Thottal Thodarum

Aug 15, 2012

அட்டக்கத்தி

இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் காலத்தில் தினமும் பல்லாவரம் வரைக்கும் மின்சார ரயில் பயணம். அங்கிருந்து பம்மல் வரை பஸ் என ஃபீக் அவரில்  பயணம் செய்து படித்த காலத்தில் பஸ்ஸிலிருக்கும் கூட்டமோ, காத்திருப்போ, எதுவுமே பெரிய விஷயமாய் தெரியாது. ஏனென்றால் 7.50க்கு வரும் பவுசியாவுக்காகவோ, 8மணி ஸ்டெல்லாவுக்காகவோ, 8.05க்கு வரும் கருப்பு ஜெயந்திக்காகவோ, முத்தமிழ் நகரில் ப்ராக்டீஸ் செய்யும், இளம் பெண் டாக்டருக்காகவோ, காத்திருந்து அவர்களின் கடைக்கண் பார்வைக்காகவும், லேசான சிரிப்புக்காகவும்,சின்ன ஹாய்க்காகவும் எத்தனை விதமான சில்லு வேலைகளை செய்திருப்போம் என்று இப்போது நினைக்கும் போது சிரிப்பாய் இருக்கிறது. பஸ்களில், ரயிலில் யாராவது புட்போர்ட் அடித்துக் கொண்டோ, ஆதீதமாய் சிரித்துக் கொண்டோ வரும் இளைஞர்களைப் பார்க்கும் போது, உடன் அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்து கொண்டு வருகிறார்கள் என்று அவர்களைப் பார்க்கத் தோன்றும். காதல் என்ற ஒன்றை, அந்த வயதில் வருவது இனக்கவர்ச்சி, அது இது என்று என்னதான் உட்டாலக்கடி அடித்தாலும், அந்த ஒரு சிரிப்புக்கும், பார்வைக்கும் இருக்கும் பவரை அனுபவிக்காமல் க்ராஸ் செய்திருக்கவே முடியாது. அந்த சமயங்களில் காதலிக்கும் பெண்கள் வேண்டுமானால் மாறிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் காதல் மாறவே மாறாது. இதைத்தான் படமாய் கொடுத்திருக்கிறார்கள்.


தினேஷ் சென்னை மாநகரின் அவுட்ஸ்கர்டில் வசித்து வரும் மிகச் சாதாரணன். 12 வதில் தோல்வி அடைந்து டுடோரியல் காலேஜில் படித்து கொண்டிருந்தாலும்,  காலேஜில் பி.ஏ.ஹிஸ்ட்ரி படிப்பதாய் கெத்துக் காட்டிக் கொண்டலைபவன். அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் வாழ்க்கையில் இருக்கும் ஒரே குறிக்கோள் எப்படியாவது ஒரு பிகரை உசார் செய்து லவ் பண்ணனும் என்பது மட்டுமே.  அதற்கான முயற்சியும், அதில் ஏற்படும் தோல்விகளும், அத்தோல்விகளால் படும் அவஸ்தைகளும் தான் அட்டக்கத்தி.  
அட்டக்கத்தி என்பதன் அர்த்தம் சும்மா “உதார்” விட்டுக் கொண்டு, பிஸ்து காட்டிக் கொண்டு அலைகிறவனை டிபிக்கல் நார்த் மெட்ராஸ் ஸ்லாங்கில் அப்படித்தான் சொல்வார்கள்.  அட்டகத்தியாய் வரும் தினேஷின் மீதுதான் மொத்த படமும். வீட்டிலிருந்து கிளம்பும் போது இருக்கும் பரபரப்பு, பஸ்ஸ்டாண்டில் ஸ்டைலாய் ட்ரெஸ் செய்து கொண்டு, பஸ்ஸில் வரும் பெண்களின் பார்வைக்காக, கையில் உள்ள புக்கைக் கொடுத்துவிட்டு, புட்போர்ட் அடிக்கும் போதாகட்டும், ஏரியாவிட்டு ஏரியா போய் அடி வாங்கிக் கொண்டு அழுமிடமாகட்டும், இந்தக் காதலே வேண்டாம் என்று வயது ஆக, ஆக காலேஜில் சேர்ந்து “ரூட்டு தலையாகி” அடிதடி ஹீரோயிசமாய் அலையும் போதாகட்டும், கராத்தே மாஸ்டரிடம் அடி வாங்கிவிட்டு, வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வரும் போது, மச்சான் அமுதாடா என்று சொன்னவுடன் சட்டென திரும்பி, பனியனால் முகம் துடைத்துக் கொண்டு சிரிக்குமிடத்திலாகட்டும், தினேஷ் உணர்ந்து செய்திருக்கிறார்.

நந்திதா தான் கதாநாயகி. டிபிக்கல் வடசென்னை ஸ்லாங்கில் பேசிக் கொண்டு, லேசாய் கண்ஜாடைக் காட்டி, அதை சம்மதமாய் எடுத்துக் கொண்டு உடன் பின்னால் வரும் தினாவை பார்த்ததும் பயந்து அண்ணா எனும் போதும், பின்பு காலேஜில் அதே தினாவை ரவுடியாய், பார்த்துவிட்டு, பேச பயந்து யோசித்து பேசி, நெருக்கமாகி பழகும் போது நம் வாழ்வில் க்ராஸ் செய்த பெண்ணை ஞாபகப்படுத்துகிறார். மிக இயல்பான க்யூட் நடிப்பு. பார்ப்பதற்கும் நம் பக்கத்துவீட்டு பெண் போல் இருக்கிறார். 
ஹீரோவின் வீடு, அந்த ஏரியா, பஸ்ஸின் கூட்டத்தோடு நம்மையும் பயணிக்க வைக்கும் அளவிற்கு பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு. 2000களில் ஆரம்பித்து நடக்கும் கதை என்பதற்காக உபயோப்படுத்தியிருக்கும் டோன்கள் சுவாரஸ்யம்.  லியோவின் எடிட்டிங் கிரிஸ்ப். படத்திற்கு இன்னொரு பெரிய பலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண். “ஆசை ஒரு புல்வெளி” ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருக்கும் பாடல். “ஆடிப் போனா ஆவணி” சரியான கானா. முக்கியமாய் குறிப்பிட வேண்டியது பின்னணியிசைதான். பெரும்பாலும் கிடாரிலேயே அமைத்திருப்பது படு சுவாரஸ்யம்.ஒரு விதமான ஹெப் ஃபீலை கொடுக்கிறது. என்னுடய பேவரிட் “ஆசை ஒரு புல்வெளி” ஹாண்டிங்.
எழுதி இயக்கியிருப்பவர் பா.ரஞ்சித். கதை என்று பார்த்தால் பெரியதாய் ஏதுமில்லைதான். ஆனால் சொன்ன விதத்தில் சென்னையில் அவுட்ஸ்கர்ட் நார்த் மெட்ராஸ் ஏரியாவையும், அவர்களின் வாழ்க்கையையும், இளைஞர்களின் ஆட்டிட்டூடையும், மிக அழகாய் படமாக்கியிருக்கிறார். முக்கியமாய் தினேஷ் சைட்டடிக்கும் பெண்கள் படு இயல்பு. அவ்வளவு அழகாய் பொறுக்கியெடுத்திருக்கிறார். ட்வின்ஸ் போல ஜோடியாய் வரும் இரண்டு பெண்கள். நந்திதா, உடன் வரும் பெண், பக்கத்து வீட்டு பெண் என்று எல்லோருமே ஏரியா ஜிகாரபி பாடி லேங்குவேஜோடு, மிகச் சரியாய் வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் பக்கத்துவீட்டு பெண் காலையில் நைட்டியை லுங்கிப் போல தூக்கிக் கட்டிக் கொண்டு, பின்பக்கமாய் இடது கையை வைத்துக் கொண்டு, மிக அசால்ட்டாய் பெருக்கும் பாடிலேங்ஜ், சாவு வீட்டிற்கு முன் நின்று ஆடுவது, ஆடிக்கொண்டே கண்ணில் பேப்பர் எடுப்பது, ஆடி ஜபர் காட்டுவது, அந்த ஆட்டத்தை வைத்து நூல் விடுவது, சாவு எடுத்தவுடன் எல்லாரும் உட்கார்ந்து கொண்டு கானா பாடுவது என்று ஏரியா நேட்டிவிட்டியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். காதல் காட்சிகளை வித்யாசமாய் வைக்கிறேன் என்று யோசிக்காமல் மிக இயல்பாய் அமைத்ததிலேயும், அவ்வயது இளைஞர்களின் கனவுகளை அழகாய் வெளிக் கொணர்ந்திருப்பது சுவாரஸ்யம். ரூட்டு தல மேட்டர் புன்னகையை வரவழைக்கும் விஷயம்.ஹீரோவின் அப்பா, அம்மா, தாத்தா, கேரக்டர்களில் கேஸ்டிங் மிக அருமை. குடித்துவிட்டு நான் யாரு தெரியுமா? என்று சாப்பிடாமல் இருக்கும் புருஷனை “எல்லாம் தெரியும் என்று தட்டெடுத்து ஊட்டிவிடும் அன்யோன்யத்தை வெளிப்படுத்தும் காட்சி படு இயல்பு.

மைனஸ் என்று பார்த்தால் பெரும்பாலான காட்சிகள் திரும்பத் திரும்ப பஸ், காதல், பின் தொடர்வது, அவர்களுக்கான அவஸ்தை, காத்திருப்புகள் என்பதைத் தாண்டி போகாது, ஆங்காங்கே லேசாய் தொய்வடையும் முதல் பாதி திரைக்கதையும் தான். ஆனால் அதையும் இரண்டாவது பாதிவரும் போது சரி செய்து விடுகிறார். ஆசை ஒரு புல்வெளி பாடலை இன்னும் அழகுப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாய் கலர்புல்லான காதலையே பார்த்து பழகிய நமக்கு, ஒரு ராவான இயல்பு மீறாத கனவுக் காட்சியோ, குத்துப்பாடல்களோ வைக்காமல் காதலை காதலிக்கும் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை இயல்பு மீறாத படமாய் வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள் ரஞ்சித்.
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

ஆர்வா said...

ட்ரெய்லரும், பாடல்களும் படத்தை பார்க்கத்தூண்டுகின்றன... சரியான விமர்சனம் தல.. ஆனா இந்தப்படம் ரீ ரிலீஸா?

Cable சங்கர் said...

ippoothan relese

karthikeyan.kg. said...

RE-RELEASe illa late release

கார்த்திக் சரவணன் said...

குடும்பத்துடன் பார்க்கலாமா?

வவ்வால் said...

கேபிள்ஜி,

சுதந்திர தின சிறப்பு விமர்சனமா, ரொம்ப வாறாமல் விமர்சனம் செய்து இருக்கிங்களே :-))

தியாகராய கல்லூரி, பச்சையப்பாஸ், நந்தனம் ஆர்ட்ஸ் இல் பசங்க பெரும்பாலும் இப்படித்தான் இருப்பாங்க,நியு காலேஜ் இதுல நடுவாந்திரமா கலாட்டா செய்யும்.

ஜன்னல் ஓரமா இருக்க பொண்னை அனேகமா யாராவது ஒருத்தங்க என் ஆளுன்னு புக் செய்து இருப்பாங்க, இத்தனைக்கும் அது யாரையும் பார்க்காது :-))

அதுக்கு ஒரு சண்டை எல்லாம் நடக்கும்.


இப்பக்கூட இப்படித்தான் இருக்காங்க இன்னும் மாறவேயில்லை.

வவ்வால் said...

கேபிள்ஜி,

அட மட்டுறுத்தல் காணோம், மீண்டும் மட்டுறுத்தல் இன்றி வந்ததற்கு , மிக்க நன்றி! சொந்திர தின வாழ்த்துக்கள்!

Sathish said...

பின்னணி இசை பல நேரங்களில் இரைச்சலாய் இருந்தது, குறிப்பாக கதாபாத்திரம் வசனம் பேசும்போது சத்தமான பின்னணி இசையால் பல வசனங்கள் புரியவில்லை - ஆனால் நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்கிறீர்கள் - ஒரு வேலை நான் பாத்த சாந்தி தியேட்டர் சவுண்ட் effect அப்டியோ ?

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்

தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

arul said...

Hi ji,

Please see my second thriller short film. Need your valuable comments.

http://www.youtube.com/watch?v=s-oNgEYFAJ8&feature=plcp

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்...

மலரின் நினைவுகள் said...

புதியவர்கள் பிரமாதப் படுத்துகிறார்கள் போல...
பாத்துடுவோம்...

Sivakumar said...

// பார்ப்பதற்கும் நம் பக்கத்துவீட்டு பெண் போல் இருக்கிறார். //

!!!!!!

Philosophy Prabhakaran said...

// லியோவின் எடிட்டிங் கிரிஸ்ப். //

நான் சொல்லல நாதஸ் ரொம்ப வெவரமான பையன்'னு...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல திரைபட்ட்ட்துக்கு நல்ல விமர்சனம்



நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Kalai Amuthan said...

என் மனைவியுடன் நேற்று இரவு தாம்பரம் வித்யாவில் படம் பார்த்தேன். என் மனைவியின் விமர்சனம். " கடைசி வரை போரடிக்கும் படமா? இல்ல போரடிக்காத படமானு தெரியவ இல்ல?

Cable சங்கர் said...

@amudhinee
நீங்க நல்லவரா கெட்டவராங்கிற மாதிரியில்லை இருக்கு. அவ்வ்வ்