Thottal Thodarum

Aug 19, 2014

இடுப்பில் ஒர் மடிப்பு - நீயா நானா ஸ்பெஷல்

”டாக்டர்.. இதோ வலது பக்க இடுப்பு கிட்ட கட்டியா இருக்கு. அழுத்தினா வலிக்குது” என்றேன்.


டாக்டர் என் ஏரியா ஈ.என்.டி. மற்றும் ஜெனரல் ப்ராக்டீஸ் செய்பவர்.  நெற்றியில் எப்போது ஒர் டார்ச் லைட் போன்ற வஸ்துவை மாட்டிக் கொண்டே பேஷண்டுகளைப் பார்ப்பார். எங்கள் ஏரியா குனங்குடி மஸ்தான் போன்றவர் அவர். அவரிடம் 20 ரூபா கொடுத்துவிட்டு ஒரு இன்ஜெக்‌ஷன் போட்டு விட்டால் உலகத்தில் உள்ள அத்துனை வியாதிகளும் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை கொண்ட லோயர் மிடில் க்ளாஸ் கஸ்டமர்கள் உள்ள ஏரியா. ஏதோ சின்ன வலிதானே என்று அவரிடம் சென்றிருந்தேன்.  சம்பந்தமேயில்லாமல் தலையில் இருந்த லைட்டை ஆன் செய்து, இன் செய்திருந்த சட்டையை தூக்கி  ஜெயமாலினி இடுப்பை பார்ப்பது போல லைட் அடித்து, கையால் வருடிய படி சரியாய் வலது பக்க இடுப்பில் கட்டியிருக்கும் இடத்தை கண்டுபிடித்து ஒர் அழுத்து அழுத்த, ‘அய்யோ..” என்று நான் கத்தும் முன்னாடி டாக்டர் கத்தினார்.  என் அய்யோ வெளியவே வரவில்லை. என்னடா இது டாக்டரே “அய்யோங்கிறாரு.. ரொம்ப சீரியஸான வியாதியோ?” என்று மனதினுள் கிலி பிடித்துக் கொண்டது.

சட சடவென ப்ரிஷ்கிரிப்ஷன் பேப்பரை எடுத்தவர் வழக்கமாய் எழுதும் முன்பக்கம் மட்டுமில்லாமல், பின்பக்கம், அடிசனல் ஷீட் எல்லாம் வைத்து நான்கைந்து பக்கம் மருந்து மாத்திரைகள், மற்றும் டெஸ்டுகளாய் எழுதி, ”உடனடியாய் இந்த மாத்திரையெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சிருங்க.. உடனே... புரியுதா.. காலையில முத வேளையா இந்த எல்லா டெஸ்டுகளையும் உடனே எடுத்துட்டு என்னை வந்து பாருங்க..” என்று அவர் கடகடவென சொல்ல, 

“டாக்டர்.. ஏதாச்சும் சீரியஸா?” என்றேன் தயங்கியபடி..

“அநேகமா கேன்சரா இருக்கும்னு சந்தேகப்படுறேன்” என்று குண்டைத் தூக்கிப் போட, லேசாய் அதிர்ந்தது மனது. இன்னும் கல்யாணம் காட்சி கூட ஆகலை அதுக்குள்ள என்னடா  இது என்று யோசித்து, அவருக்கான பீஸைக் கொடுத்துவிட்டு, மருந்து மற்றும் டெஸ்ட் எழுதிக் கொடுத்த பேப்பரையே  நான்கைந்து நிமிடங்கள் பார்த்து கொண்டிருந்தேன். சுதந்திர தின முட்டாய் போல யார் யாருக்கோ என்னன்ன வியாதியோ வருது எதுக்கும் செகண்ட் ஒப்பீனியன் கேட்டுருவோம்னு தோன்றியது. என் நண்பர் டாக்டர் விஜயகுமார் என்பவர் இப்போது சேலத்தில் இருக்கிறார். அப்போது சென்னை எம்.எம்.சியில் மேற்படிப்பு  படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு போன் செய்து .. “டாக்ஸ்.. எனக்கொரு ப்ரச்சனை.. உடனே மீட் பண்ணனுமே” என்றேன்.  வாங்க சங்கர் என்று சொன்ன மாத்திரத்தில் என் தள தள இடுப்பை காட்டியபடி நின்றேன். டாக்ஸ் அழுத்தமாய் என் இடுப்பை ஒர் அழுத்து அழுத்த, இப்போது நான் “அய்யோ” என்று கத்தினேன்.

”ஓண்ணும் ப்ரச்சனையில்ல’ என்று கடகடவென நான்கைந்து இங்கிலீஷ், இட்டாலியன் பெயர்களாய் சொல்லிக் கொண்டே போக,, புரியாமல் விழித்த என் பார்வையைப் பார்த்த டாக்ஸ் “ஒண்ணுமில்லை.. கொழுப்புக் கட்டி.. வேற நல்ல டாக்டர்கிட்ட காட்டுங்க..ஒர் இன் ஜெக்‌ஷன் பெயர் சொல்லி, அதை கொழுப்பு கட்டியாயிட்டிருக்கிற இடத்துல போடுவாங்க. அப்படியே அரஸ்டாகி கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சிரும்’ என்றார். அடுத்த நாள் வேறு ஒரு நல்ல டாக்டரிடம் போய்க் காட்ட, அவர் அதே மருந்தை என் இடுப்பில் போட்டு வருடம் பதினைந்தாகிவிட்டது.

இவையனைத்து ஏன் சொல்கிறேன் என்றால்.. நீயா? நானாவில் டாக்டர்களைப் பற்றிய நிகழ்ச்சியில் ஆளாளுக்கு டாக்டர்களை கலாய்த்ததாய் சொன்னார்கள். எல்லா துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கேடு கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே நாலு நல்ல டாக்டரை ப்ரெண்ட் பிடிச்சி வச்சிக்கிறது தான் நல்ல வழி.. இன்னொரு சமயம் டாக்டர் ப்ருனோ எனக்கு செய்து உதவி வேறு யாரும் செய்ய முடியாது.

சமீபத்தில் சேலம் சென்றிருந்த போது டாக்ஸ் விஜயகுமாரை சந்தித்தேன். என் அறைக்கு வந்திருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார். இன்னொரு அறையில் இருந்த நண்பர்கள் என்னய்யா திடீர்னு ஆளைக் காணம் என்று கேட்க, நான் டாக்ஸ் விஜயகுமாரை பற்றி சொன்னேன். அறையில் இருந்த ஐந்து பேரும் லோக்கல் ஆட்கள். “அடடா. என் குழந்தைக்கு அவருதான் டாக்டர். தங்கமான மனுஷன். அளவாத்தான் பீஸு வாங்குவாரு.. தேவையில்லாம மாத்திரை மருந்து எழுதுவும் எழுத மாட்டாரு..சொல்லியிருந்தா வந்து பாத்திருப்போமே? “ என்று சொல்ல.. சந்தோஷமாய் இருந்தது.. விஜயகுமார், புருனோ போன்ற நல்ல டாக்டர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.
  • கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

"ஆ" ஹாஹா நல்ல அனுபவம்...நல்ல டாக்டர்களை முதலில் அடையாளம் காண வேண்டுமே அப்படி அடையாளம் கண்டுவிட்டால் பிரச்சினை இல்லைதான்....தொண்டையில கிச் கிச் நு போனா இடுப்புல கிச்சு கிச்சு மூட்டற டாக்டர்ஸ் கூட இருக்காங்க சார்....

அழகான விவரணம் சார்!

Varun said...

Good article