Thottal Thodarum

Mar 16, 2019

கதை திருட்டு

கதை திருட்டு
இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக்கதை திருட்டு விஷயம் தான். பாருங்கள் நான்கூட  இக்கட்டுரையை ஆரம்பிக்க கதை திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்  என்னடா இது ஆரம்பித்த பத்தியிலேயே முருகதாஸுக்கு சப்போர்ட் செய்கிறார் போல இருக்கிறதே என்று யோசித்தீர்களானால் நிச்சயம் இல்லை. இக்கட்டுரை யாருக்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையல்ல.

உலகம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து கதை இருக்கிறது. மனிதன் வாய் வழியாய் சொல்லப்பட்டது. மொழி, கலை வடிவத்திற்கு ஏற்ப அதனதன் வடிவில் மறு வடிவம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறுதலே சாஸ்வதம். என்பதை புரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியென்றால் தெரிந்தே கதையை திருடியவர்களை கேட்பது நியாயமில்லையா என்றால் நிச்சயம் கேட்கப்பட வேண்டிய, உரிமையை கோர வேண்டிய நியாயம் தான்.

சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தன்னுடய நிறுவன சுயசரிதையை ஒர் தினசரியில் எழுதினார். எப்போது படங்கள் தயாரித்தார்கள். எங்கிருந்து படங்களின் கதை எடுக்கபட்டது போன்ற பல தகவல்கள் அதில் இருந்தது. ஏன் பிரபல கதாசிரியர்  எழுதிய கட்டுரைத் தொடரிலும் அதே விதமான வாக்குமூலம் தான். பட் படித்தவர்களுக்கு அது வாக்குமூலமாய் தெரியவில்லை. காரணம் அதை வைத்து இப்போது லைவ்வாய் ஏதும் செய்ய முடியாது. கோர முடியாது. இவர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களின் கதாசிரியர்களுக்கோ, தயாரிப்பு நிறுவனங்களுக்கோ  தமிழ் தெரிந்திருந்தால் இன்றைக்கும் கேஸ் போட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படியான ஓப்பன் கன்பஷன்.

கதை காப்பி என்றால் எப்படி? ஒரு ஊருல ஒரு ராஜா.. ஒரு ராணி.. அவருக்கு ஒரே ஒரு பெண். அவள் ஏழை விவசாயியை காதலிக்கிறாள். வேற கதை ஒரு ராஜா, ராணி, அவருக்கு ரெண்டு பெண். அதில் ஓருத்தி ஏழை விவசாயியை காதலிக்கிறாள். இது வேறு கதையா இல்லை ஒரே கதையா? அடிப்படையாய் சொல்லப்படுகிற லைன் ஒன்றுதான் பட்.. அதை திரைக்கதையாக்கிய விதம் தான் வேறு வேறாய் இருக்கும்.

காதல் கதைகள் என்று சொல்ல போனால், 1. காதலர்களுக்கு வெளியிலிருந்து பிரச்சனை 2. காதலர்களுக்கு வீட்டிலிருந்தே பிரச்சனை. 3. காதலர்களுக்குள்ளேயே பிரச்சனை. இந்த மூன்று லைனுக்குள் தான், ஜாதி, மதம், சமூக ஏற்றத்தாழ்வு, மனப் பிரச்சனைகள் என பல  உபகதைகள். காதல் படம் ரிலீஸான போது அது வேறொரு இயக்குனர் சொன்ன கதையை பாலாஜி சக்திவேல் எடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே சாய்ராட் என்று எடுத்த கதையைப் பார்க்கும் போது அது காதல் படம் போலவே நமக்கு இருந்தது. மற்ற மற்றவர்களுக்கு இல்லை. பட்.. உயர்ஜாதி பெண்ணுக்கும், கீழ் ஜாதி பையனுக்குமிடையே காதல், ஓடிவந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். காதலில் பெண் பிரிக்கப்பட்டு, பையன் பைத்தியமாய் அலைகிறான். இங்கே இருவரும் கொல்லப்படுகிறார்கள். இதைத் தவிர வேறு வித்யாசம் பெரிதாய் இல்லை. வீட்டை விட்டு ஓடி வந்து ஸ்லம்களில் கஷ்டப்படும் காட்சிகள் அவரவர் ஜியாகிரபிக்கலுக்கு ஏற்ப மாறியிருந்ததே தவிர, ஆல்மோஸ்ட் ஒன்றே. ஆனால் யாரும் என் கதை என்று கோரவில்லை.

மெளனராகத்தை மணிரத்னம் மகேந்திரனிடம் போட்டுக் காட்டிய போது, இது உங்கள் நெஞ்சத்தை கிள்ளாதே படத்திலிருந்து இன்ஸ்பயர் ஆனது என்றாராம். மகேந்திரன் அதை மறுத்தாலும் நம்மால் அக்கதையில் உள்ள ஒற்றுமைகளை காண முடியும். ஆனால் அதே மெளன ராகத்தை, ராஜா ராணியாக்கி பார்க்கும் போது குறைந்த பட்சம் பதினெட்டு விஷயங்கள் ஒற்றிருந்தாலும், அதை ஒத்துக் கொள்ள அந்த இயக்குனர் தயாராக இல்லை. என்பது வருத்தத்துக்குரிய விஷயமே.

சமீபத்தில் ஒரு கதை விவாதத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். அங்கே இருக்கும் அத்தனை பெரிய ஹீரோக்களுக்கும் ஒரு மாஸ் கதை தேவைப் படுகிறது. அம்மாதிரியான லைன்களை எங்கே பார்த்தாலும் கேட்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் நான் ஒரு பிரபல கதாநாயகனுக்கு ஒர் ஒன்லைன் சென்னேன். “ஊருலேந்து சென்னைக்கு வர்றான் ஒருத்தன். எதுக்குடா வந்தேன்னு கேட்டா? பெரிய டான் ஆகணும்னு வந்தேனு சொல்றானு” சொன்னேன். அட என்று அடுத்த ஒருவாரத்தில் கதை கேட்டார். அடுத்த ஒரு மாதத்தில் ஒரு படம் ஆரம்பம் ஆனது தெலுங்கில். பிரபல நடிகர் நடித்து. சூப்பர் டூப்பர் ஹிட். அவரோட முதல் சீன் இந்த வசனம் தான். நான் சொன்னது சென்னையில் . படமெடுத்தது ஆந்திராவில். ஸோ.. அது என் கதை என்று கேஸ் போட முகாந்திரமே இல்லை பட்.. என் ஒன்லைன் யார் மூலமாகவாவது அங்கே சென்றிருக்கலாம். ஏனென்றால் திரைத்துறையைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என்று மொழி பேதமெல்லாம் கிடையாது. ஹிட்டு கதை, அதுவும் பெரிய ஹீரோவுக்கான கதை பிடிப்பது மிகவும் கஷ்டம். நான் இன்னும் மெருகேற்றி அதே கதையை வேறு ஒரு கோணத்தில் அஹே ஒன்லைனை இன்னும் கொஞ்சம் மாற்றி வைத்துள்ளேன். அது என்னவென்றால்.. ஆங். .அஸ்கு புஸ்கு. .சொல்ல மாட்டேன்.

பாருங்கள் எவ்வளவு யோசித்து பார்த்து பேச வேண்டியிருக்கிறது?. ஆனால் இம்மாதிரியான கதை பிரச்சனைகள் எல்லாம் சிறு முதலீட்டு படங்களுக்கு வந்திருக்கிறதா என்று பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படியே வந்தாலும், தெரிந்தவர்கள் மத்தியில் பேசப்பட்டு, வெறும் க்ரெடிட் மட்டுமே கொடுக்கப்பட்டு பஞ்சாயத்து முடிந்த கதைகள் நிறைய இருந்தாலும், பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கே இந்த பிரச்சனை பெரிதாய் தலை தூக்குகிறது. ஏன் சண்டியர் என்று கமல் தன் படத்துக்கு பெயர் வைத்த போது கொதித்தெழுந்த கிருஷ்ண்சாமி.சில வருடங்களுக்கு பின் அதே பெயரில் வந்த ஒரு சிறு முதலீட்டு படத்திற்கு எந்த பிரச்சனையும் செய்யவில்லை.

சங்கரின் எந்திரன் படத்திற்கும் என் கதை என்று பஞ்சாயத்து இன்று வரை கோர்ட்டு கேஸு என்று அலைந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் யோசித்து பாருங்கள். இம்மாதிரியான பல ரோபோ கதைகள் எத்தனை ஹாலிவுட்டில் வந்திருக்கிறது. ஜேம்ஸ்பாண்டும், மிஷன் இம்பாஸிபிள் ஹீரோவும் ஹீரோயினை கசமுசா செய்வதைத் தவிர செய்வதெல்லாம் ஒன்றே. இன்றளவில் யாரும் அதை என் கதையை காப்பியடிச்சிட்டான் என்று சண்டைப் போட்டதில்லை. காரணம் அவர்கள் தங்களது கேரக்டர்களிடையே உள்ள் விஷயங்கள் வரை முறை படுத்தியிருக்கிறார்கள். ரிஜ்ஸ்டர் செய்திருக்கிறார்கள். காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இங்கே காப்புரிமை என்பது எல்லாம் வெறும் வெத்து வேட்டு. இங்கே வசனகர்த்தாவாக பணியமர்த்தப்படுகிறவர் செய்கிற வேலை திரைக்கதை எழுதுவதும் கூடத்தான். ஆனால் க்ரெடிட் வசனத்துக்கு மட்டுமே. இதை உணர்ந்தே எழுத்தாளர்களும் பயணிக்க வேண்டியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் புதிய இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அவரிடம் கதை கேட்கச் சொன்னார். கேட்க ஆரம்பித்த மாத்திரத்தில் அது எந்த படத்திலிருந்து உட்டாலக்கடி செய்யப்பட்டது என்று புரிந்து விட்டது. இருந்தாலும் பொறுமையாய் கேட்டுவிட்டு, தம்பி கதை நல்லாருக்கு ஏற்கனவே ஹிட்டடிச்ச கொரியன் படம் தான். பட்.. இதே படத்த சூட்டிங் எடுத்து முடிச்சிட்டாங்க. அடுத்த மாசம் ரிலீஸ் என்றேன். தற்போது கூட ஒரே கொரியன் படத்தை இரண்டு அறிமுக இயக்குனர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த ரெண்டு படங்களிலும் நடித்த நடிகர் சொன்னார். ரெண்டிலும் அதே கேரக்டராம். எது முந்திக்கிதோ அதுக்கு நல்லது.

அதே போல படம் பண்ணுவதற்காக கதை பண்ணிக் கொண்டிருந்தவரிடம் நிதமும் காலையில் வீட்டிலிருந்து டிபன் கொண்டு போய் கொடுத்து, கதையை கேட்டுவிட்டு, அதை தன் கதையாய் என்னிடம் சொல்லி கொண்டிருந்த ஒர் உதவி இயக்குனரை எனக்கு தெரியும். ஒரு சமயம் ஒரிஜினல் இயக்குனர் என்னிடம் கதை சொன்ன போது அதிர்ச்சியாகி இது நம்ம அஸிஸ்டெண்ட் டைரக்டர் கதையில்ல என்று கேட்டே விட்டேன். அவர் தன் கதை தான் என்று நிருபிப்பதற்கு என்னிடமே படாத பாடு பட வேண்டியிருக்கிறது.  


மொத்தமா ஏழே ஏழு கதை தான் அதை தான் அவனவன் திறமைக்கு உருட்டி பிரட்டி பண்ணிட்டிருக்கான்னு சொல்வாங்க. மொத்தமா தொடர்ந்து ஏழு சீன் ஒன்னாயிருந்தா கதை உரிமை கேட்கலாம்னு புரளியாய் ஓடிக்கிட்டிருக்கிற ரூல் ஒண்ணு இருக்கு. இன்றைய தேதிக்கு கதை உரிமை என்பது சங்கத்தில் பதிந்தாலும் கோர்ட் தான் இறுதி என்கிற நிலைமை இருக்க, வேறு வழியில்லை நம் கதையை நாம் காப்பாற்றிக் கொள்ள அத்தனை வழிகளையும் பயன் படுத்தியே தீர வேண்டும். நான் என் கதைகளை மின்னஞ்சல் மூலமாய்தான் அனுப்புகிறேன். தேதி, நேரம், யாருக்கு அனுப்புகிறோம் என்று உறுதியாய் தெரிந்துவிடும். அவர் தான் கதையை திருடினார் என்றால் நிச்சயம் மாட்டிக் கொள்வார்கள். அதை என் கதை என்று உரிமை கொண்டாட முடியாது. அதிலேயும் பணம் உள்ளவர்கள் தில்லாலங்கடி செய்தாவது கேஸில் வெற்றி பெருகிறவர்கள் இருக்கிற ஊர் தான் என்பதால் சட்டபடி எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளிலும் என்னுடயது என்று பதிந்து வைத்துக் கொள்வதே வழி. ஏனென்றால் அத்தனை சண்டை போட்ட மீஞ்சூர் கோபி, இன்றைக்கு அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்கிறார். ஸோ.. அறம் குறித்த கேள்வி கேட்க யோசனையாய் இருக்கிறது.

Post a Comment

No comments: