Thottal Thodarum

Jan 30, 2019

உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்


உயிர் உறிஞ்சும் மீடியேட்டர்கள்
சமீபத்தில் இயக்குனர் நண்பருக்கு போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்காக பாடல் ஒன்றை படமாக்கிக் கொண்டிருப்பதாய் சொன்னார். படப்பிடிப்பு முடிந்து ரெண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்க்காட்சியில்  ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாய் நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங் ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களை தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.  ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக் குறைவாய் இருந்தது. இயக்குனர் நண்பர்களை அழைத்து “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டு வந்திருக்கீங்க?’ என்றதுதான்  தாமதம். ஆளாளுக்கு ஓ வென அழாத குறைதான்.

”சார்.. ஓரு பாட்டு நல்லா வரணும்னா.. சிட்சுவேஷனுக்கு ஏத்தபடி ரெண்டு அல்லது மூணு நாள் ஷூட் பண்ணணும். இவங்க கொடுக்குற காசுக்கு ஒரு நாள் ஷூட் பண்ணவே முடியாது. இதுல எப்படி குவாலிட்டியும் கொடுக்குறது?’

“ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல பண்றது இல்லையா?”

“நூறு படம் பட்ஜெட்டுல பண்ணா ஒண்ணு தேறுறதே கஷ்டம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியும்” என்றார்.

இந்த பாடல்களுக்கான பட்ஜெட் வெறும் ஒன்னரை லட்சம் ரூபாய் தானாம். அதையும் ஷூட்டிங் நடந்து முடிப்பதற்குள் வாங்குவதற்கு படாத பாடு பட வேண்டுமாம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்காக அந்த சேனல் ஒதுக்கும் தொகை இரண்டு மடங்குக்கு மேல் என்கிறார்கள்.

இப்படி தொலைக்காட்சியில் ஆரம்பித்து இன்றைய வெப் சீரிஸ் வரை நன்றாக சம்பாதிப்பவர்கள் மீடியேட்டர்கள் தான். சமீபத்தில் நெட்ப்ளிக்ஸின் வெளியான தமிழ் படம் ஒன்றின் இயக்குனரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர்களின் தமிழ் படம் எப்படி நெட்ப்ளிக்ஸில் தேர்வானது? என்று விரிவாக சொன்னார். உலகின் முக்கிய திரைப்பட விழாவான பூஷன் விழாவில் தெரிவான பின் அவர்களே தான் வந்தார்கள். நல்ல தொகைக்குத்தான் படத்தை வாங்கினார்கள். நெட்ப்ளிக்ஸுக்கான அக்ரிமெண்டுக்கும் இவர்கள் கையில் பெரும் தொகைக்கும் 33 % வித்யாசம் இருக்கும் என்றார். அந்த படத்தை இவர்களிடமிருந்து வாங்கி நெட்ப்ளிக்ஸுக்கு தந்த வகையில் அந்த மீடியேட்டருக்கு 33 சதவிகிதம் லாபம்.

ஒரு சுயாதீன திரைப்படமெடுக்க அவர்கள் எடுக்கும் முன்னெடுப்பு, பணத்திரட்டல் என பல பிரச்சனைகளுக்கு நடுவேதான் இம்மாதிரியான நல்ல திரைப்படங்கள் வெளியாகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் இம்மாதிரியான படங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த ஊடகங்கள்தான் இவர்களின் டார்கெட்டே. ஆனாலும் இந்நிறுவனங்கள் இவர்களை நேரிடையாய் அணுக முடிவதேயில்லை. ஏற்கனவே பழம் தின்று கொட்டைப்போட்ட நிறுவனங்கள், பைனான்ஸியர்கள் போன்றோர்தான் இங்கேயும் கோலோச்சுகிறார்கள்.  எனவே அடி மாட்டு விலைக்கு வாங்கி, மொத்தமாய் நான்கைந்து படங்களை அவர்கள் அங்கே அனுப்பி லாபம் பார்க்கிறார்கள்.

நான்கைந்து படங்களுக்கு முன் பணம் செலவு செய்கிறார்கள் அல்லவா? அதற்கு லாபம் வேண்டாமா? என்று நீங்கள் கேட்கலாம். வாங்குகின்ற நிறுவனம் இவர்கள் சொல்லும் விலைக்குத்தான் வாங்குகிறார்கள். அப்படியிருக்க அதை நேரிடையாய் நிறுவனமே வாங்கும் போது படைப்பாளனுக்கு நல்ல லாபம் வரும் போது அதை அடுத்த முயற்சியில் இன்னும் திறமையாய் பயன்படுத்துவான். இந்த மிடியேட்டர்களால் அவனுக்கு வரும் லாபமும் குறைவு..அடுத்த முயற்சிக்குள் இறங்க தயக்கமும் உருவாகிவிடும்.

வேறொரு நண்பர் ஒருவர்  ஹிந்தியில் எடுக்கப்படும் வெப் சீரீஸில் நடித்துவிட்டு வந்தார். ஒர் சிறிய கேரக்டர் தான் இருந்தால் நல்ல மரியாதை. பட்ஜெட், கவனிப்பு என சிறப்பாக எடுக்கிறார்கள். அவுட்புட்டை பார்க்கும் போது சினிமாவை வெப் சீரிஸ் தூக்கி சாப்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார். உண்மைதான் வட நாட்டில் எடுக்கப்படும் சீரிஸ்கள் ஓரளவுக்கு நல்ல தரத்துடன் இருக்கிறது. அதே சேனல்களில் வெளியான தமிழ் வெப்சீரீஸ்களின் தகுதியும் தரமும் படு மோசம். விசாரித்ததில் ஹிந்தியில் கொடுக்கும் அதே அளவிற்குத்தான் இங்கேயும் முதலில் பட்ஜெட் அளித்திருக்கிறார்கள். கொடுத்தது பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனத்திற்கு. பணத்தை வாங்கி கல்லாவில் போட்டுவிட்டு, பொதிகை தொலைக்காட்சி தொடருக்கு ஆகும் செலவில் ஒரு மோசமான மேக்கிங்கில் வெப் சீரீஸ். பின் எப்படி விளங்கும்.

அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இருக்கும் பிரச்சனை இங்கே தமிழ் நாட்டில் கண்டெண்டுகளை தேர்ந்தெடுக்க சரியான ஆட்களை நேரிடையாய் வைக்க முடியாமல், இங்கே பிரபலமாய் இருந்து தற்போது நொந்து நூடூல்ஸ் ஆன நிறுவனங்கள் தங்களின் பழைய ஹோதாவில் காண்டேக்டுகளை மட்டுமே முன்னிலையாய் வைத்து பணத்தை லவட்டுகிறார்கள். முடிவு தரமற்ற கண்டெண்டுகள்.

இங்கே நல்ல திறமையான கலைஞர்கள். நியாயமான சம்பளத்திற்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். மீடியாவில் சாதிக்க வெண்டுமென்ற வெறியோடு அலைகிறார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு, கசக்கிப் பிழிந்து ஒரு நிகழ்ச்சியை தயாரித்து, அதை நல்ல விலைக்கு விற்று பெரும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் மீடியா  மீடியேட்டர்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகையில் நியாயமான லாபத்தை தங்களது பங்காய் வைத்துக் கொண்டு இளைஞர்கள், ஆர்வலர்களின் உழைப்பை உறிஞ்சாமல் செலவு செய்தால் நல்ல தரமான நிகழ்ச்சிகள் மக்களுக்கு கிடைக்கும். அதை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையும் சிறக்கும்.


Post a Comment

No comments: