Thottal Thodarum

Mar 29, 2013

அழகன் அழகி


 

1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம் Star Maker. “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம்.1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்து, எல்லா கிராமங்களுக்கும் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இந்த படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்க்ளில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று நம்பிகையை சொல்லி ஏமாற்றுகிறான்.. மேலும் படிக்க 



என்னடா இது அழகன் அழகி படத்தின் விமர்சனத்தை எழுதச் சொன்னால் இத்தாலிய படம் விமர்சனத்தை போட்டிருக்கிறானே என்று யோசிக்கிறீர்களா? மேலே படமெடுக்கிறேன் என்று சொன்ன இடங்களில் எல்லாம் டிவி சேனலுக்கான டேலண்ட் ஹண்ட் என்று மாற்றிக் கொள்ளுங்கள். ஹீரோயின் ஆதரவில்லாத கிறிஸ்துவ ஆலயங்களில் வேலைப் பார்ப்பவள் என்பதற்கு பதிலாய் அநாதை வீட்டு வேலைக்காரி என்று மாற்றிக் கொண்டு, ஹீரோவின் கூடவே ரெண்டு காமெடியன்களை வைத்துக் கொண்டால் அதுதான் அழகன் அழகி.

ஒரிஜினல் படப்படி 1952ல் நடக்கும் கதை. எனவே ஹீரோ சொல்லும் பொய்யை நம்ப வாய்ப்பிருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் டிவி சேனலில் நடக்கும் ஷோ என்றால் அதுவும் பிரபல டிவி சேனல் நடத்தும் ஷோ எனும் போது பொட்டு பொடுசுகளுக்கு கூட தெரிந்திருக்கும் காலத்தில் ஒர் டிவி சேனல் நடத்தும் ஷோ எனும் போதே பெப் போய்விடுகிறது. இதை தொடர்ந்து காமெடி என்கிற பெயரில் சாம்சும், ஆர்த்தியும் அடிக்கும் காமெடி கலாய்ப்புகள் செம ஓல்ட்.  பல சமயங்களில் இரைச்சல்.  ஒரு பக்கம் ஹீரோயினின் எஜமானர் வீட்டில் இருக்கும் கட்டைக் கால் ரவிமரியா அவனை பிடிங்கடா... போங்கடா என்று கத்துவதைத் தவிர நடிக்கிறேன் என்று வித்யாசமாய் ஒரு குண்டனின் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு சண்டையிடுகிறார். நியாயமாய் ஒரு ஸ்டார் ஹீரோவுக்கு இந்த சண்டைக் காட்சி வைத்திருந்தாலே சிரிப்பாய் சிரித்திருப்பார்க்ள். இதில் ஒர் வில்லன் கேரக்டருக்கும் ம்ஹும். முடியலை. ஏ.வெங்கடேஷ், ஜெகன், ரவிமரியா, இப்படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி என்று ஏகப்பட்ட இயக்குனர்கள் படத்தில் வருகிறார்கள். யாரும் நடிக்க வேண்டும் என்ற எண்ணமேயில்லாமல் இருந்திருப்பது தெரிகிறது. ஏ.வெங்கடேஷைத் தவிர.நந்தா பெரியசாமி படத்தில் சம்பந்தமேயில்லாமல் தீவிரவாதியாய் வருகிறார் குத்து பாடலுக்கு குத்தேயில்லாமல் ஆடுகிறார். துப்பாக்கியாய் சுட்டு வில்லன்களை சுடுகிறார். பவர் ஸ்டார் வேறு ஒரு பாடலுக்கு வந்து போகிறார். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் முடியலை.
கதாநாயகி ஆருஷி ஓரளவுக்கு பார்க்க அழகியாய் இருக்கிறார். புது முகத்துக்கு ஹெவியான ரோல். ரொம்பவே திணறுகிறார். இவர் நடிக்க மறந்த இடத்தில் எல்லாம் பின்னணி குரல் கொடுத்தவர் அருமையாய் குரலில் நடித்து காம்பன்சேட் செய்திருக்கிறார். ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாய் ஏதும் படத்தில் இல்லை. 

ஒளிப்பதிவில் பல இடங்களில் ப்ளீச். சொல்லிக் கொள்ளும் படியாய் ஏதுமில்லை. இசை கண்ணன். பின்னணியிசையில் ஒரிரு இடங்களில் ஓகே. ஆனால் பாடல்களும் ஏற்கனவே ஹிட்டான 1942 லவ் ஸ்டோரியில் வந்த “ஏக் லடிக்கி கோ தேஹ்கா தோ அய்சா லகாவை” அப்படியே சுட்டிருக்க வேண்டாம். க்ளைமாக்ஸுக்கு முன் வரும் டூயட் ஓரளவுக்கு ஓகே.

எழுதி இயக்கியவர் நந்தா பெரியசாமி. இன்ஸ்பிரேஷன் தப்பில்லை. ஆனால் அது ஒழுங்காக வரவில்லையென்றால் அது மிகவும் சொதப்பலாகிவிடும். அதுதான் இப்படத்தில் நடந்திருக்கிறது. சினிமா பாரடைசோவை சுட்டு படமாக்க முடியுமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் நிறைய பேர். ஆனால் அதை சரியான விகிதத்தில் கன்வர்ட் செய்து பாதி படம் சினிமா பாரடைசோ இன்னொரு பாதி தோற்றவனின் கதை என்று ஒரு மாதிரி செய்து வெயில் வந்தது. ஆனால் ஸ்டார்மேக்கரை உல்டா செய்ய வசந்தபாலனிடமிருந்த மெனக்கெடல் கொஞ்சம் கூட நந்தா பெரியசாமியிடம் இல்லை என்பது வருத்தமாய் இருக்கிறது. முதல் பாதி முழுவதும் சாம்ஸ், ஆர்த்தி காமெடிகள் கொஞ்சம் கூட எடுபடவில்லை. நடிகர்களாய் வரும் ஆட்களின் காமெடியும் பெரிதாய இல்லை. ஓரிரு ஆடகளைத் தவிர, குறிப்பாய் ஒர் மாற்று திறனாளி காம்பியரர் ஆவதற்கு செய்யும் முயற்சி ஒரு உதாரணம். நிறைய காட்சிகள் நாடகத்தனமாய் வசனங்களில் பார்க்கும் காட்சியையே திரும்ப வசனமாய் சொல்லுமிடங்கள் எரிச்சல் ஊட்டுகிறது.
மீடியாவும் எஸ்.எம்.எஸும் ஆக்டபஸ்சாய் வளர்ந்திருக்கும் நாட்களில் ஒவ்வொரு டிவி சேனலுக்கும் ஒர் ரிப்போர்ட்டர் என ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பட்சத்தில் இம்மாதிரியான டிவி சேனல் பெயர் சொல்லி ஏமாற்றுவதை நம்பமுடியவில்லை. ஒரு நாளில் கண்டு பிடித்துவிட்டு வருவதாய் திரும்பத் திரும்ப ரவி மரியா சொல்லும் காட்சிக்க்கு பிறகு ஒரே மாண்டேஜ் பாடல் காட்சியில் ஆருஷி நடிக்க, நடனம் ஆட, வசனம் பேச என்று பல் கலை வித்தைகளில் தேர்வு ஆவதும், ஒர் நட்டநடு அத்வான காட்டில் இண்டெர்நெட் மூலம் மும்பையில் இருக்கும் ராம் கோபால் வர்மா படத்திற்கு ஆடிஷன் செய்து வீடியோவை ஆன்லைனில் அனுப்புவதும். 1700 பேரில் டாப் 3யில் வருவதெல்லாம் சினிமாவோ சினிமா. ஆருஷியை காரவனில் தேடி வரும் ரவிமரியா ஆர்த்தியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆருஷியை கண்டுபிடிகக முடியாமல் இருப்பதெல்லாம் அபத்தத்தின் உச்சம்.ஒர் அழகான, உணர்வு பூர்வமான, எப்போதும் பார்த்தாலும் நம்மை அப்படியே ஆக்கிரமிக்க கூடிய ஒர்  படத்தை  அதன் சாரத்தை  கூட கொடுக்காமல் வெறும் பிம்பங்களாய் திரையில் ஓட விட்டிருக்கிறார் இயக்குனர்.
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

குரங்குபெடல் said...

power star maker . . . ?


ஆனாலும் friday morning

காலி பண்ணியிருக்க கூடாது



அண்ணே . . .

பால கணேஷ் said...

சினிமா பாரடைசோ எனக்கு மிகப் பிடித்தமான படம். அதன் ‌(மோசமான) பாதிப்பில் வந்த இந்தப் படத்தை தியேட்டர்ல மட்டுமில்ல... டிவில கூட நான் பாக்க விரும்பலை!

shankar said...

Cable Sir: I think you got confused between Cinema Paradiso and StarMaker.