மக்களை கொள்ளையடிக்கும் தியேட்டர்கள்/ மால்கள்-5

சத்யம் ப்ளஸ்கள்
சென்னையில் வசிக்கும் முக்கால்வாசி ரசிகர்கள் மிகவும் விரும்பி படம் பார்க்கும் திரையரங்கு ஒன்று உண்டென்றால் அது சத்யம் தான்.காரணம் ரசிகர்களுக்கு அவர்கள் செய்து கொடுக்கும் வசதிகள். சரியான சீட்டுக்கள் கூட இல்லாத திரையரங்குகள் எல்லாம் நூறும் இரு நூறுமாய் வாங்கி கொண்டிருக்க, அருமையான சீட்டிங், லேட்டஸ்டான ஓளி,ஒலி, நல்ல ஏர்கண்டீஷன், ரசிகர்களுக்கு சரியான சர்வீஸ், புகார் செய்தால் அதன் மீது உடனடியான நடவடிக்கை என்று எல்லா விதத்திலும் பணம் கொடுப்பவர்களை மதித்து, அவர்களுக்கான சர்வீஸ் செய்வதாலும் இந்த தியேட்டர் மீது மதிப்பு எல்லோருக்கும். இந்த திரையரங்கு வளாகம் வந்த பிறகு தான் தமிழகத்தில் மல்ட்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் வேறூன்ற ஆரம்பித்தது. இந்த வளாகத்தைப் பற்றிச் சொல்லப் போனால் நிறைய ப்ளஸுகளைத்தான் சொல்ல வேண்டும். மழைக்காலங்களில் கார் பார்க்கிங்கிலிருந்து ரசிகர்களை அழைத்து வர பெரிய குடைகளுடன் ஆட்களை வைத்து தியேட்டர் வாசல் வரை அழைந்து வந்ததை நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன். பின்பு ஆன் லைன் புக்கிங். முதல் முதலில் மிக சுலபமான ஆன்லைன் புக்கிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான்.  அதே போல டிக்கெட் வாங்க வருபவர்களிடம் பார்க்கிங் செய்துதான் ஆகவேண்டும் என்று கொள்ளையடிக்காமல் டெம்ப்ரவரி பார்க்கிங்கில் அரை மணி நேரத்திற்கு இலவசமாய் அனுமதியளித்த முதல் திரையரங்க வளாகமும் இதுதான்.



முன்பெல்லாம் தியேட்டருக்கு சென்று ரிசர்வேஷன் செய்ய வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய முடியும் ஆனால் காலை 10 மணி முதல் இரவு பதினோரு மணி வரை கவுண்டர் ஓப்பன் செய்த சர்வீஸ். உடல் ஊனமுற்றவர்களுக்கு வீல் சேர், மற்றும் ஸ்பெஷல் கேர் கொடுக்க ஒர் உதவியாளர். அவர்களின் ஹாஸ்பிட்டாலிட்டியை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் கும்கி படத்திற்கு முதல் நாள் மதிய காட்சிக்கு கவுண்டரில் ஒருவர் டிக்கெட் ரிட்டர்ன் செய்ய வர, அவரிடமிருந்து நான் டிக்கெட் வாங்கி உள்ளே போனேன். என் சீட்டில் வேறு ஒரு குடும்பம் உட்கார்ந்திருக்க, வெளியே வந்து உதவியாளரிடம் நடந்ததைச் சொன்னேன்.  அதே நேரத்தில் மேலும் இருவர் என் ப்ரச்சனைப் போலவே அவரது சீட்டில் ஆள் உட்கார்ந்திருப்பதாய் சொல்ல, உதவியாளர் ப்ளோர் மேனேஜரை வாக்கி டாக்கியில் அழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் வந்த மேனேஜரிடம் உதவியாளர் விஷயத்தை சொல்ல, அவர் நாங்கள் புக் செய்ததா என்று கேட்டார்? இல்லை உங்கள் கவுண்டரில் ரிட்டர்ன் செய்ய வந்தார்கள் அங்கே தான் வாங்கினோம் என்று சொல்ல, கொஞ்சம் தயக்கத்துடன் “சார்.. படம் ஆரம்பித்துவிட்டது. நான் போய் செக் செய்துட்டு வர்றேன். அது வரை உள்ளே நின்னுக்கங்க படத்தை ஏன் மிஸ் பண்ணனும்? என்று பவ்யமாய் சொல்ல, திட்டகூட தோன்றாமல் சரி என்று மூவரும் படம் பார்க்க சுவரோரமாய் நின்றோம். அடுத்த ஐந்து நிமிடங்களில் உள்ளே வந்த மேனேஜர் மூவரையும் அழைத்து சார்.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் பத்து ரூபாய் டிக்கெட் வரிசையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். சிஸ்டத்தில் நேரம் ஆகிறது என்று பத்து ரூபாய் டிக்கெட்டில் உட்கார வைத்துவிட்டு போய்விட்டார்கள். எனக்கோ செம கடுப்பாகிவிட்டது மாட்டினாங்கடா.. சத்யம் காரங்க என்று உள்ளுக்குள் குதூகலித்துக் கொண்டே கஷ்டப்பட்டு படம் பார்க்க, இடைவேளை வந்துவிட்டது. 120 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டு, 10 ரூபாய் டிக்கெட்டில் உட்கார வைத்துவிட்டார்களே என்று கோபம் வேறு ஏறிக் கொண்டேயிருந்தது. படம் முடியும் தருவாயில் ஒரு உதவியாளர் எங்கள் சீட்டிக்கு அருகில் நின்றிருக்க நான் வேறு ஏதோ செக் செய்கிறார்  என்று நினைத்திருந்தேன். படம் முடிந்த உடன் எங்கள் மூவரையும் உடனிருந்து வாசல் வரை அழைத்து வந்து “ சாரி சார்.. எங்க சைடுலதான் ஏதோ ப்ரச்சனை எங்களை மன்னிக்கணும். என்று சொல்லியபடி எங்கள் எல்லோருக்கும் 120 ரூபாய் பணத்தை ரிட்டர்ன் செய்தார். எனக்கு ஆச்சர்யமாய் போய்விட்டது. சரி.. படம் பார்த்த பத்து ரூபாயாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் இல்லை சார்.. எங்களது தவறினால் தான் உங்களுக்கு சிரமாகிவிட்டது எனவே மன்னிகக் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது ப்ளோர் மேனேஜரும், வந்து  அவர் பங்குக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு போனார். இதை விட வேறு என்ன உதாரணம் சொல்ல முடியும். இம்மாதிரி பல அனுபவங்கள் சத்யமில் நடந்திருக்கிறது எனக்கு. அதை பல முறை என் பதிவுகளில் பதிந்திருக்கிறேன்.

மைனஸுகள்.
5 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த பைக் பார்க்கிங்கை பத்து ரூபாய் ஆக்கினவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று ஆக்கிவிட்டார்கள் இவர்களைப் பார்த்து தியேட்டரில் வசதிகளை செய்து கொடுக்காத மற்ற தியேட்டர்கள் பார்க்கிங் சார்ஜை மட்டும் தங்களுக்கு வசதியாய் ஏற்றிவிட்டார்கள். அடுத்து ஆன்லைன் புக்கிங் நிறைய ரசிகர்களின் முக்கியமான குறை இவர்கள் புதிய படங்களுக்கான ரிசர்வேஷனை ரிலீஸ் செய்வதே நடு ராத்திரியில் தான். தற்போது இவர்கள் இரண்டாம் நிலை ஏரியாக்களில் மல்ட்டிப்ளெக்ஸுகள் ஓப்பன் செய்திருப்பதால் அத்தியேட்டர்களில் முதலில் டிக்கெட் புக்கிங்கை ஓப்பன் செய்து அது புல் ஆனதும் சத்யம், எஸ்கேப்பில் டிக்கெட் கொடுக்க அரம்பிக்கிறார்கள் என்றும், அதுவரை ஓப்பன் செய்யும் போதே புல் என்று காட்டுகிறது. ஆனால் மற்ற அரங்குகள் புல்லானது மீண்டும் அதே நாளுக்கு சத்யமில் டிக்கெட் கிடைக்கிறது என்கிறார்கள். அதே போல இண்டர்நெட் புக்கிங் செய்வதால் இவர்களுக்கு தியேட்டரில் ஆள் பலம் குறைவாகவே பயன்படும். ஆனால் பத்து ரூபாய் புக்கிங் சார்ஜை இருபது ரூபாய் ஆக்கியது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது. பின்பு இங்கே இருக்கும் புட்கோர்ட்டில் கார்டு வாங்கியெல்லாம் சாப்பிட சொல்லுவதில்லை என்றாலும், கேம்ஸ் செண்டரில் கார்டுகளில் சார்ஜ் ஏற்றிக் கொண்டுதான் விளையாட வேண்டும். விளையாடி முடித்து வெளியே வரும் போது மீண்டும் கார்டை கொடுத்தால் மீதமிருக்கும் பணத்தை தருவதில்லை. நாம் விளையாடித்தான் கழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பான ஒரு விஷயம். அதை பற்றி ரெண்டொரு முறை புகார் செய்தும் அதற்கு சரியான பதிலை கொடுக்கவில்லை இதுவரை. இவர்களும் வெளி தின்பண்டங்களை அனுமதிப்பதில்லை. அநியாய விலை வைத்துத்தான் பாப்கார்னை விற்கிறார்கள். அதிலும் பல சமயங்களில் பாப்கார்ன் அளவு மிக குறைவாக தர, கம்ப்ளெயிண்ட் செய்வேன் என்று சொன்னால் தான் சரியாக பில் செய்து தருகிறார்கள். தண்ணீர் மட்டும் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுப் போகலாம். அதே போல எஸ்கேப்பில் காலைக் காட்சியின் போது சரியாக அந்த ஷோ டைமுக்குத்தான் கதவை திறந்து விடுவதால் இண்டெர்நெட்டில் டிக்கெட் புக் செய்தவர்கள் கவுண்டரிலோ, அல்லது அங்கிருக்கும் ஆன்லைன் கிஸோக்கிலோ டிக்கெட் எடுத்து போவதற்குள் படம் ஆரம்பித்துவிடுவதால் தொடக்கம் முதல் பார்ப்பதில் ப்ரச்சனை இருப்பதாய் சொல்கிறார்கள்.  இந்தத் தொடரில் சொன்ன குறைகளை  மற்ற மல்ட்டிப்ளெக்ஸ்காரர்களோ, அல்லது சிங்கிள் ஸ்கிரீன் காரர்களோ கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஏனென்றால் நாம் கேட்கும் வரை கிடைக்கவே கிடைக்காது இவர்களிடம். சமீபத்தில் தேவி திரையங்க வளாகத்தைப் பற்றி எழுதிய போஸ்டை நண்பர் ஒருவர் அவர்களது பேஸ்புக் பக்கத்தில் போடப் போட, தொடர்ந்து அதை டெலிட் செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இதை பொறுமையாய் செய்கிற நேரமிருப்பவர்கள் தியேட்டரில் உள்ள குறையை சரி செய்ய முற்படுவதில்லை. ஆனால் சத்யம் நிர்வாகம் அப்படி செய்வார்கள் என்று எண்ணவில்லை. நிச்சயம் குறைபாடுகள் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தான் இக் கட்டுரைத் தொடரை முடிக்கிறேன்.
கேபிள் சங்கர்

Comments

maxo said…
How about AGS & PVR ?
arul said…
useful information
sarav said…
Cable,
Sathyam Multiplex is good but i feel the sound system is not good. The volume is very low when compared to the other theaters. what do you think about this. Why i say this because, i am partly deaf and when i go to sathyam i have to use my Amplifier which i dont use in other theatres
Unknown said…
தகவலுக்கு . நன்றி .
Unknown said…
இது மாதிரி ஏதாவது படிக்கும் போது நிம்மதி வருகிறது. சத்தியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
திருச்சியில் உள்ள மல்டிபெள்ஸ்சில் ஒரே இடத்தில் இருக்கும் ஃபுட் கோட்டில் வாங்கிய கூல் டிரிங்சை திரை அரங்கத்திற்குள் எடுத்து செல்ல விடுவதில்லை.இது சரியான முறைதானா?

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.