Thottal Thodarum

Jan 25, 2012

சாமியாட்டம்


samiyattam
மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம கதைகளுக்கு வருவோம்.
1. கோட்டி முத்து.மனநிலை பிழன்றவனோ என்று யோசிக்க வைக்கும் கேரக்டர். இம்மாதிரியான ஆட்கள் ஊருக்கு ஒருத்தர் நிச்சயம் இருப்பார்கள். தனக்கென்று யாருமில்லாமல் ஊருக்காக நேர்ந்து விட்ட ஆளாக சுற்றியலையும் இவனைப் போன்றவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ அது போலவே தான் இவன் முடிவும் இருக்கிறது.



2. பாரதியின் ஒரு பாட்டு

மும்பையில் பள்ளியில் படிக்கும் ஜெயா என்கிற மாணவியின் கதை. பாலியல் ரீதியாய் பாதிக்கப்படும் அப்பெண்ணின் மன உணர்வுகளை, அந்நிகழ்வை தைரியமாய் எதிர் கொள்வதைப்  பாரதியின் பாட்டோடு இணைத்து சொல்லிய கதை. ஒரு பக்கத்தில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பக்கம் மும்பையில் இட்லி விற்று பிழைப்பை நடத்தும் ஒரு அடிமட்ட தொழிலாளியின் பொருளாதாரப் பின்னணி பற்றி சொல்லியிருப்பது சுவாரஸ்யம் என்றாலும்.. கதைக்கு தொடர்பில்லாததால் ஒட்டவில்லை.

3.பொம்மை
இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதையிது. பிழைப்புக்காக மிக்கி மவுஸ் உடுப்பை மாட்டிக் கொண்டு, தன் மச்சினன் வந்திருப்பதால் கொஞ்சம் அட்வான்சும், ஒரு நாள் லீவும் கேட்டு விட வேண்டுமென்ற மனைவியின் கட்டாயத்திற்கு உட்பட்டு முதலாளிக்கும், மனைவிக்குமிடையே மாட்டிக் கொண்டு அலையும் ஒரு சாதாரணனின் கதை. ஆரம்பம் முதல் முடிவு வரை அவனூடே பயணிக்க வைக்கும் எழுத்து.

4. கடந்து போதல்
ஆரம்பித்த வேகத்தில் ஒரு ஹாரர் சிறுகதையோ என்று எண்ண வைத்தாலும், முடிவு இப்படித்தானிருக்கும் என்று ஊகிக்க முடிந்த கதை.

5.தண்ணீர் தேசம்
குடிக்க தண்ணியில்லாமல் வாடும் மக்கள் வாழும் ஊரில் பெப்ஸி நுழைந்திருப்பதைப் பற்றி கதை. இதிலும் கடைசி பக்கத்திற்காக மூன்று பக்கம் விவரணைகள்.

6.துரைப்பாண்டி
மும்பையில் குடும்ப வறுமைககாக இட்லி பக்கெட்டை தூக்கியலையும் சிறுவனின் கதை. இம்மாதிரியான சிறுவர்களின் வாழ்கையைப் பற்றியும், அவர்களின் ஏக்கங்களையும் பளிச்சென முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கிறார்.

7. பேய்வீடு
வழக்கமாய் கிராமத்து மக்களிடையே புழங்கும் பேய்க் கதைகளும், அதை மிகைப்படுத்திச் சொல்லும், ஆட்களைப் பற்றியுமான கதை. எதிர்பார்த்த முடிவு.

8. நம்பிக்கை
நிலாவுல யாரு உக்காந்திருக்காங்க? என்று அப்பாவிடமோ அம்மாவிடமோ சிறு வயதில் கேட்டால் அங்க ஒரு ஆயா வடை சுட்டுக் கொண்டிருப்பாள் என்று சொன்னதை நாம் வளரும் வரையில் நம்பிக் கொண்டிருப்போம். அது போல சவ ஊர்வலத்துடன் ஏன் பொரியையும், சில்லறைக் காசையும் போடுகிறார்கள் என்று கேட்டதற்கு கிடைத்த பதிலை நம்பியிய பாண்டி என்கிற சிறுவனைப் பற்றிய கதை. கனவுகளில் ஆரம்பித்து, சட்டென ஃப்ளாஷ்பேக்குக்கு போய், விழித்த ஒரு வரியில் நிஜத்துக்கு வந்த ஸ்டைல் அசத்தல். கதை முடிந்த பின்னும் வாலாய் அதை விளக்குவது கொடுக்க வேண்டிய இம்பாக்டை கொடுக்காமல் விட்டு விடுகிறது.


9. சாமியாட்டம்

புத்தகத்துக்கான தலைப்புக் கதை. ஊரில் சாமியே ஆனாலும் தலித்துகளை இன்னும் புறக்கணிக்கிறார்கள் என்பதை கடைசி ஒரு வரியில் சுளீரென்று சாட்டையில் அடித்தாற் போல் சொல்லிய கதை.

10. விடிவெள்ளி
ஆட்டோ ட்ரைவர் ஒருவரின் மூத்த மகளுடய வரதட்சணை ப்ரச்சனையை மையமாய் வைத்த நிதர்சன கதை. இதன் முடிவை பெரும்பாலானவர்களுக்கு புரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இண்ட்ரஸ்டிங்

11. வேண்டுதல்
மகனை தேடியலையும் தம்பதிகளின் நம்பிக்கையை பற்றிய கதை. நல்ல கதை. இரண்டு ட்ராக்குகளில் பயணிக்கிறது. இதிலும் கதையை மீறிய விஷயங்கள்.

12.நகரம்.

இயந்தரமயமாகிவிட்ட நகர வாழ்க்கையில் மனிதத்தன்மையே இல்லை என்று நினைத்தவனுக்கு சடுதியில நடக்கும் ஒர் நிகழ்வு மூலமாய் இல்லை என்பதை  உணர்த்தும் ஈரமுள்ள கதை.

எல்லா கதைகளும் மும்பை, ராமேஸ்வரம் அதனைச் சுற்றியே சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகளில் ஒரு கட்டுரைத்தன்மை இருப்பது கதை படிக்கும் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. அதே போல ஒவ்வொரு கதையிலும், கதை மாந்தர்களின் வேலை, அவர்களின் வாழ்க்கை நிலை, போன்றவற்றை எல்லாம் சொல்லிவிட்டுத்தான் கதைக்கே வருகிறார். அது எல்லாக் கதைகளுக்கு தேவையில்லை என்று எனக்கு படுகிறது. ஆனால் அதே விவரங்கள் கதையை மீறி நமக்கு பல விஷயங்களை அளிக்கவும் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

குசும்பன் said...

அப்ப படம் சூப்பர் ஹிட்டா?


:)))

rajasundararajan said...

அகநாழிகை வாசுதேவன் எழுதிய நேர்முறையான மதிப்புரையை வாசித்துவிட்டு இப் புத்தகத்தை வாங்கினேன்.

யெஸ். பாலபாரதி சற்றிப்போது தன் வலைத்தளத்தில் பேய்களைப் பற்றியதொரு நகைச்சுவைப் பதிவு இட்டிருந்தார். அதுகாரணம், 'பேய்வீடு' கதையை முதலில் வாசித்தேன். மறுநாள் 'பாரதியின் ஒரு பாட்டு' வாசித்தேன். ('வலசை' இரண்டாம் இதழ், 'அப்படிப் பேசினார் ஸ்ஜராதுஸ்த்துரா' கம்பராமாயணம் என) கலந்து கட்டி வாசிப்பதால், "சாமியாட்டம்" வாசித்து முடிக்க எனக்கு ஒருமாதம் கூட ஆகலாம்.

உங்களைப் பாராட்டுகிறேன். ஒரு புத்தகம் வந்தவுடன் வாங்கி வாசித்து விமர்சனமும் எழுதி இட்டிருக்கிறீர்களே, இந்த அக்கறைதான் தொழிலுக்கு மரியாதை. வாழ்க!

'பேய்வீடு' நன்றாக எழுதப்பட்டுள்ள ஒரு கதை. இப்படி ஒரு முடிவைப் 'பகுத்தறிவு' எழுத்தாளர்கள் வைப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இருந்தாலும் பேய்க்கதை சோல்லி மிரட்டும் சித்தப்பனை அந்த exploitation-இல் இணைத்திருப்பது பாராட்டுக்கு உரியது.

பாரதி மீது உள்ள மரியாதையால் 'பாரதியின் ஒரு பாட்டு' எனது அடுத்த தேர்வானது. மரியாதை உண்டுதான் என்றாலும் இப்படி 'வாழ்க்கையில் கடைப்பிடிக்கிற' இலக்கியம் படைத்திருப்பேனா என்றால், அது romanticism ஆகி உறுத்திவிடுமே என்று கூச்சம்பட்டு விலகியிருப்பேன்.

அப்பா இட்லி விற்பது பொருத்தமற்றதாக எனக்குத் தெரியவில்லை. வறுமைக் காரணத்தை வெளிப்படுத்த வெட்கப்பட்டு, 'ஊர்நாட்டில் வயசுக்கு வந்தவுடன் வீட்டுக்குள் அடைக்கும்' ஒரு வழக்கத்தை முன்வைத்து மகளது படிப்புக்கு முறிவு தேடுகிறார். பொறுக்கிப் பயல்கள் புழங்கும் வழியில் அவள் போய்வருகிறாள் என்பது அப்பாவின் பின்னணி காரணமாகத்தான் பரபரப்புத் தருகிறது. மேலும் 'வயசுக்கு வந்ததும் வீட்டுக்குள் அடைத்தல்' என்பதில் தமிழகத்தின் சில ஜாதிய வழக்கமும் உள்ளடங்கி இருக்கிறது.

காலப் பறவை said...

ஸ் பெ உனக்கு சிறுகதை வாசிக்க தெரியாது... அண்ணனே சொல்லிட்டாரு 'நீ வாசித்தது கட்டுரை தொகுப்பாம்' :)))

ரமேஷ் வீரா said...

தலைவரே ,,, வந்தனம் ....தங்களின் தொகுப்பே போதுமானது ... புத்தகம் படிக்க தேவையில்லை ....

Rajan said...

உங்கள் விமர்சனம் அருமை... இன்று முதல் பத்து நாள் எங்க பக்கத்து ஊர் திருப்பூர்ல புத்தக கண்காட்சி நடக்குது.. உங்க புக் வங்கி படிச்சுட்டு நானும் முடிஞ்சா விமர்சனம் போடரேன்

- யெஸ்.பாலபாரதி said...

நன்றி கேபிள்.. :)

aotspr said...

நல்ல தகவல்!........
பாராட்டுகள் !









Website Name Email Signature
EZDT EZ Driving Test (Free) aotspr@gmail.com "Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com"
TCW Tamil Comedy World aotspr@gmail.com "நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
TC Tami Christians aotspr@gmail.com "நன்றி,
கண்ணன்
http://tamilchristians.info"

"உங்கள் தகவலுக்கு நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"