ட அவங்க கிட்ட கொடுத்துட்டு, ரெவின்யூ ஷேர் தான்.” என்றேன்.

“அய்யோ.. ஆடியோ ரைட்ஸ் மட்டுமே குறைஞ்ச பட்சம் 30 லட்சத்துக்கு போகும்னு சொன்னாங்களே… மீயூசிக்கு மட்டுமே இது வரைக்கும் நாப்பது லட்சம் செலவு செய்திருக்கிறேன்.” என்றார் அப்பாவியாய்.

“சார் சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த படத்தை பொறுத்த வரை. உங்களை நல்லா ஏமாத்தியிருக்காங்க. இதுலேர்ந்து தப்பிக்கணும்னா.. ஒண்ணு நீங்க எடுத்த வரைக்கும் போதும்னு ஏதோ ஒரு விளம்பரம் பண்ணி, கொஞ்சமா செலவு செய்து ஒரு நாளு தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டு, ஹிந்தி, டப்பிங், ஆடியோ ஷேர்ல,னு வித்துட்டு கடனை அடைக்கிற வழியப் பார்த்துட்டு போகணும். அதுக்கே இன்னமும் ஒரு ஐம்பது லட்சம் வேணும். இல்லை. போனது எல்லாம் போகட்டும்னு அப்படியே ட்ராப் பண்ணிட்டு, பட்ட கடனை அடைக்க ஊருக்கு போயிருங்க. வியாபாரத்துல கவனம் செலுத்துங்க. இதையெல்லாம் மீறி  படம் காவியம். தமிழ் சினிமாவையே புரட்டி போட்டிரும்னு எல்லாம் சொன்னாங்கன்னா உங்க இஷ்டம்.” என்றேன்.


அவர் முகம் முழுவதும் யோசனையாய் இருந்தது.

Post a Comment

No comments: