Thottal Thodarum

Jan 17, 2013

புத்தக கண்காட்சி -4

கடந்த ரெண்டொரு நாளாய் புத்தக கண்காட்சியில் நல்ல கூட்டம் விடுமுறை நாளாகிவிட்டதால் பார்க்கிங் எல்லாம் இடமாற்றம் செய்திருந்தார்கள். மாலையில் பைக் வைத்துவிட்டு  போனால் இருட்டில் எங்கே வைத்தோம் என்று நிலவொளியில் தேடித்தான் எடுக்க வேண்டும். அங்கே லைட் வசதிகள் ஏதும் செய்யாமல் வைத்திருப்பது படு கொடுமை.  வேடியப்பனின் ஸ்டாலில் அமர்ந்திருந்த போது ஒர் இளம் பெண் உடன் வந்தவரின் கையில் தன்னுடய துப்பட்டாவை கட்டி, இன்னொரு முனையை தன் கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டு, மேலும் அவரின் கையை வேறு பிடித்தபடி கண்காட்சி முழுவதும் சுற்றினார். அப்பெண்ணின் தந்தையாய் இருக்கவேண்டும். 


ஆயிரத்தோரு இரவுகள் புத்தகத்தை நின்ற வாக்கில் படிக்க ஆரம்பித்து இருபது பக்கம் முடித்துவிட்டேன். நடுவில் எறும்பு ராசகோபால், அவருடய உதவி இயக்குன நண்பர் ஆகியோருடன் ஒரு சின்ன வாக். வழக்கம் போல் லீச்சி ஜூஸ் கடையில் போய் நின்றது. ஆளுக்கொரு ஜூஸ் குடித்து விட்டு வழக்கம் போல் மீண்டும் சுற்ற ஆரம்பித்தோம். வழியில் உமாசக்தியை சந்தித்தோம். அதற்குள் குகன் ஸ்டால் நம்பர் ஒன்றைச் சொல்லி நிஜந்தனின் புதிய நாவல் வெளியீடு ஆறரை மணிக்கு என்றார் சொன்ன போது ஆறு.. நாங்கள் வழக்கம் போல ஜூசெல்லாம் குடித்துவிட்டு போகும் போது புத்தகத்தை வெளியிட்டு நிஜந்தன் வீட்டிற்கே போய்விட்டாராம்.  

அஜயன் பாலாவின் நாதன் பதிப்பகம் இம்முறை ஸ்டால் போட்டிருக்கிறார்கள். ப்ரவீன்குமாரை சந்தித்தேன். அஜயன் பாலாவின் உலக சினிமா வரலாறும், ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ராஜ் வீடியோவிஷனில் கர்ணன் புத்தம் புதிய டிஜிட்டல் காப்பி டிவிடி 250ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். நிறைய பழம் பெரும் படங்கள் விற்பனைக்கு இருந்தது. ஒர் வயதான நபர் தன் மனைவியை அழைத்து வந்து கடைக்குள் விட்டு ‘உனக்கு தேவையான பழைய படம் எல்லாத்தையும் எடுத்துக்க” என்று சத்தமாய் சொல்லியபடி வெளியே நின்ற ஒர் ஆண்டியை சைட்டடிக்க, “எனக்கெதுக்கு படம்” என்று சட்டென திரும்பிய பெண்மணி அவரின் நிலையைப் பார்த்து கையைப் பிடித்து ஒர் அழுத்து அழுத்தி இழுத்துக் கொண்டு போனார். ஒரு அப்பளம் மற்றும் ஸ்நாக்ஸ் விற்கும்  கடை ஒன்று இருக்கிறது. செம கூட்டம் முந்திரி, வறுத்தது, காரம் போட்டது, உப்பு போட்டது, அரிசி, உளுந்து அப்பளங்கள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். செம கூட்டம். எதை எடுத்தாலும் இருபத்தைந்து ரூபாய் என்கிறார்கள். காலை, பகல், இரவுக் கொள்ளை.

நிறைய பேர் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். ஆனால் அவர்கள் கேட்கும் எந்த புத்தகத்தையும் வாங்கிக் கொடுத்ததாய் தெரியவில்லை. ஒரு குழந்தை கலரிங் புக் கேட்க, நீ வரைஞ்சு கிழிச்சது போது என்றாள் அவளின் தாய். குழந்தையின் முகம் சூம்பிப் போய்விட்டது. கண்காட்சிக்கு வரும் அத்துனைபேரும் ஆளுக்கு ஒரு புத்தகம் வாங்கினாலே விற்பனை நன்றாக இருக்கும். நிறைய பழைய  எழுத்தாளர்கள் புதிய பதிப்பகங்களில் தங்கள் புத்தகங்களை வெளியிட்டிருந்தார்கள். கேட்டதற்கு ராயல்டி மற்றும் விற்பனை குறித்த பொய்யான தகவல்கள் என்று வருத்தப்பட்டார்கள். எனக்கு தெரிந்து போன புத்தக சந்தையில் முன்னூறுக்கும் மேற்பட்ட காப்பிகள்  இரண்டு நாட்களில் விற்ற கொங்கு நாட்டு எழுத்தாளரின் புத்தகத்தின் விற்பனை வெறும் 75 என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு பதிப்பகத்திடம் போகாமல் வேறு என்ன செய்வார். யாரையும் நம்ப முடியலை.

Post a Comment

2 comments:

திருவாரூர் சரவணா said...

///////////எனக்கு தெரிந்து போன புத்தக சந்தையில் முன்னூறுக்கும் மேற்பட்ட காப்பிகள் இரண்டு நாட்களில் விற்ற கொங்கு நாட்டு எழுத்தாளரின் புத்தகத்தின் விற்பனை வெறும் 75 என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு பதிப்பகத்திடம் போகாமல் வேறு என்ன செய்வார். யாரையும் நம்ப முடியலை.//////////


இப்போதைய உலகத்தில் யாராவது யாரையாவது ஏமாற்றிக்கொண்டோ, சுரண்டிக்கொண்டோதான் இருக்கிறார்கள். சிலர் எப்போதும் யாருக்காவது உழைத்துவிட்டு, யாரிடமாவது ஏமாந்துவிட்டேதான் இருக்கிறார்கள்.

S.Sengo said...

வீட்டுல, 24 Hours நியூஸ் டிவி அதிகமா பார்ப்பாங்க போல, பாவம்.