மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள் /மால்கள் -4
சரி மால்களில் மட்டும்தான் இம்மாதிரி கொள்ளைகள் என்று நினைத்தால் அது தவறு. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் உள்ள் ப்ரச்சனைகள் அதை விட அதிகம். அதில் முக்கியமானது டிக்கெட்டின் விலை. மல்ட்டிப்ளெக்ஸிலாவது பரவாயில்லை. அதிகபட்ச கட்டணமாய் 120 என்று அரசு நிர்ணையித்த விலையில் டிக்கெட் தருகிறார்கள். ஆனால் இந்த சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. சென்னையில் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களின் அதிகபட்ச அரசு நிர்ணைய விலை 50. குறைந்த பட்ச டிக்கெட் 10. ஆனால் சென்னையை சுற்றியுள்ள, ஜோதி, எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம், காசி, தாம்பரம் வித்யா என்று லிஸ்ட் எடுத்தால் எல்லா தியேட்டர்களிலும் குறைந்த பட்ச டிக்கெட் விலையே 90-120 என்று விற்கிறார்கள். இன்னும் சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படமாய் அமைந்துவிட்டால் 200,300 என்று தான் முதல் மூன்று நாட்களுக்கு. இவர்களிடம் ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலை எம்.ஜி கொடுத்திருக்கிறோம் அதை வசூல் செய்ய வேறு வழி கிடையாது என்பார்கள்.
இவர்கள் அதிக விலை கொடுத்துவிட்டு, ஒரே ஏரியாவில் பத்து தியேட்டர்களில் போட்டு காசை எடுக்க, சுரண்டப்படுவது சாதாரண சினிமா ரசிகனைத்தான். சரி பெரிய படங்களுக்குத்தான் அதிக விலை கொடுத்து வாங்கியதற்காக டிக்கெட் விலை அதிகம் விற்கிறோம் என்று சொல்கிறவர்கள் ஏன் சிறிய படங்கள் வெளியாகும் போது அரசு நிர்ணையித்த விலையில் டிக்கெட் விற்கக்கூடாது?. அப்படி விற்றால் அட்லீஸ்ட் புதிய சிறு முதலீட்டுப் படங்களை தியேட்டரில் பார்க்க மக்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். அதையும் இவர்கள் கொடுப்பதில்லை. சரி.. இவ்வளவு பணம் வாங்குகிறார்களே தியேட்டரில் சீட் வசதி, ஏசி, கழிவறை போன்ற வசதிகள் எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களானால் படு கேவலமாய் இருக்கும். அவ்வசதிகளை பற்றி நாம் புகார் செய்தால் சரியான பதிலும் இருக்காது. உதாரணத்துக்கு எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டரை எடுத்துக் கொண்டால் தியேட்டருக்குள் கழிவறை இருக்கும். சமயங்களில் கதவைத் திறந்தால் மூத்திர நாத்தம் குடலைப் பிடுங்கும். பில்லா2 சமயத்தில் தியேட்டரின் திரையில் நட்ட நடுவில் ஒரு கிழிசல். அதனூடேயே படம் திரையிட்டார்கள். இதற்கு முன்னர் படு கேவலமான ஒரு ப்ரொஜக்ஷனில் படம் ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் தற்போது PXD டிஜிட்டல் ப்ரொஜக்ஷனுக்கு மாறியிருப்பதை தவிர, நூறு ரூபாய் கொடுத்து படம் பார்க்க எந்த விதமான தகுதியும் இல்லாத ஒரு அரங்கமாய்த்தான் இருக்கிறது.
நம்மூரிலாவது பரவாயில்லை திருச்சி, மதுரை போன்ற ஏரியாக்களில் எல்லா பெரிய படங்களுக்கும் இருநூறு முன்னூறு என்றுதான் டிக்கெட் விலை. வேறு வழியேயில்லாமல்தான் ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு சினிமாவின் வாழ்நாளே பத்து பதினைந்து நாளாகிவிட்ட நிலைக்கு காரணம் டிக்கெட் விலைதான். திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் முடிந்த வரை ரசிகர்களிடம் பணத்தை பிடுங்க என்ன வேண்டுமானாலும் செய்ய, அட போங்கடா.. நான் உலக தொலைக்காட்சியிலோ, அல்லது லோக்கல் கேபிளிலோ, அதையும் விட்டால் திருட்டு டிவிடியிலோ பார்த்துக் கொள்கிறேன் என்று முடிவெடுத்துவிடுகிறான்.
சென்னையில் ஏவி.எம்.ராஜேஸ்வரி என்றொரு தியேட்டர் இருக்கிறது. அதிகபட்ச டிக்கெட் விலையே 50 ரூபாய் தான். நல்ல ஒளி, ஒலி அமைப்பு இருக்கும் ஆனால் சீட் மட்டும் முதுகின் பாதி வரைதான் இருக்கும். மற்றபடி ஏசி, அநியாய விலையில்லாத கேண்டீன் என்று ஒரு மிடில் க்ளாஸ் ரசிகனுக்கு ஏற்ற அனைத்து வசதிகளோடு இருக்கும். சென்னையின் சினிமா இதயமான இடத்தில் இத்திரையரங்கம் இருப்பதாலும் பெரும் பாலான உதவி இயக்குனர்கள் இத்திரையரங்கைத்தான் நாடுவார்கள் அதற்கு முக்கிய காரணம் விலை. ஒரு ஹிட் படம் மற்ற திரையரங்குகளில் ஓடுவதை விட இத்திரையரங்கிள் பத்து நாள் அதிகமாகவே ஓடும். காரணம் டிக்கெட் விலை. இன்னும் கொஞ்சம் நல்ல சீட்டுக்கள், கனிவான முகவர்களை வைத்தால் எத்தனை மல்ட்டிப்ளெக்ஸ் வந்தாலும் இந்த திரையரங்கத்திற்கு குறை ஏதும் வ்ராது.
செங்கல்பட்டு ஏரியாவில் இருக்கும் பெரும்பாலான தியேட்டர்களில் நல்ல டி.டி.எஸ் சிஸ்டம் கூட கிடையாது. பல திரையங்குகளில் க்யூப் ப்ரொஜக்டருக்கு பல்ப் மாற்றுவது இல்லை. இத்தனை மணி நேரம் தான் ஒரு பல்பை ப்ரொஜக்டரில் ஓட்ட முடியும் என்றிருந்தால் இவர்கள் அதைவிட ஒரு மடங்காவது ஓட்டிவிட்டுத்தான் வேறு பல்புக்கு மாறுவார்கள். விலை ஒன்றும் அதிகமில்லை நாற்பதாயிரம் வரை தான் இருக்கும் அதற்கு செலவு செய்ய யோசிப்பவர்களின் திரையரங்குகளில் பெரும்பாலும் டிஜிட்டல் ப்ரொஜக்ஷன் இருந்தாலும், ஒரு மாதிரி கருகும்மென தான் ஒளியமைப்பு இருக்கும். இந்த ஒளி, ஒலி, சீட்டு அமைப்புகள், கழிவறை ஆகிய எல்லாவற்றையும் விட, மிகமோசமானது ரசிகர்களை கையாளும் விதம். இஷ்டமிருந்தா வா.. இல்லாட்டி போ எனும் மனப்பான்மை இத்தியேட்டர்களில் அதிகம். இது தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்காரர்களின் மனப்பான்மை. சினிமா என்பது ஒரு அற்புதமான அனுபவத்தை தரக்கூடிய டெக்னாலஜி. ஒவ்வொரு ரசிகனையும் தியேட்டருக்கு கொண்டு வர 70எம்.எம், சினிமாஸ்கோப், டி.டி.எஸ், டால்பி, 3டி, 48HFR, டால்பி அட்மாஸ் என்று புதிது புதிதாய் டெக்னாலஜிக்களை கொண்டு அசத்தி தியேட்டரில் அவனுக்கான அனுபவத்தை தர சினிமா தயாராக இருந்தும், அதை முழுமையாய் பணம் கொடுத்தும் கொண்டு போகாத திரையரங்குகள் நிச்சயமாய் சினிமாவின் வீழ்ச்சிக்கு காரணமாய் அமையும். நேரடியாய் அடிக்கும் கொள்ளைகளை விட ஆன்லைனில் அடிக்கும் கொள்ளை இதை விட அநியாயம் அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
பின்னணியில் இதெற்கெல்லாம் காரணம் . . .
கல்பாத்தி
ரவிச்சந்திரன்
தாணு
ஏவிஎம்
உதயநிதி
ஞானவேல்ராஜா
and Big Heroes
போன்ற
பேராசை பிடித்தவர்கள்தான் . .
மாயவரத்தில் நீர்பறவை இரவுக்காட்சியில்
நாயகனோடு இணைந்தது சில ரசிகர்களும் திரை அரங்கிலேயே
சியர்ஸ் சொல்லி குடித்து கொண்டிருந்த காட்சி அற்புதம் . . .
கூடுதல் கொள்ளை அடிக்கும் திரை அரங்குகள்
கச்சடா பார் ஆக மாறிக்கொண்டு இருக்கினறன
இன்று அதே ஹோட்டலில் ஒரு இட்லி ரூ.10.அதன்படி பார்த்தால் டிக்கெட் விலை ரூ.500 இருக்கவேண்டும்.ஆனால் அது ரூ 80 !!!
திரையரங்கின் கட்டண நிர்ணயத்தில்
அரசு தலையிடக்கூடாது.
ஆட்டோ,ஹோட்டல்,
கிரிகெட் மேட்ச் tariff போன்றவற்றை தண்ணீர் தெளித்து விட்டாற்போல விட்டு விட வேண்டும்.
எனக்கு பெட்ரோல் போடும் போது பேச்சுக் கொடுத்துக் கொண்டே 320 கு பெட்ரோல் போட்டு விட்டு ஒரு பட்டனை அழுத்து 420 ஆக்கி என்னிடம் காசு வாங்கி விட்டார்கள். எனக்குப் பின்னே பொட்ரோல் போட்டவர் அடுத்த சிக்னலில் இந்த விபரத்தைச் சொன்னார்.அவரிடம் மொபைல் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டேன்.
அலுவலகம் முடிந்து வரும் வழியில் பெட்ரோல் பங்கில் கேட்ட போது சர்வசாதாரனமாக 100 ரூபாயை திருப்பிக் கொடுத்தார்கள். இன்னொரு 100 கொடு இல்லையென்றால் மேனேஜரிடம் புகார் கொடுப்பேன் என்று சொன்னதும்/மிரட்டியதும் 100 ரூபாய் கொடுத்தான்.
வந்ததே கோபம் எனக்கு, ஒரு கதகளி ஆடிவிட்டேன். ஆள் என்னிடம் கெஞ்ச ஆரம்புத்து விட்டான்,
மேனேஜரிடம் புகார் போனில் புகார் தெரிவித்ததும் எனக்கு நன்றி சொன்னார்.
அடுத்த நாள் எனக்கு பெட்ரோல் போட்டவனும்/காசு வாங்கியவனும் வேலையில் இல்லை.
இடம் : பெங்களூரு- அல்சூரில் -
பாலாஜி சர்வீஸ் ஸ்டேசன், பெருமாள் கோவில்/மெட்ரோ ஸ்டேசன் அருகில்
இணையத்தில் போலி டோண்டுவை வேட்டையாடிய போது இருந்த தைரியம் வெளியேயும் இப்போது வந்துள்ளது.
அனைவருக்கும் வசதியாக இருக்கும் அதற்கு ஒரு தனி பதிவாக போடுங்கள் ப்ளிஸ்!!!