Thottal Thodarum

Apr 19, 2013

கெளரவம்

 கெளரவக் கொலைகள் அதிலும் காதலுக்காக செய்யப்படும் கொலைகள் புதிதல்ல. ஜாதி எனும் அழுக்கு மனித மனங்களில் படர ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கத்தான் செய்கிறது. தீண்டாமை ஒழிப்பு, அது இது என்று ஆயிரம் போராட்டங்கள் வந்தாலும் தீண்டாமையும், ஜாதியும்  இந்தக் காலத்திலும் ஒழியாமல் இருக்கிறது என்பதை எந்த ஊர், எந்த மாநிலம் என்று சொல்லாமல் கதை சொல்லியிருக்கிறார்கள்.ஊரின் பணக்கார வீட்டுப் பெண் அவ்வூரில் காலனியில் இருக்கும் இன்ஜினியர் பையனுடன் ஓடிப் போய்விட, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பையனின் கல்லூரித் தோழனான சிரிஷ் கண்டறிய முற்படுவதுதான் கதை.



அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷின் முதல் படம். அல்லு அர்ஜுனின் குட்டி ஜெராக்ஸாய் இருக்கிறார். அல்லு அர்ஜுனை முதல் படத்தில் பார்த்த போது ஏற்பட்ட இம்பாக்ட் இந்த படத்தின் மூலமாய் கிடைக்காது என்றாலும், பாடிலேங்குவேஜில், நடிப்பில், நடனத்தில் அவர் போக வேண்டிய தூரம் நிறைய. யாமினி கெளதம் அழகாய் இருக்கிறார். தமிழ் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இரண்டு பக்க நடிக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான நடிகர்கள் தெலுங்கு மொழி நடிகர்கள் தான் என்றாலும் நடிப்பில் யாரும் சோடை போகவில்லை. முக்கியமாய் வில்லனாய் வருபவரும் அவருடய வலது கையாய் வரும் நடிகரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ப்ரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்வது அநியாயம். பெண்ணின் அப்பாவாக மிகவும் குறைந்த காட்சிகளில் வந்தாலும் அழுத்தம். நாசர் உட்கார்ந்தபடி கம்யூனிசம் பேசுகிறார். பின்பு ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேலுக்கு இதிலும் முக்கியமான கேரக்டர். நல்ல நடிப்பு. மிகவும் இயல்பான பாடிலேங்குவேஜ். ஏன் இவர் இந்த க்ரூப் படங்களில் மட்டுமே இருக்கிறார் என்று தெரியவில்லை.

ப்ரீதாவின் ஒளிப்பதிவு நன்றாகவே இருக்கிறது. ஆற்றோர டெண்டுகளை கலைக்க வரும் சண்டைக் காட்சிகளில் விஷூவலில்  தெளிவின்மையும், ஆட்டமும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். தமனின் இசையில் பாடல்கள் பெரிதாய் இல்லாவிட்டாலும் பின்னணியிசையில் ஓரளவுக்கு உழைத்திருக்கிறார்.  படத்திற்கு வசனம் விஜி. எங்கே போனார் பழைய விஜி? ப்டம் நெடுக முதல் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை வசனங்களாலேயே சொல்லப்படும் திரைக்கதையில் வசனங்கள் எல்லாம் இயல்பாக இல்லாமல் டீக்கடையில் ஆரம்பித்து காலனி ஆட்கள் வரை புத்திசாலித்தனமாகவே பேசுவது ஒட்டவில்லை. தீண்டாமையைப் பற்றி நாசர் பேசும் போது, காலனி குமரவேலைப் பார்த்து “என்னவோ தீண்டாமை, கீழ் ஜாதி மேல் ஜாதின்னு சொல்றானுங்களே இவனுங்களே இவங்க காலனியில இருக்கிற இன்னொரு ஜாதியோட சம்பந்தம் வச்சிக்க மாட்டானுங்க. அப்புறம் எப்படி ஜாதி ஒழியும்?” என்று கேட்குமிடத்தில் படம் முழுக்க விட்ட இடத்தை பிடிக்கிறார்.

கதை, திரைக்கதை, இயக்கம் ராதா மோகன். சீரியசான ஜாதிப் ப்ரச்சனை, அதன் காரணமான கொலைகளைப் பற்றி படம் தான் என்றாலும அதை ஒரு சுவாரஸ்யமான திரில்லராய் கொடுக்க முயற்சித்திருக்கிறார். மிக மிக மெதுவாக கதைக்குள் செட்டிலாகிறார். நாலு பக்கம் சுடுகாடு இருக்கும் ஊர், ஏழு வருஷம் முன்னால் ஜாதிக்கலவரம் நடந்த ஊர், காணாமல் போன ஷண்முகத்தைப் பற்றி கேட்டால் யாருமே பதில் சொல்லாமம் புதிராய் பேசுவது, என்று மெல்ல மெல்ல கதையில் சூடேற்றி நண்பனின் தேடலை மீடியாவில் கொண்டு வந்து மாணவர்கள் போராட்டமாய் மாற்றும் வரை ஒர் பரபர திரைக்கதையை எதிர்பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

படம் நெடுக கேரக்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அக்கேரக்டர்களை அவர்கள் வருவதற்கு முன்பே ஏதோ ஒரு இடத்தில் வசனத்தில் சொல்லுகிறார். இப்படிப்பட்ட ஊர் உயர் ஜாதி ஆட்கள், கிராமம், காலனி ஆட்கள் என்று காட்டப்படும் போதே கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் குன்றிப் போய், சரி எப்படித்தான் கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்ற ஆர்வம் மட்டுமே மிச்சம் இருக்கிறது. படம் நெடுக நிறைய கருத்துக்கள் சொல்லிக் கொண்டே வருகிறார். அது படத்திற்கு தேவையோ இல்லையோ, ஆரம்பக் காட்சியில் சிரிஷின் ப்ராஜெக்டை ஓகே செய்தவர் இன்ஜினியரிங் படிச்சிட்டு அமெரிக்காவுல போய் செட்டிலாகாமல் இங்கேயே வேலை செய்ய ஆசைப்படுறீங்களே? என்று சொல்லும் போது அவனே மளிகை சாமான் விக்க நம்ம ஊருக்கு வர்றான் என்று சொல்வது. நண்பனின் ஊருக்குள் நுழையும் போது குவாட்டருக்காக லூசுத்தனமாய் அரசியல்வாதிகள் குவாட்டரும், பிரியாணியும் கொடுத்து பழக்கியதால் நீங்கள் அரசியவாதியா என்று காசு கேட்குமிடம். கிரிகெட் மேட்ச் பிக்சிங் பற்றி டீக்கடையில் பேசுமிடம், ஹீரோயினின் அப்பா ஒரு பெங்காலியை காதல் திருமணம் செய்து கொண்டு நடுவில் ஒரே ஒரு காட்சியில் அப்பாவும் மகளும் பெங்காலியில் பால் இல்லை என்பது போன்ற விஷயத்தை பேசிக் கொள்ளும் காட்சி, ஊருக்கே பெரிய குடும்பமாய் இருக்கும் ப்ரகாஷ்ராஜின் மருமகள் ஒர் கிறிஸ்டியன் பள்ளியில் வேலை செய்வது, காலனியில் இருக்கும் ஆட்டிச சிறுவன். காணாமல் போன சண்முகத்தின் அப்பா கேரக்டர்.  ஏன் குமரவேல் சென்னை பாஷை பேசுகிறான் என்பதற்கான விளக்கம். சென்னையில் போன்ற நகரங்களில் ஜாதி வேற்றுமை பார்க்காமல் இருக்கிறார்கள் எனும் விஷயம். கிராமக் கால்நடை மருத்துவமனையின் அவல நிலை. என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஜாதிக் கலவரத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணை யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று குமரவேல் சொல்லும் போது ஏன் நீ செய்து கொள்ளக் கூடாது என்று சிரிஷ் கேட்குமிடம் நச். ஊரே காமெடி மட்டும்தான் படம் என்ற நினைப்பில் காமெடிப்படங்களாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட மிக சீரியஸான விஷயத்தை இந்தியாவில் ஜாதி, மதம், இடம், ஊர் எதையும் குறிப்பிடாமல் சொன்னதற்காக மட்டும் பாராட்டலாம். 


Post a Comment

5 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்ல படம் நாளைக் காலை கட்சிக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சு

Anonymous said...

நான் இன்றே போயிருக்க வேண்டிய படம்.. தப்பிதமாக உதயம் போய்விட்டேன்... தவறுக்கு தண்டனை...

விமல் ராஜ் said...

அருமையான விமர்சனம்....

தெரியாம தான் கேக்குறேன்...வலைப்பதிவு போடுவதை உங்களுக்கு வேற வேலையே கிடையாதா !?!?! :-)

sharfu said...

Had same feeling, loosely packed, ok type movie.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

படங்களின் அளவை குறைக்கலாமே!