Thottal Thodarum

Jul 6, 2018

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -14


சினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று.

டிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இதுல ஒரு படமெடுத்து ப்ரூவ் பண்ணக்கூடாது? என்றதுதான்.

நியாயமான கேள்வியும் கூட. மனிதர் உடனடியாய் தயாராக ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் பிலிமில் தான் ப்ரொஜெக்‌ஷன் ஓடிக் கொண்டிருந்தது. டிஜிட்டலில் எடுத்த படத்தை மீண்டும் ரிவர்ஸ் பராசசிங் செய்து பிலிமுக்கு மாற்றி அதை பிரிண்ட் எடுத்துத்தான் ஓட்ட வேண்டும். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், பதினாலு ரீல் படத்துக்கு பதினாலு ரீல் நெகட்டிவ் மட்டுமே போதும்.

மிகச் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று முற்றிலும் புதியவர்களை கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் எனக்கு வேறொரு ப்ராஜெக்ட் விஷயமாய் அவரிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவரிடம் தயாரிப்பு என்ற போதே.. சார்.. டெக்னாலஜி வேற தயாரிப்புங்றது வேற. மத்தவங்க சொல்றாங்களேனு ப்ரடக்‌ஷன்ல இறங்காதீங்க. என்றேன். “என்னங்க சங்கர்.. நீங்களே. .இப்படி டிஸ்கரேஜ் பண்றீங்க?”என்று கடிந்தார்.

சில மாதங்களுக்கு பின் அவரை மீண்டும் சந்திக்க சென்றிருந்தேன். மனிதர் கொண்டாட்டமாய் இருந்தார். புதிது புதிதாய், இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் என பல பேரை அறிமுகப்படுத்தினார்.  அனைவரும் புதியவர்கள். கதையைப் பற்றிக் கேட்டேன். மிகவும் வீக்கான ரெகுலர் காதல் கதை. எல்லாரையும் அனுப்பி விட்டு, “சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. புதியவர்களை வைத்து படம் ஆர்மபிக்கிறது நல்ல விஷயம்தான். பட் எனக்கென்னவோ உங்களுக்கு இது பாடமா ஆயிரும்னு தோணுது. என்ன தான் நீங்க டெக்னாலஜியில ஸ்ட்ராங்குனாலும், படம் எடுத்துட்டாலும், மார்கெடிங், டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாம் இம்மாதிரியான படங்களுக்கு இல்லவே இல்லை. ஸோ.. மினிமம் கேரண்டி கண்டெண்ட் இல்லாம இறங்காதீங்க” என்றேன்.

நண்பருக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்க பாஸிட்டிவான மனிதர்னு நினைச்சேன். இனிமே இந்த பட விஷயமா நாம பேச வேணாம் என்று கிளம்பிவிட்டார். எனக்கு அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றே புரியவில்லை. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் சந்திக்கவேயில்லை. நடுநடுவே வேறொரு நண்பர்கள் அவரைப் பற்றி பேச விழையும் போதுகூட நான் தடுத்துவிடுவேன்.
ஒரு நாள் ப்ரசாத் லேபில் ஒரு ப்ரிவீயூவுக்காக சென்றிருந்த போது, கார் பார்கிங்கில் அவரை சந்தித்தேன். படத்தைப் பற்றி ஏதும் பேசவேயில்லை. அவரும் நான் எதுவும் கேட்காததை நினைத்து பொதுவாய் பேச முயன்று கொண்டிருந்தார். கிளம்ப எத்தனித்த போது, கைபிடித்து இழுத்து” நீங்க சொன்னது தான் சார் சரி” என்றார். குரல் தழுதழுத்தது.

“படம் ஆரம்பிக்கும் போது என்னவோ பட்ஜெட்ல ஆர்மபிக்கிறோம்னு ஆர்மபிச்சோம். மேனேஜர்ல ஆர்மபிச்சு, வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வரைக்கும் ஏமாத்துறாங்க. பல சமயத்துல ஏண்டா இதுல கால வச்சோம்னு வருத்தப்பட்டு வெளியேறலாம்னு நினைச்ச போது கழுத்துவரைக்கும் புதைஞ்சிட்டேன். ஒரு கோடில எடுக்க நினைச்ச படம். இன்னைக்கு சின்ன பட்ஜெட்டுனு சொல்லி, ரெண்டரைக்கு வந்து நிக்குது. எல்லாம் புது ஆர்டிஸ்ட். டெக்னீஷியன்கள். வியாபாரம்னு ஒரு விஷயத்துக்கு கூட ஆளு வரலை. வீட்டை அடமானம் வச்சிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமா பாருங்க. என்றார். நான் ஏற்கனவே சொன்னேனிலலியா என்று சொல்லி அவரின் மனதை நோகடிக்க விரும்பவில்லை.  படம் பார்ப்பதாய் சொன்னேன். பார்த்தேன். மிகச் சாதாரணமான படம். டிஜிட்டல் டூ பிலிம் கன்வர்ஷனில் வேறு பல பிரச்சனைகள். டெக்னீஷியன்கள் இவரின் ஆர்வத்தை வைத்து டெஸ்ட் செய்திருக்கிறார்கள். பல சொதப்பல்கள். 


“நான் இப்ப சொல்றதையும் தப்பா எடுத்துக்க கூடாது. இதுல வியாபாரம்னு ஆக ஏதுமிருக்கிறதா எனக்கு தெரியலை. அப்படி ஆகணும்னா அதுக்காக மார்கெட்டிங் செய்து, விளம்பரம் கொடுக்கிற செலவுக்குத்தான் பணம் வர வாய்ப்பு. இப்போதைக்கு வீட்டை மீட்கணும். படத்தை அப்படியே விடுங்க. வேலைக்கு போங்க.. வீட்டை மீட்டுட்டு அப்புறம் பல விஷயங்களை யோசிப்போம் என்றேன். இறுகிய முகத்தோடு ஏதும் பேசாமல் போனார். சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து கால். அவர் தான். சந்தோஷமானேன்.  பின்பு பல் ஆண்டுகள் தொடபில்லை. என் முதல் படம் வெளியான போது மீண்டும் அவரிடமிருந்து கால். சென்னை நம்பர். “மொத்தமா இந்தியாவுக்கே வந்துட்டேன். புதுசா படம் ஆரம்பிக்கப் போறேன். வாங்க பேசுவோம்.” என்றார். அந்தப்படமும் இது வரை ரிலீஸாகவேயில்லை. 

Post a Comment

No comments: