பெருமான்
இந்தவாரத்தின் மற்றொரு சிறு முதலீட்டு டிஜிட்டல் படம். பெருமான் என்கிற ரஜினிகாந்த் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. பின்பு ரஜினிபெயரை எடுத்துவிட்டார்கள். ஆச்சரியங்கள் படத்தைப் போலவே இவர்களும் வழக்கமான ஒரு கதைக் களனை எடுக்காமல் இருந்ததற்காக பாராட்டப்பட வேண்டும்.
நான்கு நண்பர்கள். வேலைதேடிக் கொண்டிருக்கும் ஹீரோவுக்கு ரஜினியைப் போல ஆக வேண்டும் என்று ஆசை. அதாவது நடிகனாக வேண்டுமென்று அல்ல, அவரைப் போல புகழ் பெற்றவனாக்வும், வசதிபடைத்தவராகவும் இருக்க வேண்டுமென்று. ஒரு நெட்வொர்க் மூலமாய் வெளிநாட்டு பணம் சில பல கோடிகளை இங்கிருக்கும் என்.ஜிஓகளின் நெட்வொர்க் மூலமாய் மாற்றிக் கொடுத்ததன் மூலமாய் 21 கோடி ரூபாய் கமிஷனாய் கிடைக்கிறது. பணத்தை கொடுக்கும் கும்பல் அதை தடாலடியாய் செலவு செய்யாதே. மாட்டிக் கொள்வாய் என்றும் பணம் பல பிரச்சனைகளை கொடுக்குமென்று சொல்லி அனுப்புகிறது. பணம் வந்ததிலிருந்து பேங்கிலும் போட முடியாமல், செலவும் செய்ய முடியாமல், வீட்டிலேயே 21 கோடியை மறைத்து வைத்துக் கொண்டு, அல்லாடுகிறான். அது வரை இருந்த சந்தோஷம், காதல், எல்லாம் போய் தனியனாய் ஆகி, ஸ்ட்ரெஸின் உச்சத்திற்கு போகிறான். அதற்கு ஏற்றார்ப் போல அவனை ஃபாலோ செய்யும் ஆட்கள், போலீஸ் என்று தொடர் பிரச்சனைகள் வர, பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
கதாநாயகனாய் அர்ஜுன். நல்ல கட்டுடலுடன் ஸ்மார்ட்டாய் இருக்கிறார். சிலபல இடங்களில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். குறிப்பாய் இவரது குரல் செம. டாமினேட்டிங். முழு படமும் இவரின் கேரக்டர் மீது தான் என்பதை உணர்ந்திருக்கிறார்.அதை செயல்படுத்த தன்னாலான முயற்சியையும் கொடுத்திருப்பது சந்தோஷமாயிருக்கிறது. கதாநாயகி ஸ்ருதிக்கு பெரிதாய் ஏதும் வேலையில்லை. ஆரம்பக் காட்சிகளிலும், க்ளைமாக்ஸின் போது மட்டுமே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சில ஆங்கிள்களில் மிகச் சாதரணமாய் இருக்கிறார்.
கேனான் 5டியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஒளிப்பதிவு சி.ஜே.ராஜ்குமார். படத்தின் மூடை எந்தந்த விதத்தில் எல்லாம் உயர்த்திக் கொடுக்க முடியுமோ அத்துனை வகைகளிலும் உழைத்திருக்கிறார். குறிப்பாய் இவ்வகை கேமராக்களில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய கேமரா ஆங்கிள்களில் மிக சிறப்பாய் செயல்பட்டிருக்கிறார். படத்தின் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு இவரின் பங்கு அதிகம். பெரும்பாலான காட்சிகள் இண்டீரியரில் இருந்தாலும் அதை விதயாசமான கோணங்களாலும், லைட்டிங்கினாலும் சிறப்பானதாக்கி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றி பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. டைட்டில் "Lemon Tree" ஒரிஜினல் ட்ராக்கை அப்படியே உபயோகித்திருப்பதை தவிர ஏதும் சுவாரஸ்யமில்லை. பட எனக்கு அந்த அகுடியா பிடித்திருந்தது.
எழுதி இயக்கியவர் ராஜேஷ்கண்ணன். கொஞ்சம் வழக்கத்துக்கு மாறான களனை எடுத்துக் கொண்டவர் திரைக்கதையையும் கொஞ்சம் கவனித்திருந்தால் ஆச்சரியங்கள் போல ஆச்சர்யப்பட வைத்திருக்கும். பெரும்பாலான காட்சிகளில் ஒரே கேரக்டரின் மேல் பயணிக்கும் கதை என்பதால் ஹீரோவைச் சுற்றியே கதை நகரும் போது, கிட்டத்தட்ட பல காட்சிகளில் அவரின் மோனோ ஆக்டையே பார்க்க வேண்டியிருப்பதும், அவர் பயந்து நடுங்குவதைப் பார்த்துக் கொண்டுடிருப்பதைத் தவிர வேறெதிலும் காட்சிகள் நகராமல் இருப்பதும், அவனால் சண்டைப் போட முடியும் என்கிற போதும் கூட பயந்து ஓடிக் கொண்டிருப்பதும் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுக்கிறது. இம்மாதிரியான கதைகளை பரபர, விறு விறு திரைக்கதை மட்டுமே காப்பாற்றும் அது இதில் மிஸ்ஸிங். பாஸிட்டிவான விஷயமென்றால் பணம் வந்தவுடன் அவனின் வழக்கமான சந்தோஷம் மிஸ்சிங் ஆவதை உணரும் காட்சிகள், அதனால் கிடைக்கும் ஸ்ட்ரெஸ், வெளிநாட்டு பணத்தை லீகலாய் என்.ஜி.ஓக்கள் மூலம் ட்ரான்ஸ்பர் செய்யும் விஷயம், முதல் பாதியில் அவன் சந்தேகிக்கும் விஷயங்களுக்கான லீட்கள் போன்றவை. ரஜினியின் பெயரை வைத்து ஆரம்ப கவனம் ஈர்த்தவர்கள், அதற்கு பதிலாய் இன்னும் கொஞ்சம் கவனமாய் திரைக்கதையை செய்திருந்தால் கவனிக்கப்பட்டிருப்பார்கள்.
கேபிள் சங்கர்
Comments
பலருக்கும் தற்போது பாராட்டுக்கள் தொடர்கிறது . .
தொடரட்டும் . .
உங்கள் ப்ராஜெக்டை தொட்டதால்
தொடர்கிறதோ . . !?
cinema eppadi paarkkavendum enru
ungaludaya ovvaru vimarsanamum arivuruthugirathu
by
TamilNenjam
பைத்தியக்காரனாக வேண்டும் என்றால்....ரஜினி மகள் எடுத்த "3" படத்தை மூன்று தடவை பார்க்க சொல்லுங்கள்.