Thottal Thodarum

Nov 9, 2008

கமான்..கமான்..



சண்முகம் பார்பதற்கு செந்தில் போலிருந்தான். அவனின் பேச்சு கூட செந்திலைபோலவே இருந்தது. ஆனால் அவன் காமெடியன் இல்லை. மிகப் பெரிய திருடன். ஜன்னல் உடைத்து திருடுவது, கன்னம் வைப்பது போன்ற வகைகளில் திருடுபவன் அல்ல..பூட்டிய வீட்டில், கடைகளில் பூட்டை உடைக்காமல், பூப்போல திறந்து திருடுபவன். திருடிய வீட்டிலோ, கடையிலோ திருடியது மட்டுமில்லாமல், அங்கேயே படுத்து விடியற்காலையில் வெளியேறுவது அவனின் டச்.

போலீசாரால் ரொம்ப காலமாய் தேடப்பட்டு வந்தவன். ஒரே ஒரு முறை திருடிய காசில் ஓவராய் குடித்துவிட்டு காசு கொடுப்பதில் தகராறு வர, அப்போது அங்கேயிருந்த பார் பையன் அவனை பார்த்து திருட்டு....பயலே.. என்று திட்டியது போதையில் தலைகேறிய அவன் வார்த்தை கொடுத்த கோபத்தில் கையில் இருந்த பாட்டிலை அவனை குறி பார்த்து வீசுவதாய் நினைத்து பக்கதிலிருந்தவன் மேல் வீச அது மிகப் பெரிய கலாட்டாவாய் மாறிவிட்டது.. அப்போது ஓரு முறை 75 கேஸ் போட்டு உள்ளே ஒரு ராத்திரி ஜட்டியுடன் லோக்கல் ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்ததை தவிர அவனை போலீஸ் பிடித்ததில்லை.

“எப்படிண்ணே..இந்த தொழிலுக்கு வந்தீங்க..?”

“அண்ணே.. சொன்னா நம்ப மாட்டீங்க..சின்ன வயசிலேர்ந்து எனக்கு பூட்டுன்னா ஓரு ஆர்வம் அதிலேயும் சாவி தொலைஞ்ச பூட்டுன்னு வச்சுக்கங்க.. அதை இதை போட்டு திறந்துருவேன்..இப்படி ஓரு முறை எங்க அப்பத்தாகிட்ட திண்ணிக்கு என் தங்கச்சி காசு கேட்டப்போ தரமாட்ங்கிருச்சி.. காசில்ல்ன்னு வேற பொய் சொல்லிச்சு..பெட்டியில காசிருக்கறது எனக்கு தெரியும்..அப்பத்தா திண்ணையில இருந்தப்ப பெட்டிய திறந்து அதிலேர்ந்து பத்து ரூபா எடுத்துகிட்டு பொட்டு கடலையும், நாட்டு சக்கரையும் கலந்துகிட்டு வாங்கி ஓரு நா பூரா தங்கச்சிய கையில் வச்சிக்கிட்டு ஊருக்குள்ளாற திருஞ்சிகிட்டே பையில வச்சுக்கிட்டு தங்கச்சியும் நானுமா சாப்புட்டு வந்தோம். ரெண்டு நாளு எனக்கு மட்டும் கழிஞ்சுது வேற விசயம்.

பூட்டுங்கிறது வெறும் இரும்பில்லண்ணே.. பொண்ணு மாரி.. கரெக்டு பண்ற விதத்துல கரெக்ட் பண்ணனும். அதுங்கூட பேசணும்..சில சமயம் பொண்டாட்டி மாரி கோவிச்சுக்கும், சண்டை போடும், நாமதான் பேசி..பேசி சரி பண்ணனும். அத வலிக்காம நிரடி திறக்கணும்..திறக்கும்போது ஓரிஜினல் சாவி போட்டு திறந்தா எப்படியிருக்குமோ அப்படிதான் திறக்கணும்..”

பூட்டை பற்றி சொல்லும் போது அவன் கண்களில் ஓருவிதமான பளபளப்பு இருந்தது.

“படிக்கல.. சம்பாரிக்கணும்.. வயசு வந்த தங்கச்சி, அம்மா.. அப்பன் எங்கன போயிட்டன்னு தெரியல.. அந்த வேலை இந்த வேலைன்னு செஞ்சு வந்து காசு பத்தலை.. அப்படித்தான் ஓரு நா ராவுல எம்.ஜி.ஆர். படம் “மலைக்கள்ளன்” பாத்துபுட்டு வரையில.. எங்க ஏரியா அண்ணாச்சி கடைய தாண்டும்போது..யாரோ என்னை கூப்டாபுல இருந்துச்சு.. சுத்தும், முத்தும் திரும்பி பார்த்தேன்.. யாருமில்ல.. கிளம்பலாம்னு பாத்தப்ப.. மறுபடியும் அதே குரல்.. “கமான்..கமான்..” ன்னு கடைய பாத்தேன்..பூட்டியிருந்துச்சு..அந்த பூட்டு தான் என்னை பாத்து கூப்டாப்ல இருந்துச்சு. என்னடாதுன்னு எதாவது இட்சிணி வேலையா இருக்குமோன்னு நினைக்கும் போது மறுபடியும் அந்த குரல். கையில வேற காசில்ல. காலையில வட்டி கட்டணும் இல்லாட்டி பிரச்சனையாயிரும். திறந்து எடுத்தா என்னனு தோணிச்சு. நம்ம ஏரியா கடையிலேயேவான்னு யோசிசப்ப.. கடனுக்கு பொருள் கேட்டபோது தரமாட்டென்னு சொன்னது மட்டுமில்லாம, தேவையில்லாம தங்கச்சிய பத்தி கேவலமா பேசினான்.. அது ஞாவகதுக்கு வந்துச்சி..என் தங்கச்சி பாக்குறதுக்கு நடிகை செயந்தி மாரி இருக்கும்..

பக்கத்துல இருந்த சைக்கிள் கடையில இருந்த பழைய ஸ்போக்ஸ் கம்பிய எடுத்துகிட்டு.. பூட்டுகிட்ட போய் பார்த்தேன்.. நல்ல திண்டுக்கல் பூட்டு.. “த பார்றி.. நீதான் என்ன கூப்ட, அதனால ரொம்ப அலம்பல் பண்ணாம திற்ந்துரு’ன்னு பேசினேன்.. உள்ளார விட்டு லேசா நிரடினப்பவே அது ஓண்ணும் எதுக்கல, சும்மா ஓரு ரெண்டு நிரடல் பூ கணக்கா திறந்துருச்சு.. உள்ளே போய் கல்லாவை திறந்து இருந்த பணத்தையெல்லாம் எடுத்துகிட்டேன்..ரவைக்கு சாப்புடாம இருந்ததுல பசி.. அங்கிட்டுருந்த சீனி மிட்டாய், ஓடச்சகடலைன்னு கைக்கு கிடைச்சதெல்லாம் எடுத்து சாப்ட்டு சுணங்கி போய் அங்கனக்குள்ளேயே தூக்கிட்டேன்..எனக்கென்னவோ ஓரு பயமும் இல்ல.. விடியற்காலையில ஓரு மூணு நாலு மணிவாக்குல கடைய பூட்னாப்புல சாத்திபுட்டு வந்திட்டேன்.. காலையில அண்ணாச்சி பதச்சி நின்னப்போ.. திருடுனவனை அவர் வாய்ல வந்தபடி திட்டன்ப்போ எனக்கெண்ணவோ கோவமே வரல. அவர் கூட ஸ்டேஷன் போய் உதவி செஞ்சிட்டு, கிளம்புயல அண்ணாச்சி ஓரு அரை கிலோ அரிசி, பருப்பு எல்லாம் கொடுத்துவிட்டாரு.. இதை முன்னாலேயே செஞ்சிருந்தா கடை திருடு போயிருக்காது..

மத்த வேலய விட இது ரொம்ப சுலுவா இருந்துச்சி, வேலை சுலுவா இருந்தாலும் செய்யறதுக்கு உஷார் வேணும்.. அம்புட்டு சுலுவா திருடிற முடியாது. கடையோ, வீடோ.. நோட்டவுடனும், ஏரியா தெரிஞ்சிருகணும்..இப்படி பல விசயம் இருக்குது. அதுக்காக எல்லா கடையிலேயும், வீட்டிலேயும் திருட மாட்டேன்.. அவனுங்க வசதி, எடுத்தா குறையாத ஆளுங்க வீட்லயும் தான் திருடுவேன்.. நமக்குன்னு ஓரு ஞாயம் வேணுமில்ல..

இப்படியே சம்பாரிச்சி தங்கச்சிய அஸ்தம்பட்டியில் கட்டி கொடுத்தேன்.. பாசமலர் பாத்தேயில்ல அதுல வர்ற சிவாசிய விட ஓரு கல் மேல பாசம் வச்சிருந்தேன் என் தங்கச்சி மேல.. அதுக் கொண்ணுண்னா என்னால தாங்க முடியாது.. இப்படியே தெனம்.. நம்ம வாழ்கை போயிட்டிருந்ததுல நம்ககுன்னு ஒருத்தியா எதுவும் செட் பண்ணிக்கல.. ரொம்ப அரிச்சிச்சின்னா.. எங்கணாச்சும் போயிட்டு வந்திருவேன்.. ஓரு வாட்டி திருட போன சேட்டு வீட்டுல சமையரூமூக்குள்ள படுத்திருந்த வேலைகாரியோட ஓரு விஷயம் நடந்திச்சி.. அத்த விடு அதுவா முக்கியம்.. நல்லா சம்பாரிச்சேன்.. சொந்த இடம் வாங்கி தங்கச்சி பேர்ல வச்சிருக்கேன். கையில 40 ரூவா ரொக்கமா வச்சிருந்தேன்ன்னு சொன்னா நம்புவியா..?

” கையில நாலு காசு பாத்துட்டப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டு செட்டில் ஆயிர வேண்டியது தானேன்னே..?”

“நானும் அப்படி நினைச்சு.. எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு மூணு மாசம் தங்கச்சி வீட்டோட போய் இருந்துட்டு நிம்மதியாதான் இருந்தேன். என்னதான் தங்கச்சி வீடாயிருந்தாலும் விருந்தாளி, விருந்தாளியா இருந்தாதானே மரியாத அதனால ஊருக்கு கிளம்பலாம்னு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தப்ப பஸ் போயிருச்சு சரி நேரத்த போக்கறதுக்காக.. என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப பஸ் ஸ்டாண்ட் பக்கத்து கொட்டாயில “மலைக்கள்ளன்” போட்டிருந்தான் .. எனக்கு எம்.ஜி.ஆர்னா ரொம்ப பிடிக்கும்.. படம் பார்த்துட்டு வெளியே வந்த போது ஓரு லாலாகடை வாசல்ல உட்கார்ந்து பீடிய எடுத்து பத்த வச்சேன்.. “கமான்..கமான்”ன்னு ஓரு குரல் கேட்டுது.. திரும்பி பார்த்தேன்.. பதினாறு வயசு பொண்ணு கணக்கா ஓரு சிங்கப்பூரு பூட்டு.. அவ்வளவு சுலுவா திறக்காது.. இந்தா வான்னு தொட்டவுடனே திறக்காது, அங்க தொட்டு, இங்க தொட்டு நைஸ் பண்ணனும், கையெல்லாம் அரிச்சுச்சு.. என்னால் இந்த அரிப்பை மட்டும் கட்டுபடுத்தமுடியாது. அதனால முடியாம திறந்தேன்.. கரண்டு இல்ல..மெழுகுவத்திய பத்த வச்சிக்கிட்டு துளாவினேன்.. பத்தாயிரம் வரைக்கும் காசு இருந்துச்சி..அங்கிருந்த ஜாங்கிரி, முறுக்கு, ஜிலேபின்னு எல்லாத்தையும் தின்னுட்டு வழக்கம் போல அங்கேயே தூங்கிட்டு இருந்தப்ப.. ஓரே சூடாயிருந்திச்சி..

சடாருன்னு எழுந்து பாத்தா மெழுகுவத்தி கரைஞ்சி அங்கிருந்த பேப்பர்ல பட்டு அது எரிச்ஞி கொஞ்சம் கொஞ்சமா எறிய ஆரம்பிச்சிருந்தது.. சத்தமில்லாம பூட்னாப்புல கடைய விட்டு வெளியே ஓடி வந்து, கொஞ்சம் தூரத்துல அப்பத்தான் திறந்திருந்த டீக்கடையில டீ வாங்கி குடிச்சிகிட்டே.. நடக்கறத பாத்துகிட்டிருந்தேன்.. நெருப்பு வெளியே தெரிய ஆரம்பிச்சிருச்சு.. கூட்டம் வர ஆரம்பிக்க.. நானும் வழக்கம் போல கடை கிட்ட போய் என்ன ஆச்சுங்கறாபுல கூட்டத்தோட கூட்டமா நின்னுகிட்டுருந்தேன்.. கடை சுத்தமா எரிஞ்சு போயிருச்சு.. போலீஸெல்லாம் வ்ந்திருச்சி...விசாரிச்சிட்டுருந்தாங்க.. அப்போ கும்பல்ல ஓருத்தன்.. என்னைய பாத்து கைகாட்டி ஏதோ சொல்ல, நான் நழுவுறதுகுள்ளே.. என்கிட்டே வந்து.. ”தம்பி..கட தீ பிடிச்சி போச்சின்னு ஓடிபோய் ஓனர கூட்டி வருவேன்னு பாத்தா.. நீ பாட்டுக்கு கும்பல்ல முழிச்சிகிட்டு நிக்கிற..ன்னான்..

எவ்ளோ வாட்டி திருடியிருக்கேன்.. ஆனா போலீஸ் அடி வாங்கினதில்ல.. பூட்டை உடைச்சி திருடுனதுக்காக இதோ ஜெயில்ல.. என்ன ஓரு வருத்தம் இது வரைக்கும் என் தங்கச்சிக்கு நான் இப்படி திருடித்தான் சம்பாரிச்சேன்னு தெரியாது..இப்படின்னு தெரிஞ்சதுக்கப்புறம் என்ன வந்து பாக்கவேயில்ல..அது என்ன செய்யும்..பாவம் சின்ன புள்ள..நம்ம ஊர்கார பய ஒருத்தன் வந்து பாக்கையில ஓரு விசயம் சொன்னான்.. அத கேட்டதிலேர்ந்து மனசு துடிச்சி போயிருச்சி.. என் மாப்ளைக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்கலாம்.. என் தங்கச்சி ரொம்ப கஸ்டபடுதாம்.. என்னாத்த செய்யறதுன்னே தெரியமா.. ஓண்ணும் புரியாம இருக்கேன்.. இந்த விசயத்தை கேட்டதிலேர்ந்து என் மனசு என்கிட்ட இல்ல.. கொஞ்சம் இரு யாரோ கூப்புட்ர மாரி இருக்குது. அட ஆமா.. உனக்கு கேட்கலயில்ல.. செயிலு பூட்டு என்ன பாத்து “கமான்..கமான்”ன்னு கூப்பிடுது..பாரேன்..

Post a Comment

28 comments:

யூர்கன் க்ருகியர் said...

திண்டுக்கல் பூட்டு,சிங்கப்பூர் பூட்டு எல்லாம் பார்த்த திரு.திருடருக்கு அந்த ஜெயில் பூட்டு எம்மாத்திரம்?
(அடுத்த நேர்காணல்-இன் பொது "ஜெயில் பூட்டு கமான் கமான் -இன்னு சொல்லிச்சி ,அதான் தப்பிச்சு போயிட்டேன்" அப்படின்னு சொல்ல போறாரு!)

பரிசல்காரன் said...

நல்ல சொல்லாடல் சங்கர். ஏற்கனவே சிறுகதைல மிரட்டற வெண்பூ, நர்சிம்மையெல்லாம் பார்த்து எழுத வராம திரியறேன். இப்ப நீங்க வேற.

ஒண்ணே ஒண்ணு சொல்லவா..

முடிவை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கலாம்.

(ஜெயிலுக்குள்ள இருந்தேன். ஜெயில் கதவோட பூட்டு என்னை பார்த்து சிரிச்சுச்சு... - இந்த இடத்துல முடிச்சா...?)

ambi said...

வட்டார வழக்குல புகுந்து வெளாயாடி இருக்கீங்க சங்கர், :)

இன்னும் கொஞ்சம் பெருகேற்றி இருக்கலாம்.

சட்டுனு தொறந்தா மாதிரி sorry, முடிஞ்ச மாதிரி ஒரு பீலீங்க். :))

நவநீதன் said...

கத சூப்பரப்பூ...

Senthil said...

me the firstu?

S.Lankeswaran said...

ம் திருடுறது எவ்வளவு கஸ்ரம் பாருங்கள். இனி நாங்க திருடர்களை கட்டாயம் மதிக்கக் கற்றுக் கொள்ளனும்.

Cable சங்கர் said...

//அடுத்த நேர்காணல்-இன் பொது "ஜெயில் பூட்டு கமான் கமான் -இன்னு சொல்லிச்சி ,அதான் தப்பிச்சு போயிட்டேன்" அப்படின்னு சொல்ல போறாரு//

நன்றி ஜூர்கேன்.

Cable சங்கர் said...

//முடிவை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கலாம்.//

நன்றி பரிசல்.. உங்கள் கருத்துக்கு.. முயற்சி செய்கிறேன்..நன்றி

Cable சங்கர் said...

//சட்டுனு தொறந்தா மாதிரி sorry, முடிஞ்ச மாதிரி ஒரு பீலீங்க். :))//

எதை தொறந்தா மாதிரி..?? ஓ.. கதையையா..?

Cable சங்கர் said...

நன்றி..

செந்தில்..
நவநீதன்

இலங்கேஸ்வரன்.
அம்பி
பரிசல்..
ஜூர்கேன்..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

ம்ம்ம்ம்ம் நன்றாக இருந்தது !

Raj said...

அனுபவம் நல்லாத்தான் கை கொடுத்திருக்கு..கதை எழுத! ( உங்கள் திரைக்கதை எழுதும் அனுபவத்தை சொன்னேன்)

Cable சங்கர் said...

//ம்ம்ம்ம்ம் நன்றாக இருந்தது !//

நன்றி பாஸ்கர்..

Cable சங்கர் said...

//உங்கள் திரைக்கதை எழுதும் அனுபவத்தை சொன்னேன்//

அதானே பாத்தேன்.. நன்றி ராஜ்.. க்ளைமாக்ஸ் மாற்றியிருக்கிறேன்.. பாருங்கள்..

Cable சங்கர் said...

//ம் திருடுறது எவ்வளவு கஸ்ரம் பாருங்கள். இனி நாங்க திருடர்களை கட்டாயம் மதிக்கக் கற்றுக் கொள்ளனும்.//

:) :) -??? நன்றி.. இலங்கேஸ்வரன்

Cable சங்கர் said...

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க.. அவர்களின் கருத்தை ஏற்று முடிவு எக்ஸ்டெண்ட் செய்யபபட்டிருக்கிறது..

ஆட்காட்டி said...

ஆமைப் பூட்டை திறக்க முடியுமா?

Cable சங்கர் said...

//ஆமைப் பூட்டை திறக்க முடியுமா?//

ஆளை எஸ்கேப் ஆயீட்டாரு ஆட்காட்டி.. அது சரி கதை எப்டி இருந்ததுன்னு சொல்லவேயில்லையே..

ஆட்காட்டி said...

நல்லாயிருந்தது. கண்டிப்பா எப்படி இருந்தது என்று சொல்லத் தான் வேண்டுமா? சிலருக்கு அதுவே வாடிக்கை ஆகிவிட்டது. எனக்கு அது வேடிக்கை. அதனால் தான் நான் தவிர்க்கிறேன். எதிர்பார்ப்பு இருக்கலாம். அளவுக்கு மீறலாகாது. பிடிச்சிருந்த படியால் தான் ஒரு பின்னூட்டம். ஊக்கப் படுத்த.

Cable சங்கர் said...

//சிலருக்கு அதுவே வாடிக்கை ஆகிவிட்டது. எனக்கு அது வேடிக்கை. அதனால் தான் நான் தவிர்க்கிறேன். //

ரொம்ப நன்றிங்கண்ணா.. உங்க பழைய பின்னூட்டம் வேடிக்கையா.. கிண்டலான்னு புரிஞ்சுக்க முடியற அளவுக்கு..? இப்ப புரிஞ்சுதுங்கண்ணா.. ரொம்ப நன்றிங்கண்ணா..

ஆட்காட்டி said...

நான் சொன்னது அப்படிப் பின்னூட்டம் போடுபவர்களைப் பார்க்க எனக்கு வேடிக்கை என்று. மற்றும் படி பின்னூட்டம் போடுவது எனக்கு வேடிக்கை இல்லை.

Cable சங்கர் said...

தல.. எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சி.. ரொம்ப தாங்க்ஸ்..

Cable சங்கர் said...

//Super//

நன்றி மங்களூர் சிவா.. உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

வெண்பூ said...

அருமையான நடை சங்கர்.. வார்த்தைப் பிரயோகங்களும் அற்புதம். நன்றாக எழுதுகிறீர்கள். நடுநடுவே போடப்பட்டுள்ள படங்களும் பொருத்தமாக இருக்கிறது. பேட்டி வடிவில் இருப்பது வித்தியாசமாக‌ இருக்கிறது. பாராட்டுக்கள்.

நான்கு நாட்களாக ஊரில் இல்லை அதனால் இணையம் பக்கமே வர முடியவில்லை. அதனால்தான் தாமதம்.. ரீடரில் இன்னும் 86 பதிவுகள் படிக்கக் காத்திருக்கின்றன.. :)))

Cable சங்கர் said...

//அருமையான நடை சங்கர்.. வார்த்தைப் பிரயோகங்களும் அற்புதம். நன்றாக எழுதுகிறீர்கள். நடுநடுவே போடப்பட்டுள்ள படங்களும் பொருத்தமாக இருக்கிறது. பேட்டி வடிவில் இருப்பது வித்தியாசமாக‌ இருக்கிறது. பாராட்டுக்கள்.//

நன்றி வெண்பூ..

Cable சங்கர் said...

//அடுத்த நேர்காணல்-இன் பொது "ஜெயில் பூட்டு கமான் கமான் -இன்னு சொல்லிச்சி ,அதான் தப்பிச்சு போயிட்டேன்" அப்படின்னு சொல்ல போறாரு!)//

இந்த நேர்காணல்லேயே சொல்லிட்டாரு ஜூர்கேன் பாருங்க..

Cable சங்கர் said...

//ஜெயிலுக்குள்ள இருந்தேன். ஜெயில் கதவோட பூட்டு என்னை பார்த்து சிரிச்சுச்சு... - இந்த இடத்துல முடிச்சா...?)//

அப்படி நினைச்சு ஏழுதிட்டேன்.. சரி ஓரு செண்டிமெண்டா முடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சு கட் ஷார்ட் பண்ணிட்டேன்.. இப்போ ஜாயிண்ட் பண்ணிட்டேன்.. நன்றி பரிசல்

Cable சங்கர் said...

//இன்னும் கொஞ்சம் பெருகேற்றி இருக்கலாம். //

ஏற்றிவிட்டேன் அம்பி..